Thursday, December 24, 2015

உமா வரதராஜனுடன்

 தமிழ் மிரர் இலக்கியப் பக்கத்தின் நேர் மறை 15 கேள்விகளுக்கான பதில்கள்
------------------------------

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
  நிரந்தரமற்றது .நேற்றிருந்த  நான்  இன்றில்லை .இன்றைய    நான்  நாளை  இதே  போல்  இரேன் .

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
        முரண்பாடுகளற்ற  வாழ்க்கை என்பது  சலனமற்ற  கடல் . எவருடனும் ,எவற்றுடனும்  ஒருவனுக்கு  கேள்விகள் ,விமர்சனங்கள் ,விசாரணைகள்  முரண்பாடுகள்  இல்லையென்றால்  அவன்  இந்த  உலகத்தின்  மகா  நடிகன் என்று  அர்த்தம் .ஓர்  ஒத்தோடியாக  இல்லாமல் அனைவருடனும்  முரண் படவே  விரும்புகிறேன் .

03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
ஜால்ராக்களுக்கும்  கூஜாக்களுக்கும்  நிகழும் அட்டைக்கத்திச்  சண்டை  போன்ற   முரண்பாடுகளை எல்லாம்  நான்  கணக்கிலெடுப்பதில்லை . ஒரு  வெங்கட்சாமிநாதனுக்கும்  ஒரு  நுஹ்மானுக்கும்  ஏற்பட்ட  இலக்கிய கருத்து  முரண்பாட்டில்  ஆழம்  இருந்தது ;அர்த்தம்  இருந்தது .

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நிறையப்  பேர்கள்  எழுதியிருக்கின்றனர் . அப்போது  படித்து  அப்போதே நன்றி  சொல்லி  அடுத்த  கணமே மறந்து  விடுவேன் .

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
நான் இந்த எழுத்துலகுக்கு வந்து  சுமார் 42 ஆண்டுகள்  ஆகின்றன .நீலாவணன்  அவர்களின்  'வழி ' கவிதைத்  தொகுதி  வெளியீட்டில்  'மேளத்தை'க்  கையிலெடுத்தவன் .அதன்  பிறகு வருஷத்துக்கு  சராசரி   நூல்  விமர்சனக்  கூட்டங்கள்  நான்கிலாவது   கட்டுரைகள் படித்திருப்பேன் .சிலரைப்  பற்றி அச்சு  ஊடகங்களில் கட்டுரைகள்  கூட  எழுதியிருக்கிறேன் . குத்து  மதிப்பாக 175 பேர்களைப்  பற்றி எழுதியிருக்கிறேன்  என்று  சொல்லலாம் .

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
        என்  தாயை .

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
        அகராதியை .....
 தூக்கி  வைத்துப்  படிக்கும்  போது  கைகள்  வலிப்பதால்  .

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
ஆஷாடபூதித்  தனங்களை  அறவே  ஒதுக்கித்  தள்ளிய கிறுக்குத்தனம்  கொண்ட  இலக்கியவாதிகளையும்  கலைஞர்களையுமே  எனக்கு  மிகவும்  பிடிக்கும் .அந்த  வகையில்  என்னை  மிகவும்  கவர்ந்தவை 'சாதத்  ஹசன்  மண்ட்டோ ஜளுயயனயவ ர்யளயn ஆயவெழஸ படைப்புகள்' .

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
சுபமங்களா . அதன்  ஆசிரியர் கோமல்  ஸ்வாமிநாதனின் மறைவுடன்  அந்த  சஞ்சிகையும்  மரித்து  விட்டது .

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
மன உந்துதல்  இருந்தாலொழிய  நான்  எழுதுவதில்லை . எனக்குப்  பிடித்தவர்கள்  கேட்டுக்  கொண்டால்  மாத்திரமே  பிரசுரத்துக்கு  அனுப்புவேன் . இலங்கையில்  ஓர்  எழுத்தாளன்  தன்  படைப்புகளுக்கு  விலை  நிர்ணயிப்பது  என்பது  சுவாரஸ்யமான,ஈஸ்ட்மன்  கலர்க்  கனவு .
 
11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
கவிஞர்  வைரமுத்து  அதனைப்  பெற்றுத்  தருவதாக  சூளுரைத்துள்ளார் . அந்த  நன்னாளில்  பட்டாடை  உடுத்தி ,பாற்சோறு  உண்டு அது  பற்றிப்  பேசலாம்  .

12. உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழ்  என்னைத்  திணற  வைத்துக்  கொண்டிருக்கிறது . நான்  பயன்  படுத்தும்  ஆங்கிலம் ,சிங்களம் ,மலையாளம்  மற்றவர்களைத்  திணற  வைத்துக்  கொண்டிருக்கிறது .

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
அங்கேயுள்ள  சுயமோகிகளையும் ,மனநோயாளிகளையும் ,போட்டோ கிராபர்களாகி  விட்ட  முன்னாள்  எழுத்தாளர்களையும் ஒதுக்கி விட்டுக்  கடந்து  செல்ல நாம்  முதலில்  கற்றுக்  கொள்ள  வேண்டும் . அது  சாத்தியமானால் பரவலாகப்  பேர், புகழ்  பெற்ற  எழுத்தாளர்களை  விடவும், மிகவும்  கூர்மையான கரங்களை  அங்கே  நாம்  கண்டடைய  முடியும் .

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
வரிகள்  தேவையில்லை .சில  சொற்கள்  போதும் . ஒரு  மனிதன் -இரு  வீடுகள் - பல  உலகங்கள் .

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அந்த  இலக்கியவாதியின்  முகத்தில்  குத்துவதில்லை என்று  நான்  தீர்மானித்துப்  பல  நாட்கள்  ஆகின்றன . இயற்கையிலேயே  அவருடைய  முகம்  சீல்  குத்தப் பட்ட  தபால்  தலை போலிருப்பதால் இந்த முடிவு .