Monday, June 29, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 11............. ஊடறு + மலையகப் பெண்கள்

அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

ஷாமிலா வாசிக்கத் தொடங்கியபோதே நான் டைமரை ஒன் பண்ணி விட்டேன். முழுமையாக வாசித்து முடிக்கும் போது பதினெட்டு நிமிடங்கள் போய் இருந்தது. மொத்த நிமிடக் கணக்கைச் சொன்ன போது ஷாமிலா அலறியடித்துக் கொண்டு ஐயையோ அவங்க நமக்குத் தந்திருப்பது பதினைந்து நிமிடங்கள்தானே. ஒரு மாதத்துக்கு முதலே பதினைந்து நிமிடம் என்று அறிவுறுத்திய பின்னர் மூன்று நிமிடங்களை மேலதிகமாக எடுத்துக் கொள்வது எப்படி நியாயமாகும். என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான்  அந்த ஐடியா தோன்றியது..

முன்கூட்டியே மூன்று நிமிடங்களை மேலதிகமாக எடுத்துக் கொள்வேன் என்று அறிவிப்புச் செய்து விட்டு கட்டுரையை வாசிக்கின்றேன். அப்போது பிரச்சினை இருக்காது. அல்லது இதைவிடக் கொஞ்சம் வேகமாக வாசித்தால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துவிடலாம். என்ன செய்ய என்று சாமிலா கேட்கும் போது முதலாவது அம்சத்தைத் தெரிவு செய் என்று சொன்னேன். வேகமாக வாசிப்பது சிலருக்குக் கிரகிப்பது கஸ்டமாக இருக்கலாம் அதனால் இயல்பாக வாசிப்பது நல்லது அல்லது கட்டுரையில் தேவையற்றவை எனக் கருதும் விடயங்களை நீக்கிவிடலாம் என்றேன். மிக ரத்திணச் சுருக்கமாகத்தான் விடயதானங்களைச் சொல்லியிருக்கின்றேன் என்று ஷாமிலா சொன்ன போது தரப்பட்ட நேரத்துக்குள் தனது பேச்சை முடிக்க நினைக்கும் அந்தப் பண்பு பற்றிய எண்ணவோட்டமே என்னை மேவி நின்றது. 

பலருக்கும் வரையறுக்கப்பட்ட நேரம் குறித்து எந்தவிதமான பொறுப்புணர்வும் இருப்பதில்லை. எந்தவொரு நிகழ்வுக்கும் இத்தனை நிமிடங்கள் என்று நேர வரையறை பொதுவாக இருக்கும். பேச்சாளர்களுக்கு தலைப்புக் கொடுக்கும் போதே நேரத்தின் அளவையும் கொடுத்துவிடுவதன் நோக்கமே எப்பேர்ப்பட்ட பிரபஞ்சத்தின் அளவு தலைப்பாயினும் குறிப்பிட்ட நேரத்துக்குள் விடயத்தைச் சொல்லி முடிக்க வேண்டும் என்பதற்காகவே. அதைவிடுத்து தரப்பட்ட நேரத்துக்குள் தனது பேச்சை முடிக்க முடியாது போனால் அவரெல்லாம் என்ன பெரிய பேச்சாளராக இருந்தும் என்ன...!!

சிலருக்கு நேரத்தைப் பற்றிக் கவலையே கிடையாது. தாம் என்ன தயார்படுத்தினோமோ அதைச் சொல்லிவிட்டுத்தான் அடுத்த வேலை, உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று எத்தனை துண்டுகள் அனுப்பினாலும் அதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. அப்படிப்பட்டவர்களை எதிர்கொள்ள நேர்கையில்தான் மைக்கினுடைய சவுண்ட்டைக் கட் பண்ணி விடத் தோனும். சத்தம் இல்லாது வாயைச் சப்பிக் கொண்டிருந்தால் அவர்களாகவே போய் அமர்ந்து கொள்வார்கள். அப்படி சில இலக்கியக் கூட்டங்களில் நடந்துமிருக்கின்றது. இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் மட்டுமல்ல பேராசியர்கள் கூட இந்த விடயத்தில் அரசியல் மேடைப் பேச்சாளர்கள்போல அவ்வப்போது சில இடங்களில் மாறிப் போவதும் உண்டு. நல்லவேளை பெண்கள் சந்திப்பில் அவ்வாறான துரதிஷ்டங்கள் நிகழும் வாய்ப்புகள் கருக்கொள்ளும் போதே தலைமைதாங்கும் நபர் அதைப் பக்குவமாகக் கையாண்டதாக ஷாமிலா குறிப்பிட்டபோதுதான் நேரம் குறித்த அவளது கவலையின் உள்ளார்ந்த அவதானத்தைப் புரிந்து கொள்ள முடிமாக இருந்தது. அந்தக் காது கடிச்சான் குஞ்சுகளோடு சாமிலாவை ஒரு முறை ஒப்பீடு செய்து பார்த்தேன், என்னையறியாமலேயே சிரித்துவிட்டேன். 

ம்ம் ஷாமிலா, ரெண்டொரு நிமிடம் முன்னப் பின்னே ஆகுவதில் தப்பில்லை. ரெண்டொரு நிமிடம்தான், அதுவே நாலஞ்சி நிமிசங்களாக இருந்தால் தப்புதான்.

றஞ்சி இந்தவிடயத்தில் அதிக கவணம் செலுத்தியிருப்பார் போல. நேரத்துக்குள் நிகழ்வை நிறைவு செய்யாவிட்டால் மறுநாள் அரங்கில் உரையாளர்களும் கதிரைகளும் மட்டும்தான் அரங்கில் இருக்க வேண்டி நேரலாம். 

எல்லோரும் தூங்கியிருந்தார்கள். நேரம் இரண்டு மணியையும் தாண்டியிருந்தது. இதமான குளிர் போர்வைக்குள் சுருண்ட குட்டியனை அசையாமல் கட்டிப்போட்டிருந்தது. முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு  அன்றே சிலர் கிளம்பியிருந்தார்கள். ஆயினும் துரதிஷ்டவசமாக அவர்களால் அன்றைய காலநிலையை வெற்றிகொள்ள முடியாமல்போகவே அவர்களும் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தங்குவதற்கு முடிவெடுத்திருந்தமை பாரியதோர் எதிர்பாராத நிருவாகச் சிக்கலைத் தோற்றுவித்திருந்ததையும் அதை வெற்றிகரமாக எதிர் கொள்வதற் காக றஞ்சி, சந்திரலேகா, மற்றும் கிங்ஸ்லி ஆகியோர் அத்தனை குழப்பங் களுக்குள்ளும் பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்ததையும், முகம் சுளிக்காமல் விருந்தினர்கள் திருப்தியுறும் வகையில் அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காகக் பரிமாறிக் கொண்ட கருத்துக்களும் எனது காதிலும் விழுந்திருந்து. அப்போது அதன் கனதியை என்னால் உணர்வதற்கு வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் நித்திரை கொள்வதற்கு முன்னர் இந்நிகழ்வு மனத்திரையில் சிம்மாசனமிட்டு ரகளை பண்ணிக் கொண்டெ இருந்தது. 

இரவுக்கு ஒரு மகிமை இருக்கின்றது. பொதுவாக நித்திரைக்குச் செல்லும்போதுதான் இரவு தன் மகிமையை வெளிப்படுத்தும். அதாவது அன்றைய தினத்தில் வெகுவாக நம்மைப் பாதித்த சம்பத்தின் அல்லது பேச்சுக்களின் அல்லது நிகழ்வுகளின் சாரத்தை இரவு நமக்குள் தூவி விடும். அந்த நினைவலைகளில் பலர் மிதந்து மறைவார்கள், சிலரை நாம் மனதில் இருத்திப் பாராட்டுவோம், சிலரை வெறுத்து ஒதுக்கிவிடுவோம், சலருக்குச் சாபமும் கொடுப்போம் , சிலரை மட்டும் மனதார வாழத்துவோம். இரவு ஒருவனில் நிகழ்த்தும் சித்துவிளையாட்டு இது. றஞ்சி மற்றும் சந்திலேகா தோழர் கிங்ஸ்லி ஆகியோர் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரித்த மற்றுமோர் சந்தர்ப்பம் இது. எப்போதுமே இரவு தூங்கச் செல்லும் போது அன்றைய நிகழ்வுகள் குறித்து ஒரு முறை சுயவிசாரனை செய்து கொள்ளும்படி இஸ்லாமும் வலியுறுத்துவதால் எப்போதும் அதில் கூடுல் அக்கறை செலுத்துவேன். 

