Sunday, May 31, 2015

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை - 02

-முஸ்டீன்-

என்னைப் பொறுத்தவரைக்கும் மனதிற் பட்டதை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டு சென்று கொண்டே இருப்பேன். முதலாவது பகுதி பதிவேற்றப்பட்ட பின்னர் வந்து குவிந்த உள்பெட்டித் தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்களையும் கவனமாகப் படிக்கின்றேன். அவரவரது தராதரத்திற்கு ஏற்ற வார்த்தைப்பிரயோகங்களோடு வந்திருந்த அனைத்தையும் படித்தேன் கேள்விகள் அனைத்திற்கும் தெரிந்தளவு இறுதியில் பதிலளிப்பேன்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரோடு சம்பந்தப்படுத்தி தேர்தல் ஒன்றினை இலக்கு வைத்து அச்சிடப்பட்ட பெருந்தொகை துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றிய போதுதான் சர்மிளா என்ற பெண்ணின் பெயரே எனக்குத் தெரிய வந்தது. அதன் பின்னர்தான் அவர் யார் என்ற தேடுதலைத் செய்யவேண்டியேற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தோடு அதை நிறுத்திக் கொண்டேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் தெரிவுகள் என்பன அவரவர் சுதந்திரத்தின்பாற்பட்டது. பிறரின் குறைகளை துருவித் துருவி ஆராய எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. எனது சமயம் அப்படித்தான் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது. குறித்தவிடயத்தைக் குறித்த அரசியல்வாதியின் கவனத்திற்குச் சாடைமாடையாகக் கொண்டுவந்ததோடு அதை விட்டுவிட்டேன். ஒரு ஆணைப் பழிவாங்க அவனை ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தியும் ஒரு பெண்ணைப் பழிவாங்க நினைத்தால் அவள் நடத்தை கெட்டவள் என்றும் முத்திரைகுத்தி ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டாலே போதும் அதை அப்படியே நம்புவதற்கு ஆயிரத்தெட்டு முட்டாள்கள் இந்தச் சமூகத்தில் இருக்கின்றார்கள். அதை அப்படியே  திட்டவட்டமான ஆய்வு முடிவாகப் பரப்புரை செய்ய பல புத்திஜீவிகள் இருக்கின்றார்கள். அநாமோதயத் துண்டுப் பிரசுரம் அடிப்பவனுக்கும் அச்சந்தர்ப்பத்தில் இஸ்லாம் ஞாபகம் வருவதில்லை, படித்துவிட்டுக் கதைபரப்புவனுக்கும் ஞாபகம் வருவதில்லை. 

எனது பார்வையில் சர்மிளா என்பவள் எல்லாப் பெண்களையும் போல சாதாரணமானவள் கிடையாது. அவளுக்குள் ஒரு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்தத் தீயை அவளுக்குள் மூட்டியது யாரென்பது தெரியாது. ஆனால் அதை அனைந்துவிடாமல் உக்கிரம் பெறச் செய்தது கொண்டிருப்பது இந்தச் சமுதாயம்தான் என்பதும் அவள் பெற்ற அனுபவங்களும் படிப்பினைகளும் அதற்குத் துணை செய்து கொண்டிருக்கின்றன என்பதும் தெளிவு. அத்தீயில் நியாயமும் இருந்தது, கோபமும் இருந்தது, புரட்சியும் இருந்தது, சில புரிதல் கோளாறுகளும் இருக்கவே செய்தன. 


  • அவளுக்குள் உறைந்து கிடக்கும் நியாயங்களை அங்கீகரிக்க வேண்டியிருக்கின்றது.
  • அவளுக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் கோபத்தைத் தனிக்க வேண்டியிருக்கின்றது.
  • அவளது புரட்சி நியாயமானதாயின் அதற்குத் துணை செய்ய வேண்டியிருக்கின்றது,
  • அவளது புரிதல் கோளாறுகளை நிதானமாகச் செம்மைப்படுத்த வேண்டியிருக்கின்றது.

இதையெல்லாம் விட்டுவிட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று  சர்மிளா விடயத்தில் எதையும் செய்ய முடியாது. இது வரைக்குமான அனைத்து நகர்வுகளும் இப்படித்தான் உணர்வு மேலீட்டால் போதிய தயார்படுத்தல் இன்றியும் புத்திக்கு ஓய்வு கொடுத்தும் உணச்சிவசப்படுதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நகர்த்தப்பட்டிருக்கின்றன என்பதை நியாயமான முறையில் பக்கச் சார்பின்றி உற்று நோக்கும் யாவரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

சர்மிளாவின் முகநூல் பதிவுகள், நேர்காணல்கள், கவிதைகள், நாவல் மற்றும் அவள் குறித்த இன்னபிற எழுத்துக்கள் அனைத்தையும் கருத்திற் கொண்டே இக்கட்டுரை வரையப்படுகின்றது. சர்மிளாவின் எழுத்துக்களில் இருந்தே நான் எனக்கு தேவையான பல எடுகோள்களை எடுத்துக் கொள்கின்றேன். சாதாரணமான மற்றும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் பதியப்பட்ட பின்னூட்டங்களையும் கவனத்திற் கொண்டுதான் கவனமாக எழுத வேண்டியிருக்கின்றது. ஏனெனில் யாருக்கும் பரிவட்டம் பிடிக்கவோ யாரையும் காலில் போட்டு மிதிக்கவோ எந்தத் தேவையும் எனக்கில்லை. எனக்கு நியாயம் என்று தோன்றிய கருத்துக்களை நான் வெளிப்படுத்துவதை யாராலும் தடுத்துவிட முடியாது. 

சாதாரணமாக எல்லாப் பெண்களையும் போல சர்மிளா இல்லை என்பதால்தான் தனது செயற்பாட்டுத் தளத்தைத் திருமணவாழ்க்கை எவ்விதத்திலும் பாதித்துவிடாமல் இருக்க அவள் போராடியிருப்பதாகவே தெரிகின்றது.  சொந்த வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் அனுபவங்கள் ஆகியவற்றின் வீச்சு எழுத்துக்களில் பிரதிபலிப்பதை மிக எளிதாகவே அவதானிக்க முடியும். அது நல்ல அறிகுறிதான் ஆயினும் புரிதல்தான் சங்கடங்களைத் தோற்றுவித்து எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்துக் கொடுக்கின்றது.  

இந்தச் சமுதாயத்தில் உள்ள சிலரின் கடுமையான எதிர்ப்புகள் இன்னுமின்னும் பல கவிதைகளை எழுதும் வாய்ப்பினைத்தான் சர்மிளாவுக்கு அளித்துள்ளன. மொத்தத்தில் கண்மூடித்தனமான எதிர்ப்பு அவளை இன்னும் வேகமாக இயங்கச் செய்ததுவேயன்றி சோர்வடையச் செய்யவில்லை.

இந்த எதிர்ப்புகள் தோற்றம் பெறப் பிரதான காரணம் எது?
பி.பி.சி க்கு அளித்த பேட்டிஎங்கே முரண்பாட்டினை விதைக்கின்து?

தொடரும்...

Saturday, May 30, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 07 .............ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-


எப்படியும் அவர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் வராமல் இந்த நாட்டில் ஒரு நிகழ்வு நடந்துவிடுமா என்ன! அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வது இங்கு அவ்வளவு கஷ்டமாக இருக்காது. பார்வையால் அலசிக் கொண்டிருக்கும் போதே கண்ணில் பட்ட ஒருவர் சந்தேகத்தையும் சேர்த்தே விதைத்தார். நிச்சயமாக அவர் அவர்களில் ஒருவாராகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே குட்டியனை பாரதித் தம்பியிடம் கொடுத்துவிட்டு அவரை நெருங்கினேன். ஏற்கனவே அவர் எனது கையில் இருந்த புத்தகத்தை வேறு யாரிடமாவது அவதானித்து இருக்க வேண்டும். உடனே உடைந்த தமிழில் இது என்ன புத்தகம் என்று கேட்டார். 


நான் சிங்களத்திலேயே அவருக்கு இது 2012ஆம் ஆண்டு கிழக்குமாகாணசபை சாஹித்திய பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி என்றேன். எனக்கும் வாசிக்க நல்ல ஆசை நான் தமிழ் படிப்பேன் என்று அட்டையில் இருந்த ஹராங்குட்டி என்ற பெயரை மிகவும் சிரமப்பட்டு எழுத்துக்கூட்டி பிழையாகவே வாசித்தார். அத்தோடு அவர் மொழி பெயர்ப்புக்களைச் செய்யும் நபராகவும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். நானும் அதை நம்பியது போலப் பேசிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி தனக்கு அவசியம் வேண்டும் என்றும் ஒரு பிரதியைத் தனக்கு அவசியம் தர வேண்டும் என்றும் கேட்டார். அப்படி அவரைக் கேட்கத் தூண்டியது ஒரு தலையைக் குறி வைக்கும் துப்பாக்கியை கொண்ட அட்டைப்படம்தான் என்பதைப் புரிந்து கொள்ள எனக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. மேலதிகமாக அவரும் குழம்பி பிழையான செய்தியைக் கொடுத்து மேலிடத்தையும் குழப்பிவிடக் கூடாது என்றுதான் அரச சாகித்திய விருது பெற்றது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். அது அவரைத் திருப்திப்டுத்தியிருக்கவும் கூடும். கடைசி வரையும் அவர் எந்தப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிடாவிட்டாலும் தேசியப் புலனாய்வுப் பிரிவின் அங்கத்தவர் என்பதை பிரிதோர் வகையில் நான் அறிந்து கொண்டேன். 

பாதுகாப்புக்காகப் பொலிசார் கோரப்படுமிடத்து அவர்கள் அன்மையில் இருக்கும் பொலிஸ் நிலையத்திலிருந்து கடமைக்குப் வருவார்கள். அதுவும் சும்மா ஆயுதம் ஏதுமின்றி காக்கிச் சீறுடையில் அவர்களை அலட்டிக் கொள்ளவே தேவையில்லை. புள்ளப்பூச்சிக்குச் சமானம் அவர்கள் ஆனால் சிவில் உடையில் வருவார்களே அவர்கள்தான் சிலவிடயங்களைத் தீர்மானிக்கும் சக்திகளாக இயங்குபவர்கள். இப்படியான நிகழ்வுகள் குறிப்பாக தமிழர்கள் ஒன்று சேரும் நிகழ்வுகள் அதிலும் விஷேஷமாக வெளிநாட்டிலிருந்து வருகைதரும் தமிழர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் அதிலும் அதிவிஷேஷமாக தமிழ் நாட்டிலிருந்து தமிழ்த் தேசியவாதிகள் யாரேனும் பங்கு கொள்ளும் நிகழ்வுகள் இந்நாட்டில் யுத்தம் முடிந்த பின்னரும் மிக நுணுக்கமாகக் கண்கானிக்கப்படும் சூழ்நிலை இருப்பது புலனாய்வுப் பிரிவைப் பொறுத்தவரைக்கும் முன்னனெச்சரிக்கையான விடயமாகக் கருதப்பட்டாலும் சுதந்திரத்தில் தலையீடு செய்வதைத் தவிர்க்க ஏது வழி என்று ஒரு நியாயமான ஜீவன் சிந்திப்பதில் தப்பில்லை என்று நினைக்கின்றேன். 

சில வேளை மொழித் தேர்ச்சியின்மை காரணமாக தகவல்களைப் பிழையாக விளங்கி தவறான புரிதலோடு செய்தியை புலனாய்வுப் பிரிவிற்குக் கொடுத்துவிட்டால் வேண்டாத இன்னல்களை பங்கேற்பாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் அவலம் ஏற்படும். நல்ல வேளை அதிர்ஷ்டவசமாக அப்படியான எதிர்மறை விளைவுகள் இறுதி வரை நடக்கவில்லை.வந்திருந்த புலனாய்வுக் காரர் இது இந்நாட்டின் இறைமைக்குப் பாதகம்இல்லாதது என்று நற்சான்றிதழ் கொடுத்திருப்பார் போலும். ஆயினும் அவர் கொண்டு சென்ற எனது சிறுகதை; தொகுதி புலனாய்வுக் காரர்களைப் பற்றிய புதிய செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும்... அவர் மீண்டும் என்னைத் தேடி நிச்சயம் வருவார் அல்லது அவர் சார்ந்த எவரேனும்...

வந்திருந்தவர்கள் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது பரிவு கொண்டவர்கள், இறுதி யுத்தத்தையும் அதன் போதான மனித அழிவையும் விமர்சித்தவர்கள் என்பதால் எனக்குள் சின்னதாய் ஒரு லைக் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் இந்நிகழ்வு முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் உட்பட்ட யுத்தப் பிரதேசங்களுக்கு ஒரு வெளிநாட்டு விருந்தினர்கள் ஒரு விசிட் செல்ல இருப்பது பற்றி அறியக் கிடைத்ததுதான். எனக்குத் தெரிந்த எல்லைகளுக்குள் இந்த நிகழ்வு பெண்களை வலுவூட்டுவதற்கும் பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதுமான நோக்கங்களைக் கொண்டது. என்பதைத் தெளிபடுத்தும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். எத்தனை வகையான பிரச்சினைகளை எதிர் கொண்டு மீண்டுவிட்டோம் என்கிற மனவுறுதியில் இதில் எப்படியான பார்வைகள் ஊடறுக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துக் கொள்வதொன்றும் கஷ்டமாக இருக்கவில்லை. 

அந்த இக்கட்டான சூழ் நிலைக்குள் லறீனா அப்துல் ஹக் அவர்களின் மகன் றாஷித் என்னிடம் அங்கிள் வாங்களே கடைக்குப் பெயிட்டு வருவோம் என்றான். அவன் சரியான புத்திசாலி அவனுக்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லி சில கேள்விகளையும் கேட்க அனைத்துக்கும் பதில் அளித்துவிட்டு 'வாங்களே போவம்' என்றான். இப்போது வேண்டாம் என்று அவனைச் சமாளிக்க போதுமாகிவிட்டது. என்றாலும்  சிறிது நேரத்தின் பின் அந்நிகழ்வைப் பற்றி யோசிக்கும் போது குழந்தையுள்ளம் அப்படித்தான் இருக்கும் அவனுடன் போய் வந்திருக்கலாம் என்று தோன்றியது. என்ன ஒரு பள்ளம் இறங்கி மீண்டும் அதே மேட்டைக் கடக்க வேண்டும். பதினான்கு கிலோ கிராமுடைய குட்டியனையும் தூக்கிக் கொண்டு. இறங்கிவிடலாம்தான் ஆனால் மீண்டும் ஏற வேண்டுமே. 

லறீனாவைப் சிஸ்டர் எப்படித்தான் இவனைச் சமாளிக்கின்றாவோ என்றுதான் எண்ணத் தோன்றியது. கல்வித்துறையில் மிக முக்கியமான இடத்திற்கு எப்போதோ வந்திருக்க வேண்டிய தரமான மிகப் பொருத்தமான நபர்தான் லறீனா. ஆயினும் என்ன செய்வது சிலரின் நேர்மையற்ற செயற்பாடுகள் அவவை நீண்ட அலைச்சலுக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்கியது எனக்கும் புரியும். அந்தத் தகவல்களை ஒரு மூன்றாம் நபர் அறிவிக்கும் போது நமக்கள்ளும் வேதனை குடிகொள்ளும். பேராசியர் மௌன குரு ஒரு முறை மனம்விட்டுக் கேட்டே விட்டார் 'இந்தப் புள்ளயின்ற ஆளுமைய இன்னும் பயன்படுத்தாம ஏன் மிஸ் பன்றீங்க' என்று. ஆனாலும் சிலருக்கு அந்த நியாயம் உறைக்கக் காலம் வேண்டும். அது வரைக்கும் சந்தர்ப்பமும் காத்திருக்க வேண்டும். இத்தனைக்கும் அனைத்தையும் தாண்டி அவவின் முயற்சியும் நம்பிக்கையும் இன்னும்வீண்போகாகமல் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. ஊடறு சரியான நபர்களைத்தான் இனங்கண்டு கொண்டிருக்கின்றது என்பதை இந்த இடத்தில் பெருமையோடு ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். 

