Saturday, January 11, 2014

கொழும்பு அணில்கள்

கொழும்பு  அணில்கள்

நம் நாட்டு எழுத்தாளர்கள் பலரின் உள்ளங்களைப் போல செலிப்பற்றுக் கிடக்கிறது. கொழும்பிலுள்ள பழ மரங்கள். அவை பூப்பதும் அப்படித்தான் காய்ப்பதும் அப்படித்தான். நமது எழுத்தாளர்களின் எழுத்துக்கள் போல வீரியமற்றவையாக.

குண்டுகள் வெடித்த போதும் கைதுகள் நடந்தபோதும் பெரிய வீச்சுடன் உழைத்த பேனைகள் இப்போது ஓய்வெடுக்கின்றன போலும்.
கவிதை எழுதினாலும் துப்பாக்கி வாசனை கதை எழுதினாலும் துப்பாக்கி வாசனை  நாவல், கட்டுரை, பத்தி, குறிப்பு எதுவாயினும் ஒரு துப்பாக்கி அரக்கன் அதற்குள் ஒளிந்து கொண்டிருப்பான்.

அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கும் அதுதான் தீனி. தலைப்பெல்லாம் சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். இப்போது மஹிந்தரின் சால்வையை வரைவதற்குத்தான் சிவப்பு மையைப் பயன்படுத்துகின்றன பத்திரிகைகள்.

யுத்தம் முடிந்த பின்னர் நிறையப் பேர் எழுதுவதையே விட்டுவிட்டனர். மிகவும் கவலையாக இருக்கிறது. மகிந்தரின் தம்பி கோபித்துக் கொள்வாரோ என்று பயத்தில் எழுதாமல்விட்டுவிட்டார்கள் போலும்.

இன்னும் சில வயது முதிர்ந்த எழுத்துச் சிங்கங்கள் உசும்பாமல் படுக்கின்றன. எங்கள் காலத்தில் இப்படியெல்லாம் என்று இலக்கியப் புராணத்தில் சுயவாழ்த்துப் பாடல்களையே வாசித்து கடுப்பேற்றியபடி

சிலர் இனிக் கவிதை எழுதுவதில்லையென்றும் கதை மட்டும்தான் எழுதப் போவதாகவும், கதையெழுதுவதில்லை நாவல் மட்டும்தான் எழுதப் போவதாகவும், அது இதெல்லாம் இல்லை வாழ்க்கைக் குறிப்பு எழுதப் போகின்றேன் என்றும் பொந்து தேடி அலைகின்றனர் கழிப்பதற்கோ ஒளிப்பதற்கோ தெரியாது.

கொழும்பிலும் அணில்கள் வாழ்கின்றன. கிராமத்து அணிகளைப் போல அவை பருமனில் பார்வைக்குக் குளிர்ச்சியளிப்பதில்லை. அவை ஏறித் திரியும் மரங்களும் கூட கண்களுக்குக் குளிர்ச்சியளிப்பதுமில்லை.

சோம்பேரிகள்! பலமாகப் பாய்ந்து கிளைவிட்டுக் கிளை தாவி நாட்டியமாடி ஓடிப்பிடித்து விளையாடி ஜாலியாக இருக்கத் தெரியாதவைகள். காகங்கள் கூட கொழும்பு அணில்களைத் துரத்துவதில்லை. அதனால் நம் உணர்வுகளுக்கு விருந்தாக அங்கு ஒன்றுமே இல்லை.

உயர்ந்த கொங்கிறீட் மதில்களிலும் தொலைபேசி வயர்களிலும் வித்தைகாட்டுபவன் கயிற்றில் நடப்பது போல கவனமாக மெது மெதுவாக அவை நடக்கப் பழகியிருக்கின்றன.

பெருச்சாலிகள் கூட இவற்றைவிட மிக வேகமாக ஓடி வித்தை காட்டி நொடியில் பார்வையில் இருந்து மறைந்துவிடும். அது என்னமோ தெரியவில்லை நகர அபிவிருத்தி என்ற பெயரில் பிக்காசியும் அலவாங்கும் மண்வெட்டியும் ஏந்தி இiடெயல்லாம் தோன்டிக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களைக் கூட அவை கண்டு பயந்ததாகத் தெரியவில்லை. சிறுநீரும் மலமும் கழிக்கவும் புனர்வதற்கும் பிள்ளை பெறுவதற்கும் கூட

அவை யுத்த காலத்தில் எப்படியோ தெரியாது ஆனால் யுத்த காலத்தில் அணிகள்  ஒளிந்திருந்தாக பதிவுகள் இல்லை. இப்போது போக்கிடம் இல்லாதபடியாலும் அச்சுருத்தல் குறைவென்றபடியாலும் ஊத்தைக் காண்களைக் கூட முகர்ந்து பார்க்கும் அளவுக்கு மரந்தாவிப் பழம் உண்ணும் அழகு அணில்கள் தரம் கெட்டுப் போன கொடுமை பார்க்கச் சகிக்கவில்லை.

அணில்களோடு கொஞ்சும் ஆயிரமாயிரம் குழந்தைகளையும், அணில்கள் கொரித்த எச்சப்  பழங்களைப் பொறுக்கித் தின்ன ஆவலோடு சண்டை போடும் சிறுவர்களையும் அணில் மாமா பாட்டுப்பாடிக் குதூகளிக்கும் சிறுமிகளையும் இழந்து கொண்டிருக்கும் கிராமங்கள் நகரங்களாகிக் கொண்டிருக்கும் கொடுமைக்குப் பெயர் அபிவிருத்தி என்று வைத்துவிட்டார்கள்.

நகரத்து அணில்களையும் கிராமத்துக் குழந்தைகளையும் பார்க்க இப்போது பரிதாபமாக இருக்கின்றது.

பூக்காத காய்க்காத பழுக்காத வரண்ட சுருட்டை இலைகளுடன் கம்பீரமாக வீதியைப் பயத்துடனும் பரிதாபத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாமரத்தில் இரண்டு அணில்கள் எதையோ தேடிக் கொண்டிருக்கின்றன.
காகமொன்று எதையும் சட்டைசெய்யாமல் ஒரு பொலித்தீன் பையைக் கொத்தித் தின்று கொண்டிருக்கிறது.
பட்டப்பகலில் ஒரு எலி குப்பைவாளியை முகர்ந்து கொண்டிருக்கிறது
வாகனங்களும் மனிதர்களும் அவரவர்பாட்டில் பாதையில்...

No comments:

Post a Comment