Tuesday, January 5, 2016

மனதிற் பட்டது - 11 மக்கத்துச் சால்வை ரிஷி மூலத்தைத் தேடி.

தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 11

மக்கத்துச் சால்வை 
ரிஷி மூலத்தைத் தேடி...

அவ்வப்போது சில திருடர்கள் வசமாக மாட்டிக் கொள்வார்கள். வாங்கிக் கட்டியும்கொள்வ துண்டு. இங்கு பெரிய இடம் சின்ன இடம் என்றெல்லாம் கிடையாது. திருடு பிடிபட்ட பின்னர் அந்தத் திருடன் சொல்வான் பாருங்கள் ஒரு நியாயம் அதுதான் செம ஹைலைட்.

இலக்கியத்திருட்டுக்கள் அவ்வப்போது நடைபெறும். பெரும்பாலும் திருடர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற நினைப்பில்தான் எப்போதும் இருப்பர். ஆனால் காலம் ஒரு கட்டத்தில் அவர்களை அப்படட்டமாகக் காட்டிக் கொடுத்துவிடும். அதை யாராவது ஒருவன் வெகு சுலபமாகச் செய்து விடுவான். 

ஒரு பழம்பெரும் படைப்பாளி கென்யச் சிறுகதை ஒன்றைத் தழுவி எழுதிவிட்டு தனது படைப்பாகப் பெயரைப் போட்டுக் கொண்டார். கென்யச் சிறுகதைதானே என்று இது யாருக்குத் தெரியப் போகின்றது என்பது அவரது நினைப்பாக இருந்திருக்கும். அன்மையில் காலச்சுவட்டில் கூட அப்படியொரு தழுவல் கதை ஒரு படைப்பாளியின் பெயரில் வெளிவந்திருந்தது. தழுவலைத் தழுவல் என்று போட்டுவிட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் தழுவி எழுதிவிட்டு தனது பெயரைப் போட்டுக் கொள்வதுதான் துரோகம், அபத்தம்.

கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசம் இலக்கியப் படைப்பாளிகள் பலரைத்; தந்த பிரதேசம். வை.அஹமது, ஏ.ஜியெம். சதக்கா, அஸ்ரப் ஷிஹாப்தீன், எஸ்.நளீம், அமர், ஹஸன், ஷாமிலா செரீப், ஜிப்ரி ஹாஸன் ஆபிதா செரீப், அறபாத், இஸ்மாயீல், யூ.எல்.எம்.நஜீப், ஏபியெம்.இத்ரீஸ், இப்படி அந்தப் பட்டியல் நீளும். இங்குதான் எஸ்.எல்.எம்.ஹனீபா என்பரும் வசிக்கின்றார். அவர் எழுதிய சிறுகதைதான் மக்கத்துச் சால்வை.

பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் முஸ்லிம் கலைக்கூறுகள் இலக்கியத்திற்குள் கொண்டுவரப்படுவது பற்றிப் பேசும் போது அடிக்கடி நினைவுகூரும் கதைதான் மக்கத்துச் சால்வை. சிலம்படி அக்கதையின் பிரதான கதையம்சமாகப் பிணைந்திருப்பதே அதற்குக் காரணம். எனது மண்ணில் அப்படி சிலம்படிப் போட்டிகள் முன்னய காலத்தில் இடம்பெற்றதுவா என்ற தேடலைச் செய்யத் தூண்டியதும் பேராசியரின் கூற்றுதான். அதன்பிரகாரம் மேற்கொண்ட ஆய்வில் சில வயது போன மனிதர்களைச் சந்தித்து அப்படியொரு கலைக்கூறு நம் மண்ணில் இருந்து எப்படி மறைந்து போனது என்பது குறித்துத் தேடிய போதுதான் சிலதகவல்கள் கிடைக்கப்பெற்றன. 

அன்னாவிமார் இருந்தார்கள்தான் ஆனால் மக்கத்துச் சால்வை சிறுகதை சொல்வது போல தமிழ் சினமாவில் அல்லது மலையாள சினமாவில் வருமளவுக்கு சிலம்படி என்பது ஒருவர் தனது பலத்தை நிருபிப்பதற்கான அடிப்படைகளைக் கொண்ட ஒரு கலைக் கூறாக இருக்கவில்லை. பெருநாள் தினங்களில் மற்றும் மீலாது தினங்களில் பொல்லடி நிகழ்வுகள் அரங்கேறும், நாடகங்கள், பக்கீர் பாவா பைத்துகள் போன்றனவும் இடம்பெற்ற நினைவுகள் எனக்கும் இருக்கின்றன. ஆனால் சிலம்படிதான் இன்னும் நினைவில்தட்டுப்படவில்லை.

அப்படியிருக்கையில் எஸ்எல்எம் ஹனிபா எங்கிருந்து இந்தக் கதைக்கான மூலத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது குடைந்து கொண்டே இருக்கும் கேள்வி. அதற்கான தேடலில் நிறையவே ஈடுபட வேண்டிய தேவையை எனக்குள் உண்டாக்கியதும் ஹனிபா மாமாதான். 

எனது சாச்சியைத் திருமணம் முடித்திருப்பவர் முகைதீன் குட்டி இஸ்மாயீல் குட்டி, இவர் ஒரு மலையாளி. கேரளத்துக் கலைக்கூறுகள் பலதையும் எனக்கு அறிமுகப்படுத்தியர். அவைகள் குறித்துக் கதைகதையாகச் சொன்னவர். சிலம்பாட்டம் அங்கு ஒரு போட்டியாகவே இடம்பெறும், கம்பு சுத்துவதில் வீட்டுக்கு வீடு வீரன் இருப்பானாம். அடிக்கடி போட்டிகள் இடம்பெறுமாம். எல்லாவற்றுக்கும் மேல் அவரது வாப்பாவும் ஒரு சீனக்கலை, வர்மக்கலை, சிலம்படி வீரன்தானாம், சாச்சாவும் கூட அப்படியேதான்...

தீபம் என்றொரு சஞ்சிகை வந்தது. இதில் எழுபது அல்லது என்பதுகளில் இத்தகைய கலைக்கூறுகளில் சிலம்படியைக் கதையம்சமாகக் கொண்ட ஒரு மலையாளச் சிறுகதை இடம்பெற்றிருந்ததாகச் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் எனது நினைவில் முதலில் வந்தது எஸ்எல்எம் ஹனிபாதான். அவரிடம் இப்போதும் பழைய தீபம் இதழ்கள் மிகவும் பத்திரமாக இருக்கின்றன.  அவரைத் தவிர வேறு யாரிடமும் அவ்விதழ்கள் இருக்காது என்று சொல்வதற்கில்லை தேடினால் அவை கிடைக்கும். அக்கதையில் இருந்து பிறந்ததுதான் மக்கத்துச் சால்வையா என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். 

இப்பணியை இலகுவாக்கிட பழைய தீபம் இதழ்கள் கைவசமிருப்பவர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்- 0094 777 617 227 அல்லது simpro2002@gmail.com 

No comments:

Post a Comment