உள்ளே ஓவியா பேசிக் கொண்டிருக்கும் போது லறீனாவின் சுட்டி மகள் கேட்ட கேள்வி 'இவங்க ஏன் தமிழையும்இங்கிலீசையும் கலந்து கலந்து மிக்ஸ் பண்ணிப் பேசுறாங்க?' என்பதுதான். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப்பார்த்துவிட்டு தனது தாயிடம் கேட்ட அதே கேள்வியை ஏற்கனவே முகநூலில் சகோதரி பதிவிட்டிருந்தார். இந்தக் கேள்விக்கு தமிழ் நாட்டுத் தமிழர்கள்தான் பதில் தரவேண்டும். நர்மதா எனக்கு இக்கேள்விக்கு அளித்த விளக்கம் என்னளவில் ஓரளவு திருப்திதான் ஆனால் அதுபோதவில்லை. அழகு தமிழில் இந்தியந் தொலைக்காட்சிகளில் சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பார்ப்பது குதிரைக் கொம்பு போலத்தான். பல்வேறு மொழிகளுக்குள் ஆங்கிலம் பொதுவாகப் பேசு மொழியாவது தவிர்க்கவொனாதது என்ற அடிப்படைக்குள் இந்தியர்கள் மூழ்கி நீண்ட நாட்கள் என்பதை பலரும் புரிந்து கொள்வார்கள். ஆனால் அதன் தாக்கம் தனித்தமிழ் மொழிமூலமான இந்த நிகழ்விலும் மிகச் சாதாரனமாகப் பிரதிபலிக்கத்தான் செய்கின்றது. 

நதாவோடு பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அந்தக் கொய்யாப்பழம் எனது கண்ணில் பட்டது.
தொடரும்...

Tuesday, May 26, 2015

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை - 01

-முஸ்டீன் -
பகுதி 01


வரலாறு நெடுகிலும் சிந்தனைச் சிக்கல்களும் குழப்பங்களும் மிகத்தாரளமாகவே ஏற்பட்டு வந்திருக்கின்றன. அதன் பொருட்டு எதிர்ப்பும் வெறுப்பும் குரோதமும் உச்சகட்டமாகக் கொலையும் கூட நடந்திருப்பதை வரலாற்றின் பல்வேறு காலகட்ட நிலைகளில் நாம் கண்டு கொள்ள முடியும். இந்த எதிர்ப்புகளால் நிலைகுழைந்து சிதைந்து போனவர்களும் அந்த எதிப்புகளுக்கு எதிராகப் போராடி தம்மைத் தக்க வைத்துக் கொண்டவர்களும் எதிர்க்க முடியாமல்  தம்மை எதிர்ப்பவர்களின் எதிரிகளின்தான் பாதுகாப்பும் பற்றும் என எதிரியின் எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அவர்களின் நிழலில் சரணாகி அடைந்தவர்களும் என்று இப்பட்டியல் நீளும்.

பொதுவாக ஒரு கருத்தைப் புரிந்து கொள்ளல் அல்லது புரிந்து கொள்ளாமை என்பதில்தான் முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. தஸ்லிமாவின் இஸ்லாமிய விரோதக் போக்கினை என்னால் அங்கீகரிக்க முடியாது  ஆனாலும் இதற்கு அப்பால் சில விடயங்களுக்காக தஸ்லீமா நஸ்ரினுக்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன். அவள் புரட்சிகரமான பெண் என்பதற்ககாக மட்டுமல்ல அவள் ஒரு சமுகப் போராளி. அதற்காக அது அவளின் எல்லாவித சில்லறைத்தனமான செயந்பாடுகளையும் ஆரதரிப்பதாகவோ, அல்லது ஏற்றுக் கொள்வதாகவோ ஆகாது.அவளின் போராட்டத்தின் மூலகாரணி எப்படியெல்லாம் மாறிமாறித் தோற்றம் பெற்றது என்பதிலும்தான் நான் கவனம் செலுத்துகின்றேன்.

காரணம் உலகில் விபச்சாரத்தை வெற்றிகரமான நிறுவன மயப்பபட்ட லாபம் தரும் தொழிலாகச் செய்துகொண்டிருப்பதில் முன்னணியில் இருப்பவர்கள் பBங்காளிகள்தான். அரபு நாடுகள் இதற்கு மிகத் தெளிவான சான்றுகளை நமக்கு முன்னால் பரப்பி வைத்திருக்கின்றன. தஸ்லீமா என்ற பெண்ணின் முதல் எதிர்ப்பு இங்கிருந்துதான் தோற்றம் பெற்றது. வேறு பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் ஆண் தனது மனைவி தனக்கு மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக நிற்கிறானே என்பதில் தான் அவளது ஆத்திரம் எல்லையற்றுப் பாய்ந்தது. தனது எதிர்ப்பை கணவனில் இருந்து தொடங்குகின்றாள். அவள் எதிர்ப்பதற்கு தேர்வு செய்த வழிமுறையில் ஒரு முஸ்லிமாக பிழைவிட்டிருந்தாலும் அவளது ஆத்திரமும் கோபமும் எதிர்ப்பும் நியாயமானவை. தீமையைத் தீமையால் அகற்ற முடியாது என்பது இஸ்லாத்தின் நோக்கு. அவளுக்கு எதிராகப் பாய்ந்த மக்கள் கூட்டம் இஸ்லாத்தைத் தமக்குப் பாதுகாப்பான கவசமாக போர்த்திக் கொண்டார்கள். ஆயினும் இஸ்லாத்தைக் கவசமாகப் போர்த்திக் கொண்ட எதிர்ப்பாளர்கள்  இஸ்லாம் நெருங்கவே வேண்டாம் என்று எச்சரித்த விபச்சாரத்தையும் அதற்கு பக்கபலமாக நிற்பவர்களையும் வசதியாக மறந்து போனார்கள். 

பத்வா கொடுப்பதிலும் பத்வா கொடுத்தே பிரச்சினைகளைப் பெரிது படுத்திவிடுவதிலும் உலகெங்கும் முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபோலவே இருப்பதாக நான் உணர்கின்றேன். (அப்துல் ரவுப் என்று ஒருவர் எல்லாமே அல்லாஹ்தான் என்ற கொள்கையைப் பேசி வந்த காலத்தில் அவருக்கெதிராக முர்த்தத் என்றும் காபிர் என்றும் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவட்டான் என்றும் பத்வா கொடுத்தே அவரைப் பெரிய ஆளாக மாற்றியது ஜம்இய்யதுல் உலமா சபைதான். இன்று அப்துர் ரவுப் என்ற பெருவிருட்சத்தை பத்வா கொடுத்தவர்களால் நெருங்க முடியுமா? ) தஸ்லீமாவையும் அப்படித்தான் பத்வா கொடுத்து பெரியாளாக்கிவிட்டார்கள். ஆயினும் அவள் தனது எதிர்ப்பில் மிக உறுதியாக நின்றாள். இன்றுகூட அதில் அசைக்கமுடியாத வீரியத்துடன் நிற்கின்றாள். 

தனக்கு ஆதரவுக்கு ஒரு குரலுமே இல்லையென்ற போது அவள் தஞ்சமடைந்த முகாம் இஸ்லாத்தின் எதிரிகளினுடையது அவர்களும் அவளைப் பலம்பெற வைத்தார்கள் தமது எதிர்ப்பின் மிகப்பெரும்  முதலீடாக அவளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆயினும் தஸ்லீமா பலவிடயங்களில் இன்றும் உறுதியாக நிற்கின்றாள். சிலவிடயங்களில் அவள் சோரம் போகவே இல்லை. அவளது போராட்டத்தின் நியாயமும் புரிந்து கொள்ளப்படவே இல்லை. 

எதிர்ப்புகள் கூடக் கூட அவளது கோபம் எல்லை கடந்தது. அவளைக் கட்டுப்படுத்த பத்வாக்களால் முடியவில்லை. அதுபோலவே அவளது கருத்துக்களும்  தவறாகவே வியாக்கியானம் செய்யப்பட்டது. உதாரணமாக அல்குர்ஆன் பெண்களுக்கு வறையரை செய்யும் விடயங்களில் புதிய பார்வைகள் தேவை. பழைய பார்வைகள் திருத்தப்பட வேண்டும் பெண் குறித்த அல்குர்ஆனின் கருத்துக்களுக்கு புதிய விரிந்த மாற்றுக் கோணத்தில் விரிவுரைகள் இப்போது அவசியம் என்ற விடயம் கூட குர்ஆனைத் திருத்த வேண்டும் தஸ்லிமா சொல்கின்றார் என்று பரப்புரை செய்யப்பட்டது. 

தஸ்லிமாவை இஸ்லாத்துக்கு விரோதமாகச் செயற்பட வைத்ததே முஸ்லிம் சமுகம்தான். இன்று தான் ஒரு முஸ்லிம் அல்ல என்றும் நாஸ்திக வாதி என்றும் சொல்லுமளவுக்கு நிலமைகளைச் சிக்கலாக்கியது மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக்  கொள்ளும் சில முட்டாள்கள்தான். தஸ்லிமாவின் உள்ளத்தை அறிந்தவர்கள் யாரும் கிடையாது. அந்த உள்ளத்தில் மறந்து கிடப்பவற்றையும்  அதன் சரியான நிலைப்பாட்டையும் நனற்றாக அறிந்தவன் ஒருவனே. அவன்தான் தஸ்லிமா  மறுதலிக்கும்  ஏக இறைவனான அல்லாஹ். இந்தக் குறிப்போடு சர்மிளா செய்யதின் விடயத்திற்கு வருவோம். 

தஸ்லிமாவையும் சர்மிலாவையும் ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டு வரும் அனைத்து எழுத்துக்களையும் நான் மறுதலிக்கின்றேன். காரணம் இருவருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கின்றது, ஆனால் பிரச்சனைகள் அவர்களை நோக்கி திருப்பப் பட்ட விதத்தில் ஒற்றுமை இருக்கின்றது. அதுபோலவே அவர்கள் எதிர் கொண்ட விதமும். 
தஸ்லிமா புரட்ட நினைத்த மலையை அவளால் புரட்ட முடியாது போயிற்று. அது போல சர்மிளா புரட்ட நினைக்கும் மலை??

தொடரும் ...

Sunday, May 24, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 06 ...................ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

அந்தக் கரப்பான் பூச்சி மேட்டர்கள் குறித்து நான் எதுவும் எழுதவில்லை. குறிப்பாக முஸ்டீன் எழுத முடியாது அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணிகள் உண்டு. காரணத்தைச் சொல்லாவிட்டால் மண்டையே வெடித்துவிடும்  என்று உணர்பவர்கள் (கலந்துகொள்ளாதவர்கள் ஊடறுவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் நாள் நிகழ்வுகளை ஒருமுறை அமைதியாக இருந்து செவிமடுங்கள், பெரும்பாலும் அனைத்து நிகழ்வுகளும்  ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்த நேரத்தில் ரெக்கோடரை ஓப் பண்ணாமல் வைத்திருந்தால் நீங்கள் லக்கி) அது சின்னப் பூச்சிதான் மோர்ட்டீன் ஸ்பிரேயை எடுத்து ஒரு பிரஸ் பண்ணி இருக்கவேண்டிய றஞ்சி  அதைச் செய்யாமல் அப்போதுதான் வெளியே வந்தார். கூடவே யோகியும். 

யோகி மலேசியாவில் இருந்து இந்த நிகழ்வுக்காக வந்திருந்தார். நாம் நினைப்பது போல சப்பை மூக்கும் புதைந்த கண்களும் கொண்ட மலாயச் சாடை கொண்ட பெண்ணல்ல. ஒரு தென்னிந்தியத் தோற்றம் கொண்ட முகச்சாயல். மலேசியத் தழிலை காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருக்கின்றது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை இந்திய ஜாடைத் தமிழ் ஒருபோதும் சாத்தியமாக்கியதில்லை. யோகி மலேசியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதாக நிகழ்ச்சி நிரலில் பார்த்த ஞாபகம், யோகி வந்த வேகத்தைப் பார்த்தபோது காலையில் ஷாமிலா சொன்னவைகள்தான் ஞாபகத்துக்கு வந்தன. 

காலையில் எழுந்ததும் ஷாமிலாவுக்கு கட்டாயம் டீ குடிக்க வேண்டும். அது போலவேதான் மாலையிலும். எனக்கு அப்படியல்ல டீ ஒரு மேட்டரே கிடையாது. காலையில் எழும்பியதும் ஒரு பெரிய கிளாஸில் தண்ணீர் அருந்த வேண்டும். நாள் முழுதும் குறைந்தது ஆறு லீட்டர் தண்ணீராவது குடிப்பேன். இரவு படுக்கும் போதும் அப்படித்தான் இடையில் கண்விழித்தால் ஒரு ஐந்நூறு மில்லியை இறக்கிவிட்டுத்தான் அடுத்த வேலை. நிறைய நோய்களில் இருந்து என்னை இப்போதும் பாதுகாப்பதில் தண்ணீர்தான் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றுது. தூங்கும் முன்னர் தூங்கி எழுந்த பின்னர் சாப்பிட முன்னர் குளிக்க முன்னர் இரண்டிரண்டு தம்ளர் நீர் அருந்திப் பாருங்கள் நல்ல பயனைத் தரும். யான் பெற்ற இன்பம் பெறுக அனைவரும்.


காலையிலேயே ஷாமிலா குட்டியனோடு சென்று டீ குடித்துவிட்டு நடந்த விடயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். ரஜிணிக்கு கட்டாயம் காலையில் டீ வேண்டும். அது போல யோகிக்கும் டீ வேண்டும். மற்றவர்களுக்கு காலையில் டீ விருப்பம். இங்குள்ள அளவான டீகப் யோகிக்கு போதவில்லை போலும். இலங்கைல இருக்கும் சின்னக் கப் தனக்குப் போதாது என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு ஒரு கப் கோப்பி, ஒரு கப் டீ இரண்டையும் குடித்துவிட்டுத்தான் யோகியால் நிம்மதிச் பெருமூச்சு விட முடிந்ததாம். சட்டென அந்த ஞாபகம் வரவே வெளியே வந்த யோகியிடம் நகைச் சுவையாகக் கேட்டேன் என்ன டீ குடிக்கவா போறீங்க என்று? ஒரு சிரிப்புத்தான் பதிலாக வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை ஆனால் சமையல் கட்டுப் பக்கம் போவது மட்டும் தெரிந்தது. 

உள்ளே அரங்கிற்குள் இன்னும் கரப்பான் பூச்சியின் கொசுறுச் சப்தம்தான் கேட்டுக் கொண்டிருந்தது. சில பிரச்சினைகளைப் பேசும் போது நம்மிடம் தெளிவு இருக்க வேண்டும். அந்தத் தெளிவு இல்லாத போது நாம் அமைதியாக இருந்துவிட வேண்டும். ஒரு பிரச்சினை பூதாகரமாகின்றதென்றால் அதற்கான அடிப்படைக் காரணிகளில் இருந்து முழுமையாகன தெளிவு கிடைத்தால் மட்டுமே அதற்குத் தீர்வுகாணும் விதத்தில் ஏதாவது சொல்ல முடியும். அதைவிட்டு விட்டு கேள்விப்பட்ட விடயங்களை வைத்துக் கொண்டு சீரியசான கலந்துரையாடலுக்குச் செல்வதும் ஒன்று சும்மா டீ குடிக்கும் போது நொறுக்குத் தீனிகளைக் கொறித்துக் கொண்டே கதையாடல் செய்வதும் ஒன்று.

