Thursday, December 13, 2012

கெட்ட ஆவிகள்


கெட்ட ஆவிகள்
(இரத்தக் குளியல் குறுநாவலுக்கான பின்னிணைப்பாக எழுதியது)



எல்லா வெளியீடுகளின் பின்னாலும் ஒரு பின்னிணைப்பு இருக்கும், அது கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும், ஆனால் இதில் மிகவும் சிறிதாகவும் அதே நேரம் கனதிமிக்கதாகவும் ஒரு குறிப்பு 

இது ஒரு கொலைகாரனின் குரல் இப்படித் தொடங்கினால் வடிவாக இருக்கும், அது பொருத்தமானதா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி இப்போதைக்கு அது மிகவும் பொருத்தமானது, அப்படியாகவே நான் இருந்துவிட்டுப் போகிறேன்,  அதுவும் சும்மா கிடையாது புலிச் சின்னத்துடன் குத்தப்பட்ட முத்திரை, எனக்குப்பிடித்த மூன்று பேருக்கு இந்தப்புத்தகத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறேன், 

மேஜர் நிஷாம் துவான் முத்தலிப் இலங்கை இராணுவத்தின் தேர்ந்த புலனாய்வு வீரன் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு 2005 மே 31  காலை 7.50 மணிக்கு நாரஹேன்பிட்ட பொல்ஹென்கொடச் சந்தியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டவர், அவர் எதிர்பாராத வண்ணம் மரணம் அவரை அனைத்துக் கொண்டது, அடுத்தது லெப்டினன் ஜெனரல் பாரமி குலதுங்கா 2006 ஜூன் 26 கொழும்பு பன்னிப்பிட்டிய இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்துத் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொடூரமாகக் கொல்லப்பட்டவர், அடுத்தது பிரிகேடியர் சு.ப.தமிழ்ச் செல்வன் 02 நவம்பர் 2007 கிளிநொச்சி சமாதான செயலகத்தில் வைத்து விமானக் குண்டு வீச்சில் பல முக்கிய தளபதிகளுடன் கொல்லப்பட்டவர், இவர்கள் மூவர் குறித்தும் நிறைய எழுதுவதற்கு என்னிடம் விடயங்கள் இருக்கின்றன, ஆனால் இப்போதைக்கு நான் எதையும் எழுதப் போவதில்லை, காலம் கணியட்டும் அவகாசமும் அமைதியான மனோ நிலையும் கிடைக்கட்டும் அப்போது இறைவன் நாடினால் நிச்சயம் எழுதுவேன், இந்த மூன்று மரணங்களும் எனது மனதைக் கலங்க வைத்தவை, யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட  காலத்தில் வௌ;வேறு நிகழ்வுகளில் இவர்கள் மூவரையும் நேரடியாகச் சந்தித்த இனிமையான அனுபவம்தான் அவர்கள் மரணித்த பின்னரும் கூட அவர்களை நினைவுகூரச் செய்கிறது, எந்தப் பின்புலமும் இல்லாது அரும்பு மீசை துளிர் விடத் தொடங்கிய காலத்து நினைவுகள் அவை, மனதுக்கு இனிமையானதும் சுமையானதுமான நினைவுகளை மீட்டிப் பார்ப்பதிலும், நினைவு கூர்வதிலும் ஓர் அலாதி இன்பம் இருக்கத்தான் செய்கிறது, 

இந்தக்குறிப்புகள் நிச்சயம் பலருக்கு ஆச்சரியத்தைத் தரக் கூடும், காரணம் இரு வேறுபட்ட போர்முனைகளில் நின்று களமாடியவர்களை எப்படி ஒருவனால் ஒரே தளத்தில் எடை போட முடிகிறது? என்பதுதான் அது. அத்துடன் இப்போது விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிப் பேசவே முடியாத ஒரு சூழலில், பயங்கரவாதியாகிப் போன சு.ப. தமிழ்ச் செல்வனை நினைவு கூர்வது அல்லது அவர் பற்றிப் பேசுவது, அல்லது நினைவுகளை மீட்டிப்பார்ப்பது, பலருக்கு அச்சம் தரும் நிகழ்வுகள் ஆனால் எனக்கு மிகவும் அற்பமானவை, பலர் பேசுவதற்குத் தயங்கும் விடயங்கள் எனக்குப் பசுமையான நினைவுகள், எதுவாயினும் சரி எனது மனதில் பட்டதை நான் சொல்லிவிட வேண்டும் என்று கருதுவதால் இவையெல்லாம் பெரிய காரியமே கிடையாது, 

எனது தந்தையும் எதிர்பாராத விதமாகக் கொல்லப்பட்டவர்தான், அதுவும் கொடூரமாக, உயிரோடு கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை அனுபவித்து இறந்தார், 1985 எப்ரல் 29 வாழைச்சேனை மூக்கர்கல் பகுதியில் வைத்து எனது தந்தை செய்ஹ் இஸ்மாயீல் மற்றும் போஸ்ட் மாஸ்டர் முகைதீன் அப்துல் காதர் உட்பட எட்டுப் பேர் விடுதலை வேண்டிப் போராடிய ஆயுதக் குழுவொன்றினால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்கள் அவர்கள் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு சாக்குப் பை கொடுக்கப்பட்டு அதில் மணல் நிரப்பப் பணிக்கப்பட்டார்கள், பின்னர் அந்த மணல் மூடையுடன் இறுகக் கட்டி அனைவரையும் உயிரோடு ஆற்றில் அமிழ்த்திக் கொன்றார்கள், அவர்கள் யாருமே மரணத்தை அவ்வளவு சடுதியாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், எனது தந்தை இவ்வாறு கொல்லப்படும் போது அவருக்கு வயது 25 தான், இந்த இழப்பை யாரால்? எப்படி? ஈடு செய்ய முடியும்! அது இன்னமும் ஈடு செய்யப்படவில்லை, அது ஈடு செய்ய முடியாததுதான். இதையெல்லாம் உணரத் தொடங்கிய போது மனதில் ஆழமாகப் பதியத் தொடங்கிய ஒன்றுதான் 'அநியாயம் எந்தவடிவில் இருந்தாலும் எதிர்த்தல்' என்பது.

மரணங்கள் இப்படித்தான் பல விதத்திலும் பாதிப்பை ஏதோவோர் வடிவத்தில் ஏற்படுத்தித்தான் செல்லும், மரணங்கள் ஒவ்வொருவர்க்கும் வௌ;வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்திச் செல்லும். லெப்டினன் ஜெனரல் பாரமி குலதுங்க கொல்லப்பட்டபோது விடுதலைப்புலிகளும் விடுதலைப் புலி ஆதரவுத் தமிழ் மக்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தார்கள், இராணுவத் தரப்பு கோபத்தின்  உச்சத்திலும் அரச தரப்பும் மக்களும் சோகத்தின் உச்சத்திலும் இருந்தார்கள், லெப்டினன் ஜெனரல் பாரமி குலதுங்கவின் உறவுகள் இழப்பின் அதிஉச்ச வேதனையை அனுபவித்தார்கள், அதே நேரம் திருமணம் முடிக்காத பிரம்மச்சாரியான லெப்டினன் ஜெனரல் பாரமி குலதுங்காவின் குடும்பத்தார்க்கு பிரதமர் ரட்ண சிறி விக்ரம நாயக்க அனுதாபச் செய்தி அனுப்பி இருந்தார், அதில்  மனைவி குழந்தைகளின் ஆழ்ந்த துயரில் தாமும் பங்கெடுத்துக் கொள்வதாக ஆச்சரியமான செய்தி வாசிக்கப்பட்டது, அது போல இன்னும் கொஞ்சப் பேருக்கு அது வெறும் செய்தி வேறு சிலருக்கு அது ஒரு விசயமே கிடையாது, ஒவ்வொரு மரணமும் அப்படித்தான், வௌ;வேறு தளங்களில் வௌ;வேறு விதமான இழப்பின் ரேகைகளைப் பதிவு செய்து செல்லும், 

இப்படித்தான் எனது வாழ்க்கையிலும் ஒரு மரணம் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியது, அது எனது தந்தையின் மரணம், இளமைக்காலத்துக் கனவுகள் அனைத்தையும் களவாடிக் கொண்டு எனது பிறந்த மண்ணைவிட்டும் தூக்கியெறிந்தது, ஓர் அநாதை நிலையத்தில் சிறைப்படுத்தியது, எனது எல்லாவற்றையும் அத்தோடு இழந்தேன், மண்வாசனை கமழும் எனது மொழியை, பாஷையை, சொற்களை இழந்தது இன்று வரையும் ஈடுசெய்யப்படாத ஒன்றுதான், அம்மரணம் எனது தாய்மடியைப் பிடுங்கிக் கொண்டது, அன்பை அரவணைப்பை, பாசத்தை, என்று எல்லாவற்றினையும்..., அதன் தாக்கம் நீண்டு கொண்டே சென்றது, அந்தப் பாரிய பள்ளத்திலிருந்து சிறுகச் சிறுக ஏறினேன், ஒவ்வொரு பிடியாக மிகவும் கஷ்டப்பட்டுப் பிடித்தேன், ஒவ்வொரு அடியாக மிக நிதானமாக வைத்தேன், சிகரம் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் போது, எனது கண்களுக்குள் அதன் பிரகாசம் பாயும் போது, இரு கைகளையும் உயர்த்தியபடி மேலே மேலே குதித்து மகிழ்ச்சிப் பிரவாகத்தில் நான் சாதித்துவிட்டதாய் பயங்கரமாகச் சப்தமிட்டுச் சொல்லி பெருமிதத்துடன் இறைவனின் முன் மண்டியிட்டுச் சிரந்தாழ்த்தி அவன் நாமத்தைக் கண்ணீரோடு உச்சரிக்கும் கனவுகளோடு  அடுத்த பிடியைப் பிடிப்பதற்கிடையில், இறுதி அடியை எடுத்து வைப்பதற்கிடையில் ஒரு சின்னஞ்சிறு இடைவெளியில் ஒர் எலும்புக் கூடு எனது வாழ்க்கையில் ருத்ர தாண்டவம் ஆடி ஓய்ந்தது, மீண்டுமோர் அதளபாதாளத்தில் தூக்கியெறிந்தது. 

