Friday, February 26, 2016

பாவுட்டியுடே நாமத்தில்

மலையாள சினமாவின் அற்புத நடிகன் மட்முட்டியின் நடிப்பில் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. அதற்காகவே மட்டுமுட்டியின் திரைப்படங்களை மிஸ் பண்ணாமல் பார்ப்பதுண்டு. அன்மைக்காலமாக திரைப்படங்கள் பார்க்க நேரமொதுக்க முடியாமலட இருந்தது. ஆயினும் இப்போது ஒரு நாளைக்கு ஒரு திரைப்படமாவது பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். 


அந்த அடிப்படையில் பாவுட்டியுடே நாமத்தில் என்ற மலையாளத் திரைப்படத்தை நேற்றுப் பார்த்து முடித்தேன்.
ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்தில் முன்மாதிரியான பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி மம்முட்டி நடித்திருக்கின்றார். திரைப்படமே முஸ்லிம் கதைமாந்தர்களுக்குள்ளால்தான் நகர்கின்றது. 

அர்ஜீன் விஜயகாந்த் போன்ற வகையறாக்களுக்கு செருப்பால் அடிப்பது போன்ற திரைப்படம். முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் என்று காட்ட முனையும் அனைவர் முகத்திலும் மலத்தால் அடித்தமாதிரி ஒரு படம். 

தமிழ் நாடுதான் அமைதிப் பூங்கா என்று கத்தும் மனிதர்களின் திரைத்துரை இன்னும் பயங்கரவாதிகள் என்ற கதாபாத்திரங்களுக்கு தாடியையும் தொப்பியையும் போட்டு அழகு பார்க்கையில் மாமன் மச்சான் உறவு சொல்லி வெறுமனே கதைத்துத் திரிகையில் கேரளா அந்த உறவை வாழ்தலை அன்றாட நிகழ்வுகளை நம்பிக்கையை பிடிப்பை பற்றை விசுவாசத்தை வெடிகுண்டு மாயையில் இருந்து காப்பாற்றி நமக்கு முன்னால் விரித்திருக்கின்றது. 

ரஞ்சித் எழுத்தித் தயாரித்த இத்திரைப்படத்தை ஜீ.எஸ்.விஜயன் இயக்கி இருக்கின்றார். 

குத்தாட்டமில்லாத காற்றில் பறக்கும் சண்டைக்காட்சிகள் இல்லாத யதார்த்தினை மிஞ்சாத காதல் இயல்பான கதாபாத்திரங்கள் என்று குடும்பத்துடன் அமைதியாக இருந்து பார்த்து நிம்மதியைப் அனுபவிக்க நல்லதொரு திரைப்படம் 
இது குறித்து நிறைய எழுத வேண்டும் விரைவில் எழுதுகின்றேன். 
மை நேம் கான் என்ற சாருக்கானின் திரைப்படத்திற்குப் பின்னர் எனக்கு ஆறுதல் தந்த முஸ்லிம் கதையம்சம் கொண்ட இந்தியத் திரைப்படம் இது.

Thursday, January 21, 2016

கருத்துச் சுதந்திரம். நாம் எங்கே நிற்கின்றோம்?

20 ஜனவரி 2016 புதன்கிழமை தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியான கட்டுரை

கருத்துச் சுதந்திரம்.
நாம் எங்கே நிற்கின்றோம்?

-முஸ்டீன்-

(கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சட்டத்தரணி காண்டீபன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற அறிவோர் அரங்கத்தில் சட்டத்தரணி மர்சூம் மௌலானா அவர்கள் ஆற்றிய உரையையும் அதன் பின்னர் இடம்பெற்ற கருத்தாடலையும் மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்டது)


கருத்துச் சுதந்திரம் என்ற அம்சம் மேற்கைரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் எப்போதோ ஒரு சட்டமூமாகப் பிரகடணப்படுத்தப்பட்டு அமுலாகிக் கொண்டிருக்கும் போது நாம் இப்போதுதான் அதனைச் சாத்தியப்படுத்துவது குறித்து எமது நாட்டில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் இந்த வார்த்தைகள் சட்டத்தரணி காண்டீபன் அவர்களுக்குரியது. இந்த நாட்டில் பல்வேறு விடயங்களையும் சாத்தியப்படுத்துவதில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றின் தாக்கம் சில சமயங்களில் அடிப்படைகளையே புரட்டிப் போடும் வல்லமைமிக்கவையாக மாறிவிடுவதும் உண்டு.

அடிமை இந்தியாவில் மகாத்மா காந்தியை நாங்கள் பல தசாப்தங்கள் உயிரோடு வைத்திருந்தோம். ஆனால் சுதந்திர இந்தியாவில் நீங்கள் அவரை ஒரு வருடமேனும் உயிரோடு வைத்திராது கொன்றுவிட்டீர்களே என்று ஒரு ஆங்கிலேய அதிகாரி கூறிய கருத்துக்களை இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது பொருத்தம். 

ஒரு தேசத்தின் மாற்றத்தை நோக்கி தேசத் தலைமைகளின் கருத்துக்கள் எத்தகைய வலிமையான தளத்தை நோக்கி நகர முடியும் என்பதற்கும் அதைத் தடுப்பதற்குச் சதிசெய்யம் தீவிரவாத சக்திகள் வன்முறையைக் கையிலெடுத்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுவதாலும் எத்தகைய விபரீதங்கள் நிகழும் என்பதற்கு இக்கூற்று ஒரு சிறந்த படிப்பினையைப் போதிக்கின்றது. 

சட்டத்தரணி மர்சூம் மௌலானா தனது உரையில் பின்வரும் அம்சங்களை வெளிப்படுத்தினார். அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து நோக்குவோம். 

சர்வதேச வெளியில் கருத்துச் சுதந்திரம் என்பதை நாம் எந்தளவுக்குப் புரிந்து வைத்திருக்கின்றோம்? தேசிய ரீதியில் இடம்பெறுகின்ற சம்பவங்களின் அதிர்வுகள் சர்வதேசத்தினுடைய எதிரொலியாக எப்படித் தோற்றம் பெறுகின்றது? அவற்றைப் பொறுத்திப் பார்ப்பது எப்படி? என்கின்ற விடயங்களின் பால் நாம் கவனம் செலுத்த வேண்டிய வேளை இது.