யாருடைய மனமேனும் நோகும்படி நான் நடந்து கொண்டேனா, இன்றைய பொழுதில் நான் பிரயோகித்த வார்த்தைகள் எத்தகையைவை, அவை யாருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்குமா என்று மீட்டிப் பார்க்கத் தோன்றாத மனிதர்கள் தமது மனசாட்சியைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று இந்தப் பெண்ணியச் சந்திப்புக்காக வந்து கலந்து கொண்டவர்களில் சிலரின் செயற்பாடுகள்தான் சற்றுக் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இப்படி ஒரு சுயவிசாரணையைச் செய்து கொள்ளும்போதே அவரவர்க்குத் தெரியும் அவரவர் விட்ட பிழைகள் அல்லது எல்லாமே. சரி தவறு உட்பட.

நிகழ்வுகள் வெற்றிபெறுதல் என்பதற்குப் பின்னால் எத்தனை பாரிய உழைப்பிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அங்கு யாருமில்லை. ஏனெனில் எல்லோரும் ஏதோவொருவிதத்தில் ஏதாவதொரு நிகழ்வை ஏற்பாடு செய்து அதின் பின்னால் நின்று உழைத்தே இருப்பார்கள். ஆனாலும் சில பொழுதுகளில் பொதுப்புத்திக்கு அதெல்லாம் மறைபட்டுப் போவதுமுண்டு. யார் கையில் இதெல்லாம் உண்டு....

நேரம் அதிகாலையைத் தொட்டுவிட்டது, இனிக் கொஞ்சம் தூங்கினால் நல்லது போன்று தோன்றியது.

தொடரும்...

Sunday, June 21, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 10 ..............ஊடறு + மலையகப் பெண்கள்

அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

ஓவியா மற்றும் நர்மதாவின் யாழ்ப்பாண விஜயம் குறித்த அறிவிப்பு உண்டுபன்னிய சலசலப்புக்கு நான் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிந்தது. ஓவியாவைப் பொருத்தமட்டில் இலங்கைக்கான விஜயம் என்பதே யாழ்ப்பாணம் மற்றும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று வருதல் என்பதாகவே இருந்தது.

யுத்த பூமி என்றால் அது வடக்குதான் என்ற மனோநிலையைத்தான்  பல வெளிநாட்டு அதிதிகளிடம் காண்கின்றேன் யுத்த பூமிக்கான விஜயம் என்றால் அது யாழ்ப்பாணத்திற்குப் போய் வரவேண்டும் என்பதாகவே இருக்கின்றது. ஆயினும் கிழக்கை யுத்தபூமியாகக் கருதி அங்கும் விஜயம் செய்யும் மனோநிலை எப்படி வெளிநாட்டு அதிதிகள் பலருக்கும் இல்லாமல் போனது என்பது எனக்கு இன்னும் புரியாத புதிர்தான். இறுதி யுத்தம் ஆரம்பித்ததே கிழக்கில் இருந்துதான்.

2006 ஜூலை இறுதியில்  மூதூரில் தொடங்கி 2008 மார்ச் வரை மிகப்பலமான யுத்தம் கிழக்கில் இடம்பெற்றது. கிழக்கில் 2008 ஏப்ரலில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது அதன்பின்னர் வடக்கு யுத்தம் சூடுபிடித்தது. 2008 மே தொடக்கம் 2009 மே வரை ஒரு வருட காலம் வடக்கில் இறுதி யுத்தம் இடம்பெற்றது. அரச படைகளுக்கு  கிழக்கை முழுமையாக மீட்டெடுக்க எடுத்த காலப்பிரிவிலும் பார்க்க வடக்கை மீட்க எடுத்த காலப்பிரிவு குறுகியதாகும். ஆன போதும் யுத்தம் என்றால் முள்ளிவாய்க்கால் அவலம் மட்டுமே எல்லோர் மனதிலும் பதிந்துவிட்டமை கிழக்கு மக்கள் பட்ட துன்பங்களை அப்படியே ஒதுக்கிவிட்டது போலத் தோன்றுகின்றது. எப்படிப்போனாலும் எங்கு நடந்தாலும் யுத்தம் என்பதன் விளைவுகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருக்கும் நாடு, தேசம், இனம், மொழி, நிறம், சமயம் கடந்து அதன் விளைவுகள் ஒன்றிலிருந்து ஒன்று மாறாதது. மனித அவலம் மட்டுமே இறுதி அறுவடை. எஞ்சி நிற்பது கண்ணீர் மட்டுமே.

இனிவரும் காலங்களில் இறுதி யுத்தம் பற்றி அறிய ஆவல் உள்ளவர்கள் மூதூர், வெருகல், மாவிலாறு, கொக்கட்டிச் சோலை, வவுனதீவு, வாகரை, தொப்பிகல, தீவுச்சேனை போன்ற பகுதிகளுக்கும் சென்று வாருங்கள் என்ற விண்ணப்பத்தை மட்டுமே என்னால் முன்வைக்க முடியும் அப்போதுதான் அவலத்தின் மொத்த வடிவத்தையும் பார்க்க முடியும்.

ஊடறு மற்றும் மலையகப் பெண்கள் இணைந்து நடாத்தும் இந்தச் சந்திப்பிலும் வந்திருக்கும் அதிதிகள் யுத்தப்பகுதிகளுக்கான விஜயம் என்றால் யாழ் விஜயம் என்ற அடிப்படையிலேயே ஏற்கனவே நிரற்படுத்தப்பட்ட நிகழ்சி பற்றியும் உரையாடலில் அறியக் கிடைத்தது. ஆனால் இங்கு எனக்குள் பல கேள்விச் சிக்கலைத் தோற்றுவித்தது என்னவென்றால் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் போது அந்நிகழ்வில் முழுமையாகக் கலந்து கொள்ளும் போதுதானே பிரச்சினைகள் குறித்த முழுமயான தெளிவு கிடைக்கும். அப்படியிருக்கும் போது இடையே அந்நிகழ்வில் இருந்து விலகி இன்னுமொரு நிகழ்ச்சி நிரல் போட்டுக் கொள்வது என்பது அந்நிகழ்வைப் புறக்கனிப்பது போன்றதுதானே இந்தக் கேள்வியை வெளிப்படையாகக் கேட்க எனக்குச் சங்கடமாக இருந்தது. இந்நிகழ்வுக்கென்று வந்துவிட்டு அதை அப்படியேபாதியில் விட்டுச் செல்லுதல் அவ்வளவு திருப்திகரமான ஒன்றாக எனக்குப்படவில்லை. நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருந்திருந்தால் அதில் மிகவும் கறாராக இருந்திருப்பேன். இந்நிகழ்வுக்காகவே கொழும்பில் இருந்து வந்த எனது மனைவி அதில் முழுமையாகப் பங்கு பற்ற வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதைத் தெளிவாக உள்வாங்கவும் வேண்டும் என்பதால்தான் ஆண்களுக்கு அனுமதியில்லாத முதல் நாளில் அவளையும் குட்டியனையும் கொஞ்ச நேரம் அங்கேயே விட்டுவிட்டு நான் வெளியே செல்ல முடிந்தது. இந்த இடத்தில் எந்தத்தீர்மானமும் எடுக்கக்கூடிய தீர்க்கமான நிலையில் உள்ள நபர் அல்ல நான். எல்லாத் தரப்பையும் சமநிலையில் பேணி அனைவரையும் ஏதோவோர் விதத்தில் திருப்திப்படுத்தும் வண்ணம் செயற்பட வேண்டிய அவசியம் இருந்தது. அதைப் புதிய மாதவி மிகத் தெளிவாக வெளிப்படையாக வெளிப்படுத்தினார்.

'எனக்கு ஓவியாவும் முக்கியம் ரஞ்சியும் முக்கியம், அந்த அடிப்படையில் நியாயத்தை மட்டும் என்னால் உள்வாங்க முடிகின்றது யாருக்கும் பாதிப்பில்லாமல் முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான்'
ஆளையாள் குற்றம் சொல்லி அந்த இடத்தில் எந்தப் பிரயோசனமும் இருக்கப் போவதில்லை என்பதால் என்னால் முடிந்த உதவி அல்லது பங்களிப்பு என்ன என்பதை மட்டும் நான் வெளிப்படுத்தினேன். போக்குவரத்தில் எனது அனுபவத்தைப் பின்னணியாகக் கொண்டு யதார்த்தத்தை விளங்கப்படுத்தினேன். அந்த இடத்தில் வடக்கிற்கான விஜயம் என்பதன் மீது ஓவியா கொண்டிருந்த உறுதியை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அதன் அவசியத்தை என்னால் மிகத் தெளிவாக உணரவும் முடிந்தது. கொட்டகலயில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணப்படுதல் என்பது அவ்வளவு எளிய போக்குவரத்து வசதிகளைக் கொண்ட பொறிமுறை கிடையாது. கொழும்பில் இருந்து என்றால் நினைத்தவுடன் பயணப்படலாம் அது ஒரு விசயமே கிடையாது. அவ்வளவு எளிது.