அந்த எலும்புக் கூடு எனது அனைத்துத் தளங்களிலும் அதி உச்ச அதிர்வுகளைப் பதிவு செய்தது, கல்வி, பொருளாதாரம், ஆன்மீகம், குடும்பம், சமூகத் தளம், நட்பு வட்டாரம், உறவுகள் என்று எல்லாப் பக்கங்களிலும்... எதையும் விட்டு வைக்கவில்லை, லாபமும் நட்டமும் ஒருங்கே விளைந்தன, ஒரு கொள்ளைக்காரனாக, ஒரு கொலைகாரனாக, அது என்னை வேடிக்கை பார்த்தது, எனது உண்மையான பக்கங்களைப் போலியாக்கியது எனது ஒட்டுமொத்த உழைப்பையும் கேள்விக்குள்ளாக்கியது, எனது முயற்சிகள் அனைத்தையும் கேலிக்குள்ளாக்கியது, என்னைச் சூழ இருந்த பல்லாயிரம் மனிதர்களையும் விட்டு ஒற்றையாய்த் தூக்கியெறிந்தது, என்னைச் சூழ இருந்த பல போலிகளை எனக்கு அடையாளங்காட்டியது, உண்மையாகவே என்னை நேசிப்பவர்களை அது எனக்குத் தெரியப்படுத்தியது,  ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சிந்திக்கவும் கருத்துச் சொல்லவும் வழி வகுத்தது, வாழைச்சேனை வை.அஹமது என்ற நல்ல கலைஞனின் கதைகளைத் திருடிக் கொண்டு அவற்றைத் தனது பெயரில் வெளியிட்டு  தன்னை இலக்கிய வாதியாக நிறுவிக் கொண்ட ஆடு மாடுகளுக்கு ஊசி போடும் ஒருவன் குதியோ குதியென்று குதித்தான், அரபியின் பணத்தில் ஊருக்குள் ஆடுமாடு வெட்டிப் பங்கு வைத்தவன் கண்ணீர் வடித்தான், அநியாயம் என்று வெகுண்டெழுந்தான், வேசிகளின் முந்தானையில் அன்றிரவைக் கழித்த கலிசரைகள் எல்லாம் ஆண்டவனே என்ன கொடுமை இது என்று புலம்பின, பிறரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டவனும், குடிகாரனும், கஞ்சாக்குடியனும், பொடியன் அடிக்கும் மாஸ்டர்களும் சாபமிட்டார்கள், ஒரு கொலைகாரனின் தம்பி சந்திக்குச் சந்தி செய்தி சொன்னான், ஜாமியா நளீமிய்யாவில் கற்றுத் தேறிய அவ்லியாக் குஞ்சுகளும் மலாயிக்காமார்களும்  எஸ்எம்எஸ் பரப்புரையில் ஈடுபட்டார்கள். தலைநகரில் கூட்டம் போட்டு அவதிப்பட்டார்கள் இப்படி எல்லாமும் அரங்கேறிக் கொண்டிருக்கையில்...

நான் ஏகாந்தத்தின் பிடியில் சிக்கிக் கொண்டேன், வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களின் பட்டியலில் இனி எனது பெயரும் இருக்கும் என்று விரக்தியின் அந்திமத்திற்கே சென்றேன், இப்படியான இக்கட்டான நிலையில் அதிலிருந்து விடுபட்டு பழையவாழ்க்கையை விடவும் மிகச் சிறந்த வாழ்க்கையை என்னால் மீண்டும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்தது அல்குர்ஆன்தான். 

அந்த நாடகத்தின் காட்சிகள் அரங்கேறும் போதும், பல்லாயிரம் மனிதர்கள் வேடிக்கை பார்க்கும் போதும், ஒரு புன்னகையுடன் என்னை தைரியமாக நிமிர்ந்து நிற்கச் செய்தது அல்குர்ஆன்தான், காக்கிச் சட்டை அதிகாரிகள் என்னை நம்பவைத்து மோசம் செய்த போதும் தமது ஆளுமை வீச்சைப் பரீட்சித்துப் பார்க்கும் களமாக என்னைப் பயன்படுத்திக் கொண்ட போதும் தைரியமாக அனைத்தையும் எதிர்கொள்ளச் செய்ததும் அல்குர்ஆன்தான், எனக்குக் கிடைத்த ஏகாந்தத்தினை அல்குர்ஆன் முழுமையாகப் போர்த்திக் கொண்டது, அந்தக் கடலில் முற்றாக மூழ்கிட உடலில் உள்ள அத்தனை அணுக்களும் ஆவலோடு துடித்துக் கொண்டிருந்தன, ஒவ்வொரு வசனங்களும் புதுப்புது அர்த்தங்களை என்னுள் விதைத்தன, பல்லாயிரம் சூரியன்கள் ஒருமித்து என்னுள் சுடர்வது போல் உணர்ந்தேன், ஒரு நாளைக்குக் குறைந்தது ஆயிரம் வசனங்களையாவது படித்தேன், அதிசயமான மாற்றத்தினை அது என்னுள் ஏற்படுத்தியது, உலக மாந்தர்கள் அனைவரில் இருந்தும் அந்நியப்பட்டுப் போனேன், எனக்கு எதுவுமே பெரிதாகத் தெரியவில்லை, யாருமே பெரிதாகத் தெரியவில்லை, அல்லாஹ் என்ற ஒப்பற்ற சக்திக்கு முன்னால் நான் அற்பமாகி நின்றேன், முஹம்மது என்ற மனிதரின் அசைக்க முடியாத பற்றின் ஒரேயொரு துளியினை நான் அனுபவிப்பது போல உணர்ந்தேன் அவரின் வாழ்க்கை குறித்து அல்குர்ஆன் பேசும் போது கண்ணீர் மடைதிறந்தோடியதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, எனக்குத் தேவையான அனைத்தையும் அது அள்ளித் தந்தது, என் இதயத்தை முழுமையாக ஆக்கிரமித்தது, வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது, 

அந்த வாழ்க்கையை இழக்க மனம் ஒப்பவில்லை, அல்குர்ஆனுக்கு இத்தனை வசீகரச் சக்தி இருக்கிறதா!! சத்தியமாக பலவீனனாகிய நான் வியந்து போனேன், இத்தனை நாளும் இந்த இன்பத்தை அனுபவிக்காமல் வீணாக்கி விட்டோமே என்று கைசேதப்பட்டேன் அதை நினைத்தாலும் கண்ணீர் ஊற்றெடுத்தது, எல்லா மனிதர்களும் தூக்கத்தைச் சுகித்துக் கொண்டிருக்கும் போது கட்டாயம் நித்திரை கொள்ள வேண்டும் என்ற கண்டிப்பான விதிகளைத் தாண்டி எதையும் பொருட்படுத்தாமல் இறைவா இறைவா என்று அவன் மன்றில் தலை சாய்க்கும் போது என்னைத் தேடுகிறேன், எங்குமே கண்டு கொள்ள முடியவில்லை, ஒரு தூசியிலேனும் நான் இல்லை அப்படியானால் எனது பெறுமானம்தான் என்ன? ஒன்றுமே இல்லை, ஒருதூசுத் துணிக்கைக்கேனும் பெறுமதியில்லாத நாமா இத்தனை காலமும் பெருமிதப் பட்டுக் கொண்டு வாழ்ந்து களித்தோம் என்று அழுகை அழுiகாயக வந்தது, அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எங்காவது என்னை மட்டும் தனிமையாக இருளில் விட்டுவிட்டால் போதும் என்று தோன்றியது, தனிமையை மனம் முழுமையாக யாசித்தது, அந்த யாசகம் மனித சஞ்சாரமே இல்லாத பகுதியொன்றில் தூக்கி வீசப்படவேண்டாமா? என்று என்னை வாட்டியது, அப்போதுதான் ஹிராகுகை ரஸூலுல்லாவுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அது போலதொரு குகை எனக்கும் கிடைக்காதா எனும் ஏக்கம் எங்கும் வியாபித்துப்பரவியது.