 நேரம் வீணாகக் கழியக் கூடாது. சும்மா இருக்கும் போது பேசும் மேட்டர்களை பொதுத்தளத்தில் வாதத்துக்குட்படுத்துவது அவ்வளவு ஆரோக்கியமாகத் தெரியவில்லை. அல்லது நிகழ்ச்சி நிரலில் அதை உள்ளடக்கியிருக்கலாம் அப்பிரச்சினைகள் குறித்து நல்லதொரு ஆய்வைச் சமர்ப்பித்திருக்கலாம். அதிலிருந்து கேள்வி பதிலை நோக்கி நகர்ந்திருந்தால் உப்புச் சப்பில்லாத கேள்விகளும் பிறந்திருக்காது உணர்ச்சிவசப்பட்ட கலந்துரையாடலும் வந்து நேரத்தை வீணடித்திருக்காது. அல்லது சரோஜா சிவச்சந்திரனின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற தலைப்பை இந்த விடயங்கள்பால் திருப்பியிருக்கலாம்.

 சமகால புதுவடிவ வன்முறைகள் சமூகவெளி, சமூகவலைத்தளங்கள், இணையவெளி, மற்றும் இன்னபிற என்று போயிருந்தால் கதையே வேறு. ஆனால் ஆண்களையும் வைத்து இந்தத் தலைப்பில் ஆய்வு சமர்ப்பித்திருக்க வேண்டும். ஒரு முழு நாளும் பேசுவதற்கு அதில் விசயமிருக்கு. பெண்களுக்கெதிரான எழுத்து வன்முறை என்பது இப்போது கட்டாயம் பேசப்பட்டேயாக வேண்டும். எதிர்காலத்தில் அதைக் கணக்கிலெடுத்தால் நல்லது என்று ஊடறுவுக்குப் பரிந்துரைக்கின்றேன். றஞ்சி கவனித்திற் கொள்வாராக.

எனக்கும் குட்டியனுக்கும் கம்பனி கொடுக்க வெளியே தம்பி பாரதியும் இருந்தார். அவரைப் பார்த்து நேற்று மாலையே குட்டியன் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டான். அதனால் இன்று காலை பாரதியுடன் அவன் மீண்டும் ஒன்றித்துப் போவதில் சிக்கல் இருக்கவில்லை. சரோஜா சிவச்சந்திரனின் மகன்தான் பாரதி. அதிக ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பையன். கையில் கெனொன் 7டி கெமரா இருந்தது. ஒரு திரைப்படமே எடுக்க முடியுமான நல்ல வகைக் கெமரா அது. அந்தக் கெமராதான் பாரதியின் தரத்தை எனக்குக் காட்டித் தந்தது. சில குறும்படச் செற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் சொன்னார். அது அவரது பொழுது போக்கு மட்டுமே. ஆனால் அவருடைய கல்வி தொழிநுட்பவியல் சார்ந்ததாக இருந்தது. கொஞ்ச நேரம் எந்த இடையூறும் இல்லாமல் இருவரும் கதைத்துக் கொண்டிருந்தோம். இதற்கு முதல் நீண்ட காலம் பழகிய உறவின் கனதி இருந்தது.  ஒரு பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டுமோ அப்படி தரமிக்க பிள்ளையாக பாரதியை வளர்த்து விட்டிருக்கின்றார் சரோஜா அம்மா. அவனிடமிருந்த பணிவும், மென்மையும், அமைதியும் நிதானமும் மிகவும் பெருமதியானவை. பேராசிரியர் சிவச்சந்திரனுக்கும் சரோஜா சிவச்சந்திரனுக்கும் பெயர் எடுத்துக் கொடுக்கும்படியான நல்லபிள்ளையாக அவன் நிச்சயம் எதிர்காலத்தில் மிளிர்வான் என்று நான் திடமாக நம்புகின்றேன். அவ்வளவு விரைவாக யாருடனும் அவன் அண்டமாட்டான். ஆனால் குட்டியனோடு பாரதி கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

குட்டியனை நிறைய போட்டடோவும் வீடியோவும் எடுப்பதிலேயே பாரதியின் அதிக நேரம் கழிந்தது. அப்போதுதான் றஞ்சியும் யோகியும் திரும்பி வந்தார்கள். யோகியைப் பார்த்தால் இரண்டு கப் டீ குடித்திருந்த மாதிரி தெரிந்தது. ஆனாலும் நான் அது குறித்துக் கேட்கவில்லை. சிலருக்கு நகைச் சுவை அலர்ஜி. ஆனால் யோகியைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நல்ல ஜொலி டைப் போன்று தெரிந்தது. எதையும் வெளிப்படையாகவே எடுத்துக் கொள்ளும் தன்மையுடைய நபர் என்றும் எனது அவதானிப்புக்குத் தெரிந்தது. அவர்கள் இருவரும் குட்டியனோடு போட்டோ எடுக்குமாறு கேட்டேன்.

மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒரு காலத்தில் குட்டியன் மலேசியாவுக்கோ அல்லது சுவிஸூக்கோ சென்றால் ஞாபகார்த்தமாக அவர்களுக்குப் பரிசளிக்க இந்த போட்டோ  உதவக் கூடும். அவர்கள் இருவரோடும் அவனும் வெகு இயல்பாக இருந்து போஸ் கொடுத்தான் அதை பாரதித் தம்பி கிளிக்கிக் கொண்டார்.

ஒரு சின்ன மழை பெய்து காலநிலை இதமாக இருந்தது. ஏலவே இருந்த குளிருக்கு மழைக்குளிர் இன்னும் உரம் சேர்த்தது. உள்ளே நுளைந்த கரப்பான் வெளியேறி இருக்க வேண்டும். பழையபடி நிகழ்ச்சி நிரல்படி ஏனைய அம்சங்கள் இடம்பெறத் தொடங்கியிருக்க வேண்டும். உள்ளே சுமுகமாக ஒரு குரல் ஒளித்துக் கொண்டிருந்தது. 

இன்றைய தினத்தில் முக்கியமான சிலரைச் சந்திக்கக் கிடைத்ததுதான் பெறுமதியான விடயமாக இருந்தது. குறிப்பாக லறீனா அப்துல் ஹக், ஜெஸீமா ஹமீட் போன்றவர்கள். உள்ளூரில் இருந்தாலும் தூரத்திலேயே இருக்கும் உறவு. அது கூட ஒரு துன்பம்தான். லறீனாவுக்குக் கொடுக்கவேண்டும் என்று நீண்ட நாள் காத்திருந்த எனது சிறுகதைத் தொகுதியான ஹராங்குட்டியை நிகழ்வின் ஆரம்பத்திலேயே கொடுத்த போதுதான் டக்கென்று ஒரு விடயம் பொறி தட்டியது. அட்டைப்படத்தில் இருந்த துப்பாக்கிதான் அந்த ஞாபகத்தையே கொண்டு வந்து சேர்த்தது.

எப்படியும் அவர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் வராமல் இந்த நாட்டில் ஒரு நிகழ்வு நடந்துவிடுமா என்ன! அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வது இங்கு அவ்வளவு கஷ்டமாக இருக்காது. பார்வையால்  அலசிக் கொண்டிருக்கும் போதே கண்ணில் பட்ட ஒருவர் சந்தேகத்தையும் சேர்த்தே விதைத்தார். நிச்சயமாக அவர் அவர்களில் ஒருவாராகத்தான் இருக்க வேண்டும்...

தொடரும்.............

Saturday, May 23, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 05 ............... .ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

முதல் நாள் நிகழ்வில் ஆண்களுக்கு அனுமதியில்லை என்றார்கள். ஆனாலும் குட்டியன் கொஞ்ச நேரம் நிகழ்வில் கலந்து கொண்டான் அவனை எப்படி அனுமதித்தார்களோ தெரியவில்லை. ஆனாலும் அவன் புத்திசாலி தடையை மீறிக் கலந்துகொண்டான் பாருங்கள். இடைக்கிடையே மைக் போட்ட ஒழுங்கற்ற சப்தம் அவனுக்குப் பிடிக்கவில்லை போலும் பின்னர் குட்டியன் என்னுடனேயே ஐக்கியமாகி விட்டான். உள்ளே அவர்கள் பேசிக் கொள்வது என்ன என்பது வெளியே உலாத்தித் திரிந்த எனக்கு நன்றாகவே கேட்டது. மேலே இருந்து பார்க்கும் போது நாங்கள் காலையில் நடந்து வந்தது நினைவிற்கு வந்தது.

காலை இதமான குளிரில் ஒரு கிலோ மீட்டர் வரையில் நடந்து வந்திருந்தாலும் பெரிய களைப்பு ஒன்றும் இருக்கவில்லை. புதிய மாதவியும் ஷாமிலாவும் எதையெதையோவெல்லாம் கதைத்துக் கொண்டு வந்தார்கள். நர்மதா குட்டியனைத் தூக்கிக் கொண்டு அவ்வளவு தூரம் இயல்பாக நடந்து கொண்டிருந்தார். அந்தக் கொஞ்ச நேரம்தான் கதைத்துக் கொள்ளக் கிடைத்தது. அதற்குள் எவ்வளவு விசயங்களைப் பரிமாறிக் கொள்ளவது? ஒரு நிகழ்வில் கிடைக்கும் பெரிய பயன் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதும் கருத்துக்களையும் சிந்தனைகளையும் மனம்விட்டுப் பரிமாறிக் கொள்வதும்தான். அது அவ்வளவு எளிதில் வாய்க்காது. பெண்ணியச் சிந்தனை என்பது தொடர்பில் எனக்கு இன்னொரு பக்கத்தை யோசிக்கவும் செயற்படவும் அதன் பங்காளனாய் நின்று பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய வலிமையையும் ஏதோவோர் உணர்வு என்னுள் செய்து கொண்டிருந்தது.

பலம் - பலவீனம் என்ற விடயமும் இயல்பு என்று ஒரு விடயமும் இருக்கின்றது. பலம் பலவீனத்தை மாற்றிக் கொள்ள முடியும். தொடர்தேச்சையான முயற்சி அதற்கு கை கொடுக்கும். ஆனால் இயல்பை மாற்ற முடியாது. அது இயற்கையால் வருவது. ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள பலம் பலவீனம் சார்ந்து யோசிக்கும் போது பெண்களின் பலவீனம் என்று பட்டியல்படுத்தப்பட்டிருப்பவற்றை எப்படிப் பலமாக்குவது என்று திட்டமிடுதலும் அதற்காக  உழைத்தலும் நீண்ட காலத்தில் பெரிய பயன்களைத்தரும். பல நிகழ்வுகள் பலவீனம் என்று வடிவமைக்கப்பட்ட விசயங்களுக்குள்ளேயே மட்டும் நின்று கொண்டு சுழல்வதைத்தான் நான் அவதானித்திருக்கின்றேன்.

ஊடறு இந்த பலவீனங்களையெல்லாம் கடந்து பலம் பற்றிய சிந்தனைக்குள் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் பிரார்த்தித்தேன். ஊடறுவுக்கும் அதற்கு உறுதுணையாக நிற்கும் தோழிகளுக்கும் அந்தக் கட்ஸ் இருக்கின்றது அவர்களால் எல்லாப் பலவீனங்களையும் மிக இலகுவாக எதிர்கொள்ளும் நேரிய திறன் இருக்கின்றது. அந்தத் திறன் பல்லாயிரம் பேருக்கு வெளிச்சமாக நின்று வழிகாட்டக் கூடியது. அதைத் திறமையாகக் கட்டமைக்கும் ஆளுமைகள்தான் இன்னும் தேவைப் படுகின்றார்கள். புதிய மாதவி போன்றவர்களின் கூர்மையான சிந்தனையும் வழிகாட்டலும் இந்தப் போக்கிற்கு நிறையவே துணை செய்யக் கூடும் என்று நான் நம்புகின்றேன். 

பெண்ணியம் பேசும் பலரின் எழுத்துக்களைப் படித்திருக்கின்றேன் அவற்றில் இன்னும் இடித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விசயம்தான் பெண்ணும் இயற்கையும் சம்பந்தப்பட்டது. 

அநேகமாக பெண்ணைப் பற்றிய பல கவிதைகள் இது குறித்துப் பேசுகின்றன. அவற்றில் என்னை விழுந்து சிழுந்து சிரிக்க வைத்த கவிதை  பெண் காற்று. பெண் ஆகாயம், பெண் நிலம், பெண் ஆழக்கடல் பெண் அது இது என்று கடைசியில் பெண் இயற்கை என்று முடியும். பல பெண்கவிஞர்கள் இந்த விடயத்தினுள் அமிழ்ந்து எழுவார்கள். பெண்ணை இயற்கை என்று பேசும் கவிதைகளைப் படிக்கும் போது வருகின்ற சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடிவதில்லை. அப்படி என்னதான் சிரிப்பு வேண்டிக் கிடக்கிடக்கிறது? அதில் என்ன தப்பு இருக்கின்றது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.  சிரிப்புக்கான காரணி பெண் இயற்கை சரி அதை ஏற்றுக் கொள்வோம். அவள் இயற்கைதானே. அதை மறுக்க முடியாது தானே. அப்படியென்றால் ஆண் செயற்கையா? ஜெமினி ஜெராக்ஸ் கடையில் எடுக்கப்பட்ட பிரதி போலும். ஏனெனில் ஆணுக்கு இயற்கை முத்திரை குத்தி இதுவரையும் ஒரு கவிதைக் குஞ்சையாவது நான் படித்திலன். சரி அதையெல்லாம் விடுவோம். சமயங்கள் ஆண் பெண் பற்றி என்ன சொல்கின்ற கருத்துக்கும் ஆண் பெண் குறித்த இயற்கையின் அடிப்படைத் தத்துவத்தையும் தேடிப்பார்த்தால். பெண்ணுக்கு முந்திய இயற்கை ஆண். ஆண் என்ற இயற்கையில் இருந்ததான் பெண் என்ற இயற்கை பிறக்கின்றது. பின்னர் முழு உலகுக்கும் ஆண் பெண் என்ற இயற்கைகளை பெண் என்ற இயற்கை பிரசவிக்கின்றது.  இனியாவது பெண்ணின் இயற்கை குறித்து யாராவது கவிதை எழுதும் போது ஆணையும் ஒரு வரியில் சேர்த்துக் கொள்ளுங்கள். நானெல்லாம் பாவம்...

காற்றில் கலந்து வந்த லாவன்யாவினதும் சுகன்யாவினதும் குரலினிமையை ரசித்தபடி நாங்கள் இருவரும் கதைபேசி காட்சி பார்த்து அரங்கிற்கும் காது கொடுத்தபடி சுற்றிக் கொண்டிருந்தோம். பாடலிற்குள்ள வலிமை அலைபாய்ந்திருந்த எல்லா மனதையும் அப்படியே கூலாக்கி ஒரு ரிலாக்ஸ் நிலைக்குக் கொண்டு வந்து விடும். அந்த இதமான கூலில் எவ்வளவு ஹொட்டான விசயத்தையும் டிஸ்கஸ் பண்ணலாம் என்று நர்மதா அல்லது ஓவியா சொன்னது எவ்வளவு யதார்த்தமானது. அவ்வளவு இதமான சுகமான கால நிலை. 

அது எவ்வளவு  நல்லபடியாகவே போய்க் கொண்டிருந்த நிகழ்வுக்கு மத்தியில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடல் காதுக்குள் சிறு பூச்சி புகுந்துவிட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சொரசொரப்பான சொப்பின்ங் பைக்குள் கரப்பத்தான் புகுந்தமாதிரியும் அதை எடுத்துக் கொள்ளலாம். இத்தனைக்கும் அந்தக் கரப்பான் எப்படிப் புகுந்தது என்று தெரியாது. ஆனாலும் அந்தக் கரப்பான் புகுந்திருக்கக் கூடாது. நிகழ்ச்சியின் தலைமை அதை விரட்டியிருக்க வேண்டும் ஆயினும் அதுவும் நடக்கவில்லை... நான் குட்டியனின் முகத்தைப் பார்த்தேன் அவன் அலாதியாகச் சிரித்தான் ஆயினும் அவனுக்கு கரப்பான் சொப்பினுக்குள் புகுந்த செய்தி தெரியாதுதான்...