வெறுப்பூட்டும் பேச்சுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளையும் கவனத்திற் கொண்டவர்களாக சில சம்பவங்களையும் அதுசார் அடிப்படை விடயங்களையும் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையும் எமக்கிருக்கின்றது. 

ஜனநாயம் பற்றிய எண்ணக்கரு எப்போது தோற்றம் பெற்றதோ அப்போதே அதற்குச் சமாந்திரமாகக் கருத்துச் சுதந்திரம் என்ற கோட்பாடும் தோற்றம் பெற்றது. அத்துடன் ஜனநாயக்ச் சூழலில் கருத்துச் சுதந்திரத்துக்கான களம் எத்தகையது அத்துடன் சோசலிச, கம்யுனிசச் சூழலில் கருத்துச் சுதந்திரத்தின் வகிபங்கு என்ன? ஒரு மன்னராட்சி நிலவுகின்ற தேசத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கான இடமென்ன? முதலாளித்துவப் பொருள்கோடலில் இதன் நிலையென்ன? செமித்திய மதங்களின் அரசியல் இடைவெளிகளில் கருத்துச் சுதந்திரம் எத்தகையது? கட்புலனாக ஆதிக்க சக்தியான சியோனிச ஊடக ஆளுகைக்குள் கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்ன என்பதையும் பல்வேறு சித்தாந்த வெளிகளில் நின்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கிறித்துவுக்கு முந்திய காலத்தில் சோக்கிரடீஸ் நஞ்சூட்டப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்தே கருத்துச் சுதந்திரத்துக்கான களம் திறக்கப்பட்டது. அதனால்தான் கலீல் ஜிப்ரான் தனது கவிதையில் நீங்கள் சோக்ரடீசுக்கு நஞ்சூட்டும் போதும் நான் உங்களுக்கு அருகில்தான் இருந்தேன் நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோதும் நான் உங்களுக்கு அருகில்தான் இருந்தேன். என்று கூறுகின்றார். கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்துக்கு எதிராக வன்முறையைக் கையிலெடுத்ததன் வாயிலாக நிகழ்ந்த நிகழ்வுகளின் அறுடைதான் அந்த இழப்புக்கள் என்பதை கலீல் ஜிப்ரான் சுட்டிக்காட்டுகின்றார். 

இந்த உலக வரலாற்றில் கருத்துச் சுதந்திரத்தின் வாயில்களை மூடுவதற்காக இப்படியான இறுக்கமான வதைகளை அந்தந்தக் காலத்துக் கருத்துக்களுக்கு எதிரான மக்கள் கைலெடுத்துத்தான் இருக்கின்றார்கள். பெரியாரிஸ்டுகள் சொல்வது போல எல்லாத் தீர்க்கதரிசிகளும் அந்தந்தக்காலத்தில் மிகப் பெரும் பகுத்தறிவுவாதிகளாகத்தான் இருந்திருக்கின்றார்கள். அதனால்தான் அவர்கள் தமது கருத்தை வெளியிடுவதில் வந்த எல்லாவிதமான தடங்களையும் எதிர்கொண்டு தமது சுதந்திரத்தை நிலைநாட்டப் பாடுபட்டார்கள்.

இலங்கைச் சூழலில் மிக அன்மையில் நடந்த இரண்டு விடயங்களை கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இங்கு அலசுவது சாலப் பொருத்தம். 
ஞானசார தேரர்  இஸ்லாத்தின் புனித வேதமான அல்குர்ஆனத் தடைசெய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி இருப்பது. இரண்டாவதாகப் பாராளுமன்றத்தில் ஷரிஆ சட்டத்தை முன்வைத்துப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உரையாற்ற விளைந்த போது அவரைப் பேச விடாமல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டுக் குழப்பி இடையூறுவிளைவித்திருப்பது 

இந்த இரண்டு விடயங்களையும் பார்க்கும் போது ஒரு ஆட்சிமாற்றம்தான் புரட்சிகரமான மாற்றம் என்று கருதிவிட முடியாது. இனவாதத்திற்கெதிராகப் பேசி பேசியே ஆட்சி மாற்றத்திற்கான குரலினை வலுவாக எழுப்பியவர்கள், ஆட்சிபீடமேறியதும் அவ்வினவாதத்திற்கெதிராக எடுத்த நடவடிக்கைதான் என்ன? அல்லது இனவாதத்திற்கெதிரான அவர்களின் நிலைப்பாடுதான் என்ன? என்பதில் இன்னும் மயக்கம் இருக்கதான் செய்கின்றது. ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆயுதமாகப் பயன்படுத்திய ஆக்ரோசமான பேச்சுக்கள் அல்லது ஆட்சிமாற்றத்திற்கான காரணங்களாய் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் மௌனம் காப்பது என்பது அரசியல் தார்மீகமான விடயமாகாது. 

உதாரணமாகக் கெசினோவுக்கு எதிராகப் பேசப்பட்ட பேச்சுக்கள் எல்லாம் இப்போது எங்கே? கெசினோவுக்கு எதிராகப் பேசிப் பேசியே ஆட்சி மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்திய வாய்களெல்லாம் இப்போது எங்கே? கெசினோ தொடர்பான அவர்களின் நிலைப்பாடுதான் என்ன? ஆகவேதான் ஆட்சி மாற்றம்தான் புரட்சிகரமான மாற்றமாகாது என்று சொன்னேன். 