எனக்குத் தேவையான அந்தச் சூழலை ஏதோவோர் விதத்தில் அமைத்துக் கொண்டேன், என்னைச் சூழ காக்கிச் சட்டைஅணிந்தவர்கள் இருந்தார்கள், அவர்கள் கதைத்தார்கள், சப்தமிட்டார்கள், சிரித்தார்கள், எல்லாம் செய்தார்கள் ஆனால் நான் தனிமையில் இருந்தேன், அப்போது மனதை முழுமையாக வியாபித்தது அல்லாஹ்வின் நினைவுகள்தான் அவை என்னைக் கொள்ளை கொண்டன, நோன்பு நோற்கத் தூண்டின, உலக இன்பங்கள் எல்லாவற்றையும் மறுதலிக்கச் செய்தன, தொடர்ந்து ஐந்து மாதங்கள் நோற்ற நோன்பை வருடம் முழுவதும் நோற்கக் கூடாதா என்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் மிகைத்தன, ஆன்மீகத்தில் கட்டற்று பைத்திய நிலைக்குச் செல்கிறோமோ என்று கூடத் தோன்றியது, 

அப்போது நபிகளாரின் போதனைகளுக்குள் அமிழ்ந்து போகிறேன், ஒவ்வொரு ஹதீஸ்களும் அல்குர்ஆனின் வாசகங்களை மீள்வாசிப்புச் செய்யத் தூண்டின, இரண்டே முக்கால் தசாப்த கால வாழ்க்கையையும் வீணடித்துவிட்டோம் போல இருந்தது, மரணிக்கும்வரைச் சிறையிலேயே கிடந்துவிடலாம் போல இருந்தது, அந்தச் சிந்தனைகள் முனைப்பு பெறும் போது வாழ்வின் மீதான புதிய பக்கங்களை நபிகளார் திறந்து தந்தார், அல்குர்ஆன் அதில் ஒளிபாய்ச்சியது,  பாதையை விஸ்தீரனமாக்கித் தந்தது, நான் பயணப்பட வேண்டிய இலக்குகளையும் தகர்த்தெறிய வேண்டி தளங்களையும் மாற்றங்களையும் இழப்புகளையும் பாதிப்புக்களையும் அது தெளிவாக்கிக் காட்டி இனிப் போ என்றது. யாரோ சிலர் என் கூடவே பயணிப்பது போலவும், எனக்குப் பின்னாலும் எனக்கு முன்னாலும் அணிவகுத்துச் செல்வது போலவும் தோன்றியது, நானும்; எல்லாவற்றையும் எதிர் கொள்வதற்குத் தயாரானேன், 

இப்போது ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டும்தான் எச்சம், அது மரணம்!  எப்போது வரும் என்பதுதான், நாளையும் வரலாம் நாற்பது வருடங்களின் பின்னும் வரலாம் ஆனாலும் நான் பயணப்பட்டுக் கொண்டே இருப்பேன், எனது பயணத்தை யாராலும் எதற்காகவும் எப்போதும் எப்படியேனும் தடுத்துவிடவே முடியாது, கண்ணுக்கெட்டிய தூரம் அல்குர்ஆனின் ஒளி தெரிகிறது, அது தெரிகின்ற தூரம் வரை நபிகளாரின் வாழ்க்கை எல்லாவற்றையும் தெளிவுபடுத்திக் காட்டுகிறது, உயிர் மூச்சு எச்சமுள்ளவரை அது தொடர்ந்து கொண்டே இருக்கும்

எனது இருப்பை அவ்வெலும்புக்கூடு  ஆட்டம் காணச் செய்தது, புதைப்பதற்கும் தோண்டுவதற்கும் அவர்களுக்கு ஒரு எலும்புக் கூடு கிடைத்தது, தோண்டியதோடு அவர்கள் பிரச்சினை முற்றாக முடிந்துவிட்டது, ஆனால் அது என்னைத் தள்ளிவிட்ட பாதாளத்தில் இருந்து இனி மீள முடியுமா என்று எண்ணத் தோன்றியது. அவமானப் படுத்தி வேடிக்கை பார்த்தது, அத்தோடு நான் இழிந்து அழிந்து விட்டதாய்த் தெருநாய்கள் இணையத்தளங்களில் ஊளையிட்டன, இன்னும் சில களிசரைகள் சாக்கடை அரசியல் செய்தன, ஒரு களிசரை பாராளுமன்றத்திலும் குரல் கொடுத்தது, இன்னும் சில மானங்கெட்ட ஜென்மங்கள் எலும்புக் கூட்டுக்குப் பச்சை போர்த்தி புனிதப்படுத்தி கூட்டம் சேர்த்து தலைமைத்துவத்தை நிறுவிடும் முனைப்போடு தலையில் ஒரு தொப்பியை மாட்டிக் கொண்டு போலியான சோகத்தை முகத்திலிருந்து புட்டம்வரை அப்பிக் கொண்டு பவ்வியமாக நின்றன, எதிர்கொள்ளத் திராணியில்லாத எதுவுமே தெரியாத சில கோழைகள் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுவிட்டு நாட்டை விட்டேயோடின, இங்கு ஏமாற்றப்பட்டதும் உண்மையிலேயே ஏமாந்து பேனதும் அந்த எழும்புக் கூட்டின் உறவுகள் என்று கருதப்பட்டவர்கள்தான்.


அது ஒரு தேச துரோகியின் மரணம், அப்படித்தான் வரலாறு பதிந்து கொண்டது, அந்த மரணம் குறிப்பிட்ட நபரின் குடும்பத்தில் ஏற்படுத்திய சோக அலை ஈடு செய்ய முடியாதது, இறந்து போனவன் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும், கள்வன், காவாளி, பெண்புடியன், நாட்டை விற்று, சமூகத்தை விற்று மானங்கெட்ட பிழைப்பு நடாத்தியவன், இன்னோர் தேசத்தின் கைக்கூலி, நடைமுறையில் பொருளாதார இலாபங்களை மட்டும் குறியாகக் கொண்டு வாழ்ந்தவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அவனது மரணமும் பல்வேறுவிதமான புரிதல்களை சமூகத் தளத்தில் பதிவு செய்யத் தவறவில்லைதான்

ஒரு தளத்தில் அவர் ஒரு புனிதமான மனிதராக, கௌரவத்திற்குறியவர், மறு பக்கத்தில் அவனை இயக்கிவர்களுக்கு அவன் மனித உரிமைப் போராளி, தமது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த கூட்டத்தார்க்கு அவன் சமூக சேவகன், இன்னொரு பக்கத்தில் தேசத்தின் மீது பற்றுக் கொண்டவர்கட்கு அவனது மரணம் நியாயமானது அவசியமானது, அவன் சாகடிக்கப்பட வேண்டியவன்தான், அவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது சந்தோசமான செய்தி, அவன் இறந்ததால் தமது நலன்களை இழந்தவர்களுக் அது பரிதாபமானது, அவனை மட்டும் மாட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டவர்கட்கு அது அச்சுறுத்தல், அவனோடு கூடவே இருந்து அனுபவித்து விடுபட்டுப் போனவர்களுக்கு மரணபயம், அவனால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்கட்கு அவன் துரோகி, ஆனால் உண்மையில் அவனது மரணம் நியாயமாகப் பாதித்தது அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும்தான், அவனது மரணத்தை மருமக்கள் வியாபாரமாக்கிக் கொண்டபோதும் மகன்மார் ஜம்பர் போட்டுக் கொண்டு இஸ்லாத்தைப் பாதுகாக்கும் அமெரிக்கக் கைக்கூலிகளான பெண்கள் உரிமைக்காகப் போராடும் ஓரினச் சேர்க்கையாளர்களிடமும் லெஸ்பியன்களிடமும்  கையேந்தி இழப்பீடு பெற்ற போதும், கேள்விக்குள்ளாக்கப்பட்டது தந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த சிறுசுகளின் கனவுகள்தான்,