தொடரும் .............

Friday, May 22, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 04 ...................ஊடறு + மலையகப் பெண்கள்



அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

ஷாமிலாவுக்கு மட்டுமல்ல எமக்கும் சேர்த்துத்தான் டீ வந்திருந்தது. அதைச் சுவைத்துக் கொண்டே சந்திரலேகா-கிங்ஸ்லி யின் காதல், கல்யாணம், சமுக ஈடுபாடு, பொதுச் சேவைகள், கல்வியியற் செயற்பாடுகள், மலையக மக்கள் என்று பலதையும் பேசிக் கொண்டிருந்தோம். சந்திரலேகாவைத் திருமணம் முடிப்பதற்கென்றே கிங்ஸ்லி அரசாங்கத் தொழிலுக்குச் சென்ற கதையைக் கேட்டு  சிரித்தே விட்டேன். அவர்களின் மகனும் மகளும் குட்டியனோடு ஐக்கியமாகி இருந்தார்கள். அவனும் நீண்ட நாள் பழகியவன் போல ஒருவரிடமிருந்து மற்றவரிடம் தாவிக் கொண்டிருந்தான். 

அந்தப் பிள்ளைகளை அவர்கள் வளர்த்திருக்கும் அழகே அவர்களின் குடும்வாழ்க்கையின் போக்கைச் சொல்லிச் சென்றது. ஊடறுவும் மலையகப் பெண்களும் இணைந்து நடாத்தும் பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் என்ற அழைப்பிதழ் பிரதிகள் மேசையில் கிடந்தன. இப்படியொரு நிகழ்வை  வெற்றிகரமாக நிகழ்த்த சந்திரலேகாவுக்கு உறுதுணையாக தோழர் கிங்ஸ்லி என்னமாதிரியான வகிபங்கைக் கைக்கொண்டிருப்பார் என்று மிக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியுமாக இருந்தது. அனைத்து ஏற்பாடுகளிலும் அவரின் துணை இரண்டறக் கலந்திருந்தது.

நிகழ்வின் போதும் அவதானித்தேன்.   கிங்ஸ்லி ஆளாய்ப் பறந்து பறந்து அனைத்தையும் கவணித்துக் கொண்டிருந்தார். அவரின் மாறாத புன்சிரிப்பும், சந்திரலேகாவின் அமைதியும் எடுப்பில்லாத பேச்சும் எல்லோரைம் கவர்ந்திருக்கும் என்று நம்புகின்றேன். இது இன்னும் சில ஜோடிகள் பற்றியும் பேச வேண்டும் அடுத்தடுத்த பகுதிகளில் பேசுவேன்.

ஊடறு இந்நிகழ்வைத் தொடர்ந்தும் செய்து வருகின்றது. அவற்றையெல்லாம் தூரத்தில் இருந்துதான் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அருகேயிருந்து பார்க்கும் போதுதான் றஞ்சியினதும் அவரின் தோழிகளினதும் உழைப்பின் கனதி எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ள முடியுமாக இருந்தது. பெண்களை வலுவூட்ட புத்துருவாக்க மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையுடன் செயற்படும் நபர்களையும் பெண்ணிய எழுத்து என்று களத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் சோளக்காட்டுப் பொம்மைகளையும் இந்த மாதிரியான நிகழ்வுகளில்தான் ஒப்பு நோக்கிப் பார்த்துக் கொள்ள முடியுமாக இருக்கின்றது. 

பல பெண்ணிய நிகழ்வுகள் சிலரைக் கட்டமைத்துக் கொள்ளவும் அவர்களை பேராளுமைகளாக முன்னிறுத்திக் கொள்ளவுமே நடைபெறும், அதன்  பின்னால் குறுகிய நோக்கங்களைக் கொண்ட நிகழ்ச்சி நிரலுடன் சில ஆண்கள் இருப்பார்கள். அவர்களை விட்டால் வேறு ஆள் கிடையாது என்ற தோரணையில் ஆகாயத்திலும் பூமிக்குக் கீழும்தான் அவர்கள் பயணப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களின் கால் நிலத்தில் படவே படாது. ஆனால் இந்நிகழ்வில் அப்படிப்பட்ட நபர்களைச் சந்திக்கக் கிடைக்காது என்றே தோன்றியது. றஞ்சியின் மீது மதிப்பு அதிகரித்த அடுத்த பொழுது இது. றஞ்சி உட்பட ஏனையவர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியை சந்திரலேகா சொன்னபோது அவர்களைப் பார்த்துவிட்டடுத்தான் தூங்கச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. காலையில் எமது பயணம் மிக சொகுசானது என்பதால் பயணக் களைப்பு என்று ஒன்று இருக்கவில்லை. 

நள்ளிரவு வேலையில் றஞ்சி, ஓவியா, நர்மதா, ரஜணி, விஜயலட்சுமி, யோகி, புதியமாதவி என்று அனைவரும் வந்திறங்கினார்கள். ஓவியா மட்டுமே எனக்கு ஏற்கனவே அறிமுகம். 1990களில் வடமாகாண முஸ்லிம்கள் விடுலைப் புலிகளால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதை தமிழ்த் தேசியவாதிகள் எப்படிப் பார்க்கின்றார்கள் என்ற நேர்காணலுக்காக 2010ஆம் ஆண்டளவில் தோழர் கீற்று ரமேஸ் அவர்களின் துணையோடு ஓவியாவின் வீட்டிலேயே அந்நேர்காணலைப் பதிவு செய்தேன். தமிழ்த் தேசியவாதிகள் குறித்த தவறான புரிதலை அந்த ஆவணப்படத்தின் மூலம் ஓரளவு சீர் செய்ய முடியுமாக இருந்தது. அதற்குப் பின்னர் இன்றுதான் அவரைப் பார்க்கின்றேன். 

விடுதலைப் புலிகளின் இனச் சுத்திகரிப்பு என்ற வார்த்தைக்காக நீண்ட நேரம் பேசினோம். அது எப்படி இனச் சுத்திகரிப்பாகும் என்ற கேள்விக்கு திட்டமிட்டரீதியில் எப்படி வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை தெளிவு படுத்தினேன். முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துருவாக்கம் எங்கிருந்து வந்தது? அதைப் புலிகள் எப்படி முழுமையாக நம்பினார்கள்? என்பதையும் வரலாற்றில் புலிகள் தோற்றுப் போன மிக முக்கியமான இடங்களில் அதுவும் ஒன்று என்பதையும் தெளிவு படுத்தினேன். அதன்பின்னர்அந்த வெளியேற்றத்தைக் கண்டித்துப் பேசினார். தமிழகத்தில் சில விடயங்களைத் தீர்மானிக்கும் நபர்களில் உயர்ந்த இடத்திற்கு ஓவியாவை நகர்த்தியிருப்பதில் அவரின் இந்தப் போக்கும் ஒரு காரணியாக இருக்கக் கூடும். ஏனெனில் நிறைய மனிதர்கள் யார் யாரையோவெல்லாம் திருப்திப்படுத்துவதற்காகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கருத்துச் சொல்வதில்கூட 

அனைத்தையும் அமைதியாகச் செவிமடுத்து பின்னர் தனக்குத் தோன்றும் சந்தேகங்களைக் கேள்விகளாகத் தொடுத்து முழுமையாகத் தெளிவடைந்த பின்னரே கருத்துரைக்கும் பண்பை ஓவியாவிடம் அதிகமாகவே காணலாம்.  ஏற்றுக்கொள்ளாத போது 'அப்படி இல்ல தோழர்' என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்வார். இது எனது புரிதலும் அவதானிப்பும்.

இணையவெளியில் பார்த்த லண்டாய் என்ற நூலுக்கூடாக விஜயலட்சுமியின் பெயர் மட்டும் அறிமுகம். புதியமாதவியின் பெயரும் எழுத்துக்களும் ஏற்கனவே அறிமுகம் அவரைத்தவிர. மற்றயவர்கள் யாருமே எனக்கு அறிமகமானவர்களாக இருக்கவில்லை. ஆனால் பாருங்கோ அப்போதும் றஞ்சியைப் பார்க்கக் கிடைக்கவில்லை. யார் யார் என்னென்ன பெயரால் அழைக்கப்படுகின்றார்கள் என்பதை மட்டும் அவதானித்துக் கொண்டிருந்தேன். எல்லோரினதும் அகத்தின் அழகை முகத்தில் பார்க்க முடியும் என்ற அடிப்படையில் அனைவரையும் ஓரளவுக்கு அவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்றும் கணித்துக் கொண்டேன்.

அவர்கள் தமக்குள் உரையாடிக் கொண்டிருப்பவற்றுக்கு எனது செவிகளைத் தாரை வார்த்துவிட்டு நான் 'சால்வை வீரன்' என்ற எனது புதிய நாவலை டைப் பண்ணத் தொடங்கினேன். அவர்களின் உரையாடல் எனக்குச் சொன்னது ஒன்றேயொன்றுதான். பெண்ணியம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அவர்கள் பிழைப்பு நடாத்தவில்லை. அத்துடன் அதைப் பேசு பொருளாக்கி தம்மைக் கட்டமைத்துக் கொள்ளவுமில்லை, பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் உரிமைகளைச் சரியாகப் பெற்றுக் கொடுப்பதற்கும் என்னென்ன செய்யலாம் என்பதையே கருவாகக் கொண்டிருந்தன. குறிப்பாக மதுரையில் இருந்து வந்த சட்டத்தரணி ரஜணியும் பம்பாயில் இருந்து வந்த புதிய மாதவியும் அன்றுதான் முதன் முறையாகச் சந்தித்துக் கொண்டார்கள். அவர்களின் உரையாடலை  தனியாகத் தொகுத்து எழுத வேண்டும். அந்த உரையாடலில் பெரும்பகுதி இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றது. ஒரு முன்மாதிரியாக ஒருபெண் தன்னை எப்படிக் கட்டமைக்கலாம் என்ற தொனியில் புதிய மாதவியின் கருத்துக்கள் தனித்துவமாகப் பிரதிபலித்தன. 

அப்படியே இருக்கும் போதுதான் வெளியே சென்று நிகழ்வு நடக்கும் மண்டபத்தைப் பார்த்துவிட்டு அப்போதுதான் திரும்பினார் றஞ்சியும் இன்னும் சிலரும். அறிமுகமாகிக் கொள்ளவும் நாலு வார்த்தை பேசிக் கொள்ளவும் கூட நேரம் வரவேண்டும். கை குலுக்கிக் கொண்டதோடு றஞ்சி இது முஸ்டீனாகத்தான் இருக்க வேண்டும்என்று நினைத்திருக்க வேண்டும், அவராகவே முஸ்டீன்..!! என்றார் நானும் ஆமாம் என்றதோடு அறிமுகம் முடிந்து போயிற்று. அவ்வளவு பயணக் களைப்போடும் எதையும் பொருட்படுத்தாமல் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்ற இறுதிக்கட்ட ஒழுங்கு படுத்தலைச் செய்துவிட்டு வந்திருந்த றஞ்சிக்கு நிகழ்வு வெற்றிகரமாக முடிந்துவிட வேண்டும் என்ற எண்ணம்மட்டும்தான் ஓடியிருக்க வேண்டும். அந்த டென்ஷன் முகத்தில் தாராளமாகத் தெரிந்தது. காலை நிகழ்வை நினைத்துக் கொண்டு இருந்த கொஞ்ச வேலைகளையும் முடித்துவிட்டு அதிகாலை இரண்டு மணியளவில் தூங்கச் சென்றேன்.

காலையில் யோகி குட்டியனோடு பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டது. இன்னும் சிலரும் ஷாமிலாவோடு கதைத்துக் கொள்ளும் சத்தமும் கேட்டது. போர்வைக்குள் நான் ஒருவன் சுருண்டு படுத்துக் கொண்டிருப்பதை அவர்களில் யாருமே கவனிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு குட்டியனோடு கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஆனால் விஜயலட்சுமியின் பார்வைதான் கூர்மையானது போலும். நான் ஒரு ஜீவன் உறங்கிக் கொண்டிருப்பதை அவர்தான் அந்த இடத்தில் அறிவிப்புச்  செய்தார்.

முதல் நாள் நிகழ்வில் ஆண்களுக்கு அனுமதியில்லை என்றார்கள். ஆனாலும் ஒருவன் எந்த எதிர்ப்புமில்லாமல் அதில் கலந்து கொண்டிருந்தான்...

தொடரும்... 

Wednesday, May 20, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 03 ..........................ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்

-முஸ்டீன்-


ஒரு டீ க்காக தனது கணவனை அட்டைக்கடிக்குப் பலி கொடுக்கத் துணிந்த மனைவி பற்றி கட்டாயம் சொல்லியேயாக வேண்டும். இந்த இடத்தில் இரண்டு சவால்கள் ஒன்று குட்டியனைத் தூக்கிக் கொண்டு மலையேறுவது. அடுத்தது அட்டைகளில் இருந்து தப்பிப்பது. சந்திரலேகா முன்னால் இருந்த மலைப்பாதையைக் காட்டி 'இந்த வழியால் ஐந்து நிமிடம் நடந்தால் எமது வீடு' என்றார். அப்போதே எனக்குள் தயக்கம் மெலிதாகக் குடி கொண்டது. 


மலையகத்தில் இரண்டு விடயங்களை ஒன்றுக்குப் பத்து முறை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஆட்டோவில் பயணிக்கும் முன்னர் அதற்கான காசு எவ்வளவு என்பதைத் தீர்க்கமாகப் பேசித் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அது ஆட்டோ என்று மட்டுமல்ல கட்டனம் தீர்மானிக்கப்பட்ட பஸ் போன்றவை தவிர ஏனைய அனைத்து வாகனங்களிலும் இந்த முன்னெச்சரிக்கை தேவை.  அடுத்தது ஒருவரின் வீட்டுக்கு நடந்து செல்வதற்கு முன்னர் அதன் தூரம் குறித்து தெளிவாகவும் தீரவும் விசாரித்துக் கொள்ள வேண்டும். 


கொட்டகல ரயில்வே நிலையத்தில் இருந்து நாம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். ஷாமிலா செய்த முதல் காரியம் சிறீயிடம் ஆட்டோவுக்கு எவ்வளவு வரும் என்பதுதான். நூற்றியம்பது ரூபாய் என்றதும் இப்போது திருப்தி. ஆனாலும் நாம் வந்திறங்கிய இடமோ அந்தளவுக்கு தூரம் கிடையாது. ஆட்டோக்காரர் இருநூறு ரூபாய் என்றார். ஷாமிலாவுக்கு கோபம் வந்துவிட்டது. கொழும்பில் இருநூறு ரூபாய்க்கு ஐந்து கிலோமீட்டர்வரைப் பயணிப்போம். இதென்ன பகற்கொள்ளையாக இருக்கின்றது. நீங்கள் என்ன கொள்ளைக்காரரா என்று கேட்டுவிட்டு ஏன் இப்படி அநியாயமாக மற்றவர்களிடமிருந்து பணத்தைக் கறக்கின்றீர்கள், நாங்கள் இப்போது வந்த தூரம் ஒன்றரைக் கிலோமீட்டர் கூட இருக்காதே என்று தடாலடியாகக் கேட்டே விட்டாள். அவரும் இதனை எதிர்பார்க்கவில்லை பின்னர் ஏதோ பறவாயில்லை என்று 150 ரூபாவைக் கொடுத்துவிட்டு வந்தாள். கொழும்பு மாளிகாவத்தையில் இருக்கும் சண்டைக்காரிகள் போல இருந்தது அவளின் பேச்சு. அதற்கு மேல் ஏதாவது பேசினால் அறைவிழுந்தாலும் விழும் என்ற அச்சத்தில் ஆட்டோக்காரன் எதுவுமே பேசாமல் பறந்தான். 