இந்த இடத்தில் புரிதல் மற்றும் ஒழுங்கு படுத்தல் பிரச்சினை இருந்தது போல, நட்பும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தது. இப்படி ஆயிரம் பிரச்சினைகள் இதைவிட வீரியமிக்கதாக வந்தாலும் அவர்களுக்கிடையில் ஒரு போதும் பிரிவு வரப்போவதில்லை. அப்படியொரு பிரிவுக்கு வித்திடும் பலம் அப்பிரச்சினைகளுக்குக் கிடையாது. அவ்வளவு பலமானதாக தன்னை நிரூபித்திருந்தது அவர்களின் நட்பு. கோபம் கூட செல்லமாகிப் போகும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் போது.

இந்த முரண்களையெல்லாம் உள்வாங்கியபடி அன்றைய இரவு மௌனமாகக் கரைந்து கொண்டிருக்கும் போதுதான் எனது அறைக்குள் நான் நுளைந்தேன். அங்கே குட்டியன் அப்போதுதான் உறங்கிப் போய் இருந்தான். ஷாமிலாவுக்கு தனது உரையை வாசித்துப் பார்க்க அவகாசமும் கிடைத்திருந்தது.
ஷாமிலா வாசிக்கத் தொடங்கியபோதே நான் டைமரை ஒன் பண்ணி விட்டேன். முழுமையாக வாசித்து முடிக்கும் போது பதினெட்டு நிமிடங்கள் போய் இருந்தது. மொத்த நிமிடக் கணக்கைச் சொன்ன போது ஷாமிலா அலறியடித்துக் கொண்டு ஐயையோ அவங்க நமக்குத் தந்திருப்பது பதினைந்து நிமிடங்கள்தானே. ஒரு மாதத்துக்கு முதலே பதினைந்து நிமிடம் என்று அறிவுறுத்திய பின்னர் மூன்று நிமிடங்களை மேலதிகமாக எடுத்துக் கொள்வது எப்படி நியாயமாகும். என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான்  அந்த ஐடியா தோன்றியது..

தொடரும்...

Tuesday, June 16, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 09 ................. ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

மாலையான போது ஓவியா, நர்மதா,ரஜிணி உள்ளிட்டவர்கள் வேனில் எனக்காகக் காத்திருந்தார்கள். தோழர் கிங்ஸ்லிதான் வாகன ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்ற படியால் மலையகத்து வாகனச் சாரதிகளிடம் ஒன்றுக்குப் பத்துமுறை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும் வாடகைப்பணம் தொடர்பில் நான் எதுவும் பேசவில்லை. மேல்கொத்மலைத் திட்டம், தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டு வசதிகள் மற்றும் லயன் வீடுகள் உட்பட அவர்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்தெல்லாம் பேசிக்கொண்டே டெவோன் நீர்வீழ்ச்சியை அடைந்தோம். பார்வையை அவ்வளவாக அது ஈர்க்கவில்லை. மனதைக் கிரங்கடிக்கும் அழகும் அங்கில்லை ஆயினும் ஒரு நீர் வீழ்ச்சி மெல்லிய கோடு போல இருக்கின்றது. சில வேளை அதை மிக அருகாகச் சென்று அதன் சாரலில் நனையுமளவுக்கேனும் ஏதாவது வசதி வாய்ப்புக்கள் செய்யப்பட்டிருப்பின் அந்த இன்பமே தனிதான். மனதுக்கு நெருக்கமானதொன்றாக அதை உணரச் செய்ய அரசுக்கு அக்கறையில்லை போலும்.

இயற்கை அழகும் பசுமையும் எப்போதும் இறுகிய மனதைச் சற்றுத் தளர்த்தி விடுவதில் வெற்றிபெறக் கூடியவை. மலையகத்தில் தாரளாமாக அந்த அழகு கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் எனக்கு ஆச்சரியமான விடயம் இந்த அழகும் பசுமையும் ஏன் இங்குள்ள சாரதிகளின் மனதினைத் தளர்த்தி கொஞ்சமேனும் நியாயத்தையும் கருனையையும் விதைக்கவில்லை என்பதுதான். கொஞ்ச தூரம் அப்படியே சுற்றிவிட்டு வந்திறங்க சாரதி இரெண்டாயிரத்து ஐந்நூறு என்று ஒற்றைக்காலில் நின்றான். இந்தப் பிரச்சினை எழும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்ட தொகை மிகவும் அநியாயமானது. அதறற்காக அவனுடன் நான் சண்டை போட முடியாது. நர்மதாவும் ஓவியாவும் அதை எதிர்பார்க்கவில்லை அதிர்ந்து போனார்கள். 

டொலரில் கணக்குப் பார்த்து சிறிய தொகைதான் என்று பணத்தை அள்ளி இறைத்து இவர்களைக் கெடுத்து வைத்திருப்பது வெள்ளைக்காரன்தான். மிகப் பெரிய ஏமாளிகள் என்றால் அது வெள்ளைக்காரர்களாகத்தான் இருக்கும். கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டு நடைபோட்டுக் கொண்டே இருப்பான். எனக்கு ஆசை இந்த வாகனச் சாரதிகள் எல்லாம் சைனாக் காரனிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான். இப்போது நாங்கள் போய் வந்த பயணத்திற்கு ஐநூறு ரூபாய்க்கு மேல் அம்பது சதமும் கொடுத்திருக்க மாட்டான். தெரியாத பாசை அவனுடன் மல்லுக்கட்ட இவர்களால் முடியாது. கொழும்பு பெட்டாஹ் மார்க்கட்டில் சைனாக்காரன் பன்னும் அட்டகாசங்களைக் கண்டுகண்டு சிரித்தே அலுத்துவிட்டது. 

ஒரு அக்கப்போரை முடித்து  அதிருப்தியுடன் ரெண்டாயிரம் ரூபாய் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. மீட்டர் டெக்சி சிஸ்டம் வந்தால் மட்டுமே இப்படிப்பட்ட ஆட்களுக்கு பாடம் புகட்ட முடியும். எரிபொருட்களின் விலையை அரசு எவ்வளவு குறைத்தாலும் அதன பயனை மக்கள் அனுபவிக்கக் கிடைப்பதில்லை இப்படிப்பட்ட நபர்களால்தான். மலையக மக்கள் கொண்டிருக்கும் அன்பிலும் பற்றிலும் ஓரளவு தாக்கம் செலுத்தும் வகையில் இந்தச் சாரதிகள் நடந்துகொள்வது மிகவும் வேதனையானது. வாழ்க்கைக் கஷ்டம் என்பதற்காக  கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மொத்தமாகப் பிடுங்கிக் கொள்ள நினைக்கும் மனோநிலை மிகவும் அபாயகரமானது. இப்படிப்பட்ட குணமுள்ளவர்கள் அரசியல் வாதியானால்தான் மக்களுக்குச் சாபக்கேடு ஆரம்பிக்கின்றது. அதைத்தான் மலையக அரசியல்வாதிகள் இன்றுவரையும் நிருபிக்கின்றார்கள். 

எல்லோரும் இரவுணக்காகச் சென்று கொண்டிருந்தார்கள். இந்திய விருந்தாளிகளுக்கு இடியப்பம் தேடிக் களைத்துப் போனோம். கொழும்பில் எத்தனை மனியானாலும் எப்பொதும் எல்லாம் கிடைக்கும். ஆனால் இங்கு அப்படியில்லை. எல்லாம் நேரத்திற்குத்தான். அடுத்தது உணவு முறைகளும் பெரிதும் மாற்றமானது. ஹோட்டல்களை வைத்துத்தான் அந்த முடிவுக்கு வந்தேன். அங்குள்ள மெனு அதைப் பறைசாற்றியது.

சாமிலாவைக் குட்டியன் வதைத்து எடுத்திருப்பான். வரவர அவனது எடை அதிகரித்துக் கொண்டே செல்வதால் அவனைத் தூக்கிச் சுமப்பது அவளுக்குச் சிரமமானது. சரோஜா அம்மாவுடனும் பாரதியுடனும் அவர்கள் வெளியே சென்றிருப்பது அந்தச் சிரமத்தை ஓரளவுக்குக் குறைத்துவிடும். 