எங்கெங்கிருந்தெல்லாமோ அவர்களுக்குப் பல மில்லியன்கள் இழப்பீடுகளாக வரும் போது தம்மை நிலை நிறுத்திக் கொள்ளுவதிலும் தாம் எதிரிகள் குற்றவாளிகள் என்று கருதிய அனைவரையும் பழி வாங்குவதிலும்தான் அவர்களை சைத்தான் வழி நடாத்தினான், அந்தப் பணதில் அவர்களை அவன் மக்காவுக்கும் கூட்டிச் சென்றான், கஃபாவின் முன்றலில் தூய்மையோடு அழுது  உண்மையான ஈமானோடு பிரார்த்தித்திருந்தால் நிச்சயம் அந்தப் பிரார்த்தனைகள் வீண் போயிருக்காது, சொந்த உழைப்பில் ஹலாலான பணத்தில் கஃபாவின் மண்ணை மிதிக்கும் போது எண்ணங்கள் எல்லாமே ஈடேறிவிடும், இறைவன் ஆவலோடு காத்திருப்பான் அடியானின் பிரார்த்தனையை அப்படியே ஏற்றுக்கொண்டு அருள்பாலிக்க, அவனது உடை ஹராம், அவனது உணவு ஹராம், அவனே மொத்தமாகக் ஹராத்தில் இருக்கிறான் அப்படி இருக்கும் போது இறைவா இறைவா என்று வானோக்கி ஏந்திய கரங்களோடு பிரார்த்திக்கும் போது அவனின் பிரார்த்தனையை எப்படி இறைவனால் அங்கீகரிக்க முடியும் என்று ரஸூலுல்லாஹ் கேட்ட கேள்வியை கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டவனின் புத்திரர்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன், குடும்பத்தோடு மட்டுமல்ல முழு ஊரோடு போனாலும் கஃபாவின் முன்றலில் ஹலாலிற்குள்ள பெறுமதி ஹராத்திற்கு எப்போதும் கிடைப்பதில்லைதான், 

யாரோ கொடுத்த இழப்பீட்டுத் தொகையில் காக்கிச் சட்டைக்காரர்களுக்கு மதுபான போத்தல்களையும் பொரித்த கோழிகளையும் பல்லாயிரம் செலவு செய்து வாங்கிக் கொடுக்கும் போதே அவர்கள் உண்மையைத் தொலைத்துவிட்டார்கள், அது அமெரிக்காவின் கிறீன்கார்ட் பெறுதல்தான் உலகில் கிடைக்கின்ற உச்ச பெறுபேறு என்ற எல்லைவரைக் கொண்டு சென்று நிறுத்தியதில் தப்பில்லைதான், 

ஆனாலும் பாவம் அந்தப் புத்திரர்களும் ஊர்மக்களும் யார் யாரோ போட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டுச் சின்னாபின்னமாகிப் போயினர், சம்பந்தமே இல்லாதவர்களையெல்லாம் இன்னும் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள், அதை என்னால் தடுக்க முடியாது, அதற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது, என்னால் உரத்துச் சொல்ல முடியுமானது  ஒன்றே ஒன்றுதான்!  

வீணாக மோதிக் கொள்ளாதீர்கள், அல்லாஹ்வை மறுதலித்த ஒருவனுக்கு இருப்புக் கொள்ள உங்கள் பிளவு விடுகின்ற இடைவெளி வசதியாய்ப் போய் விடும், நீங்கள் இந்த மனித சட்டத்தால் தண்டிக்க நினைப்பவர்கள் யாருமே குற்றவாளிகள் கிடையாது, உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் எல்லாமே வடிவமைக்கப்பட்டவைகள்தான், உங்களுக்குள் மோதிக் கொண்டு இறை மறுப்பாளனை இருப்புக் கொள்ள அனுமதிக்காதீர்கள், உங்களுக்கு என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ என்னிடம் வாருங்கள் தெளிவுபடுத்துகிறேன் மற்றபடி எங்குமே எப்போதுமே உங்களுக்கு எதுவுமே தெரியப்  போவதில்லை, மனிதன் உருவாக்கிய பலவீனமான சட்டங்கள் இங்கு சிலரின் நலன்களை மட்டும்தான் நிறுவும், இறைசட்டங்களுக்கு மட்டுமே உள்ள வீச்சு தனித்துவமானது, எதனாலும் யாராலும் எந்த அதிகாரத்தாலும் புறந்தள்ள முடியாதது, அநியாயத்தால் எதிர் கொள்ளப்படும் எல்லாமே தோற்றுப் போகும், 

மோதிக் கொண்டு பகைமை விதைத்து விரிசல்பட்டு எதிரிகளைப் போல தமக்குள் பிணங்கிக் கொண்டிருக்கும் மூன்று தரப்பாருக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன், இது வரை காலமும் உங்களுக்குள் பிரயோகித்துக் கொண்ட மோசமான வார்த்தைகளுக்காகவும், ஒருவரை மாறி ஒருவர் தூற்றிக் கொண்டு இழிவுபடுத்தித் திரிந்தமைக்காகவும் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள், உடனடியாகச் சந்தித்து கட்டியனைத்து முஸாபஹா செய்து உங்களுக்குள் உள்ள பகைமையைத் துடைத்தெறியுங்கள், ஒரு பொதுத் தளத்தில் அதைச் செய்யுங்கள் இதயசுத்தியோடு அதைச் செய்யுங்கள் நீங்கள் மூன்று தரப்பாரும் ஒரே தரப்பாக மாறிடுங்கள், உங்கள் மூன்று தரப்பாருக்கும் தெரியாத உண்மைகளை இறைவன் உங்களுக்குத் தெளிவு படுத்துவான், அப்போது வல்லாஹி நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் உண்மையான எதிரி யார் என்று. அதல்லாது இப்படியேதான் மோதிக் கொண்டிருப்போம், நாங்கள் உயர்ந்தவர்கள், எங்களிடம் பணம் இருக்கிறது, எங்களிடம் அதிகாரம் இருக்கிறது, நாங்கள் ஏன் இறங்கிப் போக வேண்டும் என்று தம்மைத்தாமே நியாயப்படுத்திக் கொண்டு போகும் போது உங்களில் யாரையும் அந்தச் ஷைத்தானிடமிருந்து காப்பாற்ற முடியாது, அல்லாஹ்வைத் தவிர.

மனித சட்டத்தை நம்பாதீர்கள் அது எல்லோரையும் கைவிட்டு விடும், அல்லாஹ் நமக்கென்றே போட்டிருக்கும் சட்டங்களை மனந்திறந்து நம்புங்கள் விசுவாசியுங்கள், அந்தத் தூய்மையான நம்பிக்கை நிச்சயம் உங்களைக் காப்பாற்றும். ஒரு போதும் இம்மியளவும் கைவிடாது, தோற்றுப் போக விடாது, உங்கள் தராதரங்களைத் தூக்கி நிறுத்தும்! 
நீங்கள் தயாரா? 
உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் பயப்படுகிறோம் என்று நினைப்பவர்கள் இதில் முந்திக் கொள்ளுங்கள். 
தயவு செய்து இடைத் தரகர்களை உங்களுக்கிடையில் நியமித்துக் கொள்ளாதீர்கள், 
உங்கள் அனைவருக்கும் உள்ள ஒரே ஒரு சரியான தெரிவு அதுவாகத்தான் இருக்க முடியும்.

இன்னும் பகிரங்கமாக நான் எனக்காக ஒன்றைச் சொல்ல முடியும்
இந்த மனித சட்டத்தை விட்டுத் தள்ளுங்கள், நான் குற்றம் செய்திருந்தால் இறைவன் நிச்சயம் பகிரங்கமாகத் தண்டிப்பான். அதைப் பகிரங்கமாக நான் முக மலர்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன், 
இறைவா இந்த விடயத்தில் நான் குற்றவாளியாக இருந்தும் மனித சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொண்டாலும் என்னை விட்டுவிடாதே மிகவும் கேவலமாக மிகப் பகிரங்கமாகத் தண்டித்து விடு, 
நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு, 
நான் நிரபராதியாக இருந்தால் நீ தந்திருக்கும் சோதனையில் இருந்து வெற்றிகரமாக மீண்டு அல்குர்ஆனின் நிழலில் இந்த தேசத்தினைக் கட்டமைக்க உதவி செய், 
உனக்கு உண்மையாளனாக இருந்தால் என்னை மகிமைப்படுத்தி அதிகாரத்தைத் தா, 
எனது கனவுகளும் இலட்சியங்களும் தூய்மையானதாக இருந்தால் அவற்றை அங்கீகரித்து நிலைப்படுத்து.
உன்னைச் சந்திக்கும் அந்த நாளுக்காக நான் காத்துக் கிடக்கிறேன்.

Friday, November 30, 2012

ஹராங்குட்டியின் வீடியோ முனனோட்டம்


விரைவில் வருகிறான் ஹராங்குட்டி

விரைவில் வருகிறான் ஹராங்குட்டி

விரைவில் வருகிறான் ஹராங்குட்டி



மூர்க்கமான யுத்த வீரனாக



உணர்வுகளையெல்லாம் ஒன்றுதிரட்டி
அனைத்தையும் மறக்க நினைக்கிறேன்
காலம் புன்னகைத்துக் கொள்கிறது
முடியாததை முயற்சிப்பதாக

ஆதரவுக்காய் ஒரு குரலேனும் ஒலிக்காது
ஏகாந்தமாய்க் கைவிடப்பட்ட பொழுதில்
மனசாட்சி  சாந்தம் கொண்டிருந்தது
உணர்வுகளேதுமற்று மரத்துப் போய்...