ஜனநாயகம் என்ற பார்வையில் பார்க்கின்ற போது செமித்திய மதங்களுக்கும் பௌத்த தர்மத்திற்கும் இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கின்றது. செமித்திய மதங்களின் வேதக் கருத்துக்கள் என்பது முற்றுப்பெற்றது, கேள்விக்குட்படுத்த முடியாதது. ஆனால் பௌத்த தர்மம் அப்படியானதல்ல. கௌதம புத்தர் ஒரு பெருஞ் ஜனநாயக வழியைத் தனது போதனைகளில் திறந்து வைத்துள்ளார். அவை முற்றுப் பெற்றதாக அவர் வலியுறுத்தவில்லை. இலங்கை அரசியலமைப்பு பௌத்த தர்மத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தாலும் அதன் கருத்தியல் விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட அரசியலமைப்பாக இல்லை. பௌத்த தர்மத்தின் அடிப்படையிலான அரசியலமைப்பல்ல இப்போது இலங்கை கொண்டிருக்கும் அரசியலமைப்புச்சட்டம்.

ஞானசார தேரர் அல்குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்று கருத்துச் சொன்ன போது அதை தமக்கெதிரான கருத்தாகப் பார்க்காமல் பௌத்த தர்மத்தின் அடிப்படையில் அக்கருத்தை முஸ்லிம்கள் பார்க்க வேண்டும். அப்படி நோக்கும் போது ஞானசார தேரர் பௌத்த தர்மத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு கருத்தைத்தான் ஞானசூனியமாக முன்வைக்கின்றார் என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய தேவையும் கடப்பாடும் எமக்கு இருக்கின்றது.

பௌத்தத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் சரத்துகளடங்கிய அரசியலமைப்புச் சட்டத்தினைக் கொண்டிருக்கும் இந்நாட்டிலே ஞான சாரர் போன்ற மேதவிகளின் கருத்துக்களுக்குப் பதில் அளிக்கின்ற போது மிக நுட்பமான பலவிடயங்களைக் கருத்திற்கொண்டு நேர்மையாகப் பதில் தருகின்ற சானக்கியத்தை முஸ்லிம் சமுகம் கவனத்திலெடுக்க வேண்டும். 

அதுபோலவே சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றில் உரையாற்ற வெளிக்கிட்டபோத இடம்பெற்ற விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களின் தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல் பின்புலம் அல்லது அது சார்ந்த அவரது அரசியல் கருத்துக்கள் என்பது குறித்துப் பேச வேறு ஒரு களத்தைத் திறக்க வேண்டும். அது வேறு விடயம் ஆனால் பாராளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வு குறித்துச் சொல்வதாயின் ஷரிஆ தொடர்பான அவரின் கருத்துக்கள் அனைத்தையும் முழுமையாகப் பேச வைத்து விட்டு அதற்கு பதில் அளித்திருக்கலாம். அப்படிப்பட்ட பொன்னான சந்தர்ப்பத்தை முஸ்லிம் தரப்பு நழுவ விட்டிருக்கின்றது என்பதுதான் கவனிக்க வேண்டிய விடயம். ஷரிஆ தொடர்பில் அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதைச் சொல்லச் சந்தர்ப்பமளித்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரின் கருத்துச் சுதந்திரத்துக்கு ஊறுவிளைவித்துத் தடுத்திருக்கின்றார்கள். அதன் மூலம் ஒரு பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டிருக்கின்றார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரியது. ஷரிஆ தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் அவசியம் என்றுதான் சுமந்திரன் அவர்கள் தனது உரையைத் தொடங்கினார் ஆனாலும் அவர் அதன் பிற்பாடு என்ன சொல்ல வந்தார் என்பது தெரியாது. அதற்கிடையில் முஸ்லிம் பாராளுமனற் உறுப்பினர் இடையூறுவிளைவித்தார்கள் என்பதுதான் ஊடகங்களின் செய்தி.

ஷரிஆ என்ற கருப்பொருளில் சுமந்திரன் ஏன் பாராளுமன்றில் உரையாற்றத் தொடங்க வேண்டும் என்பதன் உள்ளார்ந்த நோக்கம் என்ன அதன் அடிப்படை என்ன என்பது மிக ஆழமாக அலச வேண்டிய ஒரு விடயம். 

ரிஸானா நபீக் விடயமும் இப்போது தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற சகோதரியின் விடயமும் வித்தியாசமானவை. ரிசானா நபீக் விடயத்தில் அது இஸ்லாமிய சரியத்தின் அடிப்படைகளுக்கு உட்பட்ட தீர்ப்பு என்று இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிக்கை விட்டிருந்தது அவ்வறிக்கையின் 'இஸ்லாமிய சரியத்தின் அடிப்படைகளுக்கு உட்பட்ட' என்ற வார்த்தைகளை ஜம்இய்யதுல் உலமா வாபஸ் வாங்க வேண்டும் என்று ஒரு தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பில் கூறிய போதும் அதற்கு எவ்வித எதிர்வினையையும் ஆற்றாமல் மௌனம் சாதித்தது உலமா சபை. மன்னராட்சி என்பதற்கு சரிஆவின் அடிப்படையில் எந்த அனுமதியும் இல்லாத நிலையில் மன்னராட்சி நிலவுகின்ற ஒரு நாடு எப்படி சரியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியும் என்பதுதான் கேள்வி. எனவேதான் ஷரிஆ தொடர்பான மிகத்தெளிவான விளக்கங்கள் இல்லாமல் அது குறித்துக் கருத்துரைப்பது என்பது பல்வேறு விதமான சங்கடங்களைத் தோற்றுவித்துவிடக்கூடிய விடயமாகும். 