முதல் நாள் நிகழ்வுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தது. சந்திரலேகாவின் முகத்திலும் ரஞ்சியின் முகத்திலும் தெரிந்த திருப்தி நிகழ்வு வெற்றிகரமானது என்று எடுத்துக்கொள்ள வைத்தது. இரவுணவுக்குப் பின்னர் எல்லோரும் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். அன்றைய நிகழ்வுகள் குறித்தும் அதன் போக்குகள் குறித்தும் அலசிக் கொண்டார்கள் நான் ஒரு பார்வையாளனாக அவ்விடத்தில் அவர்களின் பேச்சையே அவதானித்துக் கொண்டிருந்தேன். அதற்கிடையில் குட்டியன் வந்து அட்டகாசம் பண்ணத் தொடங்கினான். அவன் எல்லோரிடத்தும் தாவிக் கொண்டிருந்தான். றஞ்சி சுவிஸ் சொக்கலட்டுகளும் இன்னும் சில இனிப்புகளும் கொண்டு வந்தார். குட்டியனுக்கு அதிலெல்லாம் பெரிதாக ஈர்ப்பு கிடையாது ஆனால் நான் லேசுமாசான ஆள் கிடையாது. சொக்கலட் என்றால் அப்படியொரு பிரியம். அது போலதான் இனிப்புப் பண்டங்கள். 

குட்டியனுக்கான சொக்கலட்டுகளை றஞ்சி அக்கா என்னிடம் பொறுப்பளிக்கும் சாமிலா விநோதமகப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். பூனையிடம் பொரித்த மீனைப் பகிர்தளிக்கக் கொடுப்பது போன்றது அந்நிகழ்வு என்பதை றஞ்சி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் சிரிப்போடும் கலகலப்போடும் மாறிய போதுதான் நிலைமையை மாற்றிவிட்டது ஓவியா மற்றும் நர்மதாவின் யாழ்ப்பாண விஜயம் குறித்த அறிவிப்பு......

தொடரும்...

Thursday, June 11, 2015

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை - 03

- முஸ்டீன் - 

தென்மாகான சபையில் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரி ஒரு பிரேரனையை ஒரு சிங்கள மாகாண சபை உறுப்பினர் முன்வைக்கின்றார் அப்பிரேரனை குறித்து பலரிடமும் பீபீசி கருத்துக்களைப் பெற முயன்றது. அதிகமானவர்கள் அதை மறுத்துவிட்டதாக அறியக் கிடைக்கின்றது. அப்படியிருக்கும் போதுதான் அப்பிரேரணை குறித்த தனது கருத்துக்களை சர்மிளா செய்யித் பீபீசியிடம் முன்வைக்கின்றார். அப்பேட்டியை முழுமயாக விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதைத் திரும்பத் திரும்ப பல தடவைகளில் வாசித்து வௌ;வேறு கோணங்களில் விளங்க முயற்சித்தன் படி எனக்குத் தோன்றியது ஒன்றுதான்.

பீபீசியின் கேள்விக்கு சர்மிளா இப்படி பதில் அளிக்கத் தொடங்கியிருந்தால் இன்று எந்தப் பிரச்சினையும்வந்திருக்காது. 'இஸ்லாம் விபச்சாரத்தை முற்றாகத் தடை செய்திருக்கின்றது. அதை நெருங்கவும் வேண்டாம் என்று சொல்கின்றது. அந்த வகையில் ஒரு முஸ்லிம் பெண்ணாக நான் இது குறித்து கருத்துரைப்பதை தவிர்ப்பதுதான் சரி. ஆனாலும் ஒரு சமூகவியல் செயற்பாட்டாளராக நோக்கும்போது குறித்த மாகாண சபை உறுப்பினரின் பிரேரணை...' 

இந்தத் தொடக்கத்தில் விட்ட பிழை இறுதியில் சர்மிளா விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று குரல் கொடுக்கின்றார் என்று ஆகிப் போனது. ஒரு மயிரிழையில் எல்லாம் மாறிப்போனது. சமுகத்தில் சிலர்  அவசரப்பட்டு எடுத்த சில தீர்மானங்கள் சில முட்டாள்கள் நடந்து கொண்ட விதம் எல்லாம் இந்தப் பிரச்சினையை உடன்பாட்டு ரீதியில் அல்லாமல் முரண்பாட்டு ரீதியிலேயே பிடிவாதத்துடன் எதிர்கொள்ளும்படி சர்மிளாவைத் தூண்டிற்று. 

அடுத்த நாள் பீபீசியில் சர்மிளா உரத்துச் சொன்ன எந்த நியாயப்படுத்தல்களும் மக்களின் செவிகளில் விழவே இல்லை. இந்தப் பிரச்சினையில் சர்மிளா கொண்டிருந்த பிடிவாதம்தான் தொடர்ந்தும் சர்ச்சையைக் கூர்மைப்படுத்தும் நிலைக்குக் கொண்டு சென்றது என்பது ஒரு பக்கம், உட்சாக மடையர்களின் தலைகால் புரியாத எதிர்ப்பு சமமான மறுபக்கம் என்பது எனது அவதானம். 

இதை விட மிகவும் சர்சைக்குரிய கருத்துக்களை அதுவும்  இஸ்லாமிய அடிப்படைகளையே புரட்டிப் போடும் அளவுக்குச் கண்டனத்திற்குரிய கருத்துக்களைக் கொண்டு கவிதை எழுதியவர்தான்  சாய்ந்தமருதைச் சேர்ந்த இஸ்ஸத் ரிஹானா எனப்படும் அனார். லெஸ்பியன் முறை பாலுறவை ஆதரித்து எழுதியவர், கணவனை விட்டுவிட்டு அடுத்தவன் மீது ஆசைப்படுவதில் தப்பில்லை என்று பகிரங்கமாக எழுதியவர். (இவரின் கணவர் இன்னொரு எழுத்தாளரின் மனைவியை தனது படுக்கையறைக்கு வருமாறு அழைத்த விவகாரத்தில் அவருக்கு எதிராக வத்தளை பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாடு இன்னும் நிலுவையில் இருக்கின்றது) அனார் விபச்சாரத்தையும் தாண்டி இஸ்லாத்தின் ஆன்மாவில் ஓங்கிக் குத்தியவர். இறைவனையே தான் தண்டிக்க வேண்டும் என்று பகிரங்கமாக மேடையில் பேசியவர் உதாரணத்திற்கு

'...எல்லாவிதக் கட்டாயத் தினிப்புக்களில் இருந்தும் வெளியேற விரும்பினேன். யாரையேனும் இதற்காக தண்டிக்க வேண்டுமென நினைத்தேன், குறைந்தபட்சமாகக் கடவுளையேனும்...'
(அனார் - இலங்கை - தாயகம் கடந்த தமிழ் - தொகுப்பு மாலன் - பக் 160)

இப்பேர்ப்பட்ட கருத்துக்களையே மூக்கு மசிறு அளவுக்கேனும் கணக்கெடுக்காத  முஸ்லிம் மக்கள் கூட்டம் சர்மிளாவின் மீது ஏன் இந்தக் காட்டுப் பாச்சல் பாய்கின்றது என்று ஒரு கணம் நான் சிந்தித்துத்துப் பார்த்தேன். அந்த அரசியலின் பின்புலம் இன்னும் எனக்குச் சரியாகப் புரியவில்லை. இந்த இடத்தில் எனது மக்களை நோக்கித்தான் என்னால் கேள்விகளைத் தொடுக்க முடியும். எனது மக்களின் வழிகாட்டிகள் என்று தொப்பியும் தாடியுமாக மிம்பர் மேடைகளில்  முழங்கும் ஆலிம் சாக்களை நோக்கித்தான் எனது சாட்டையைத் திருப்ப முடியும். சமயத்துக்கு ஒவ்வாத ஒரு கருத்துக்காகப் போரட்டக் களத்தில் குதிப்பதென்றால் அப்படி ஒவ்வாத எல்லாக் கருத்துக்களுக்காகவும் அது நடைபெற்று இருக்க வேண்டும். இனால் இங்கு அப்படியொன்று நடைபெறவில்லை. அப்படியானால் அதற்குப் பின்னால் இருப்பது என்ன?  எனது சிறு புத்திக்கு இப்படிப் படுகின்றுது . 

