Tuesday, June 26, 2012

புன்னகை நிலைக்க வேண்டுமாய்



ஆயிரமாயிரம் பிரச்சினைகளால்
புழுங்கிப்போகும் மனது
இறை சந்நிதானததில் சிரந்தாழ்த்தி
உருக்கமாகப் பிரார்த்தித்து
இரு சொட்டுக் கண்ணீர் விட்டபோது
எங்கு போயிற்று மனப்பாரம்?
என் தாயும் மனைவியும் உறவுகளும்
தராது போன மன ஆறுதல்
யாரோ ஒருவரால்
ஒவ்வொரு அதிகாலையும்
மனதெங்கும் தூவப் படுகிறது,
இறைவன் முன் மண்டியிடுதல்
வேடிக்கை கிடையாது

கடந்த காலங்களின் மீது வரும்
தீராத ஆத்திரமும் கோபமும்
வெளிப்பட்டுவிடக் கூடாதென்றும்
கண்களில் சாந்தமும்
முகத்தில் இள நகையும்
எப்போதும் தவள வேண்டுமென்றும்
இறைவனைப் பிரார்த்திக்கும் பொழுதுகள்
எனைச் சூழ முகாமிட
குளிர்ந்த இளந்தென்றல் தழுவிக் கொள்கிறது

இந்த பாழாய்போன பழைய நினைவுகள்
ஏன்தான் மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகின்றனவோ
அதன் கனதி உளமெங்கும் வியாபிக்க
மனது பாரம் சுமந்து அவஸ்தைப்படுகிறது
எல்லாவற்றையும் மறந்துவிடவும்
எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளவும்
உயர்ந்தபட்ச முயற்சி...
எனது புன்னகை
எப்போதும் அப்படியே இருக்க
அதிகாலைப் பொழுதொன்றில்
இறைவனைச் சிரம் பணிந்து மன்றாடுகிறேன்.

No comments:

Post a Comment