ரிசானா நபீக் விவகாரத்தில் சவுதி அரேபியாவின் இப்போதைய மன்னராட்சி விதிமுறைகளில் இஸ்லாமிய ஷரிஆவின் பெயரில் வழங்கப்பட்ட மரண தண்டனை என்னுடைய பார்வையில் பொய்களால் அழங்கரிக்கப்பட்ட அப்பட்டமான கொலை. அதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடயாது. ஆனால் ஷரிஆவின் நிலைப்பாடு இத்தகைய அநீதிகளில் இருந்து வேறுபட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரிசானாவிற்கு மரண தண்டனையளிப்பதற்கு இஸ்லாமிய ஷரிஆவின் அடிப்படையில் மன்னராட்சி அரசு நிலவுகின்ற சவுதி அரேபியாவிற்கு எவ்விதமான அதிகாரமுமில்லை. ஷரீஆ பற்றிய புரிதலை சவுதி அரேபியா போன்ற நாடுகளின் தன்மைகளோடு இணைத்துப் புரிந்து கொள்கின்ற போது அது நிச்சயம் தவறான புரிதலாகவே இருக்கும். சிரேஸ்ட சட்டத்தரணி சுமந்திரனும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறுப்புக்குரிய பேச்சினைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தினை இப்போதைக்கு நிறைவேற்ற முடியாது என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்ற இவ்வேளையிலே தமிழ் முஸ்லிம் தரப்பு கருத்துச் சுதந்திரத்தைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய காலத்தருவாயில் இப்போது நாம் இருக்கின்றோம். என்றும் சட்டத்தரணி மர்சூம் மௌலானா கூறினார்.

ஒரு போட்டோவும் ஒரு குறிப்பும்




நான் ஜாமியா நளீமிய்யாவில் மாணவனாக இருக்கும் போது புகைப்படம் பிடிப்பது கூடுமா கூடாதா  என்று சவுதி அரேபிய அறிஞர் பின்பாஸ் அவர்களின் கருத்து ஒன்றை ஓர் அரபுச் சஞ்சிகையில் வாசித்தேன். ஆனாலும் அதை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை காரணம் பெரும்பாலும் கூடாது என்ற தொனியில்தான் அவர் கருத்து போய்க் கொண்டிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் கட்டம் கட்டப்பட்ட அந்தக் கருத்துக்கு மேலே கண்ணில் குத்தும் வண்ணம் அவருடைய புகைப்படம் இருந்தது. இறுதியில் அவர் கூடும் என்றாரா கூடாது என்றாரா என்பது எனக்குத் தெரியாது (யாராவது தௌஹீத்வாதிகள் பின்பாஸ் அவர்களின் போட்டோ தொடர்பான இறுதி முடிவு என்ன என்பதை முடிந்தால் அறிவிக்கட்டும்) 

விமர்சன ரீதியாக எதையும் நோக்கும் எண்ணத்தை எனக்குள் விதைத்த பல்வேறு சந்தர்;பங்களில் இதுவும் ஒன்று. போட்டோ பிடிப்பது கூடுமா கூடாதா என்று வாதிக்கும் ஒருவர் காரணகாரியங்களை விளக்கமாகக் கூறு முயலுகையில் அவரது புகைப்படத்தையும் சேர்த்தே பிரசுரித்திருப்பது கவனிக்கவேண்டியதொன்று. அங்கு விரிவுரையொன்றும் அவசியமில்லை. குறித்த அறிஞரின் புகைப்படம் இருக்கின்றதென்றால் அது கூடும் என்றேதான் அர்த்தம். இப்படித்தான் இஸ்லாம் குறித்த நிறைய விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன. பின்பாஸ் அவர்கள் போட்டோ பிடிப்பது கூடாது என்று பத்வா கொடுத்திருந்தால் அது நகைப்புக்குரியது. அது போல அவசியப்படும் போது மட்டும் போட்டோ பிடிப்பதில் தப்பில்லையென்றால் குறித்த கருத்தில் அவரது போட்டோவுக்கான எந்த அவசியப்பாடும் இல்லை, அதுவும் தேவையற்றது. சரி அது அப்படியே இருக்கட்டும் சவுதி அரேபியாவில் பெய்யும் மழைக்கு இலங்கையில் குடை பிடிக்கும் கூட்டத்தின் பிரச்சினை அது.

இன்றைய சூழல் மிகவும் வேகமானது. சமுக வலைத்தளங்கள் என்ற மெகா மாஸ்டர் ப்ளானுக்குள் உலகின் பெரும்பகுதி மக்கள் சிக்கிக் கொண்டுள்ள காலம். அந்த மெகா மாஸ்டர் ப்ளானுக்குள் சமுகவலைத்தளங்கள் குறிப்பாக முகநூல் பெரும்பெரும் போராளிகளை இலவசமாக நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லப்போனால் மார்க்கப் பிரச்சாரத்திற்கென்றே அவதாரம் எடுத்த முப்திகள் கூட்டம், பத்வா வங்கிகள், ஹராம் ஹலால் வங்கிகள், அடுத்த வீட்டுப் பிரச்சனைகளைக் கண்டு கண்ணீர் வடித்துக் கதறும் அவ்லியாக் குஞ்சுகள் என்று அந்தப் பட்டியல் நீளும்.

சரி இனி போட்டோ பிரச்சினைக்கு வருவோம். அன்மையில் தாரிக் ரமழான் அவர்கள் இலங்கைக்கு வந்தார்கள் அவருடன் சேர்ந் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள யாருக்குத்தான் விருப்பமிருக்காது. தற்கால இஸ்லாமிய உலகின் முக்கியமான சிந்தனையாளர்களுள் அவரும் ஒருவர். அந்த அடிப்படையில் ஒரு இஸ்லாமிய ஆளுமையுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்வது தப்புமில்லைதானே. அதன்பிரகாரம் சகோதரி லறீனா அப்துல் ஹக் தாரிக் ரமழான் அவர்களுடன் நின்று ஒரு போட்டோ எடுத்து முகநூலின் முகப்புப்படமாகப் போட்டிருந்தார். அதன் பிறகுதான் சனியன் எல்லாம் ஒன்று சேர்ந்து மிஸ்டு கோல் கொடுக்க ஆரம்பித்தன. 

பத்வா வங்கிகள் புதிய அறிவிப்புக்களைச் செய்தன. இன்பொக்ஸ்; பேர்வழிகள் அட்வைஸ் அட்வைஸ்ஆகப் பண்ணித் தொலைத்தார்கள். பன்னிக் கூட்டமெல்லாம் நாய்க்குடிலுக்குள் கூடி நஜீஸ் பற்றியும் ஹராம் ஹலால் பற்றியும் வாதிக்கத் தொடங்கின. 