அவர்களின் அறியாமையும் தேடலின்மையும் சோடாக் கேஸ் போன்று சீறிப் பாய்ந்து சற்று நேரத்தில் அடங்கிப் போகும் தன்மையும், சீசன் போராளிகளாய் மாறி தாமும் இன்னும் உயிருடன் இருக்கின்றோம் என்பதைப் பறைசாற்றிவிட்டு ஓய்ந்து போகும் வெறும் உணர்ச்சி வசப்படும் உயிருள்ள பிணங்களாயும் அவர்கள் இருப்பதுதான். இந்தப் பிணங்களையே கொதித்தெழச் செய்ததில் சர்மிளாவின் பிடிவாதத்திற்கு பெரும் பங்கு இருக்கின்றது. 

ஏன் சர்மிளா இந்த விடயத்தில் அவ்வளவு பிடிவாதமாக இருந்தாள்? என்ற கேள்விக்கு கட்டாயம் பதில்  தேடியாக வேண்டும். முதல் நாள் பேட்டியில் இருந்த வேகம் பிரச்சினையாகிவிட்டபின்னர் மறுநாள் தன்னை நியாயப்படுத்துவதிலும் சரணடையாமல் தப்பித்துக் கொள்வதிலும் உயர்ந்த பட்ச  கரிசனை கலந்திருப்பதாய் வெளிப்பட்டது ஆச்சரியமானதல்ல. நிலைமையைப் பூதாகரப்படுத்தியது பேட்டியில் தொனித்த கருத்துக்கள்  மட்டுமல்ல சர்மிளாவின் பிடிவாதமும்தான்.

இந்நிகழ்வுக்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் சிறகு முளைத்த பெண் என்ற கவிதைத் தொகுதி வெளிவருகின்றது. அத்தொகுதியில் உள்ள இரண்டு கவிதைகள் வெளியீட்டின் போது திரையிடப்பட்டன அவற்றை நானே காட்சி வடிவமாகச் செய்து கொடுத்துமிருந்தேன். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல சங்கடங்களும் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் கனவுகளும் கவிதைகளாகி இருப்பதையும் அவதானிக்கலாம். கiவிதைகளில் சில இடங்களில் தொனிக்கும் விடயதானங்களில் எனக்கு முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகுறித்து நோக்குவதல்ல இங்குள்ள பிரதான விடயம். பொதுவாக பெண்ணுடலை முன்னிறுத்திய கவிதைகளை விட்டும் தூரமாக நிற்கவே நான் விரும்புவேன். எனது வாழ்வில் நேர்ந்த ஒNயொரு அவலம் ஒரு பதிலடிக்காக குறிப்பிட்ட வகையறா கவிதைகள் அடங்கிய சில தொகுதிகளை வாசிக்கக் கிடைத்ததுதான். ஆனால் சர்மிளாவின் கவிதைகளில் அந்தளவுக்கு அஜீரணம் இல்லை. சில இடங்களில் மட்டும் நெருடல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லைதான். சில விடயங்களை எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்வோடு சம்பந்தப்படுத்தி யோசிக்கும் மனித மூளை நிறைய இடங்களில் தடமாறி விழத்தான் செய்யும். இதுவா? அதுவா? அப்படியிருக்குமோ அல்லது இப்படியிருக்குமோ என்று தனது புத்திக்கொப்ப ஏதேனுமொரு பிடிமானத்தைத் தேடி ஓடும் இந்த இயல்புக்கு அவரேதான் பொறுப்பாக முடியும். 

இந்த மனித இயல்பைக் கடந்து ஒருவரின் எழுத்துலகில் நகர்வது என்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஒருவர் எழுதுவது எல்லாமே அவரது வாழ்வில் நடந்ததாக அல்லது அவரே அதற்குரியவராகக் கருதும் ஒரு சின்ன இடைவெளியில் ஏன் பிறரின் வாழ்வில் நேர்ந்ததை தனக்குப் போல எழுதியிருக்கக் கூடாது என்று எண்ணத் தோன்றுவதில் இருந்து தூரச் செல்வதில்தான் ஒருவரின் எழுத்தில் தொனிக்கம் பல விடயங்களை உள்வாங்குவதில் ஒரு நியாயத் தன்மையைத் தோற்றுவிக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. மற்றவர்களுக்கு இதில் வேறு கருத்துக்கள் இருக்கலாம்.

சர்மிளாவின் எழுத்துக்கள்  குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம். எந்தத்தனிப்பட்ட நிலைப்பாடுகளுக்கும் அப்பால் நின்று அவற்றைப் பார்க்க முயல்கின்றேன்.

தனிமனித ஒழுக்கம் என்பதில் இருந்து எழுத்துப் பிறல்தல் மட்டுமல்ல வார்த்தையும் நடத்தையும்தான்...
தொடரும்...

Friday, June 5, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 08 ..... ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

மலையகத்தில் இருக்கும் கொய்யாமரங்கள் வித்தியாசமானவை. பெரிதாக வளராது, ஆனால் நிறையக் காய்க்கும், பாடசாலைக் காலத்தில் கல்விச் சுற்றுலா வென்றிருந்த போது நோட்டன் பிரிஜ் பகுதியில் ஒரு கொய்யாக் காடே மஞ்சல் நிற மின்குமிழ் பொருத்தப்பட்டது போல அவ்வளவு அளகாகக் காட்சியளித்தது. அந்த மஞ்சல் அழகைக் கொஞ்ச நேரம்தான் ரசிக்கக் கிடைத்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது போல அந்த மஞ்சல் மொத்தமாக இல்லாமலேயே போயிற்று. எங்கள் மாணவர் படை உள்ளே நுளைந்து வெளியேறியது மட்டும்தான் தெரிந்தது. அங்கு முதலில் நுளைந்து ஒரு மரத்தை மொட்டையடித்துவிட்டு அட்டைகளின் நடமாட்டத்தைக் கண்டு கிடைத்தவரைக்கும் போதும் என்று உடனடியாக வெளயேறியவன் நான்தான். அப்போதும் இரண்டு அட்டைகள் டவுசருக்குள்ளேயே நுளைந்து வசதியாக இரத்தம் குடித்தக் கொண்டிருந்தன. அதுதான் நான் வாங்கிய முதலாவது அட்டைக்கடி. என்னை முழுமையாக அச்சுறுத்திவிட்ட கடி. அன்று ஏற்பட்ட அட்டைப்பயம் இன்றுவரை விட்டபாடில்லை. அவ்வளவு இரத்தம் குடித்திருந்தது. 

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பின்புறமாக இருந்த ஒற்றைக் கொய்யாப்பழத்தை பார்த்து அதைச் சுவைக்க முடீயவில்லையே என்று பெருமூச்சுவிடத்தான் முடிந்தது. கைக்கெட்டும் தூரத்தில் இல்லாத எதையும் பார்த்துப் பெருமூச்சு விடுவது மனித இயல்புதானே. 

வெளியே கெக்கிராவ ஸஹானா மற்றும் சுலைஹா ஆகயோரின் குடும்பத்தவர்கள் அமர்ந்திருந்தார் கள். அங்கிருந்த சின்னஞ்சிறுசுகளை மழைக்குளிர் வாட்டிக் கொண்டிருந் தது. குட்டியன் அவர்களோடும் கொஞ்ச நேரம் ஐக்கியமாகி விளையா டிக் கொண்டிருந்தான். அவன் மட்டும் கிஞ்சிற்றும் குளிரைப் பொருட் படுத்தவில்லை. 

இந்த நிகழ்வில் எனது கவனத்தை மற்றுமோர் அம்சம் அங்கு சமுகமளித்திருந்த ஆண்கள்தான். ஒரு பெண்ணியச் சந்திப்புக்கு தாம் சார்ந்த பெண்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டுவிட்டு வெளியே அவர்கள் உலாத்திக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஜெஸீமாவின் கணவர் கலீல்  அவர்களும் எங்களோடு இணைந்து கொண்டார். அவரோடும் கொஞ்ச நேரம் மலையகத்தின் கல்விப் போக்குகள் குறித்து கதைத்துக் கொண்டிருந்தேன். தோழர் கிங்ஸ்லி அவர் குறித்து நிறையவே தகவல்களை வழங்கியிருந்தார். அதன் பேரில் அதிகரித்த மதிப்பு அவர் மீது இருந்தது. தமது மனைவியரை அழைத்துவந்து விட்டு அவர்கள் பேசுவதைக் கேட்டு இன்புற்று, அவர்கள் நிகழ்வுக்குத் தயாராவதற்கு உச்சபட்ச உதவிகளயும் அர்ப்பணிப்புக்களோடு செய்து அப்பெண்களை இன்னும் உயர்ந்த இடத்திற்குக்கொண்டு செல்வதற்கு அவர்கள் நல்கும் ஒத்தாசைகளை அப்பெண்கள்தான் பதிவு செய்ய வேண்டும். ஒரு பெண்ணுக்கு நல்ல தந்தையும் நல்ல கணவனும் அமைவதைப்போல வேறு பேறு எதுவும் கிடையாது. எல்லா ஆண்களும் தமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய மிகக் காத்திரமான கேள்வி நான் எனது மனைவிக்கு நல்ல கணவனாக இருக்கின்றேனா என்பதுதான். ஒரு நல்ல கணவனால் நிச்சயமாக எப்பேர்ப்பட்ட குணமுடைய பெண்ணையும் மாற்ற முடியும் என்பது எனது கணிப்பு. 