ஏற்கனவே ஒரு முறை ஹட்டனில் ஒரு நண்பரின் திருமணத்திற்கு வந்த போது அங்கு மிக நெருக்கமாகப் பழகிவிட்ட இன்னொருவர் கட்டாயமாகத் தனது வீட்டுக்கு வரும்படி வருத்திக்கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன விதம் 'இங்கிட்டு கொஞ்ச தூரம் தான் ஒரு பத்துப் பதினஞ்சு நிமிசம் நடந்தா எங்கவூடு' என்றார். ஆனால் பரிதாபம் ஒன்றறை மணித்தியாலங்கள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க மலையேறிப் பட்ட துன்பம் வாழ்வில் மறக்கவே முடியாதது.  அது மாதிரி அஞ்சு நிமிசமோ இது என்று நான் வாய்விட்டே கேட்டுவிட்டேன். ஆனாலும் தோழர் கிங்ஸ்லி சிரித்துக் கொண்டே இது அப்படித் தூரமில்லை பயப்படவேண்டாம் என்றார். நடந்து பழகிய அவர்களுக்கு அதெல்லாம் பெரிய மேட்டரே கிடையாது. அதனால் இயல்பாக அது அவர்களுக்குச் சின்ன தூரம். பழக்கப்படாத நமக்கு அப்படியில்லையே. வயிறு வேறு காட்டு மரம் போல கட்டுக்கடங்காமல் ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றது. இப்படியே போனால் தொப்பை நம்மை தலைகுப்புறப் புரட்டி விடுமோ என்ற அச்சம் வேறு. நடக்கத் தொடங்கிய கொஞ்சத்தில் தோழர் கிங்ஸ்லியுடன் குட்டியன் ஐக்கியமாக அவரே அவனைத் தூக்கிக் கொண்டார். 


அட்டைகளின் பால் மீண்டும் எனது கவனம் செல்ல, ஷாமிலாவை டீ வேகமாகத் துரத்திக் கொண்டிருந்தது. அவள் மலை, மழை, குளிர், அட்டை, குட்டியன், நான், என்று எதையுமே பொருட்படுத்தாமல் நடந்துகொண்டிருந்தாள். எனது தற்காப்பு முயற்சிகள் அனைத்தும் பொய்த்துப் போக எதிர்பார்த்தது போலவே எனது வலது காலின் கனுக்காலுக்கு மேலால் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி உடைத்துக் கொண்டு ஒரு அட்டை நுளைந்து அப்போதுதான் வாய் வைத்திருந்தது. அதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன். குனிந்து பார்க்காமல் வேக வேகமாக மலையேறிக் கொண்டே நான் சொன்ன செய்தி அட்டை கடிக்கின்றது என்பதுதான் என்னுடன் கூடவே வந்தவர்கள் அதை நம்பியிருக்க வாய்ப்பில்லை, நடந்து கொண்டிருக்கும்போதே ஜந்து நுளைந்துவிட்டதைக் கணித்துக் கொண்டேன். நல்லவேளை சந்திரலேகாவின் வீட்டு முன்றலை நெருங்கியிருந்த நேரமது.

அட்டை சும்மா வாய் வைத்தால் கூட போதும் சின்னஞ்சிறிய ஊசித்துளை அளவுக்கு இருக்கும் அதன் பல் பதிந்த இடம் ஒரு வாரத்தில் கோனிப்பை தைக்கும் ஊசித்துளை அளவுக்கு வீங்கிப் பழுத்து அரிக்கத் தொடங்கிடும். எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் சொரியாமல் இருக்க முடிவதில்லை. சொரிந்துவிட்டால் தொலைந்தோம். எப்படியும் அது முழுமையாகக் குணமாக ஆறு மாதங்கள் எடுக்கும். உப்புத் தண்ணீரை ஊற்றி அதுவாகக் கலன்று விழும்வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாமாகப் பிடுங்கி எறிந்தால் அந்தக் காயத்தின் வேதனை வருடக் கணக்கில் இருக்கும். 2008ல் அக்குரனையில் வைத்து வாங்கிய அட்டைக்கடியின் தளும்பு இன்றுவரையும் மறையவில்லை, அதற்குள் இன்னொரு கடியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அது எனக்கு மட்டுமா அல்லது எல்லோருக்கும் இப்படித்தானா என்பது தெரியாது. (பெரியளவில் அட்டைக்கடி வாங்கிய யோகிதான் அது குறித்துக் கொஞ்சம் கூடுதலாக விபரிக்க வேண்டும்.) 

மலையகத்து மக்கள் எப்படித்தான் இந்த மாபெரும் வில்லனை இலகுவாகச் சமாளித்து விடுகின்றார்களோ தெரியாது. அட்டைக்கடிக்குப் பலியாகி உயிரிழந்த செய்திகளை சில கதைகளிலும் கட்டுரைகளிலும் பத்திரிகைச் செய்திகளிலும் படித்திருக்கின்றேன். பாவம் இந்த மக்கள். உதிரத்தை உறுஞ்சும் அட்டைகளை வெற்றிகொன்ட மக்களால் உழைப்பை உறுஞ்சும் முதலாளி அட்டைகளினை இன்று வரையும் வெற்றி கொள்ள முடியாமல் தவிக்கின்றார்களே என்று எண்ணிய போது கவலையாக இருந்தது.

இந்தச்  சிந்தனையைத்தான் அசைபோட்டபடி சந்திரலேகா, கிங்ஸ்லியின் வீட்டில் இருந்த சின்னஞ்சிறிய பெறுமதியான நூலகத்தையும் நோட்டமிட்டேன். முன்னறையில் கீதை, பைபிள், குர்ஆன் எல்லாம் இருந்தன. இன்னும் அவர்களின் இரண்டு பிள்ளைகளுக்கும் அவர்கள் எந்த சமயத்தைப் பின்பற்ற வேண்டும் எனச் சொல்லிக் கொடுக்கவில்லை அவர்கள் அனைத்தையும் படித்துத் தெரிந்து கொள்ளட்டும் பின்னர் தமக்கான சமயத்தைத் தேர்வு செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டதாக கிங்ஸ்லி சொல்லும் போது அவரை எண்ணிப் பெருமையாக இருந்தது. 

அப்போது ஷாமிலா ஆவளுடன் எதிர்பார்த்திருந்த டீ வந்தது.

தொடரும்...

Tuesday, May 19, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 02 ..................... ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

ஒருமாதத்துக்கு முதல் ஷாமிலா டிக்கட் புக் பண்ணி வைத்திருந்தாலும் கடைசி நான்கு நாட்களும்தான் முஸ்லிம் விதவைப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் - காழி நீதிமன்றங்களை முன்னிறுத்தி என்ற தலைப்பில கட்டுரைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். அதுவும் குட்டியன் கொடுக்கும் அதிக பட்சத் தொந்தரவுகளையும் தாண்டி அவனையும் அரவனைத்து  என்னையும் அனுசரித்து அவள் போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அப்போது அவளுக்குச் செய்ய முடியுமான ஒரே உதவி குட்டினைத் தூக்கிக் கொண்டு வெளியே உலாப் போவதுதான். எப்படியோ பாடசாலை வேலைகளையும் கவனித்து இன்னபிற விடயங்களையும் முடித்து தகவல்களைச் சேகரித்து கட்டுரையையும் டைப் செய்து முடித்து விட்டிருந்தாள். குழந்தை வளர்ப்பில் சமபாதி இருவருக்கும் இருக்க வேண்டும் என்பதில் நான் கண்டிப்பானவன். என்னுடைய பொறுப்புக்களைச் செய்யுமாறு யாரும் வகுப்பெடுக்கவில்லை. ஆயினும் நான் என்பங்கைச் சரியாகச் செய்கின்றேன். அநேகமான ஆண்கள் அதைச் செய்வதில்லை அதனால் பெண் ஆணோடு முரண்படும் சந்தர்ப்பங்கள் தோற்றம் பெறுகின்றன.

கட்டுரை தயார் படுத்தலில் என் பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டாமா! என்று அனைத்தும் முடிந்த பிற்பாடு கட்டுரையில்  எழுத்துப் பிழை பார்த்து வசனங்களை ஒழுங்குபடுத்தி ஒரு நேர்த்தியான பிரதியாக்கி பீடிஎப் வடிவில் கொடுக்கும் இலகுவான பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். ஆயினும் ஒரு தமிழ் வாத்தியின் கட்டுரையில் திருத்துவதற்கென்று ஒரு எழுத்துப் பிழையும் எனக்குக் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் தலைப்பில் குற்றம் கண்டு பிடித்தேன். விதவைப் பெண்கள் என்பது பிழை என்றேன். எப்படி? என்று கேட்டாள். விதவை என்றாலே பெண்தானே ஆணுக்கு தபுதாரன் என்ற சொல் இருக்கும் போது விதவைப் பெண் என்று பாவிக்கத் தேவையில்லைதானே விதவை என்றாலே போதும் அது பெண்தான் என்று சொன்னதும் எந்தப் பிசிரும் இல்லாமல் அதை உடனேயே ஏற்றுக் கொண்டு நியாயப்பபடுத்தாமல் கட்டுரையில் இந்தப் பிழை  வந்திருக்கும் இடங்களைத் திருத்தச் சொன்னாள். அப்பாடா இப்படியாவது உதவினோமே என்று சந்தோசப் பட்டுக் கொண்டேன்.  ஆனாலும் அழைப்பிதழில் விதவைப் பெண்கள் என்றுதான் அச்சாகி இருந்தது. அதை யாருமே கண்டு கொள்ளவில்லை போலும். 

நிறையக் கணவன் மனைவிகளுக்கிடையில் விரிசல் தோன்றுவதற்குக் காரணம் எல்லாவற்றையும் அவரவர் தரப்பில் நின்று நியாயப்படுத்தி முடிப்பதுதான். நியாயப்படுத்தும் போது யாரும் தம்மை விட்டுக்கொடுப்பதில்லை. அதனாலேயே பிரச்சினைகள் பூதாகரமாகிப் போகும். ஏற்றுக் கொள்ளும் போதும் ஒரு புன்சிரிப்போடு முரணைக் கடந்து செல்லும் போதும் அன்பும் அமைதியும் மதிப்பும்தான் மேவிநிற்கும். இது குடும்ப வாழ்க்கையில் மட்டுமல்ல பொதுவெளியில் குறிப்பாக இலக்கிய வெளி, சிந்தனைகளையும் கருத்துக்களையும் முன்வைப்பவர்கள் என்று எல்லோருக்கும் பொருந்தும். சிலருக்குச் சம்மட்டியடி கொடுத்தால்தான் சிலவிடயங்கள் புரியும். அப்படிப்பட்டவர்களுக்கு ஹிட்லரின் துப்பாக்கி போல எனது பேனை கருனையின்றி மாறிச் செயற்படும். மற்றபடி எனது பேனைக்கு இயேசு நாதரின் சாந்தமும் முஹம்மது நபியின் பொறுமையும் இருக்கின்றது.

ஷாமிலாவின் கட்டுரையினை வாசிக்கும் போது  அவளது ஆளுமையின் இன்னொரு பக்கத்தை என்னால் தரிசிக்க முடியுமாக இருந்தது. இஸ்லாத்தின் பெயரில் இப்போது இருக்கும் சிஸ்டம் பச்சப் பிழை என்று ஆணித்தரமாக நிறுவி இருந்தாள். பல கருத்துக்கள் நிச்சயம் மார்க்கத்தளத்தில் நீண்ட விவாதத்தை உண்டுபண்ணக் கூடியவையாகவும் பெண்ணியச் சந்திப்பில் வித்தியாசமான கருத்துரைப்பாகவும் இருக்கும் என்று தோன்றியது. ஷாமிலாவுக்குள்ள தைரியத்தை அந்தப் பிரதியில் பார்க்க முடியுமாக இருந்தது. பலர் விமர்சனத்துக்குப் பயந்து கருத்துரைப்பதே இல்லை. சிலர் மட்டும்தான் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் வாதிப்பார்கள். தமது கருத்துக்களை ஆணித்தரமாக நிறுவுவார்கள். கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் பெண்களை மிக இலகுவாக இப்போதுள்ள இணையச் சூழலில் அவமானப்படுத்தித் திருப்திப்படும்  சில்லறைகள் மலிந்து கிடக்கின்றார்கள். இஸ்லாத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்டு கூப்பாடு போடும் கார்ட்போர்ட் மௌலவிகளால்தான் அதிக பிரச்சனையே. 

பயணப்படும் அன்றுக் காலைதான் கட்டுரையைப் பிரின்ட் எடுக்க முடிந்தது. நிகழ்வுக்கு முதல் நாள் இரவுதான் ஷாமிலாவால் கட்டுரையை ஒருமுறை நேரம் வைத்து வாசித்துப்பார்க்க முடிந்தது. எல்லாவற்றையும் கடைசி நேரத்தில்தான் மாங்குமாங்கு என்று பாடுபட்டுச் செய்யும் ஷாமிலா எப்படியோ அதை நேர்த்தியாகச் செய்து முடிப்பாள். கற்பித்தல் முறைகளில் புதிய ஒழுங்குகளைச் செருகிவிடுவதற்காக விடியவிடிய இருந்து மாணவர்களுக்காகக் கற்பித்தல் சாதனங்களை அர்ப்பணிப்போடு தயார் செய்யும் பல சந்தர்ப்பங்களை நான் அவதானித்து இருக்கின்றேன். அதற்காக அவள் தனது பொறுப்புக்களில் இருந்து விடுபட்டது கிடையாது. அப்படித்தான் இந்த நிகழ்வுக்கும் அவள் தயாராகி இருந்தாள். 

புறப்படுவதற்கு முன்னரே குட்டியன் மீதுள்ள பற்றினால் லுணுகலை சிறீ காலநிலை குறித்தும் எடுத்துவர வேண்டிய ஆடைகள் குறித்தும் அறிவித்து விட்டமையால் ஷாமிலா அதற்கான ஏற்பாடுகளைச் செவ்வனே செய்து முடித்திருந்தாள். சிறீ சொன்ன செய்தியோடு நான் ஆடிப்போனேன். மலையகம் என்றால் குளிருக்கும் அட்டைக்கும்தான் நான் அதிகம் பயப்படுவேன். என்னமோ தெரியாது பாம்புக்கே பயமில்லை ஆனால் ஒற்றை விரலால் நசுக்கிக் கொன்றுவிடக் கூடிய சின்னஞ்சிறு ஜந்துவான அட்டைக்கு மட்டும் அப்படியொரு பயமிருந்தது. அது போலத்தான் எவ்வளவு சூட்டையும் தாங்கிக் கொள்வேன் ஆனால் குளிர் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். 

கொட்டகல ரயில் நிலையத்தில் பெருமழையில் மிக இதமான குளிர் வருடிச் செல்ல மகன் எனது கரங்களில் சுருண்டு ஆழத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனது நித்திரை குழையாமலேயே எமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் சந்திரலேகா மற்றும் அவரது கணவர் கிங்ஸ்லி ஆகியோர் கொட்டும் மழையிலும் எமக்கான பகல் போசனத்தைக் கொண்டு வந்து தந்துவிட்டுப் போனார்கள். 