இயக்கப் பிசாசுகளுக்கு அன்றுதான் புது பூஸ்ட்டர் கிடைத்தமாதிரி, இந்தக் கருத்தாடல்களைப் பார்த்து கடுப்பேறி ரம்போ மாதிரி  ஒரு பெரிய துப்பாக்கியத் தூக்கிட்டுக் கிளம்புவமா என்று யோசித்த போதுதான் இப்போதைக்கு இதை எழுதுவதில்லை என்று பல மாதங்கள் தள்ளி வைத்துவிட்டு அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அமைதியாக இப்போது  எழுதிக் கொண்டிருக்கின்றேன். சும்மாவே நமக்கு வாய் சரியில்ல அதற்குள் இந்த நிகழ்வும் இணைந்து கொண்டால் பிரச்சினையொன்று உருவாகி நிச்சயம் அது வேறு தளமொன்றினை நோக்கி நகர்ந்து விடும் என்பதால் தான் அந்த லீவு.

சரி போட்டோ பிடிப்பது கூடுமா? கூடாதா? இந்த இஸ்லாமிய தஃவா இயக்கப் புரோக்கர்கள் என்ன சொல்கின்றார்கள்? அவனவன் நடிகரோடும் நடிகையோடும் ஏன் நாயோடும் எருமையோடும் கழுதையோடும் நின்று போட்டோபிடித்து போடும் போதெல்லாம் இவர்கள் எங்கே போனார்கள்? எவனோ ஒரு அரபிக்காரன் கொடுத்த பணத்தில் ஒரு கிணறுக் குஞ்சையும் அடி பைப்பையும் கக்கூசையும் கட்டி அதற்கு திறப்பு விழா வேறு வைத்து படம்படமா பிடித்துத்தள்ளி வந்த காசுக்குக் கணக்குக் காட்டுறான், ஆடுமாட அறுத்து இரத்தமும் சதையுமா பேனர் வைத்து போட்டோவாப் பிடித்துத் தள்ளுகிறான் ஏழை எளியதுகளன் கியூவில வைத்து ஒரு பார்சல் இறைச்சியக் குடுத்து வெக்கமில்லாமப் படமெடுத்து காசு கொடுத்தவனுக்கு விசுவாசத்தோட அனுப்பி வைக்கின்றான் இதையெல்லாம் பண்ணிக் கொண்டும் அவற்றில் ஏதோவொரு விதத்தில் பங்கு பற்றிக் கொண்டும் கேட்பதற்கு ஆள் இல்லாத தெனாவட்டுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பூஞ்சனம் பிடித்த புச்சிக் கொட்டைகள் கருத்துச் சொல்லவும் பத்வா கொடுக்கவும் இன்பொக்ஸ் அட்வைஸ் பண்ணவும் கிளம்பியிருப்பதுதான் வேடிக்கை.

இஸ்லாமிய ஆடைவிழுமியங்களுக்குள் நின்று விலாகாது இன்று வரையும் கல்வியிலும் தனது தொடர் முயற்சிகளைச் செய்து கலாநிதிக் கற்கையை ஆரம்பித்திருக்கும் சகோதரி லறீனா அப்துல் ஹக் என்ற ஆளுமைக்கு முன்னால் தீவிர வாசிப்பாளிக்கு முன்னால் ஒரு ஆய்வாளருக்கு முன்னால் எந்தப் பிடிமானத்துடன் நீங்கள் போய் நிற்கப் போகின்றீர்கள்?

நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் தவளை பிராண்ட் இஸ்லாத்திற்கு அப்பால் நின்று சிந்தித்தும் எழுதியும் கொண்டுமிருக்கும் சகோதரிக்கு முன்னால் நீங்கள் சீரிய சரியான கருத்துக்களோடு போய் நில்லுங்கள் அவர் அதைச் செவிமடுப்பார். அதை விட்டு விட்டு காட்டுக் கூச்சல் போட்டு மிம்பர் மேடைகளில் பலாய் கழுவும் அறைவேக்காட்டுத்தனத்தை நிறுத்துங்கள் இல்லாவிட்டால் நிறுத்த வேண்டி வரும். ஏனெனில் மார்க்கத்தில் தெளிவில்லாமல் நான் எழுதவரவில்லை. நபிகளார் போதித்த மார்க்கத்தையும் அதன்பிரகாரம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் தேடிக்கொண்டிருக்கும் எமக்கு அத்தகையவர்களை மதிக்கவும் தெரியும் போலிகளை தோலுரித்துத் தொங்கவிடவும் தெரியும்.

சரி இப்ப சொல்லுங்க போட்டோ பிடிப்பது கூடுமா கூடாதா?

Tuesday, January 5, 2016

மனதிற் பட்டது - 12 - சட்டத்தரணி தவராசா மனிதம் கொண்ட பேரியக்கம் - 01


தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 12
சட்டத்தரணி தவராசா 
மனிதம் கொண்ட பேரியக்கம் - 01

சட்டத்தரணிகளில் வெகு சிலரைத்தான் எனக்குப் பிடிக்கும். பெயர் குறிப்பிடுவதாக இருந்தால் சட்டத்தரணி ரவுப், சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி மர்சூம் மௌலானா, சட்டத்தரணி ராஜகுலேந்திரா, சட்டத்தரணி சுகந்தி ராஜகுலேந்திரா,  சட்டத்தரணி ரூமி, இப்படி இன்னும் சிலரை மட்டுமே.   பல சட்டத்தரணிகளைப் பிடிக்காமல் போவதற்கு  நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

 10.01.1952ஆம் ஆண்டு புங்குடுதீவில் பிறந்து சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று 1981 முதல் அவர் முக்கியமான நபராக அடையாளப்படுத்தப்படக் காரணம் அவரது தைரியமும் மனிதாபிமானமும்தான். எதற்குமஞ்சாத தைரியசாலிகளையும் எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரமிக்கவர்களையும் மிக விரைவிலேயே எனக்குப் பிடித்துப் போகும். அதிலும் குறிப்பாக உண்மைக்காகப் போராடுதல் என்பது மிக முக்கியமான விடயம். 