பெண்ணியச் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபாட்டோடும் நற்பெயரோடும் பாடுபடும் பலருக்கு அவர்களின் வாழ்க்கைத்துணை எத்தகைய உந்துதலை அளிக்கின்றார் என்பதற்காகவேனும் அவர்கள் ஓர் அமர்வைச் செய்ய வேண்டும். நற்பெயரை இழந்து ஒழுக்கங்கெட்டு தடம்புரண்ட பலர் பெண்ணியம் என்ற கோசத்தை தமது இருப்புக்காகவும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் பாவிக்கின்ற தளமாகக் கொண்டு செயற்படுவதையும் எச்சரிக்கையோடு பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது. அது எழுத்தானாலும் சரி, தனிப்பட்ட அல்லது பொது வாழ்வானாலும் சரி. தனிப்பட்ட வாழ்வில் ஜெயித்தவர்களால்தான் இதய சுத்தியோடும் திடகாத்திரத்தோடும் பொது வாழ்வில் ஏனைய பெண்களின் மேம்பாட்டுக்காகக் குரல் கொடுக்க முடிவயும் அந்தச் செயற்பாடு நேர்மையானதாக இருக்கும் அவர்கள் சொல்லும் ஆணாதிக்கத்திற்கு வலுவானதொரு அர்த்தம் இருக்கும். தனிப்பட்ட வாழ்வில் தோற்றவர்கள் தமது ஆற்றாமையையும் வேதனைகளையும் ஆத்திரங்களையும் ஆணாதிக்கம் என்ற அஸ்திரமாக மாற்றுவதிலேயே குறியாக இருப்பார்கள் யாரையாவது நோக்கி அதை எய்து கொண்டிருப்பதிலேயே திருப்தி காண்பார்கள். இத்தகைய செயற்பாட்டளர்களைத்தான் என்போன்றவர்கள் சல்லிக் காசுக்கும் கணக்கெடுப்பதில்லை. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது அவர்களைப்பற்றிக் கவலையும் கிடையாது. 

இந்தப் பெண்ணியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களின் கருத்துக்களை இந்தப் பரப்பில் அறிந்து கொள்ள ஆவல். பார்ப்போம் எத்தனை பேர் அதைச் செய்கின்றார்கள் என்று. ஏனெனில் என்னைப் பொருத்தமட்டில் சும்மா உறவும் வெறும் நட்பும் வேலைக்காகாதவை. பாதையோரத்தில் தாமாக முளைத்து எந்த இலக்குமற்று இருக்கும் செடிகளுக்கு ஒப்பானது. எதிர்காலத்தில் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமலேயே அவை மடிந்து போய்விடும். ஊடறுவும் அந் இணைப்பில் உள்ளவர்களும் அப்படி ஆகிவிடக்கூடாது. ஏனெனில் அவர்களின் செயற்பாட்டுத்தளம் அத்தகையது. 

நிகழ்வுகளில் பெரும்பகுதி முடிந்திருந்தது. ஓவியாவும் நர்மதாவும் வெளியே சென்று மலையகத்தை ஒரு பார்வை பார்த்துவரலாமா என்று கேட்டார்கள். அவர்களின் விருப்பத்தை ஏற்பாட்டாளர்களிடம் முன்வைத்தேன். அதுதானே முறை. அவர்களும் ஒரு வாகனத்தை அதற்காக ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால் அந்த வாகனச் சாரதியுடன் எதுவும் நாம் கதைக்கவில்லை. பயணத்தில் ஓவியா மற்றும் நர்மதாவுடன் மதுரைக்காரி ரஜணியும் இணைந்து கொண்டார். அந்தப் பயணத்தில்தான் ஓரளவு காத்திரமான கருத்துப் பரிமாற்றங்களைச் செய்துகொள்ளமுடியுமாக இருந்தது. மலையகம் குறித்த எனது தேடல் மற்றும் அந்த மக்களின் வாழ்வின் பின்னால் ஒரு கோர அரக்கனாக நின்று மிரட்டிக் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் சமகால வாழ்வியல் முன்னேற்றங்கள் என்று பலதையும் பேச முடிந்தது. 

ரஜணி எதையும் ஆழமாக அவதானிக்கக் கூடியவர் அதிர்ந்து பேசத் தெரியாதவர். ஆனால் வலுவான திடமான மனது கொண்ட எளிமையான ஓர்மைக்காரி. வழக்குரைஞராக இருப்பதாலோ என்னவோ அதிகம் கேள்வி கேட்கும் பண்பு இயல்பாகவே இருந்தது. சின்னச் சின்ன விசயங்களைக் கூடக் கேள்விகால் துளைத்தெடுத்து உண்மைகளை பாதுகாப்பாகக் கவணத்திற்கொள்ளும் பண்புடையவாராகவே எனக்குத் தெரிந்தார். தேவையற்ற பேச்சுக்கள் குறைவு. ஆளுமையின் வீச்செல்லையைத் தீர்மானிப்பது அவரவரது இயல்பான பேச்சும் அதில் தொனிக்கும் கருத்தாழமும்தான்.

நர்மதா தொழிநுட்பத் துறை சார்ந்தவர். அவரது கணவர்  எனக்கு மிகவும் பிடித்தமான திரைத்துறையைச் சேர்ந்தவர். அவரது கணவரின் கதையை யூ ரீ வி திருடி தாண்டவமாகப் பெயர் சூடி சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து வெளியிட்ட சோகக் கதையையும்  பகிர்ந்து கொண்ட போது எனக்கு மனதில் தோன்றியது ஒன்றேயொன்றுதான். விருது பெற்ற புகழ்மிக்க சாதனைக் கவிஞர்களே மற்றவர்களின் கவிதைகளைத் திருடும் போது, கருத்துச் செறிவைக் கொப்பியடிக்கும் போது திரைக்கதை எம்மாத்திரம்? படைப்பிலக்கியவாதிக்கு ஒரு போதும் சரக்குப் பஞ்சம் வருவதில்லை. திருட்டுக்களால் அவனது ஆளுமையை முடக்க முடியாது. அவனோ அவளோ புதிது புதிதாக துளிர்த்துக் கொண்டே இருப்பர். ஆனால் கொப்பியடிக்கும் கூட்டத்திற்கு அப்படியல்ல புதிதாக யாராவது எதையாவது படைக்கும் வரைக் காத்திருக்க வேண்டும். பலர் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் எழுதுவதில்லை ஏன்? அதெல்லாம் ரகசியம்.

அப்பிரதேசத்தில் பார்ப்பதற்கு தேயிலைத் தோட்டங்களையும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலையும் தாண்டி எமக்கு இருந்தது ஒரேயொரு நீர்வீழ்ச்சி டெவோன்தான்...
தொடரும்....