இழைக்கப்பட்ட துரோகத்தை நினைக்கையில்
உடல் வெப்பம் உச்சமடைந்து வியர்த்து
வெறி கொண்டு செயற்படத் தூண்டிற்று மனது
புத்தி அமைதி தெளிக்க பொறுமை வியாபித்தது

இறையச்சம் கட்டிப் போட
கண்கள் கலங்கி சிரம் தாழ்ந்தது
இறைவா நீ
தண்டிக்கிறாயா?
சோதிக்கிறாயா?
இயல்பாக உதிரும் வார்த்தைகள்

ஆண்டவன் மீது அனைத்தும் சாற்றி
ஏதுமற்று வெறுமையாகிப்போகையில்
அனைத்தையும் மறக்க நினைக்கிறேன்
அப்போதும் முடியாமற்றான் போகிறது.

தண்டனையாயின் அனுபவிக்கவும்
சோதனையாயின் பொறுமையுடன்
எதிர்கொண்டு வெல்லவும்
வலுகொள்கிறது மனது.

உறுதியாக எனக்குத் தெரியும்
நான் வீழ்ந்துவிடவில்லையென்று
அறியாத உலகம் பழிக்கும்
எல்லாம் உயிர் கொண்டெழுகையில்
எல்லாமும் மாறும்

நானும்
வெறிகொண்ட மூர்க்கமான யுத்தவீரனாய்

நியாயப்படுத்தலின் தாக்கம்



நம்பிக்கை தொலை தூரமாகிப் போக
நான் குழம்பிப் போகிறேன்
யார் வார்த்தைகளை நம்புவது?
எல்லோருமே உறுதியோடுதான் சொல்கிறார்கள்
தங்களை மட்டும் நியாயப்படுத்தியபடி
எல்லோர் வார்த்தைகளும்
தடங்கலின்றியே ஒலிக்கின்றன

எல்லோரும் நியாயப்படுத்த
தவறுகளே இல்லையென்றானது
தாயும் புனிதமாகிறாள்
மனைவியும் புனிதமாகிறாள்
உறவுகளும் நண்பர்களும் கூட

உணர்ச்சிவசப்பட்டபோது
அவர்கள் வெளிப்படுத்திய
கொடூரமான வார்த்தைகள் அனைத்தையும்
அமைதி கொண்டபோது
மறந்துவிட்டார்கள்

தங்களையே நியாயப்படுத்தும்
அனைவருக்கும் மத்தியில்
புன்னகைத்தபடி இருக்கவும்
பொறுமையோடு அனைத்தையும்
செவிமடுக்கவும் பழகிக் கொண்டேன்

விரைவில் ஒரு நாள்
உண்iமைகள் தெளிவாகிட
எனது கணிப்புக்களும் சரியாக இருக்கும்
அப்போதும் நான்
புன்னகைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்

மகா கொலைகாரன்



எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்
அதில் பல்லாயிரம் குண்டுகள் இருக்க வேண்டும்
சமூகத்தின் பெயரால் வாழும்
அயோக்கியர்களையும் தலைவர்களையும்
பகிரங்கமாகச் சுட்டுக் கொன்று
நடுவீதியில் வீச வேண்டும்

மற்றவன் கண்ணீரில் வாழ்பவனும்
மாற்றான் மனைவியைத் தீண்டுபவனும்
மதபோதகராய் வேசமிட்டு
சிறுவர்களுன் சேர்க்கை செய்யும்
மார்க்கம் போதிப்பதாய் ஓலமிடும் ஆசாமிகளையும்

தலைவன் எனச் சொல்லிக் கொண்டு
தான்தோன்றித் தனமாய் வாழும்
குடிகாரத் தறுதலைகளையும்
எனது கையால் கொல்ல வேண்டும்

உத்தம வேசம் போட்ட வீர புருஷர்களையும்
களவானிப் பயல் கூட்டத்தையும்
எல்லோரையும்
எல்லோரையும்

கனவொன்று கண்டேன்
துப்பாக்கி வீரனாகவும்
வாள்வீரனாகவும்
போர்வீரனாகவும்
வலம் வருவது போல

அடுத்த தலைமுறையிலேனும்
தென்றல் வீசட்டும்.

Sunday, August 5, 2012

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகள்





இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகள்

கொழும்புத் தமிழ்ச் சங்க வளாகம், உலகத் தமிழிலக்கிய மாநாடு 2012 ஜூன்
இருவர் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் அதன் சாரம்சம்

சோலைக் கிளியைத் தெரியுமா?

கருத்து 01: சோலைக் கிளிக்கு பெரிய நெனப்பு, அவரு யாரையும் மதிக்கிறல்ல, சரியான கர்வம் பிடிச்சவன், யாரோடையும் சரியாப் பழகமாட்டாரே, அந்தாள்ர முகத்தில சிரிப்பே இரிக்காது, அவர்ர கவிதைகள யாரும் கணக்கெடுக்கிறதில்ல, பெரிசா யாரோடையும் கதைக்கயும் மாட்டான் மனிசன், என்னமோ உலகத்துல அவரு மட்டும்தான் கவித எழுதுறெண்டு கர்வம்,

அஷ்ரஃப் சிஹாப்தீனைத் தெரியுமா?

கருத்து 02: ஆள் புகழுக்கு அலஞ்சி திரியிறாரு, எல்லாத்தையும் அவரு மட்டும்தான் செய்ற மாதரி நெனப்பு, அவர்தான் பெரியாள் எண்டு நெனச்சிக்கிட்டுத்தான் ஓடித் திரிகிறாரு, ஒரு ஆளுக்கிட்ட எவ்வளவு பிரயோசனம் எடுக்க ஏலுமோ அவ்வளவுக்கு பிரயோசனம் எடுத்துட்டு கழற்றிவிட்டிருவான் பாவி, சரியான வில்லங்கம் புடிச்ச ஆள், எல்லாம் புகழுக்குத்தான்.

கருத்து 03: சோiலைக் கிளிக்கு அஷ்ரஃப் சிஹாப்தீனப் பிடிக்காது, அஷ்ரஃப் சிஹாப்தீனுக்கு சோiலைக் கிளியைப் பிடிக்காது

அவர்கள் இருவரினதும் உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும் போது அஷ்ரஃப் சிஹாப்தீன் வருகிறார், கொஞ்சம் கூட சலனமில்லாத முகத்துடன் வாங்க அஷ்ரஃப் இன்டைக்கி ஆய்வரங்கம் சுப்பர், நல்லா இருந்திச்சு, மற்றதெல்லாம் அவ்வளவு வேலெயில்ல உங்கட எண்டா கலக்கிச்சி... என்றார்கள்

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது, அது வரையும்  நிகழ்ந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும், சங்கத்தின் முன்றலில் சோலைக் கிளி மனைவியுடன் அமர்ந்திருந்தார், அவர் மீது எனக்கு அளவில்லாத பிரியம், அது அவருடைய அடக்கம், ஆளுமை வீச்சு என்பவற்றால் வந்தது, மட்டக்களப்பு மீறாவோடையில் இலை துளிர்த்துக் குயில் கூவும் என்ற எஸ்.நளீமின் இரண்டாவது கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சிறப்புப் பேச்சாளராக வந்திருந்தார், அப்போதுதான் முதன் முதலாக நான் சோலைக் கிளியைப் பார்த்தேன், அவர் பேச்சைக் கேட்டேன், அன்றிலிருந்து அவர் மீது ஒரு காதல், ஏற்கனவே என்.ஆத்மா சோலைக்கிளியைப் பற்றி நிறையவே சொல்லியிருந்தார், அந்த ஈர்ப்பும் அன்று பல மடங்கு மெருகேறியிருந்தது, ஏற்கனவே சோலைக்கிளியின் கவிதைகளுடன் நல்ல பரிச்சயமிருந்தது,  சோலைக் கிளியுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன், ஆனாலும் அன்று அது நிறைவேறவில்லை, மிகவும் தூரத்தில் இருந்தபடி நான் புரிந்து கொண்ட சோலைக்கிளி பற்றிய விம்பம் இதுதான்,

உலகத் தமிழிலக்கிய மாநாடு 2012 ஜூன் அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க வளாகத்தின் அலுவலக முன்றலில் அமர்ந்து கொண்டிருந்தார், அப்போதுதான் அவருடன் தாரளமாகப் பேசக் கிடைத்தது, நிறையப் பேசினோம், பல வருடங்கள் பழகிய பாசப்பிணைப்புடன் பேசினோம், பழகுவதற்கு அவ்வளவு இனிமையான மனிதர், முகத்தாட்சினைக்காக முதுகு சொறியாத சிறந்த குணம், எனக்கு அது பிடித்திருந்தது, பிடித்ததைப் பிடித்தது என்பார் பிடிக்கவில்லையாயின் அதையும் அப்படியே சொல்லி விடுவார் அதனால் தான் அவரை நிறையப் பேருக்குப் பிடிக்கவில்லை, என். ஆத்மாவும் அப்படித்தான் முகஸ்துதி இல்லாத கறாரான மனிதர், முகத்திலடித்தாற் போல எதையும் தெளிவாகச் சொல்லி விடுவார் வாய்ப்புக்காகவும் புகழுக்காகவும் யாரையும் எதிர்பார்க்காத உறுதியான மனிதர் அதனால்தான் அவரையும் நிறையப் பேருக்குப் பிடிக்காமல் போகிறது, இருவரும் ஒத்த குணம் அதனால்தான் ஒத்துப் போகிறது, எப்போதுமே பரஸ்பரம் முதுகு சொறிய மாட்டார்கள், ஆனால் தூய்மையான பிணைப்பும் காரசாரமான கருத்தாடலும் இருக்கும்.