மாலையான போது ஒவ்வொரு அதிதிகளும் மெல்ல மெல்ல வந்து சேர்ந்தார்கள். சரோஜா சிவச் சந்திரன், அவரது மகன் பாரதி சுகன்யா, லாவன்யா இன்னும் அறிமுகமற்ற பலர். அவர்களில் பலரோடு முதல் சந்திப்பே அதுதான். சரோஜா சிவச் சந்திரனின் எளிமையும், தம்பி பாரதியின் அமைதியும் பற்றி நானும் ஷாமிலாவும் பேசிக் கொண்டோம். இயல்பான குணவியல்பு கொண்ட பலரையும் பற்றி ஷாமிலா என்னிடம் விதந்து கூறிக் கொண்டிருந்தார்.

டீ குடிக்காவிட்டால் ஷாமிலாவுக்கு இருப்பே கொள்ளாது. சூரியன் மறைந்து கொண்டிருக்கும் போது சந்திரலேகா தமது வீட்டுக்குச் சென்றுவர அழைத்த போது ஷாமிலா கேட்ட முதல் கேள்வி டீ கிடைக்குமா என்பதுதான். மழை பெய்து ஓய்ந்திரு;ககின்றது. அட்டைகள் எல்லாம் வெளியே வந்து யார் மீது தாவலாம் என்று காத்திருக்கும் போது இவள் என்னை இக்கட்டில் மாட்டி விடுவாளோ என்றுதான் அச்சமாக இருந்தது. புதிய சுவாத்திய நிலைக்கு பழக்கப்படாத குட்டியன் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை அலேக்காகத் தூக்கிச் சுமக்க என்னால்தான் முடியும் என்பதால் ஷாமிலா அவனைப் பற்றி யோசிக்காமல் அந்த டீ யைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஒரு மலைமேடு ஏறினால் சந்திரலேகாவின் வீடு ஆனாலும் அந்த அட்டைகள்...
தொடரும்...

Monday, May 18, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 01 ................ ஊடறு + மலையகப் பெண்கள்

அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்

-முஸ்டீன்-

பொதுவாக பெண்ணியம் பேசும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதையே நான் விரும்புவேன். காரணம் அங்கு நடக்கும் புளித்துப்போன அக்கப்போர்தான். ஒரே மாவை எத்தனை நாளைக்குத்தான் இடிப்பார்கள். எல்லா நாடுகளிலும் அதே மாவை இடித்து இடித்து உரலும் தேய்ந்து உலக்கையும் தேய்ந்துவிட்டது. ஆனால் பிரச்சினைக்குத் தீர்வுதான் கிட்டவில்லை. ஆணாதிக்கம் என்று இவர்கள் வரையறுக்கும் அனைத்துக்கும் அப்பால் பட்டவன் நான். அதற்குக் காரணம் நான் ஏற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாத்தின் அடிப்படைகளில் இருந்து என்னை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றமையினால் அப்படியொரு ஆதிக்கம் செலுத்தும் பிற்போக்குத்தனம் என்னிடமில்லை. அதனால் ஆணாதிக்கம் என்ற சொல்லைக் கேட்டாலே எனக்கு அலர்ஜியாகிவிட்டது. அதனால்தான் எனக்குப் பொருந்தாத அந்தச் சொல்லும் அந்தச் சொல் தாங்கி நிற்கும் அர்த்தமும் எனது வீட்டுச் சூழலில் செயலிழந்த மேட்டர்தான். அதற்கு நான் பதிலளிப்பதைவிட எனது மனைவி பதிலளிப்பதுதான் சரியானது. 

சிலபேருக்குப் பெண்ணியம் என்றால் என்னவென்றே தெரியாது. பலரின் புரிதல் பெண்ணியம் என்றால் ஆண்களை எதிர்த்துப் பேசுவது அல்லது ஆண்களுக்குத் திட்டுவது என்றுதான் நினைத்துக் கொண்டு எழுதுகின்றார்கள் செயற்படுகின்றார்கள். அவர்களுக்குப் பெண்ணியம் என்ற விடயத்தில் தெளிவை ஏற்படுத்த ஹைலெவல் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். பெண்ணியக் கவிஞர் என்று அறியப் பட்டு விருதுகள் பல பெற்ற ஒருத்தி தன் கணவனை வைத்து இன்னொரு எழுத்தாளரின் மனைவியை படக்கையறைக்கு அழைத்த வரலாறெல்லாம் இன்னும் பேசப்படாமல் ஈரம் காயமல் அப்படியே இருக்கின்றது. அந்தளவுதான் இதன் புரிதல். பெருமூச்செரியும் அளவில்தான் பலர் இருக்கின்றார்கள். சிலர் விதிவிலக்கு. அவர்களிடம் நல்ல தெளிவும் தேடலும் மேம்பட்ட சிந்தனையும் ஒழுக்கமும் அமைதியும் ஆளுமையும் அறிவுப்புலமும் இருக்கின்றது. அவர்களின் கோபத்தில் ஒரு நியாயமும் நேர்மையும் இருக்கும். அப்படிப்பட்டவர்களைப் பேச வைத்துக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ம்ஹ் அதெல்லாம் எப்பவாவது நடப்பவை. பூரண சூரிய கிரகணம் போல அல்லது எல்லாக் கோள்களும் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொள்வது போல.

ஊடறுவும் மலையகப் பெண்களும் இணைந்து ஒரு பெண்ணியச் சந்திப்பைச் செய்கின்றார்கள் அதில் என்னையும் கலந்து கொள்ளும்படி கேட்கின்றார்கள் என்று மனைவி என்னிடம் சொன்ன போது சிரித்துக் கொண்டேன். அவளின் ஆர்வத்திற்கும் விருப்பத்திற்கும் தடைபோடவோ அல்லது ஏதாவது ஒரு நொண்டிச் சாட்டைச் சொல்லிவிட்டு மெதுவாகக் கலன்று கொள்ளவோ நான் விரும்பவில்லை. போய் கொட்டகலயையும் பார்த்துவிட்டு வரலாம் என்றுதான் நினைத்தக் கொண்டேன். 

ஊடறு என்றால் றஞ்சி தான் எப்போதும் ஞாபகத்துக்கு வரும். றஞ்சி எப்படிப்பட்டவர் என்பதைத் தேட வைத்த பெருமை அனாரையே சாரும். தன்னுடைய கவிதையொன்றை யாரோ களவெடுத்து வேறுபெயரில் கொடுத்துவிட்டார்கள் அதை ரஞ்சி ஆய்வு செய்யாமல் அப்பெயரிலேயே நூலாக்கிவிட்டார் அது தகுமா முறையா என்று உலகில் உள்ள எல்லோரையும் அழைத்து றஞ்சிக்கு எதிராக நியாயம் கேட்டு நின்றபோதுதான். என்னடா நடக்கிறது இந்த உலகத்துல? என்று நானும் மெதுவாக மூக்கை நுளைத்துப் பார்த்தேன். ஒரு தவறு நடந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டாலும் அத்தவறுக்காக றஞ்சியையும் ஊடறுவையும் கெட்ட வார்த்தைகளால் திட்டுமளவுக்கு அனார் ஒன்றும் புனிதம் கிடையாது. திருடன்தான் ஒரு களவு குறித்து அதிகம் பதட்டப்படுவான். அந்தப் பதட்டம் அம்மனியிடம் பிரதிபலித்தது. அதனால் இந்த விடயத்தில் தமது விசுவாசத்தைக் காட்ட அனாருக்கு ஆதரவாக பலர் களத்தில் இறங்கினார்கள். அதில் ஒருவர் ஊடறு நாய்கள் என்று அதி உத்தமமாக வாழ்த்தி ஏசியிருந்தார். ஆயினும் இந்தச் சில்லறைப் பசங்களின் குதிப்பை ரஞ்சி கையாண்ட விதம் மிகப் புத்திசாதுர்யமிக்கது. தேர்ட் கிலாஸ் லெவலுக்கு அல்லது சேரிப்புர லெவலுக்கோ ரஞ்சி இறங்கிச் செல்லவில்லை. தன்பக்கத்தில் தவறு நிகழ்ந்திருக்கும் வாய்;ப்பை அழகாக வெளிப்படுத்தியிருந்தார். அந்த நேர்மை அவர்பால் மதிப்பை உண்டுபண்ணியதில் ஆச்சரியமில்லை.   றஞ்சியை என்றுமே நான் சந்தித்தது கிடையாது. ஆனால் துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபர் என்பதும் எதையும் எதிர்கொள்ளும் துணிவுள்ள ஆள் என்பதும் எழுத்துக்கள் ஊடாக நான் புரிந்து வைத்திருந்த பிம்பம்.

நிகழ்வு கொட்டகலயில் நடக்கின்றது என்று ஒரு மாதத்திற்கு முதலே ரயிலுக்கு டிக்கட் புக் பண்ணி நாலாந்தம் ஈமெய்ல் பார்த்து  பதிலளித்து கடைசியில் அழைப்பிதழின் மாதிரியைக் காட்டினாள் என் மனைவி. அதைப் படித்துப் பார்த்த பின்னர்தான் நிகழ்வில் பார்வையாளனாகக் கலந்துகொள்வதில் சந்தோசம் என்று தோன்றியது. அழைப்பிதழ் ஆண்களுக்கு எதிரானது இல்லை என்பதையும் பெண்கள் தரப்புப் பல்துறைசார் பங்களிப்புக்களையும் பதிவு செய்யக் கூடிய விதத்திலும் பெண்களை ஊக்குவிக்கும் விதத்திலும் அமைந்திருப்பதாகப் பட்டது. நிகழ்ச்சி நிரல் தரமாக அமைந்துவிட்டால் நிகழ்வு பாதிவெற்றியை உடனேயே பெற்றுவிடும். அப்படித்தான் இதுவும்.  நிறைய ஆளுமைகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. நல்ல தலைப்புக்கள். ஆற்றுநர்கள் தலைப்புக்களைத் தெரிவு செய்தார்களா அல்லது அவர்களுக்குத் தலைப்புக்கள் கொடுக்கப்பட்துவா என்பது தெரியாது. ஆயினும் பெறுமதி மிக்க பல தலைப்புக்களைப் பார்த்தபின்னர் ஏற்கனவே எனக்குள் நான் சிரித்துக்கொண்ட சிரிப்பு அர்த்தமிழந்து போனது. நல்லதொரு ஒழுங்குபடுத்தல் இருந்தது. 

நிகழ்ச்சி நிரலில் யாரையும் பாராட்டும் நிகழ்வு பற்றியோ அல்லது பொன்னடை அணிவித்தல், பெண்ணியச் சேவைக்காகக் கௌரவித்தல் என்றோ ஒரு மேட்டர் இல்லாததைப் பார்த்த போதுதான் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பெரும்பாலான நிகழ்வுகளில் ஆளையாள் மாறிமாறி முதுகு சொறிதல் நடக்கும் அல்லது வித்துவக் காய்ச்சலை நிரூபிப்பதற்காக உப்புச் சப்பில்லாத முகம் சுழிக்கச் செய்யும் கருத்துப் போர் என்ற தொனியில் மற்றவர்களை இழிவுபடுத்தல் நிகழும். அது குழாயடிச் சண்டை போல ச்சும்மா அப்பிடி இருக்கும். நல்லவேளை அப்படியொரு கன்றாவி நிகழ்ச்சி நிரலில் ஓரிடத்திலும் இருக்கவில்லை. 

உரைகளைத் தொடர்ந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கு வழிகோலும் விதத்தில் பதிவுகள் குறித்த விவாதமும் இணைக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நிகழ்வுக்காக ஷாமிலாவுடன் துணைக்குச் செல்வதில் எனக்கு பரிபூரண திருப்தியும் சம்மதமும் இருந்தது. அதற்காக அவள் ஒரு மாதத்திற்கு முன்னரே ரயில் டிக்கட் புக் பண்ணியிருந்தாள்... ஆயினும்
தொடரும்...

Sunday, May 17, 2015

சிவ பெருமானும் ஆதம் நபியும் ஒன்றே

சிவ பெருமானும் ஆதம் நபியும் ஒன்றே
கல்கி அவதாரமும் முஹம்மது நபியும் ஒன்றே

சிவன் - சக்தி, சிவனில்லாமல் சக்தி இல்லை, சிவனில் பாதி சக்தி, இவர்களில் இருந்தே முழு உலகின் மனிதர்களும் தோன்றினர். முழு மதற்கடவுள் சிவனே, மூலக்கடவுள் சிவனே. சைவ சமயத்தின் மூல கர்த்தாவும் சிவனே. சிவன்தான் அனைத்தினதும் தோற்றுவாய். இந்த விடயங்களை அறியாத சைவர்களே இருக்க மாட்டார்கள். 

ஆதம் - அவ்வா, ஆதமில்லாமல் அவ்வா இல்லை, ஆதமில் பாதி அவ்வா, இவர்களில் இருந்தே முழு உலகின் மனிதர்களும் தோன்றினார்கள். முதல் மனிதன் ஆதமே, மூல மனிதன் ஆதமே, முதல் நபியும் ஆதமே, இஸ்லாத்தின் மூல கர்த்தாவும் ஆதமே, ஆதம்தான் அனைவரினதும் தோற்றுவாய், இந்த விடயங்களை அறியாத முஸ்லிம்களே இருக்கமாட்டார்கள்.

ஆதாம் - ஏவாள், ஆதாமில்லாமல் ஏவாள் இல்லை, ஆதாமில் பாதி ஏவாள், இவர்களில் இருந்தே முழு உலகின் மனிதர்களும் தோன்றினார்கள். முதல் மனிதன் ஆதாமே, மூல மனிதன் ஆதாமே, முதல் வழிகாட்டியும் ஆதாமே, கிறித்தவத்தின் மூலவிதையும் ஆதாமே, ஆதாம்தான் அனைவரினதும் தோற்றுவாய், இந்த விடயங்களை அறியாத கிறிஸ்தவர்களே இருக்கமாட்டார்கள். 
(இயேசு நாதர் பிறந்தபின்னர்தான் கிறிஸ்தவம் ஆரம்பிக்கின்றது. கிறிஸ்தவத்திற்கு வயது வெறும் 2000தான் பைபில் என்ற வேதம் சொல்லும் சில அடிப்படைகள் நமது சிந்தனைக்கு உதவும் ஆயினும் பைபில் அதன் மூல வடிவத்தில் இப்போது இல்லை மாற்றியெழுதப்பட்டுவிட்டது)

எனவே கிறித்தவத்தையும் விட்டுவிடுவோம். பைபிலும் குர்ஆனும் ஒன்றுபட்ட பல கதைகளைச் சொல்லுகின்றன. இரு சமயங்களும் ஒத்த விடயங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதனால் அதையும் நாம் கடந்து போவோம். பௌத்தத்திற்கும் பிறகுதான் கிறித்தவம் தோன்றியது. ஆனால் உலகின் மூல மதமாக இஸ்லாம் அறியப்படுகின்றது. அது போல சைவமும் அறியப்படுகின்றது. (இயேசுவை ஒரு முஸ்லிம் கட்டாயம் ஏற்றுக்  கொள்ள வேண்டும். கடவுளாக அல்ல கடவுளின் தூதுவராக) 

இதிலிருந்தான் எனது சிந்தனை எதையோ தேடியது. என்னில் அதன் அடிப்படைகளைத் திறந்துவிட்டது பாவா ஆதமலை என்றும் சிவனொளிபாத மலை என்றும் அழைக்கப்படும் மலைதான். ஆதம்- சிவன் என்ற இரு பெயர்களும் எப்படி ஒரு மலைக்கு வந்திருக்க முடியும்? இரு நபர்களும் ஒரு நபராக இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆக சிவனும் ஆதமும் வேறு வேறல்ல. 
(ஸ்ரீபாத என்று பௌத்தர்கள் அம்மலையை அழைக்கின்றார்கள். கௌதம புத்தரும் பௌத்தமும் உலகில் தோன்றி 2600 வருடங்கள்தானாகின்றது. இங்கு நாம் அதற்கு முந்திய காலத்து விடயங்களை பேசுவாதால் அப்பெயரை இருப்புக்கான நிறுவுகை அரசியல் காரணியாகக் கருதி கடந்து சென்று விடுவோம்.) 