ஒரு கட்டத்தில் தவராசா என்ற பெயர் ஒர மீட்பரின் ஸ்தானத்தில் முகாமிட்டிருந்ததையும் நான் அறிவேன். பலருக்குள்ளும் அந்நம்பிக்கை துளிர்விடக் காரணம் யாராலும் திட்டமிட்டுக் கற்பிக்கப்பட்டதல்ல அது இயல்பாக உருவாகி விட்;;டிருந்தது. சிலவிடயங்கள் அப்படித்தான் அற்புதமான கவிதை போல மனதில் இடம்பிடித்துவிடும், கவிதை ரசிகனாக இராத போதும். 

தவராசா என்ற பெயர் எப்போதுமே எனக்குள் சிம்மாசனமிட்டிருந்த பெயர். வே.சு.கருணாகரண் அவர்கள் எழுதிய கனவுகளும் நினைவுகளும் புத்தக வெளியீட்டுவிழாவில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போது நான் புத்தகத்தின் திறனாய்வுரைக்காக அழைக்கப்பட்டிருந்தேன். அப்போதுதான் அவரை முதன் முதலாக நேரடியாகக் காண்கின்றேன்.  ஒரே மேடையில் அவருடன் அமர்ந்திருப்பது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. கைகுலுக்கிக் கதைப்பதற்குக்கூட நான் பின்வாங்கினேன். மிகவும் மதிக்கும் ஒருவர் நமக்கு நேரெதிர் தோன்றுகையில் அப்படியே உரைந்து போய் இருப்பது இயல்புதானே. அதனாலேயே மேடையில் அமர்வதை பெரும்பாலும் தவிர்த்துக் கொண்டேன். 

நாம் அதிகம் நேசிக்கும் இலக்கியப் படைப்பாளியை நேரடியாக நமக்கு முன்னால் காண்கின்ற போது இரண்டு அடி தள்ளிக் கால்கள் தாமாகப் பின்னகருமே அத்தகைய மரியாதைக்கு முன்னால் வார்த்தைகள் மௌனமாக மெய்சிலிர்த்து எமக்குள் குடிகொள்ளும் அமைதிக்கு முன் நாம் சரணடைந்திருப்போம். மனதில் பெருமிதம் மட்டுமே நிறைந்திருக்கும். அத்தகைய உணர்வுதான் சட்டத்தரணி தவராசாவைக் கண்ட போதும் ஏற்பட்டது.

எல்லாவற்றுக்குமப்பால் தமிழர்களுக்குத் தலைமையை வழங்குமளவுக்குப் புதைந்து கிடக்கும் ஆளுமையை வெளிக்காட்டித் தம்பட்டமடித்து ஆரவாரிக்கத் தெரியாத அமைதியான சுபாவம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்று நான் எப்போதும் யோசிப்பதுண்டு. 

அவரது சிந்தனைகளையும் அவரது அறிவையும் நல்லெண்ணங்களையும் ஏன் இந்த சமுதாயம் முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாது அமைதியாகக் கடந்து போகின்றது என்பது இன்னும் புரியாத புதிர்தான். இப்போதுள்ள அரசியல் சக்கரத்தின் ஆர்ப்பாட்டமிக்க சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் மிக நிதானமாகப் பயணப்படும் அவருக்குச் செங்கம்பளம் விரிக்க இளைஞர் குழாம் தயாராக வேண்டும். 

நாம் எத்தனையோ பேரைக் கடந்து போகின்றோம். ஆனால் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆகர்சனம் வெகு சொற்பமான சிலருக்குத்தான் வாய்க்கும். அந்த ஈர்ப்பும் ஆகர்சனமும் அவர்களின் தூய்மையான உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து வெளிப்பட்டு நம்மைக் கவர்ந்து சொக்கச் செய்வதாகும். அதில் போலியோ அல்லது நடிப்பு கலந்த பிரமாண்டத்தைக் கற்பிக்கும் செயற்கையான எதுவுமோ கலந்திருக்காது. அத்தகையவர்கள் எதற்காகவும் எவருக்குப் பின்னாலும் வலிந்து செல்லமாட்டார்கள். காலம் அவர்களை நமக்கு அடையாளங்காட்டும் அப்போது அவர்களின் கரங்களைப் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டும். அச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் நாமே நஷ்டவாளிகள். 

தரமான மனிதர்களின் தலைமைக்குக் கீழ் நாமெல்லாம் நடைபயிலும் போது நம் நெஞ்சில் உட்காரும் திமிருக்கு ஒரு மதிப்பீடு இருக்காது. அந்த முறுக்கு நம்மை நெஞ்சை நிமிர்த்தியபடி எதுவானாலும் எதிர்கொள்ள உந்தித் தள்ளும். வரலாறு சில இடங்களில் அடிக்கோடிடப்பட்டு எழுதப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களைப் பார்த்தால் அனைவரும் வாழவேண்டும் என்ற அடிப்படை எண்ணத்தால் புடம்போடப்பட்ட தலைமைகளின் செயற்பாடுகளால் விளைந்த விளைச்சலை சகல மக்களும் அனுபவிக்கும் தருணங்களாகத்தான் இருக்கும்.



நேர்மறை 15 கேள்விகளுக்கு நாச்சியாதீவு பர்வீன் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீனின்
அவர்களின் பதில்கள்

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?  
பலரையும்விடத் திறமைமிக்க ஒரு மனிதன் என்று நான் நம்புகின்றேன்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்? 
என் முரண்பாடுகள் ஒரு போதும் சுயநலத்திற்காக இருந்ததில்லை அதனால் அது கணக்கில் இல்லை

03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது? 
இலக்கியவாதி அப்படி யாராவது இருக்காங்களா. வீம்புக்காக குழாயடிச் சண்டை போடும் நபர்கள்தானே அதிகம்.

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
மற்றவர்கள் எழுதும் அளவு  உயரத்திற்கு இன்னும் போகவில்லை

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
மனதிற்குப் பிடிக்கின்ற போது படைப்புக்களைப் பற்றியும் படைப்பாளிகள் பற்றியும் நிறையவே  எழுதி இருக்கின்றேன்.