சோலைக்கிளிக்கு வசப்பட்ட கவிதை மொழி பலருக்கு வசப்படவில்லை அதனால் அவரை இழிவாகச் சொல்வதும் தரக்குறைவாகக் கதைப்பதும் தீர்வாகிடுமா? அவரவர்க்கு முடிந்ததைத்தான் அவரவர் செய்யலாம், ஒரு முறை ஒராபி பாஷா கிறியேஷன் ஸ்தாபகர் அஷ்ஷெய்ஹ் அல்தாப் பாருக் ரூபவாஹினி பெருநாள் நிகழ்ச்சிக்காக ஒரு சிறுவர் பாடல் எழுதித் தரும்படி என்னிடம் கேட்டார், அவர் எனக்குத் தம்பி மாதிரி மிகவும் நேசத்திற்குறியவர். நானும் ரொம்பச் சிரமப்பட்டு ஒரு பாடலை எழுதிக் கொடுத்தேன், எனது பார்வையில் அது சிறப்பான பாடல், ஏனெனில் மிகவும் கஷ்டப்பட்டு சொல்லெடுத்;து எழுதியது, ஆனால் அதை ஆத்மா பார்த்து விட்டு இது தரமில்லை என்றார், அதுவும் எனது முன்னிலையிலேயே சொன்னார், அதற்காக அவர்மீது துளியளவும் கோபம் வரவில்லை, தரமான படைப்பைப் படைக்க நான் இன்னும் தயாராக வேண்டும் என்று மட்டும் தோன்றியது,   சோலைக்கிளியிடம் மெட்டையும் கொடுத்து எழுதச் சொன்ன போது ஒரே நாளில் பாடல் வந்தது, வரிகள் நச்சென்று விழுந்திருந்தன, பாடல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனதாரப் பூரிப்படைந்தேன், ஆத்மாவின் மீது மதிப்பும் கூடியது, சோலைக்கிளியின்  மீது ஈர்ப்பும் கூடியது, அந்தப் பாடல்தான் ரூபவாஹினியில் ஒளிபரப்பானது, நான் கஸ்டப்பட்டு எழுதினேன் என்பதற்காக தரமற்றது தரமாகவுமில்லை, சோலைக்கிளி இலகுவாக எழுதினார் என்பதற்காக தரமானது தரமிழக்கவுமில்லை, அவர் தனது மண்ணிலிருந்து சொற்களை அறுவடை செய்கிறார், அதனால் மண்வாசனை கமலும் தரமான படைப்புக்களைப் படைக்க அவரால் முடிகிறது, இறுக்கமான வீச்சில் வரிகள் விழுகின்றன, அவற்றைப் புரிந்து கொள்ள வாசகன் தன்னைக் கொஞ்சம் மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது,

சோலைக்கிளியிடமிருந்து அப்போது தற்காலிகமாக விடைபெற்றுக் கொண்டு வெளியேறும் போதுதான் அந்த இருவரினதும் உரையாடலைச் செவியேற்கவேண்டி வந்தது, அப்போதுதான் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆய்வரங்கு முடித்து விட்டு வந்தார், அவர்கள் இருவரும்  ஆய்வரங்குப் பக்கமே போகவில்லை ஆனால் அவரைக் கண்டதும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினார்கள், அவர்களிடமும் வழமையான புன்னகையை உதிர்த்துவிட்டு அவர் விடைபெற்றுக் கொண்ட போது, நான் அஷ்ரஃப் சிஹாப்தீனைச் சந்தித்தேன்
'அஷ்ரஃப் நாநா கொஞ்சம் பேசனும்'
'எதுவா இருந்தாலும் வேகமாச் சொல்லுங்க அவசரமாப் போகனும்' என்றார்
'சோலைக்கிளியத் தெரியுமா?'
'தெரியும் ஆனா இதுவரையும் சந்திச்சதில்ல'
'அப்படீன்னா கொஞ்சம் வாங்க, உங்களுக்குச் சோலைக்கிளியப்பிடிக்காதாமே உண்மையா?'
'சீச்சி அப்படியெல்லாம் ஒண்டுமில்ல யாரு சொன்னா'
'அப்ப வாங்க ஒரு ரெண்டு நிமிசம் அவரோட கதைச்சிப் பாருங்க'
'ஆள் வந்திரிக்காரா'
அவரைக் கையோடு அழைத்துக் கொண்டு சென்றேன்,
எனக்குத் தெரிந்த அஷ்ரஃப் நாநா கடினமான உழைப்பாளி, தேர்ந்த வாசிப்பாளன், அவ்வளவு எளிதில் எதையும் நல்லா இருக்கென்று சொல்ல மாட்டார், அவ்வளவு வித்தியாசமான ரசனை மட்டம், அதனால்தான் அவர் நிறையப் பேருக்குப் பிரச்சினை, எல்லாவற்றையும் அங்கீகரிக்க வேண்டும் நல்லா இருக்கென்று வாயாரப் புகழ வேண்டும் இது பலரது எதிர்பார்ப்பு, அது நடக்காத போது அவன் ஆள் சரியில்ல என்பது குத்தப்படும் ஒரே முத்திரை, இந்தியாவின், அடையாளம் பதிப்பகத்தின் ஊடாக ஓட்டமாவடி அறபாத்தின் புத்தகம் வெளிவந்த தருனத்தில் அஷ்ரஃப் சிஹாப்தீன் தினகரன் வாரமஞ்சரியில் ஒரு பத்தி எழுதிக் கொண்டிருந்ததார், அப்போது அறபாத்தின் தொகுதியைப் பற்றி அஷ்ரஃப் சிஹாப்தீன் தனது பத்தியில் எழுதவில்லையென்பதற்காக முகைதீன் மௌலவி வாய்விட்டுச் சொன்ன விடயம், சஹாப்தீன் மௌலவிட மகனப் போல பொறாம புடிச்சவன நானெண்டா உலகத்துல காணல்ல, ஏனென்று கேட்டபோது, அறபாத்துட புத்தகம் இந்தியாவில இருந்து வெளிவந்திருக்கு அதப் பத்தி எழுதாம வேற என்னத்தையோவெல்லாம் பத்தி எழுதியிருக்கான் ஆசாமி, அறபாத்துட மேல்ல அவ்வளவு பொறாம அவருக்கு, இது போல பல விடயங்களை அவர் சொல்லிக்கொண்டே போகும் போது, அஷ்ரஃப் சிஹாப்தீன் அப்படியில்லை என்பதை நிருபிக்க வேண்டியிருந்தது, அறபாத்தின் புத்தகத்தை பிராந்தியத்தில் ஒரு குட்டி வெளியீடாக வைத்து முக்கியமான சகலரையும் அழைத்து வித்தியாசமான முறையில் அதைச் செய்ய பல ஏற்பாடுகளைச் செய்தும் கடைசி வரையும் அது முடியாமற் போயிற்று, அறபாத்தின் மீது யார்யாரெல்லாம் பொறாமை என்று கதை அடிபடுகிறதோ அவர்கள் அனைவரையும் அழைத்து அன்றோடு முகவரியில்லாத கட்டமைக்கப்பட்ட அந்த முரண்பாட்டுக் கோட்டையைத் தகர்த்தெறிந்து ஒரு சுமுகமான நிலையைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பாக இருந்தது, அந்நிகழ்வு நடந்தேறியிருந்தால் அறபாத்திற்கும் புது உட்;சாகம் கிடைத்திருக்கும், தவறான புரிதல்களும் விடுபட்டுப் போயிருக்கும், ஆனால் ஓட்டமாவடி அறபாத் அஷ்ரஃப் சிஹாப்தீன் மீது சேறு பூசியோ அல்லது அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடி அறபாத் மீது சேறு பூசியோ நடந்து கொள்ள மாட்டார்கள்,   ஒரு அரசியல் அலையின் பின்னர்தான் நிறையவே விமர்சித்து பூதாகர விம்பத்தால் வடிவமைக்கப்பட்டார் அஷ்ரஃப் சிஹாப்தீன் என்பது எனக்குத் தெரரியும்,