உலகின் ஆதி மொழி தமிழ்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆதம் என்ற சொல் அரபு மொழிச் சொல்லுமல்ல. (கல்கி என்றால் அர்த்தம் புகழுக்குரியவர், அது போல முஹம்மத் என்றால் அர்த்தம் புகுழுக்குரியவர்.) மேலே சொன்ன விடயங்களை
சிவம்- ஆதம் என்ற சொற்களைத் தேடும் போதும் ஆய்வு செய்யும் போதும் ஒரே பொருளைக் கொண்டனவாக இருக்கும். இந்த இரண்டு சொற்களும் தமிழில் உண்டு மங்கலம், களிப்பு, அன்பு, ஆதரவு என்று பொருள்பட மேலோட்ட அர்த்தம் உண்டு ஆயினும் ஆழமான ஆய்வுக்குட்படுத்தும் போது நிச்சயம் இரண்டு பெயர்களும் ஒரே அர்த்தமுடையவையாகவே இருக்கும். 

இருக்கு யசுர் சாமம் அதர்வனம் ஆகிய வேதங்கள் மிக முக்கியமானவை. அவற்றில் கடவுள் குறித்துத் தேடும் போது ஓரிறைக் கோட்பாடுதான் அடிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கும் போது குர்ஆனுக்கும் இவ்வேதங்களுக்கும் கருத்தொற்றுமை நிறையவே இருக்கின்றது. குறிப்பாக தெய்வக் கொள்கை. அப்படிப் பார்க்கும் போது ஒரே இறைவனால்தான் இருக்கு, யசுர், சாமம், அதர்வனம், தொராத், பைபில், குர்ஆன் உட்பட வேதக்கட்டளைகள் ஆகமங்கள் அனைத்தும் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக காலத்துக்குக் காலம் பல்வேறு மனித கோத்திரங்களுக்கு வௌ;வேறு மொழிகள் பேசிய மக்களை அடிப்படையாகக் கொண்டு அருளப் பட்டிருக்க வேண்டும் என்பதை மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. 

இஸ்லாத்தின் கருத்துக்கள் படி ஆதம் என்ற முதல் மனிதரை இறைத்தூதரை பிற்காலத்தில் மக்கள் கடவுளாக வணங்கத் தொடங்கிவிட்டார்கள் அவர்களை மீண்டும் நேர்வழிப்படுத்த பெரும் போராட்டமும் பிரயத்தனமும் மேற்கொள்ளப்பட்டதாகவும் இருக்கின்றது. வைனவத்தை இந்த இடத்தில்தான் பொறுத்திப் பார்க்கவேண்டும். வைனவத்தின் போராட்டம் சிவ வழிபாட்டைத் தகர்ப்பதையே குறியாகக் கொண்டிருந்தது. 

இந்த விடயங்களையெல்லாம் வெறுமையான மனத்தோடு தெளிவா ஆராயும போது ஒன்று தோன்றும்.  சிவபெருமான் கடவுள் இல்லை அவர் மனிதர் ஆதி மனிதர். சிவனும் சக்தியும் இணைந்ததால்தான் இப்போதிருக்கும் நாமும் பிறந்திருக்கின்றோம்.  அத்தோடு சுவனத்திலிருந்து ஆதம் வெளியேற்றப்பட்டபின்னர் ஆதம் ஒற்றைக் காலில் நின்றுதான் பல்லாண்டுகள் இறைவனைப் பிராத்தித்தாராம். சிவனைச் சித்தரிக்கும் போது பெரும்பாலும் அவரை ஒற்றைக் காலிலேயே நிறுத்திவிடுவர். இந்த ஒற்றுமையும் கூட முக்கியமானது.  

இந்தச் சிந்தனை பிறந்த பின்னர் பல கட்டுரைகளைத் தேடிப் படித்தேன் சிலவற்றை நீங்களும் படித்துப் பாருங்கள்.

கட்டுரை - 01

இதில் பக்தி தளம் கூட இன்று பார்ப்பது போல் ஒற்றைபடையாக இருக்கவில்லை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பல் வேறு வழிபாட்டு முறைகள் இருந்திருக்கிறது. சைவம், வைனவம் என்பது இன்றும் கூட பெரும்பாலோருக்கு தெரிந்ததே. சைவம் சிவனை பிரதான தெய்வமாக கொண்ட வழிபாட்டு முறை. வைனவத்துக்கு விஷ்னுவே பிரதான தெய்வம். இந்த இரு தளங்களை கூட இன்று அவ்வளவு கட்டுபாட்டுடன் கடைபிடிக்கும் மக்கள் இல்லை. ஒரு காலத்தில் சைவ மரபை சேர்ந்தவர்கள் சைவ தெய்வங்களை தவிர வேறு தெய்வங்களை வணங்க மாட்டார்கள். அப்படியே வைனவத்திலும். நான் சொல்லும் காலம் அப்பரும், ஞான சபமந்தரும், ஆள்வார்களும் வாழ்ந்த காலம். கால போக்கில் இது கரைந்து மக்களிடையே எல்லா தெய்வங்களும் கலந்து போனது. 

இந்த சைவம் வைனவம் மரபுகள் தவிர வேறு மரபுகளும் இருந்தன. சாக்தம்இசக்தியே இதன் பிரதான தெய்வம், பெண் தெய்வங்களாளான மரபு. கௌமாரம், முருகனை பிரதான தெய்வமாக கொன்ட மரபு.காணபத்யம்இ கணபதியை பிரதானமாக கொன்ட மரபு. சூரியனை பிரதான தெய்வமாக கொன்ட மரபு சௌரம். இது போக தாந்திரிகம் என்ற வழிபாட்டு முறை உண்டு, குறியிட்டு வழிபாட்டு முறை. இது சாக்த்தத்தில் பெரும்பங்கு ஆற்றியது. 

பல்வேறு பகுதிகளில் இருந்த பழங்குடி வழிபாட்டு முறையிலிருந்து படி படியாக வளர்க்கப்பட்டது. இந்து மதம் தவிர இன்ன பிற மதங்களான சமனம், பெளத்தம் ஆகியவையுடனும் உரையாடி வளர்ந்தது. 

இப்படி எல்லா ஊருக்கும் பல நாட்டார் தெய்வங்கள் உள்ளன. சுடலை மாடன், பன்றி மாடன், கழு மாடன், இசக்கி, நீலி, சொறி முத்து, பாண்டி, அய்யனார், முனிஸ்வரன் என்று பல.

'நான் யார்?' 'உலகம் எப்படி உருவாகியது?' போன்ற அடிப்படையான ஆழமான கேள்விகளுக்கு பதில் தருவது அல்லது அது சார்ந்து சிந்திக்க செய்வது. அந்த தத்துவ தளத்தில் பல வகை உண்டு. வேதாந்தம், பூர்வ மிமாம்சம், சாங்கியம்இ, யோகம், வைசேஷிகம், நியாயம். வேதாந்தமும், பூர்வ மிமாம்சமும் வைதிக மரபுகள். பிற நான்கும் அவைதிக மரபில் அடங்கும். சார்வாகம் என்னும் கடவுளை மறுக்கும் நாத்திக மரபும் இந்து மதத்தில் அடக்கம்.

கட்டுரை - 02 

"இந்துமதம் என்ற இக்காலத்தில் வழங்கும் பெயர் பலசமயங்களுக்கும் பொதுவானது. அப்படி ஒரு தனிச் சமயம் இல்லை. ஆனாலும் சைவம் வைணவம் முதலிய சமயங்கள் பலவற்றிற்குப் பொதுவாக அந்தப் பெயர் அயல் நாட்டவரால் வழங்கப் பெற்று நாளடைவில் நாமும் வழங்கும்படியாயிற்று"

2. காங்கிரஸ் 15-7-1956 (ஜுன் வெளிவந்த பிலிம் இண்டியாத் தமிழாக்கம்) "ஆங்கிலச் சரித்திரப் பேராசிரியர்கள் தான் முகலாயர்கள் இந்தியருக்கு கொடுத்து வந்த 'இந்து' என்ற பெயரை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் அழுத்தமாக வற்புறுத்தி ........ பிரிவினையை ஏற்படுத்துவதற்குக் காரண கர்த்தர்க்களாக இருந்தார்கள். முகலாயர்கள் இந்தியாவைப் படையெடுப்பதற்கு முன்பு ஹிந்துக்கள் என்ற பெயரே கிடையாது"

3. பிரம வித்தியா பத்திரிகை (புத்தகம் 4, இலக்கம் 14, பக்கம் 201, 202.) பக்கம் -201 "ஹிந்து என்னுஞ் சொல் புதியதே. இதைச் சிலபாஷாகவிகள் உபயோகிக்கின்றனர். சில நவீனர் இது மகமதியரிட்ட பெயரென்றும் மற்றவர் யவணர் ஸிந்து நதிக்கரையில் வசிப்பவராதலின் ஹிந்துக்களெனப் பெயரிட்டா ரென்றும் வேறு சார்பினர் ·தறிஞர் பெயரென்றும் பிறர் ஓர்வகைச் சித்தாந்திகள் பெயரென்றும் மற்றவர் ஒதுக்கப் பட்டவர் பெயரென்றும் சிலர் பிரஷ்டர் பெயரென்றும் பலவழி சொல்லுகிறார்கள்." "இச் சொல் மகமதியர் விசேஷமாய் நெடுங்காலமாய் வியவகரிப்பதாய் ஆரட்ட பாஷை (அதாவது அரபிபாஷை). அதில் ஹிந்து என்று (அஞ்ஞானி என்னும் பொருளில்) இருக்கின்றது. அவர்கள் இந்த இந்தியா தேசத்தின் ஆக்ஷ¢யைக் கைக்கொண்ட பொழுது நம்மவர் ஞானிகளாகவும் மற்றவர் அஞ்ஞானிகளாகவும் எண்ணி இப்பெயரை இட்டார் என்பது."

4. தினமணி 10-3-1958 "ஹிந்தி என்ற வார்த்தையே இந்தியச் சொல் அல்ல என்று ராஜாஜி இங்கு தமிழர் அளித்த வரவேற்பில் பேசுகையில் கூறினார். பூர்வீக பாரசீகர் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவின் பூர்வீக குடிகள் பேசிய

மொழிக்கு ஹிந்தி என்று பெயரிட்டனர் என்று அவர் விளக்கினார்"

5. R.K.முகர்ஜி என்பவர் சென்னைக் கோகலே ஹாலில் 27.09.1941ல் நடந்த கூட்டமொன்றில் பிரசங்கித்தது. "India and Hinduism are Organically related like body and soul. The name HINDUISM was given to them by Persians"

6. படுக்கை யறையில் பாசாங்கு செய்த பங்கஜவல்லியின் கதை "கிறிஸ்து பிறந்த 1191 வது வருஷத்திலே சகாபுடீன் கோரி என்னப்பட்ட மகமதிய அரசன் டில்லி இராஜ்யத்தை ஜயித்து மகமதிய அரசை நிலைபெறச் செய்த போது இந்நாட்டவர்களாகிய ஆரியரை இந்துக்களென்று அழைக்கத் தொடங்கினர்.......இதனை இத்தேச புராதன சரித்திரமாகிய 'பாரத் பாகி' என்னப்பட்ட நூலிற் காணலாம்."

இந்தியாவில் பௌத்தம், சைவம், வைனவம், ஜைனம் என பல பிரிவுகளைக் கொண்ட மதங்கள் தனித்தனியாகத்தான் இயங்கிக் கொண்டு வந்தது. 1911இல் பிரிட்டிஷ் கணக்கெடுப்பிற்கு பின்தான் யார் இந்து என்ற கேள்விக்கு? யாரெல்லாம் இசுலாமியர்கள், கிறித்துவர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று வரையரை செய்துவிட்டனர்

கட்டுரை - 03 உலக மதங்களின் வேர்

சிவா,  சைவாசவாஷன் வாங்சைந்த் போன்ற போன்ற பெயர்கள் உலகெங்கும்  பயன்பட்டு வருகின்றன இந்த அத்தனை பெயருக்கும் ஒரே பொருள்Empty other wise God/Shiva/Allah   வணங்குபவர்கள்,
In India Shiva means Energy Holding god சக்தியை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு கடவுள்

சவா (shava) திபத்தியர்கள் என்றால் தன்னை மறந்த நிலைஇயற்கையோடு வாழும் நிலை,அனைத்திற்கு அப்பாற்பட்டு நிற்பதுஅனைத்தையும் தன்னுள் அடக்குவது,

Middle East     ஷான் வாங் தூய்மையான போதகர் (முற்றிலும் துறந்த துறவிஅடையாளம் இல்லாதவர் (இவரை மாதிரி என்று சொல்ல முடியாதவர்-உருவமில்லாதவர்) கவலையில்லாதவர் (அதாவது தான் படைத்தது ஆடுகிறது ஆடட்டும் இறுதியில் என்னிடம் தான் வரும்) (கூத்தும் இசையும் கூத்தின் முறையும் காட்டுபவர்)

Saint சைந்த் -இது ஆங்கிலத்திலும் சரி லத்தினிலும் சரி கீரிஸிலும் சரி மொத்தம் 1000மேற்பட்ட விளக்கங்கள் இருக்கிறன. அனைத்தும் சூரியன்மையமான ஒரு பொருள்அடக்கி ஆள்பவன் சூய்மையானவன்

 Asia Minor/ Eurasia     ஹிப்ருவில் சைன் என்றால் சூரியன் என்று பொருள் அதாவது சன் என்று சூரியனை குறிக்கும் சொல் கூட சைந்த என்பதன் கால மாற்ற சொல்,

திங்களை சூடியவன் என்று நாம் பொதுவாக சொல்கிறோம்திங்கள் எதற்குள் அடக்கம்ஞாயிறு இல்லை என்றால் திங்கள் உண்டா, இந்த வார்த்தைபடி பார்த்தால் திங்களை அடக்குவது ஞாயிறு துவக்கம் எங்கேபால் வழி மண்டலத்தின் ஒரு ஓரத்தில்பால்வெளி மண்டலம் பேரண்டம்பேரண்டம் பிரபஞ்சம்பிரபஞ்சம்சிவன்சிவன். சிவன் இருந்தும் இல்லாதவன்இதைத்தான்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகிஉண்மையுமாய் இம்மையுமாய்
கோனாகி யான் என (கோ-King)

 என்று குறிப்பிடுகிறார் வள்ளார் 

உலகில் இறைவனை குறிக்கும் அத்தனை சொற்களும் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து இருக்கிறன. அதாவது ஒன்றுமில்லாததுஆனால் அதில் அனைத்தும் அடங்குவது. எளிமையாக சொல்லப்போனால் தீபத்தை பாருங்கள் மஞ்சள் ஒளிஅதன் கீழே இளம் சிவப்பு அதன் மெல்லிய மஞ்சள் அதன் பிறகு கரிய நிற திரிஇந்த திரி இல்லை என்றால் எண்ணை/நெய் இருந்து என்ன பயன்.

தற்கால அறிவியல் என்ன சொல்கிறது block hole  தத்துவம் சொல்கிறது. பிரபஞ்சம் முழுவதும் 90% கருமை வெறும் 10% மட்டும் தான் ஒளி என்கிறது. அதாவது நமது விளக்கு தத்துவம்.