Sunday, May 31, 2015

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை - 02

-முஸ்டீன்-

என்னைப் பொறுத்தவரைக்கும் மனதிற் பட்டதை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டு சென்று கொண்டே இருப்பேன். முதலாவது பகுதி பதிவேற்றப்பட்ட பின்னர் வந்து குவிந்த உள்பெட்டித் தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்களையும் கவனமாகப் படிக்கின்றேன். அவரவரது தராதரத்திற்கு ஏற்ற வார்த்தைப்பிரயோகங்களோடு வந்திருந்த அனைத்தையும் படித்தேன் கேள்விகள் அனைத்திற்கும் தெரிந்தளவு இறுதியில் பதிலளிப்பேன்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரோடு சம்பந்தப்படுத்தி தேர்தல் ஒன்றினை இலக்கு வைத்து அச்சிடப்பட்ட பெருந்தொகை துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றிய போதுதான் சர்மிளா என்ற பெண்ணின் பெயரே எனக்குத் தெரிய வந்தது. அதன் பின்னர்தான் அவர் யார் என்ற தேடுதலைத் செய்யவேண்டியேற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தோடு அதை நிறுத்திக் கொண்டேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் தெரிவுகள் என்பன அவரவர் சுதந்திரத்தின்பாற்பட்டது. பிறரின் குறைகளை துருவித் துருவி ஆராய எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. எனது சமயம் அப்படித்தான் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது. குறித்தவிடயத்தைக் குறித்த அரசியல்வாதியின் கவனத்திற்குச் சாடைமாடையாகக் கொண்டுவந்ததோடு அதை விட்டுவிட்டேன். ஒரு ஆணைப் பழிவாங்க அவனை ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தியும் ஒரு பெண்ணைப் பழிவாங்க நினைத்தால் அவள் நடத்தை கெட்டவள் என்றும் முத்திரைகுத்தி ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டாலே போதும் அதை அப்படியே நம்புவதற்கு ஆயிரத்தெட்டு முட்டாள்கள் இந்தச் சமூகத்தில் இருக்கின்றார்கள். அதை அப்படியே  திட்டவட்டமான ஆய்வு முடிவாகப் பரப்புரை செய்ய பல புத்திஜீவிகள் இருக்கின்றார்கள். அநாமோதயத் துண்டுப் பிரசுரம் அடிப்பவனுக்கும் அச்சந்தர்ப்பத்தில் இஸ்லாம் ஞாபகம் வருவதில்லை, படித்துவிட்டுக் கதைபரப்புவனுக்கும் ஞாபகம் வருவதில்லை. 

எனது பார்வையில் சர்மிளா என்பவள் எல்லாப் பெண்களையும் போல சாதாரணமானவள் கிடையாது. அவளுக்குள் ஒரு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்தத் தீயை அவளுக்குள் மூட்டியது யாரென்பது தெரியாது. ஆனால் அதை அனைந்துவிடாமல் உக்கிரம் பெறச் செய்தது கொண்டிருப்பது இந்தச் சமுதாயம்தான் என்பதும் அவள் பெற்ற அனுபவங்களும் படிப்பினைகளும் அதற்குத் துணை செய்து கொண்டிருக்கின்றன என்பதும் தெளிவு. அத்தீயில் நியாயமும் இருந்தது, கோபமும் இருந்தது, புரட்சியும் இருந்தது, சில புரிதல் கோளாறுகளும் இருக்கவே செய்தன. 


  • அவளுக்குள் உறைந்து கிடக்கும் நியாயங்களை அங்கீகரிக்க வேண்டியிருக்கின்றது.
  • அவளுக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் கோபத்தைத் தனிக்க வேண்டியிருக்கின்றது.
  • அவளது புரட்சி நியாயமானதாயின் அதற்குத் துணை செய்ய வேண்டியிருக்கின்றது,
  • அவளது புரிதல் கோளாறுகளை நிதானமாகச் செம்மைப்படுத்த வேண்டியிருக்கின்றது.

இதையெல்லாம் விட்டுவிட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று  சர்மிளா விடயத்தில் எதையும் செய்ய முடியாது. இது வரைக்குமான அனைத்து நகர்வுகளும் இப்படித்தான் உணர்வு மேலீட்டால் போதிய தயார்படுத்தல் இன்றியும் புத்திக்கு ஓய்வு கொடுத்தும் உணச்சிவசப்படுதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நகர்த்தப்பட்டிருக்கின்றன என்பதை நியாயமான முறையில் பக்கச் சார்பின்றி உற்று நோக்கும் யாவரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

சர்மிளாவின் முகநூல் பதிவுகள், நேர்காணல்கள், கவிதைகள், நாவல் மற்றும் அவள் குறித்த இன்னபிற எழுத்துக்கள் அனைத்தையும் கருத்திற் கொண்டே இக்கட்டுரை வரையப்படுகின்றது. சர்மிளாவின் எழுத்துக்களில் இருந்தே நான் எனக்கு தேவையான பல எடுகோள்களை எடுத்துக் கொள்கின்றேன். சாதாரணமான மற்றும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் பதியப்பட்ட பின்னூட்டங்களையும் கவனத்திற் கொண்டுதான் கவனமாக எழுத வேண்டியிருக்கின்றது. ஏனெனில் யாருக்கும் பரிவட்டம் பிடிக்கவோ யாரையும் காலில் போட்டு மிதிக்கவோ எந்தத் தேவையும் எனக்கில்லை. எனக்கு நியாயம் என்று தோன்றிய கருத்துக்களை நான் வெளிப்படுத்துவதை யாராலும் தடுத்துவிட முடியாது. 

சாதாரணமாக எல்லாப் பெண்களையும் போல சர்மிளா இல்லை என்பதால்தான் தனது செயற்பாட்டுத் தளத்தைத் திருமணவாழ்க்கை எவ்விதத்திலும் பாதித்துவிடாமல் இருக்க அவள் போராடியிருப்பதாகவே தெரிகின்றது.  சொந்த வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் அனுபவங்கள் ஆகியவற்றின் வீச்சு எழுத்துக்களில் பிரதிபலிப்பதை மிக எளிதாகவே அவதானிக்க முடியும். அது நல்ல அறிகுறிதான் ஆயினும் புரிதல்தான் சங்கடங்களைத் தோற்றுவித்து எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்துக் கொடுக்கின்றது.  

இந்தச் சமுதாயத்தில் உள்ள சிலரின் கடுமையான எதிர்ப்புகள் இன்னுமின்னும் பல கவிதைகளை எழுதும் வாய்ப்பினைத்தான் சர்மிளாவுக்கு அளித்துள்ளன. மொத்தத்தில் கண்மூடித்தனமான எதிர்ப்பு அவளை இன்னும் வேகமாக இயங்கச் செய்ததுவேயன்றி சோர்வடையச் செய்யவில்லை.

இந்த எதிர்ப்புகள் தோற்றம் பெறப் பிரதான காரணம் எது?
பி.பி.சி க்கு அளித்த பேட்டிஎங்கே முரண்பாட்டினை விதைக்கின்து?

தொடரும்...

Saturday, May 30, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 07 .............ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-


எப்படியும் அவர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் வராமல் இந்த நாட்டில் ஒரு நிகழ்வு நடந்துவிடுமா என்ன! அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வது இங்கு அவ்வளவு கஷ்டமாக இருக்காது. பார்வையால் அலசிக் கொண்டிருக்கும் போதே கண்ணில் பட்ட ஒருவர் சந்தேகத்தையும் சேர்த்தே விதைத்தார். நிச்சயமாக அவர் அவர்களில் ஒருவாராகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே குட்டியனை பாரதித் தம்பியிடம் கொடுத்துவிட்டு அவரை நெருங்கினேன். ஏற்கனவே அவர் எனது கையில் இருந்த புத்தகத்தை வேறு யாரிடமாவது அவதானித்து இருக்க வேண்டும். உடனே உடைந்த தமிழில் இது என்ன புத்தகம் என்று கேட்டார். 


நான் சிங்களத்திலேயே அவருக்கு இது 2012ஆம் ஆண்டு கிழக்குமாகாணசபை சாஹித்திய பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி என்றேன். எனக்கும் வாசிக்க நல்ல ஆசை நான் தமிழ் படிப்பேன் என்று அட்டையில் இருந்த ஹராங்குட்டி என்ற பெயரை மிகவும் சிரமப்பட்டு எழுத்துக்கூட்டி பிழையாகவே வாசித்தார். அத்தோடு அவர் மொழி பெயர்ப்புக்களைச் செய்யும் நபராகவும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். நானும் அதை நம்பியது போலப் பேசிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி தனக்கு அவசியம் வேண்டும் என்றும் ஒரு பிரதியைத் தனக்கு அவசியம் தர வேண்டும் என்றும் கேட்டார். அப்படி அவரைக் கேட்கத் தூண்டியது ஒரு தலையைக் குறி வைக்கும் துப்பாக்கியை கொண்ட அட்டைப்படம்தான் என்பதைப் புரிந்து கொள்ள எனக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. மேலதிகமாக அவரும் குழம்பி பிழையான செய்தியைக் கொடுத்து மேலிடத்தையும் குழப்பிவிடக் கூடாது என்றுதான் அரச சாகித்திய விருது பெற்றது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். அது அவரைத் திருப்திப்டுத்தியிருக்கவும் கூடும். கடைசி வரையும் அவர் எந்தப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிடாவிட்டாலும் தேசியப் புலனாய்வுப் பிரிவின் அங்கத்தவர் என்பதை பிரிதோர் வகையில் நான் அறிந்து கொண்டேன். 