அஷ்ரஃப் சிஹாப்தீனின் ஸெய்த்தூன் கவிதை மிகவும் பிரபலமானது, அக்கவிதை பலஸ்தீனக்கவிதைகளின் சாயலில் பிரதிபண்ணப்பட்டது என்றவகையில் அறபாத் எழுதினார், புலிகளின் காலத்தில் எந்தவொரு முஸ்லிம் பெண்மணியும் கற்பழிக்கப்படவில்லை, எனவே அது பலஸ்தீனக் கவிதையின் கொப்பிதான் என்று அறபாத் பகிரங்கமாவே எழுதி வாதிட்டார், மற்றபடி கதவு மூலையில் நின்று கொண்டு காதோடு காது வைத்து அறபாத் கிசுகிசுக்கவில்லை, அதனால் அறபாத்தின் தேடல் ஆய்வு வாசிப்பு ஆகியவற்றின் சாரம் அது, ஆனால் உண்மையில் விடுதலைப் புலிகளால் முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்ற ஆதாரங்கள் அறபாத்திற்குக் கிடைத்திருந்தால் நிச்சயம் அவர் தனது கருத்துப் போக்கில் மாற்றம் கொண்டு வந்திருப்பார், விடுதலைப் புலிகளால் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதற்கான நிறைய ஆதாரங்கள் பிற்பட்ட நாட்களில் எனக்குக் கிடைத்தன ஆனால் அவை அறபாத்திற்குக் கிடைக்கவில்லை அதனால்தான் அவ்வளவு காரமாக எழுத வேண்டியிருந்திருக்கிறது, அது இலக்கிய உலகில் வாஸ்தவமானது, இப்போது கூட அறபாத்திற்கு அந்த உண்மை தெரிய வரும் போது மானசீகமாக அவர் அஷ்ரஃப் சிஹாப்தீனிடம் நிச்சயம் மன்னிப்புக் கேட்டபார், அது அவரது தயாள குணம், இடையில் மூட்டி விடுவதற்கும் சேறு பூசுவதற்கும் ஒரு கூட்டம் அலைகிறது, அவர்களுக்குத் தேவை முரண்பாடான சூழல் அவ்வளவுதான், இந்த அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதுதான் எஸ்.நளீமிற்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்கும் இடையேயான முரண்பாடும், அஷ்ஷெய்ஹ் ஏபிஎம் இத்ரீஸிற்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குமிடையேயான முரண்பாடும், அவை பலராலும் பலவடிவங்களிலும் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன, இருவர் சேர்ந்து இதைக் கட்டமைத்து  முடித்துவிடுவர், யாத்ரா இதழின் பின்னணியில் இருந்து வடிவமைக்கப்பட்ட முரண் பல பொல்லாப்புகளைச் சப்தமின்றி உருவாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறது, இவற்றை நீக்குவதற்குப் பலர் முயற்சிப்பதே இல்லை, அதைக் கூர்மைப்படுத்த மட்டும் நிறையப் பேர் அலைகிறார்கள், பிடித்தவர்களென்றால் முதுகு சொரிவது பிடிக்கவில்லையென்றால் மலினப்படுத்துவது, இது போலவே எஸ்எல்எம் ஹனீபாவும், இன்றும் பலராலும் பலவாறு தூற்றப்படுபவர் அது குறித்து நிறைய உண்மையான விடயங்களை மற்றுமொரு குறிப்பில் பகிர்ந்து கொள்கின்றேன், எஸ்எல்எம் யார்? எப்படிப்பட்டவர்? என்பது இன்னும் பலருக்குத் தெளிவில்லாதவை.
உண்மைகளை உரக்கச் சொல்லுவதற்குப் பலருக்கு தைரியமில்லை, ஒருவரை முகத்தில் புகழ்வதும் அவர் இல்லாதவிடத்து இகழ்வதும் கேவலப்படுத்துவதும் அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன,
 
அச்சு முறை, வடிவமைப்பு, எழுத்துருத் தேர்வு, வர்ணத் தேர்வு என்பவற்றில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர் அஷ்ரஃப் சிஹாப்தீன், அவருடைய ரசனை இந்த விசயத்தில் மிகவும் மேம்பட்டது, அதனாலும் நிறையப் பேரின் காட்டமான விமர்சனம் அவர் மீது பதிந்தது, என்பேன், இப்போதுதான் பலர் இணையதளத்தில் குதியாட்டம் போடுகின்றனர், இவர்களெல்லாம் கணனியைத் தொடுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே அதில் கரை கண்டவர், அது குறித்து எப்போதேனும் அவர் அலட்டிக் கொண்டது கிடையாது,

இப்போது அஷ்ரஃப் சிஹாப்தீனும் சோலைக் கிளியும் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள்,
சோலைக்கிளியிடம் கேட்டேன்
'அஷ்ரஃப் சிஹாப்தீனைத் தெரியுமா?'
'இல்லை, நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால் இதுவரைக் கண்டதில்லை'
'இவர்தான் அஷ்ரஃப் சிஹாப்தீன்'
சோலைக்கிளியும் அஷ்ரஃப் சிஹாப்தீனும் முகமன் கூறிக் கொண்டார்கள், கைலாகு கொடுத்துக் கொண்டார்கள், அஷ்ரஃப் சிஹாப்தீன் கதிரையொன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு கிளியுடன் கதைக்கத் தொடங்கினார், அவசரமாகச் செல்ல வெளிக்கிட்டவர் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அங்கு கழித்தார், இருவரும் பல விடயங்கள் குறித்து தெளிவாகப் பேசிக் கொண்டார்கள், நான் அவர்களின் உரையாடலை எதுவுமே பேசாமல் இரண்டு பேராசான்கள் ஒன்றினைந்து நிகழ்த்தும் விரிவுரையைச் செவிமடுப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தேன், மிகவும் சுவாரஸ்யமான அந்த உரையாடலுக்குத் தடை போட்டது பசி, அப்போதும் அவர்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் கதைத்துக் கொண்டிருந்தார்கள், எவ்வளவு நேரம் வயிறு தாக்குப் பிடிக்கும்? பின்னர்  இருவரும் விடை பெற்றுக் கொண்டனர், பின்னர்தான் மூத்த இலக்கியவாதி மானா மகீன் வந்தார் இன்னுமொரு சுவாரஷ்யம் நிகழ்ந்தது, அதையும் பிறகு பார்ப்போம்,

அப்போது ஏற்கனவே சோலைக் கிளியையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் விமர்சித்துக் கொண்டிருந்த கனவான்களைக் கடந்து சோலைக் கிளி செல்லும் போது அவர்களுக்கு இவர்தான் சோலைக் கிளி என்று அறிமுகப்படுத்தினேன், அப்போது போட்டார்கள் ஒரு போடு இருவருமே இணைந்து,

'ஆஹ் நீங்களா சோலைக் கிளி இது வரையும் கண்டதில்ல நீங்க பங்ஷனுக்கெல்லாம் வாரதில்ல அதான் தெரியாது, அற்புதாமன கவிதைகள் எழுதுறீங்க நல்லா இருக்கு, காத்திரமான கவிதைகள், விழா வெச்சா கட்டாயம் எங்களையும் கூப்பிடுங்க'

எனக்கு வானமே இடிந்து தலையில் விழுந்தாற்போலாயிற்று, எப்படியெல்லாம் இந்த மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள், இப்படிப்பட்டவர்களிடமிருந்து எப்படிச் சத்திய எழுத்துக்களை எதிர்பார்க்க முடியும்,
ஆனாலும் அவர்கள்தான் இப்போது இலக்கிய ஜாம்பவான்கள்

தொடரும்...

Saturday, August 4, 2012

சொல்ல நினைப்பதை...




வாழ்க்கை குறித்த புரிதல்களை நிறையப் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். அதிலும் எனது சிறைச்சாலை வாழ்வு பற்றி நிறையப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறேன். 2011 ஜூலை 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தொடங்கிய எனது சிறை வாழ்க்கை மார்ச் 2012 வரை நீடித்தது. ஏழு மாதங்களைக் கடந்துவிட்ட இந்த சிறைச்சாலை வாழ்க்கைதான் எனது வாழ்வின் பொற்காலம். 