ஹராப்பா காலமானாலும் சரிமாயா யுகமானாலும் சரிஎகிப்திய நாகரீகமானாலும்சரி அல்லது கிரேக்கர்களின் இரும்பு ஆட்சி ஆனாலும் சரி இந்த அத்தனை நாகரீக யுகத்திலும் ஒன்று மையமாக இருந்தது அதை அவர்கள் பின் பற்றி வந்தார்கள் (கும்பிட்டு வந்தார்கள்) ஹரப்பாவில் தோன்றிய சூரிய வழிபாடு இன்று பொங்கலாக மாறி இருக்கிறது. எகிப்தின் பிரபல சூரிய கோவில் தான் முதல் முதலில் கட்டிய கோவில்ஸிபிங்ஸ் அனைத்தின் முகங்களும் சூரியனை நோக்கித்தான் இருக்கிறன. மாயா நாகரீகத்தில் சூரிய கோவில் தான் பிரதானம் இறந்தவர்களை கூட கிழக்கு நோக்கித்தான் புதைத்தனர். கிரேக்கர்களின் சன் கடவுள் தான் இன்று சன்டேவாக மாறி இருக்கிறது.
இந்துக்களின் கொள்கையின் படி
உலகமே சிவமயம் சிவமே உலக மயன் என்றால் சிவன் உருவமில்லாதவரா என்றால் இல்லைசிவன் என்பது இல்லாதது மாற்றமில்லாது         (true-eternal/everlasting/never changing)             சும்மா ஒன்றுமில்லாத பொருளுக்கு மதிப்பு உண்டா என்றால் இல்லை,அப்படி என்றால் அந்த ஒன்றுமில்லாத பொருளில் என்ன இருக்கிறது சக்தி .

சூரியனை எடுத்து கொண்டால் நெருப்பு வட்டம் நமது கண்ணுக்கு தெரிகிறது. அதனுள் ஹைட்ரஜன் அணுக்கள் பிரளயம் ஹீலியம் பிறகு ஹைட்ரஜன் என சுழற்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சுழற்ச்சி தான் சக்தி (எனர்ஜி) இந்த சக்தி எனர்ஜி இல்லாமல் சூரியன் ஒரு காற்று போன பலூனாக போய்விடும். ஆனால் சூரியனின் இந்த சுழற்சி ஒரு நாள் முடிவடையும் அப்போது என்ன நிகழும் நாம் பார்க்கிறோமே கிழக்கு பகுதியில் வியற்காலையில் சிவப்பான அழகான ஒளிவட்டம் அது பல்லாயிரம் மடங்கு பெரிய உருவமான மாறிவிடும் (Dead star) அதை பார்க்க நாமெல்லாம் இருக்கமாட்டோம் ஏன் என்றால்  பூமியே இருக்காது .

சூரியன் தனது குடும்ப உறுப்பினர் அனைவரையும் தன்னுள் இழுத்துவிடுவான்.  பிறகு பெரிய வெடிப்பு ஒன்று நிகழும் தன்னுள் இழுத்த அனைத்து பொருட்களும் (Energy/Mass)அண்டவெளியில் வீசி எரியப்படும். இது வந்து ஒரு உதாரனம் தான் சூரியன் பிரபஞ்சம் என்று இந்த இடத்தில் வைத்து கொண்டால் இது தான் பெருவெடிப்பு கொள்கை (big bong theoryஎரிய பட்ட பொருட்கள் அனைத்தும் மீண்டும் ஒன்று சேரும்பிறகு கேலக்ஸிஅதன் தூசுகள்தூசுகள் இணைந்து அழுத்ததில் வெப்பமடைந்து உருவாவது நட்சத்திரம்பிறகு மீண்டும் ஒரு உலகம்.

சிவம் பிரபஞ்சம் சக்தி அதன் துகள்கள்இதைதான் நாம் சக்தியில்லையேல் சிவமில்லை சிவமில்லையேல் சக்தியில்லை என்கிறோம். அப்படி என்றால் சிவன் இமயமலைக்கு ஏன் வந்தார். இந்தியாவில் மட்டும் ஏன் கும்பிட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் முதலில் கெடுத்து இருக்கும் பல மொழி விளக்கம். வார்த்தை வேறு வேறு ஆனால் அதன் பொருள் ஒன்றுதான்.

பிறகு ஏன் சுடுகாட்டு சாமியார் என்கிறார்கள். பேய்களுடன் உலவுகிறவன் என்கிறார்கள் என்ற கேள்விக்கு எளிய பதில் சுடு+காடு= சுடுகாடுபிணங்களை சுடும் காடு என்று இதன் பொருள் என சின்ன குழந்தை கூட சொல்லிவிடும் ஆனால் உண்மை அதுவல்ல சூடான இடம் என்று உண்மை பொருள். பசி துகள்கள் சூடான பிறகுதானே நட்சத்திரம் உருவாகிறது. தாயின் கற்பம் என்ன -டிகிரி செல்சியஸிலா இருக்கிறது. தாயின் கற்பத்தில் 9மாதம் இருந்த நாம் அதே அளவு சூடுடைய ஒரு அறையில் ஒரு மணிநேரம் இருந்து பாருங்கள். ஆரம்ப இடமும் சுட்டான காடுதான் (கர்ப்பபை) இறுதியில் சேரும் இடமும் சுடுகாடுதான்.

இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வாழ்க்கை அதில் ஆட்ட ஓட்ட சிரிப்பு அழுகை கூப்பாடு கொண்டாட்டம்எல்லாம் யாருக்கு உட்பட்டது.

சிவன் எப்பயுமே கஞ்சா அடிக்கும் சாமி ஆமா கஞ்சா என்பது ஒரு போதைப்போருள் அதை இந்தியாவில் உள்ள (சோம்பேரிகள் உழைக்க பயந்து பிச்சை எடுப்பவர்கள்) சாமியார்கள் வெறுமனே இருந்தா போரடிக்கும் சாமி பேரசொல்லி கஞ்சாவாவது அடிக்கலாமே என்று இவர்களாகவே கஞ்சாவை தேர்தெடுத்தார்கள். எங்க ஊர் உய்க்காட்டன் சாமிமாடன்,சுடலை  எல்லாம் பட்டை சாராயம் அடிக்கும் (இப்ப டாஸ் மாக்).

நரம்புகளை மழுங்க அடிக்கும் வேதி குணங்கள் கலந்த திரவம்மற்றும் இயற்கையிலேயே சில இலைகளின் வேதியல் குணங்கள் அந்த இலைகளை உண்பதை விட அந்த இலைகளை எரித்து அதன் புகையை சுவாசித்தால் நரம்புகள் தங்களின் இறுக்கத்தை தளர்த்தி உடலுக்கு ஒரு வித உற்சாகமான நிலையை தரும். (போதை) இதைத்தான் திபெத்தியர்கள் சவா நிலை என்பார்கள்.

நம்ம ஊர்களிலும் சொல்வார்கள் குடிச்சு புட்டு சவம் மாதிரி கிடக்கிறான் என்று. சவா நிலையில் இருந்தாலும் உள்ளுள்ள பொருட்கள் எல்லாம் அது அதன் பணியை செய்து கொண்டு இருக்கும் சிந்தனையை தவிர சிவன் சிந்திக்க மாட்டான்.

சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது அதுதான் சக்தி செய்து கொண்டு இருக்கிறதேஅதாவது நம்முள் சிந்தனையாக இருப்பதுதான் சிவன் மற்றதெல்லாம் சக்தி. சிந்தனை என்பது மனது மனதில் இருக்கும் மனசாட்சி இதை சிலர் ஆண்மா என்றும் கூறுவார். பிரம்ம சக்தி என்ன சொல்கிறது நமது நெற்றியின் மத்தியில் எல்லாம் அடக்கம் என்கிறார்கள். நாம் அங்கே தானே பொட்டு வைக்கிறோம்நமது சிந்தைனையில் இறைவன் இருக்கிறார். உடலின் எந்த பகுதியில் சிந்தனை இருக்கிறதென்று தெரியாத காலம் அதனால் பொதுவாக நெற்றியை தேர்ந்தெடுத்தார்கள். ஏன் என்றால் தூங்கும் போதும் இதயம் இயங்குகிறது இயங்கும் பொருளில் சக்தி இருக்கும்(energy) 

ஆனால் ஆண்மா அமைதியாகி விடுகிறது. அதனால் அவர்கள் நெற்றியை தேர்ந்தெடுத்தார்கள். சமீப ஆய்வுகளின் படி சிந்தனையை தூண்டும் நரம்பு முடிச்சுகள்,வலப்புற மூளை நீள்வேட்டு பாகத்தின் முன்னால் உள்ள கொழுப்பு படிவங்களில் இருந்து துவங்குகிறது என்று கண்டறிந்து விட்டனர். அதாவது நமது நெற்றியின் நேர் கோட்டு பகுதியின் பின்புறம்.

இதைத்தானெ ஔவை பாட்டி சிவன் தொண்டர் உள்ளங்களில் அடங்குவர் என்று சொல்லி இருக்கிறார்.

சிவனின் ஆரம்ப உருவம் லிங்கம்சிவனுக்கு உருவம் கொடுக்க முடியாது.  லிங்க உருவம் ஏன் தந்தார்கள். சிலர் மட்டமான உவமை சொல்வார்கள். ஆனல் உண்மை ~ஒரு நுலை எடுத்து கொள்ளுங்கள் சிவலிங்கத்தின் ஆரம்பம் என்பது லிங்கம் தாங்கும் வளையத்தின் உள்ளே இருக்கிறது. அதாவது அதன் அடி தெரியாது அதனால் லிங்கம் வெளியில் தெரியும் பகுதியில் இருந்து நூலை இணைத்து அதனை லிங்கத்தின் மீது கொண்டு வாருங்கள் முடிவு எங்கே நூல் நேராக மறுமுனைக்கு லிங்கம் தாங்கும் பகுதியில் முடிகிறது. அதாவது அதன் அடியையும் நம்மால் காணமுடியவில்லை முடியின் எல்லையையும் நாம் காணமுடியவில்லை.

இதைதான் அடி முடிகான அந்தகாரா (நர்மதா நதி தோன்றும்) இடத்தில் உள்ள சிவலிக்கத்தின் பெயர் அந்தகாரேஸ்வர். இந்த அந்தாகாரேஸ்வர் சன்னதியில் தான் தாழம்பு அண்ணவடிவில் முடியை காண சென்ற பிரம்மனை சந்தித்தாக சொல்கிறார்கள்.

உலகம் எங்கும் நாகரீகம் தோன்றிய உடன் பிரபஞ்சத்தின் சக்தியை மக்கள் உணர்ந்து கொண்டனர்.  இதனால் தான் உலகம் எங்கும் இறைவனுக்கு உருவம் தராமல் உருவமற்ற வழிபாடு தோன்றியது தோன்றியது.

இந்த நிலையில் தான் இந்தியாவில் (உருவமற்ற வழிபாடு) சிவகோட்பாட்டிற்கு எதிரான புதிய கோட்பாடு உறுவானது. இந்த கோடுபாடு ஏன் உறுவானது என்பதற்கு சரியான விடை கிடைக்கவில்லை. ஆனால் எளிதான ஒரு உதாரணம் என்ன வென்றால் ஒரு பிரபல கட்சி இருக்கிறதுஅதில் சில பொறுப்புகளை முக்கிமானவர்கள் எதிர்பார்க்கின்றனர்அது கிடைக்காமல் போகவே தனியாக பிய்த்துகொண்டு அந்த கட்சியின் கொள்கைகளை தங்களது கொள்கைகளாக மாற்றி அதில் சில மசாலாக்களை சேர்த்து நாங்கள் தான் உண்மையான அந்த கட்சி என்கிறார்கள். பிறகு தாங்களுக்குள்ளே அடித்து கொள்கின்றனர்,(Encyclopedia of ethics and world  religion: Volume 12 (Se – Vn)) வைனவம் இப்படி தோன்றியதாகத்தான் இருக்கும் என்று இந்த புத்தகம் சொல்கிறது.. 

இதை நிறுபிக்கும் விதமாக வைணவம் தழைத்தபிறகு சிவ கோட்ப்பாடுகளை உடைக்கும் பணி கடுமையாக நடந்து கொண்டு இருந்தன. ஆனால் இல்லாத ஒன்றை எப்படி உடைக்க முடியும் அதனால் அதை பின்பற்றும் மக்களை குழப்பும் வேலை ஜரூராக நடந்து வந்தது. சுமார் கி.மு 1200-இருந்து 900 வரைக்குள் வைணவ கோட்பாடுகள் இயற்றபட்டன. சிவ கோட்பாட்டை அறியமுடியாமல் அந்த கோட்பாட்டை தனதாக்கிகொள்ள முற்பட்டனர் ஆனால் அது இன்றுவரை முடியவில்லை.

கீதையில் கூட நானே அனைத்திலும் உடையவன் என்றார் கிருஸ்னர் ஆனால் அவர் எதில் என்று கூறவில்லை அதாவது பிரம்மனை படைத்ததும் நானே என்று சொன்னவர் அந்தபடைக்கும் திறன் எனக்குள் எங்கிருந்து வந்தது என்று குறிப்பிடவில்லை. காரணம் எழுதியவருக்கு அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. பழைய ஏற்பாடு போலவே

ஆதியில் எங்கும் இருளாக இருந்தது இறைவன் வெளிச்சம் வரக்கடவது என்றார் ( ஜான் 1:1~9) என்று வருமேஅந்த இடத்தில் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் இல்லை அதாவது அந்த இறைவன் எங்கிருந்து வந்தார்.

இதைபோல் தான் கீதையும் நானே அனைத்தையும் படைத்தேன் நானே அனைத்திலும் உள்ளேன் உன்னை யார் படைத்தது என்ற கேள்விக்கு அங்கு பதில் இல்லை.

அனைத்தும் என்னுள் இருந்து வந்தது நான் யார் என்று கண்ணனால் சொல்ல முடியவில்லை அப்படி சொன்னால் அது சிவ கோட்பாடு,

அதை விட்டு வேறு ஒன்று புதுமையாக எழுத முயன்றார்கள் இதனால் தான் 9அவதாரங்களை எழுதி பார்த்தார்கள் ஆனால் இறுதிவரை முடியவில்லை.

வைணவ கோட்பாடு உண்மைக்கும் பொய்மைக்கும் (தர்மம்-அதர்மம்) உள்ள வேறுபாடுகளை விளக்கவந்தது. ஆனால் அதை பிறகு சிவ கோட்பாட்டிற்கு எதிராக திருப்பிவிட்டார்கள் என்றும் சொல்பவருண்டு.

உலகின் மற்ற நாடுகளில் இந்த (சி வாசை வாச வாஷன் வாங்சைந்த்) கோட்பாடுகளை மாற்ற விரும்பவில்லை. ஆனால் அந்த கோட்ப்பாட்டின் கிளைகளை உருவாக்கினார்கள். இதுதான் கிருஸ்தவம்யூதம்இஸ்லாம்,கான்பூஸியஸ்,ஹிண்டோயிசம்சு பியிஸம்,அதனால் தான் அந்த இவை இயற்கையின் கோட்பாட்டை விட்டு வெளியே சென்ற மக்களை குழப்பவில்லை,

திருமறையில் ஒரு வாக்கியம் வரும்

நீங்கள் அறிந்து கொண்ட உண்மையில் பொய்யை கலக்காதீர்கள்உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் (அல்பகரா பகுதி 1 அத்தியாயம் 2:42)

திருக்குரானின் இந்த ஒரு அத்தியாயமே போதும் அதாவது உண்மை நமக்கு தெரியும்,நம்மால் அறிய முடியாது. நாம் இருக்கும்

ஜனனத்தில் இருந்து மரணம் வரை இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் நடக்கும் நன்மை தீமைகளை விளக்குவதற்காக தோன்றிய வைணவ பிற்காலத்தில் சிவ கோட்பாட்டை உடைக்க முயல இன்று இந்திய துணைகண்டம் முழுவதும் மத ஸ்தரமின்மை இன்றும் நடந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் சைவ வைணவர்கள் அடித்து கொண்டார்கள். அதன் பிறகு சமனர்களுடன் அடித்து கொண்டார்கள். அதன் பிறகு கி.பி க்குபிறகு வந்த மதங்களுடன் அடித்து கொள்கின்றனர்.