பாதுகாப்புக்காகப் பொலிசார் கோரப்படுமிடத்து அவர்கள் அன்மையில் இருக்கும் பொலிஸ் நிலையத்திலிருந்து கடமைக்குப் வருவார்கள். அதுவும் சும்மா ஆயுதம் ஏதுமின்றி காக்கிச் சீறுடையில் அவர்களை அலட்டிக் கொள்ளவே தேவையில்லை. புள்ளப்பூச்சிக்குச் சமானம் அவர்கள் ஆனால் சிவில் உடையில் வருவார்களே அவர்கள்தான் சிலவிடயங்களைத் தீர்மானிக்கும் சக்திகளாக இயங்குபவர்கள். இப்படியான நிகழ்வுகள் குறிப்பாக தமிழர்கள் ஒன்று சேரும் நிகழ்வுகள் அதிலும் விஷேஷமாக வெளிநாட்டிலிருந்து வருகைதரும் தமிழர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் அதிலும் அதிவிஷேஷமாக தமிழ் நாட்டிலிருந்து தமிழ்த் தேசியவாதிகள் யாரேனும் பங்கு கொள்ளும் நிகழ்வுகள் இந்நாட்டில் யுத்தம் முடிந்த பின்னரும் மிக நுணுக்கமாகக் கண்கானிக்கப்படும் சூழ்நிலை இருப்பது புலனாய்வுப் பிரிவைப் பொறுத்தவரைக்கும் முன்னனெச்சரிக்கையான விடயமாகக் கருதப்பட்டாலும் சுதந்திரத்தில் தலையீடு செய்வதைத் தவிர்க்க ஏது வழி என்று ஒரு நியாயமான ஜீவன் சிந்திப்பதில் தப்பில்லை என்று நினைக்கின்றேன். 

சில வேளை மொழித் தேர்ச்சியின்மை காரணமாக தகவல்களைப் பிழையாக விளங்கி தவறான புரிதலோடு செய்தியை புலனாய்வுப் பிரிவிற்குக் கொடுத்துவிட்டால் வேண்டாத இன்னல்களை பங்கேற்பாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் அவலம் ஏற்படும். நல்ல வேளை அதிர்ஷ்டவசமாக அப்படியான எதிர்மறை விளைவுகள் இறுதி வரை நடக்கவில்லை.வந்திருந்த புலனாய்வுக் காரர் இது இந்நாட்டின் இறைமைக்குப் பாதகம்இல்லாதது என்று நற்சான்றிதழ் கொடுத்திருப்பார் போலும். ஆயினும் அவர் கொண்டு சென்ற எனது சிறுகதை; தொகுதி புலனாய்வுக் காரர்களைப் பற்றிய புதிய செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும்... அவர் மீண்டும் என்னைத் தேடி நிச்சயம் வருவார் அல்லது அவர் சார்ந்த எவரேனும்...

வந்திருந்தவர்கள் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது பரிவு கொண்டவர்கள், இறுதி யுத்தத்தையும் அதன் போதான மனித அழிவையும் விமர்சித்தவர்கள் என்பதால் எனக்குள் சின்னதாய் ஒரு லைக் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் இந்நிகழ்வு முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் உட்பட்ட யுத்தப் பிரதேசங்களுக்கு ஒரு வெளிநாட்டு விருந்தினர்கள் ஒரு விசிட் செல்ல இருப்பது பற்றி அறியக் கிடைத்ததுதான். எனக்குத் தெரிந்த எல்லைகளுக்குள் இந்த நிகழ்வு பெண்களை வலுவூட்டுவதற்கும் பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதுமான நோக்கங்களைக் கொண்டது. என்பதைத் தெளிபடுத்தும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். எத்தனை வகையான பிரச்சினைகளை எதிர் கொண்டு மீண்டுவிட்டோம் என்கிற மனவுறுதியில் இதில் எப்படியான பார்வைகள் ஊடறுக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துக் கொள்வதொன்றும் கஷ்டமாக இருக்கவில்லை. 

அந்த இக்கட்டான சூழ் நிலைக்குள் லறீனா அப்துல் ஹக் அவர்களின் மகன் றாஷித் என்னிடம் அங்கிள் வாங்களே கடைக்குப் பெயிட்டு வருவோம் என்றான். அவன் சரியான புத்திசாலி அவனுக்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லி சில கேள்விகளையும் கேட்க அனைத்துக்கும் பதில் அளித்துவிட்டு 'வாங்களே போவம்' என்றான். இப்போது வேண்டாம் என்று அவனைச் சமாளிக்க போதுமாகிவிட்டது. என்றாலும்  சிறிது நேரத்தின் பின் அந்நிகழ்வைப் பற்றி யோசிக்கும் போது குழந்தையுள்ளம் அப்படித்தான் இருக்கும் அவனுடன் போய் வந்திருக்கலாம் என்று தோன்றியது. என்ன ஒரு பள்ளம் இறங்கி மீண்டும் அதே மேட்டைக் கடக்க வேண்டும். பதினான்கு கிலோ கிராமுடைய குட்டியனையும் தூக்கிக் கொண்டு. இறங்கிவிடலாம்தான் ஆனால் மீண்டும் ஏற வேண்டுமே. 

லறீனாவைப் சிஸ்டர் எப்படித்தான் இவனைச் சமாளிக்கின்றாவோ என்றுதான் எண்ணத் தோன்றியது. கல்வித்துறையில் மிக முக்கியமான இடத்திற்கு எப்போதோ வந்திருக்க வேண்டிய தரமான மிகப் பொருத்தமான நபர்தான் லறீனா. ஆயினும் என்ன செய்வது சிலரின் நேர்மையற்ற செயற்பாடுகள் அவவை நீண்ட அலைச்சலுக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்கியது எனக்கும் புரியும். அந்தத் தகவல்களை ஒரு மூன்றாம் நபர் அறிவிக்கும் போது நமக்கள்ளும் வேதனை குடிகொள்ளும். பேராசியர் மௌன குரு ஒரு முறை மனம்விட்டுக் கேட்டே விட்டார் 'இந்தப் புள்ளயின்ற ஆளுமைய இன்னும் பயன்படுத்தாம ஏன் மிஸ் பன்றீங்க' என்று. ஆனாலும் சிலருக்கு அந்த நியாயம் உறைக்கக் காலம் வேண்டும். அது வரைக்கும் சந்தர்ப்பமும் காத்திருக்க வேண்டும். இத்தனைக்கும் அனைத்தையும் தாண்டி அவவின் முயற்சியும் நம்பிக்கையும் இன்னும்வீண்போகாகமல் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. ஊடறு சரியான நபர்களைத்தான் இனங்கண்டு கொண்டிருக்கின்றது என்பதை இந்த இடத்தில் பெருமையோடு ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். 

உள்ளே ஓவியா பேசிக் கொண்டிருக்கும் போது லறீனாவின் சுட்டி மகள் கேட்ட கேள்வி 'இவங்க ஏன் தமிழையும்இங்கிலீசையும் கலந்து கலந்து மிக்ஸ் பண்ணிப் பேசுறாங்க?' என்பதுதான். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப்பார்த்துவிட்டு தனது தாயிடம் கேட்ட அதே கேள்வியை ஏற்கனவே முகநூலில் சகோதரி பதிவிட்டிருந்தார். இந்தக் கேள்விக்கு தமிழ் நாட்டுத் தமிழர்கள்தான் பதில் தரவேண்டும். நர்மதா எனக்கு இக்கேள்விக்கு அளித்த விளக்கம் என்னளவில் ஓரளவு திருப்திதான் ஆனால் அதுபோதவில்லை. அழகு தமிழில் இந்தியந் தொலைக்காட்சிகளில் சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பார்ப்பது குதிரைக் கொம்பு போலத்தான். பல்வேறு மொழிகளுக்குள் ஆங்கிலம் பொதுவாகப் பேசு மொழியாவது தவிர்க்கவொனாதது என்ற அடிப்படைக்குள் இந்தியர்கள் மூழ்கி நீண்ட நாட்கள் என்பதை பலரும் புரிந்து கொள்வார்கள். ஆனால் அதன் தாக்கம் தனித்தமிழ் மொழிமூலமான இந்த நிகழ்விலும் மிகச் சாதாரனமாகப் பிரதிபலிக்கத்தான் செய்கின்றது. 

நதாவோடு பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அந்தக் கொய்யாப்பழம் எனது கண்ணில் பட்டது.
தொடரும்...