Saturday, March 5, 2016

மனதிற்பட்டது -20 மனத் திருப்தி

மனத் திருப்தி
இலங்கையில் வெளிவருகின்ற எல்லாப் பத்திரிகைகளிலும் இலக்கியம் என்று ஒரு பக்கம் இருக்கவே செய்யும். எழுத்தாளர்களும் இலக்கிய வாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் சங்கமிக்கும் ஒரு முக்கிய புள்ளி அது. அவர்கள் எமது வீட்டுக்கு வரும் விருந்தாளிகளைப் போன்றவர்கள். அவர்களுக்கு என்ன விருப்பம் என்று கேட்டுத்தானே விருந்து வைக்க வேண்டும். ஏனெனில் விருந்தாளிகளின் திருப்திதான் மிகவும் முக்கியமானது. 

கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்ட அத்தனை சந்திப்புக்களும் எமக்கு மனத்திருப்தியை அள்ளிவழங்கின. அந்த விருந்தாளிகள் அனைவரும் தத்தமது எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் முன் வைத்தார்கள். அதனால் அகமகிழ்ந்து நாம் அளித்த வாக்குறுதிகள் மெல்லமெல்ல நிறைவேறும்.
இந்த இதழோடு எமது இலக்கியப் பக்கம் இருபது வாரங்களைப் பூர்த்தி செய்கின்றது. அடுத்த வாரத்தில் இருந்து இப்பக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய நாடுகின்றோம். நேர்மறை கேள்வி பதில் பகுதி கொஞ்சம் சீரியசான கேள்விகளால் தன்னை மேம்படுத்திக் கொள்கின்றது. 

பறவை போட்ட பழத்தோடு சேர்த்து இன்னுமொரு படைப்பாளிக்கு ஒரு தொடர் எழுதுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. அந்த வாய்ப்பை நான் தெரிவு செய்த ஒரு நபருக்கு வழங்காமல் பொதுத் தளத்தில் விட்டுவிடுகின்றேன். ஆர்வமுள்ள ஒருவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மூத்த தலைமுறையாயினும் சரி இளைய தலைமுறையாயினும் சரி தரமான எழுத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்படி திறந்த வாய்ப்புக்கள் அதுவும் ஒரு தொடர் பத்தி எழுதும் வாய்ப்பு பத்திரிகை வாயிலாகக் கிடைப்பது எப்போதும் சாத்தியமானதல்ல என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. 

அந்தப் பத்திக்கு நாம் எந்தவிதமான விதிமுறைகளையும் விதிக்க விரும்பவில்லை. எழுத்தின் சுதந்திரத்துக்கு நாம் அளிக்கின்ற உயர்ந்தபட்ச மரியாதை இது. இருக்கின்ற இந்த ஐந்து நாட்களுககுள் எதை எழுதுவது என்ற  முடிவை நீங்கள் எடுத்தாக வேண்டும். ஏனெனில் வருகின்ற புதன் கிழமைதான் அதற்கான இறுதித் தருணம். இருபது பகுதிகளைக் கொண்டதாக நீங்கள் அதை அமைத்துக் கொள்ள வேண்டும். முதல் இரு பகுதிகளுக்கு மட்டும் ஒரு சின்ன கால அவகாசம் அளிக்கப்படுகின்றது. அதாவது முதல் பகுதியை இந்தப் புதன் கிழமைக்குள்ளும் இரண்டாவது பகுதியை அடுத்த புதன் கிழமைக்குள்ளும் அனுப்பி வைக்கலாம். ஆனால் எஞ்சிய பகுதிகளை அடுத்த ஒரு வாரத்திற்குள் மொத்தமாக அனுப்பி வைத்துவிட வேண்டும். சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இப்படியொரு இறுக்கமான முடிவை எடுக்க வேண்டியிருக்கின்றது. எவ்வாறாயினும் இவ்வறிவித்தல் எமது வெளிப்படைத் தண்மைக்கு ஒரு முக்கிய சான்றுதான்.

எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய முழுமையான முயற்சி எமது பக்கமிருந்து எடுக்கப்படும் அது போலவே வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் உங்களுக்கும் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கேட்டதைதான் நாங்கள் பகிரங்கமாக வழங்குகின்றோம். பின்னர் ஒரு நாளில் எமை நோக்கி விரல் நீட்டயாரும் எத்தனிக்கையில் அழகிய பதிலை இந்தக் குறிப்பு மட்டுமே வழங்கிடப் போதுமானது.

உங்கள் வளர்ச்சிக்கு தமிழ் மிரர் வழங்கும் வாய்ப்பு மிக முக்கியமானது. ஏனெனில் அதைப் பயன்படுத்துவதில் ஒரு போட்டி ஏற்படும் போது சுவாரஷ்யமான தேடலை நோக்கி நாம் பயணிக்க வேண்டிய நிலைதான் தோன்றும். அந்தத் தேடல் இன்னும் பல வழிகளை உங்களுக்காகத் திறந்துவிடும்  வல்லமைமிக்கது.

நூல் அறிமுகம், விமர்சனம் போன்ற புதிய வருகைகளும் விரைவில் இடம்பெறத்தான் போகின்றன. அதனால் உங்கள் நூல்களின் இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள் இரு வேறுபட்ட நபர்களின் குறிப்புக்களைப் பெற்றுக்கொள்ள அவை எமக்கு உதவ முடியும். ஒரு எழுத்தாளனுக்கு அவனது எழுத்தின் மீதாய் எழும் அலை மிக முக்கியமானது. ஆகவே பாரம்பரியமாக இதுவரைக் கண்டுவந்ததற்கப்பால் புதிதாய் ஒரு ரசனையை எற்படுத்த முனைகின்றோம்.

அதில்தான் எல்லோருக்கும் மனத் திருப்தி இருக்கும்.

No comments:

Post a Comment