Tuesday, January 5, 2016

நேர்மறை 15 கேள்விகளுக்கு நாச்சியாதீவு பர்வீன் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீனின்
அவர்களின் பதில்கள்

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?  
பலரையும்விடத் திறமைமிக்க ஒரு மனிதன் என்று நான் நம்புகின்றேன்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்? 
என் முரண்பாடுகள் ஒரு போதும் சுயநலத்திற்காக இருந்ததில்லை அதனால் அது கணக்கில் இல்லை

03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது? 
இலக்கியவாதி அப்படி யாராவது இருக்காங்களா. வீம்புக்காக குழாயடிச் சண்டை போடும் நபர்கள்தானே அதிகம்.

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
மற்றவர்கள் எழுதும் அளவு  உயரத்திற்கு இன்னும் போகவில்லை

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
மனதிற்குப் பிடிக்கின்ற போது படைப்புக்களைப் பற்றியும் படைப்பாளிகள் பற்றியும் நிறையவே  எழுதி இருக்கின்றேன்.

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
  முகமூடி போடாதவர்களை

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது? 
இப்போது வரும் ஐம்பது வீதமான புத்தங்கள் அப்படித்தானே இருக்கின்றன.

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது? 
நிறையப் புத்தகங்கள் அப்படியான உனர்வைத் தந்திருக்கன்றன. சரியாகத் தேர்வு செய்கின்றபோதுதான் அதை அனுபவிக்க முடியும்.

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை? 
யாத்ரா , மல்லிகை

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
ஒரு படைப்புக்கு விலை பேசுவது பெத்த குழந் தையை விலை பேசுவது போன்றது

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்? 
ஓஹ் அதுவா!!! கிடைத்தால் நல்லது அப்போது அதை வரவேற்போம்


12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது? 
தாய் மொழியிலேயே இன்னும் தவிக்கிறேன்

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து? 
இப்போது பலரும் எழுத வாய்ப்பேற்பட்டு இருக்கின்றது. ஆயினும் அனைத்தையும் குப்பைகள் என்று புறக்கணிக்க முடியாது.

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்? 
ஒரு கவிதை மற்றும் இரண்டு ஹைக்கூக்களின் சொந்தக்காரன் நான்

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்? 
இரண்டு மூன்று பேர் இருக்காங்க. எப்படிக் குத்துவது என்றுதான் யோசிக்கின்றேன்.

No comments:

Post a Comment