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
  முகமூடி போடாதவர்களை

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது? 
இப்போது வரும் ஐம்பது வீதமான புத்தங்கள் அப்படித்தானே இருக்கின்றன.

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது? 
நிறையப் புத்தகங்கள் அப்படியான உனர்வைத் தந்திருக்கன்றன. சரியாகத் தேர்வு செய்கின்றபோதுதான் அதை அனுபவிக்க முடியும்.

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை? 
யாத்ரா , மல்லிகை

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
ஒரு படைப்புக்கு விலை பேசுவது பெத்த குழந் தையை விலை பேசுவது போன்றது

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்? 
ஓஹ் அதுவா!!! கிடைத்தால் நல்லது அப்போது அதை வரவேற்போம்


12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது? 
தாய் மொழியிலேயே இன்னும் தவிக்கிறேன்

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து? 
இப்போது பலரும் எழுத வாய்ப்பேற்பட்டு இருக்கின்றது. ஆயினும் அனைத்தையும் குப்பைகள் என்று புறக்கணிக்க முடியாது.

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்? 
ஒரு கவிதை மற்றும் இரண்டு ஹைக்கூக்களின் சொந்தக்காரன் நான்

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்? 
இரண்டு மூன்று பேர் இருக்காங்க. எப்படிக் குத்துவது என்றுதான் யோசிக்கின்றேன்.

மனதிற் பட்டது - 11 மக்கத்துச் சால்வை ரிஷி மூலத்தைத் தேடி.

தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 11

மக்கத்துச் சால்வை 
ரிஷி மூலத்தைத் தேடி...

அவ்வப்போது சில திருடர்கள் வசமாக மாட்டிக் கொள்வார்கள். வாங்கிக் கட்டியும்கொள்வ துண்டு. இங்கு பெரிய இடம் சின்ன இடம் என்றெல்லாம் கிடையாது. திருடு பிடிபட்ட பின்னர் அந்தத் திருடன் சொல்வான் பாருங்கள் ஒரு நியாயம் அதுதான் செம ஹைலைட்.

இலக்கியத்திருட்டுக்கள் அவ்வப்போது நடைபெறும். பெரும்பாலும் திருடர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற நினைப்பில்தான் எப்போதும் இருப்பர். ஆனால் காலம் ஒரு கட்டத்தில் அவர்களை அப்படட்டமாகக் காட்டிக் கொடுத்துவிடும். அதை யாராவது ஒருவன் வெகு சுலபமாகச் செய்து விடுவான். 

ஒரு பழம்பெரும் படைப்பாளி கென்யச் சிறுகதை ஒன்றைத் தழுவி எழுதிவிட்டு தனது படைப்பாகப் பெயரைப் போட்டுக் கொண்டார். கென்யச் சிறுகதைதானே என்று இது யாருக்குத் தெரியப் போகின்றது என்பது அவரது நினைப்பாக இருந்திருக்கும். அன்மையில் காலச்சுவட்டில் கூட அப்படியொரு தழுவல் கதை ஒரு படைப்பாளியின் பெயரில் வெளிவந்திருந்தது. தழுவலைத் தழுவல் என்று போட்டுவிட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் தழுவி எழுதிவிட்டு தனது பெயரைப் போட்டுக் கொள்வதுதான் துரோகம், அபத்தம்.

கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசம் இலக்கியப் படைப்பாளிகள் பலரைத்; தந்த பிரதேசம். வை.அஹமது, ஏ.ஜியெம். சதக்கா, அஸ்ரப் ஷிஹாப்தீன், எஸ்.நளீம், அமர், ஹஸன், ஷாமிலா செரீப், ஜிப்ரி ஹாஸன் ஆபிதா செரீப், அறபாத், இஸ்மாயீல், யூ.எல்.எம்.நஜீப், ஏபியெம்.இத்ரீஸ், இப்படி அந்தப் பட்டியல் நீளும். இங்குதான் எஸ்.எல்.எம்.ஹனீபா என்பரும் வசிக்கின்றார். அவர் எழுதிய சிறுகதைதான் மக்கத்துச் சால்வை.

பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் முஸ்லிம் கலைக்கூறுகள் இலக்கியத்திற்குள் கொண்டுவரப்படுவது பற்றிப் பேசும் போது அடிக்கடி நினைவுகூரும் கதைதான் மக்கத்துச் சால்வை. சிலம்படி அக்கதையின் பிரதான கதையம்சமாகப் பிணைந்திருப்பதே அதற்குக் காரணம். எனது மண்ணில் அப்படி சிலம்படிப் போட்டிகள் முன்னய காலத்தில் இடம்பெற்றதுவா என்ற தேடலைச் செய்யத் தூண்டியதும் பேராசியரின் கூற்றுதான். அதன்பிரகாரம் மேற்கொண்ட ஆய்வில் சில வயது போன மனிதர்களைச் சந்தித்து அப்படியொரு கலைக்கூறு நம் மண்ணில் இருந்து எப்படி மறைந்து போனது என்பது குறித்துத் தேடிய போதுதான் சிலதகவல்கள் கிடைக்கப்பெற்றன. 

அன்னாவிமார் இருந்தார்கள்தான் ஆனால் மக்கத்துச் சால்வை சிறுகதை சொல்வது போல தமிழ் சினமாவில் அல்லது மலையாள சினமாவில் வருமளவுக்கு சிலம்படி என்பது ஒருவர் தனது பலத்தை நிருபிப்பதற்கான அடிப்படைகளைக் கொண்ட ஒரு கலைக் கூறாக இருக்கவில்லை. பெருநாள் தினங்களில் மற்றும் மீலாது தினங்களில் பொல்லடி நிகழ்வுகள் அரங்கேறும், நாடகங்கள், பக்கீர் பாவா பைத்துகள் போன்றனவும் இடம்பெற்ற நினைவுகள் எனக்கும் இருக்கின்றன. ஆனால் சிலம்படிதான் இன்னும் நினைவில்தட்டுப்படவில்லை.

அப்படியிருக்கையில் எஸ்எல்எம் ஹனிபா எங்கிருந்து இந்தக் கதைக்கான மூலத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது குடைந்து கொண்டே இருக்கும் கேள்வி. அதற்கான தேடலில் நிறையவே ஈடுபட வேண்டிய தேவையை எனக்குள் உண்டாக்கியதும் ஹனிபா மாமாதான். 

எனது சாச்சியைத் திருமணம் முடித்திருப்பவர் முகைதீன் குட்டி இஸ்மாயீல் குட்டி, இவர் ஒரு மலையாளி. கேரளத்துக் கலைக்கூறுகள் பலதையும் எனக்கு அறிமுகப்படுத்தியர். அவைகள் குறித்துக் கதைகதையாகச் சொன்னவர். சிலம்பாட்டம் அங்கு ஒரு போட்டியாகவே இடம்பெறும், கம்பு சுத்துவதில் வீட்டுக்கு வீடு வீரன் இருப்பானாம். அடிக்கடி போட்டிகள் இடம்பெறுமாம். எல்லாவற்றுக்கும் மேல் அவரது வாப்பாவும் ஒரு சீனக்கலை, வர்மக்கலை, சிலம்படி வீரன்தானாம், சாச்சாவும் கூட அப்படியேதான்...

தீபம் என்றொரு சஞ்சிகை வந்தது. இதில் எழுபது அல்லது என்பதுகளில் இத்தகைய கலைக்கூறுகளில் சிலம்படியைக் கதையம்சமாகக் கொண்ட ஒரு மலையாளச் சிறுகதை இடம்பெற்றிருந்ததாகச் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் எனது நினைவில் முதலில் வந்தது எஸ்எல்எம் ஹனிபாதான். அவரிடம் இப்போதும் பழைய தீபம் இதழ்கள் மிகவும் பத்திரமாக இருக்கின்றன.  அவரைத் தவிர வேறு யாரிடமும் அவ்விதழ்கள் இருக்காது என்று சொல்வதற்கில்லை தேடினால் அவை கிடைக்கும். அக்கதையில் இருந்து பிறந்ததுதான் மக்கத்துச் சால்வையா என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். 

இப்பணியை இலகுவாக்கிட பழைய தீபம் இதழ்கள் கைவசமிருப்பவர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்- 0094 777 617 227 அல்லது simpro2002@gmail.com 

நேர்மறை 15 கேள்விகளுக்கு நந்தினி சேவியர் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பதில்கள்

1. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
இயல்புவாழ்வில் சுழலும் ஒரு சராசரி மனிதன் மகனாக,தந்தையாக, கணவனாக என்று அனைத்திற்குமப்பால் ஒரு வாசகனாக இலக்கியவாதியாக

2. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
எனது வாழ்வே முரண்பாட்டுக்குள்தான் இருக்கின்றது. எனவே முரண்பட்டவர்களுக்கு எண்ணிக்கையில்லை.

3. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
முற்போக்கு இலக்கியவாதிகளிடையே ரஷ்ய சீன முரண்பாடு வந்து நாங்கள் இரண்டாக உடைந்த போதும் நட்பை உடைக்காமல் ஒரே கொள்கையில் இயங்கிய நிகழ்வு எனக்கு பிடித்தது.

4. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நான் இடது சாரி எழுத்தாளன். என்னைப் பலர் புறக்கணித்த போது பலர் என்னை அங்கீகரித்தார்கள். எதிரணி உட்பட, எனது எழுத்துக்கள் தனித்தொகுப்பாக வந்துள்ளது. அதில் பெயர் விபரங்கள் இருக்கின்றன.

5. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
புதிய எழுத்தார்களில் இருந்து எனது சமகால எழுத்தாளர்கள் வரை பலரைப்பற்றியும் பலரது படைப்புக்கள் பற்றியும். அத்துடன் எழுதுவதற்கு அப்படைப்பு என்னைக் கவர்ந்திருக்கவும் வேண்டும்.

6. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசமின்றி வாழ்கின்ற எனது கொள்கைட்;கு முரண்பட்டவர்களை

7. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
ஒன்றா ரெண்டா எடுத்துச் சொல்ல.

8. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நான் ஒரு இடதுசாரி, கலைத்துவமிக்க இடதுசாரி இலக்கியங்களை வாசிக்கும் போது இந்த உணர்வு ஏற்பட்டது. அதுவே என்னை எழுத உந்தித்தள்ளியது.

9. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
எனக்கு பிடித்தவைகள் எல்லாமே நின்று போய்விட்டன.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
ஒரு படைப்பின் பணமதிப்பீட்டை விட அது எந்தளவுக்கு வாசகர்களிடம் சென்றடைதல் அல்லது அங்கிகாரம் பெறுதல்  என்பதில்தான் அதன் பெறுமதி தங்கியிருக்கின்றது.

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
பரிசை நோக்கிய எழுத்து என்னளவில் உடன்பாடற்றது. ஒரு குழுவினால் மட்டும்  படைப்பின் தரத்தை தீர்மானிக்க இயலாது. பரிசுகள் படைப்பாளனைத் திருப்திப்படுத்தவே வழங்கப்படுகின்றன.பரிசுபெறாத எத்தனையோ சிறந்த புத்தகங்கள் இருக்கின்றன. அது ஒரு நிதியுதவி;.

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழைத் தவிர வேறொன்றிலுமில்லை. பாண்டித்தியம் என்பது கேள்விக்குறி.

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
பலர் நோயாளிகள் என்பதை மறந்து எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். நான் ஒரு இருதய நோயாளி. பல எழுத்துக்களால் எந்நேரமும் நான்  பாதிக்கப்படலாம். சுதந்திரமான பல எழுத்து வீரர்களை அது உருவாக்கி இருக்கு.


14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
நான்,மனைவி, ஒரு மகள்-ஒரு மகனை அநியாயமாக இழந்திருக்ககிறேன். அந்த இழப்பில் இருந்து இன்னும் விடுபடவில்லை.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அதற்கு இந்த இரண்டு கைகளும் போதாது. அவ்வளவு பேருக்கு குத்த வேண்டிக் கிடக்கு.