திருமணம் செய்து இரண்டரை மாதங்களில் என் மனைவியைத் தவிக்கவிட்டுவிட்டு நான் தனியாகப் போன பின் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் உயர் ரிச்டர் அதிர்வுகள் தான், காரணம் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் அதனோடிணைந்த பிந்திய நிகழ்வுகளும்தான். உயர் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் இந் நிகழ்வு குறித்து ஒன்றையும் என்னால் எழுதமுடியவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் அது குறித்து என்னால் எழுத முடியும். இறைவன் நாடினால் நிச்சயம் அது அனைத்தும் என்றாவது ஒருநாள் எழுதப்படும். 
நான் திடீரென்று மரணித்தாலும் கூடக் கவலைப்படத் தேவையில்லை அனைத்தையும் எப்போதோ எனது குரலில் பதிவு செய்து பாதுகாப்பாக இணையத்தில் சேமித்து வைத்திருக்கிறேன். அதன் கடவுச் சொல்லைக் கூட என்னை உயிருக்கு உயிராய் நேசிக்கும் ஒரு நண்பியிடம் கொடுத்தும் வைத்திருக்கிறேன். எனவே உலகுக்கு சொல்லப்படாதது எதுவும் சொல்லப்படாமலேயே போகாது. ஆதலினால் எப்போதும் நான் மரணிப்பதற்குத் தயார். ஏற்கனவே நான்கு முறை மரணித்தவன் தானே நான். என்னைக் குறி வைத்து துப்பாக்கி சுமந்து மறைந்திருந்த கோழைகளின் உயிர் குடிக்கும் ஆசை மயிரிழையில் தவறிப் போனது, 2004 டிசம்பர் 14 இரவு வேளை அடை மழையில் அவர்கள் நடாத்திய தாக்குதலில் நான் மரணித்துப் போனேன் என்று இப்போதும் கருதுகின்றேன். 
ரூபியா என்ற ஒருத்தி இல்லாது போயிருந்தால் இந்த முஸ்டீனின் மரணச் செய்தி பத்திரிகையில் வந்திருக்கும். 
'இனந்தெரியாதோரால் சுடப்பட்டு இளைஞர் மரணம் - காவத்தமுனையில் சம்பவம்' 
ஒரு ஐந்து செக்கன்கள் ரூபியா தாமதித்திருந்தால் சரியாக நடு மண்டையில் கைத் துப்பாக்கியின் குண்டுகள் இறங்கியிருக்கும். இரத்தக்காயத்தோடு நின்ற எனது அழைப்புக்கு உடனடியாகப் பதிலளித்து எனக்குஅடைக்கலம் தந்த ரூபியா எனது தாய் வழியிலும் தந்தை வழியிலும் உறவுக்காரி. அவள் அன்று செய்த பேருபகாரத்திற்கு இன்று வரையும் நான் கைம்மாறு செய்திலன்.
அந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து முதன்முறையாக எழுதுகின்றேன்.
முதலாவது சூடு காலில் பட்டதோடு சரி. 
இரண்டாவது மூன்றாவது குண்டுகளுக்கு எதுவும் சாதிக்க முடியாமல் போயிற்று. 
அன்றே எனது மரணம் நிகழ்ந்திருந்தால்...
'இவனுக்குத் தேவையில்லாத வேலை' 
என்ற அடிக்குறிப்புடன் எனது அத்தியாயம் மூடப்பட்டிருக்கும். உடம்பை மண் தின்று எந்தவொரு எச்சமும் இல்லாது போயிருக்கும். 
ஆனாலும் எனது உழைப்பு, சமூகத்துக்கான குரல், மக்களைக் காக்கும் முயற்சிகள், என்றாவது ஒரு நாள் யாராலாவது பதிவு செய்யப்பட்டிருக்கும். அதுதான் காலத்தின் பணி, காலம் எதையும் சரியாகச் செய்யும். 
எனவே அந்த முதல் கொலை முயற்சியோடு நான் மரணித்துப் போனேன். 
இப்போது நான் வாழும் வாழ்க்கை எனக்கு மேலதிகமாகவும் அதிஷ்டமாகவும் கிடைத்தது. அந்த அதிஷ்டவசமான வாழ்க்கை மேலும் மூன்று முறை இலக்கு வைக்கப்பட்டது. அப்படியும் அது அவர்களினால் காவுகொள்ளப்படவில்லை. துப்பாக்கிதாரிகளால் கடைசிவரையும் கொல்ல முடியாமலேயே போயிற்று. எனவே ஏற்கனவே நான் நான்கு முறை மரணித்து விட்டேன். இனி மரணிக்கப் போவது ஐந்தாவது முறை. அதனால் மரணம் எனக்கு பொருட்டே கிடையாது. அதனால்தான் எல்லாவற்றையும் உடனுக்குடன் இப்போதுள்ள தொழிநுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி பதிவு செய்து ஆவணமாக்கி வைத்துள்ளேன். அதனால்தான் மிகப் பயங்கரமான விசயங்களைக் கூட எனது மரணத்தின் பின்னர் எனது குரலில் ஒரு வாக்குமூலமாக எனது கையெழுத்துப் பிரதியாக ஒப்பத்துடன் உலகு அறிந்து கொள்ளும் என்ற பெரும் ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் எனக்கிருக்கிறது. நெஞ்சில் தைரியமுள்ள எந்தக் கோழையும் எப்போதும் இந்தப் பிணத்தைக் கொல்லலாம். ஐந்தாவது முறையாக. 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு இரண்டு மாதங்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன், எனது சிறை வாழ்க்கையின் எஞ்சிய காலம் பொலன்னறுவை சிறைச்சாலையிலும் கழிந்துள்ளன. இப்போது உலகில் மிகத் தெளிவானதும் மிக மகிழ்ச்சிகரமானதுமான ஒரு மனிதன் இருக்கிறான் என்றால் அது நான் தான். ஏனெனில் எனக்கு எதைப்பற்றிய கவலையும் இல்லை. அதனால் குழப்பமுமில்லை. எனது வாழ்க்கையில் இடப்பட்டிருக்கும் பல்லாயிரம் முடிச்சுக்களை இனிவரும் காலங்களில் எனது எழுத்துக்கள் அவிழ்த்துப் போடும். அதனால் நானாகவே பாதுகாப்பு கருதிப் போட்ட மர்ம முடிச்சுக்களும் இனி அவிழ்ந்து  போகும். அவை நிறையப் பேருக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருக்கும், 
ஏன் எனது திருமணம் கூட எனது வாழ்வில் போடப்பட்ட, அதுவும் என்னால் போடப்பட்ட ஒரு மர்ம முடிச்சுதான், எனது மனைவிக்குக் கூடத் தெரியாது, அந்த முடிச்சு அவிழ்க்கப்படும் போது அவளே அறிந்து கொள்வாள். அப்போது இரண்டு தெரிவுகள் அவளுக்கிருக்கும் 
ஒன்று உலகில் உள்ள எல்லோரையும் விட அதிகமாக என்னை அவள் காதலிப்பாள், கௌரவிப்பாள், நேசம் கொள்வாள் எனக்காகவே தன்னை அர்ப்பணிப்பாள், 
அல்லது விவாகரத்துப் பெற்றுக் கொண்டு சென்று விடுவாள். இதில் எது நடந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை, எது நடந்தாலும் நான் மரணிக்கும் வரை அவள் எனது நிழலில் இருப்பாள். அதிலிருந்து அவள் எப்போதும் விடுபட முடியாது. இப்படி எனது வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக மாற்றுவதற்கான சிந்தனை சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட பின்னர் தான் எனக்குள் உதயமாகின்றது. 

செய்யித் குதுப், அப்துல் காதிர் அல் அவ்தா, ஸைனப் அல் கஸ்ஸாலி, ஹஸன் துராபி, அர்பகான், அஹ்மத் யாஸின் என்று எனக்குப் பிடித்த எல்லா மனிதர்களும் சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அதைப் படிக்கும் போது மயிர்கள் சிலிர்த்துவிடும். இதயம் கனத்துவிடும். சிறைச்சாலை என்பது உலகில் உள்ள ஒரு நரகம் என்று நினைத்துக் கொண்டேன். அந்தத் துன்பங்களையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்வைக் கட்டமைக்கத் தொடங்குபவன்தான் வெற்றி பெற்று சரித்திரத்தில் இடம் பிடிப்பான். எனக்கு சரித்திரத்தில் இடம் பிடிக்கும் ஆசையெல்லாம் கொஞ்சம் கூடக் கிடையாது. ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அதிகம், ஆசை என்று சொல்வதை விட பேராசை என்று சொல்வது மிகவும் பொருத்தம். எனக்குப் படிப்பித்தவர்கள் இந்தப் பெரியார்களைப் பற்றி மிக உணர்வு பூர்வமாக நிறையவே சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பட்ட வேதனைகளையும் அனுபவித்த கொடுமைகளையும் விபரிக்கும் போது அதை அனுபவித்தால் தான் நமது கொள்கையின் உறுதியை உணர்ந்து கொள்ள முடியும் என்று அப்போதுகளில் நினைத்துக் கொள்வேன். என்றாவது ஒரு நாள் நான் சித்திரவதைகளை அனுபவிப்பேன் என்றும் அப்போது தான் என்னை நான் சுயமதிப்பீடு செய்து கொள்ள முடியும் என்றும் உறுதியாக நம்பினேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை. எனக்கு முப்பது வயதாகு முன்னரே அதை அனுபவிக்க கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. ஒன்று சொல்லட்டுமா 
'உலகில் எந்தக் கொம்பனாலும் இந்த இறைவனின் அடிமையை தலை வணங்கச் செய்ய முடியாது' 
நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். எளிமையையும், ஏழ்மையையும், பணிவையும் மிகமிக அதிகமாக நேசிக்கின்றேன். உண்மையான வாழ்க்கையின் சரியான அடையாளங்கள் அவைதாம். அதனால் இந்த உயர்வு உயிர்ப்பானது. நாமெல்லாம் ஒரு கடுகுக்குச் சமன் என்பதை உள்ளத்தின் ஆழத்தில் மிகத் தெளிவாகப் பதித்துக் கொள்ளச் செய்த பேருபகாரம் சிறைச்சாலையையே சாரும்.   
   
பொலிசாரின் தண்டனைகள் மிகவும் கொடூரமானவை. மனிதாபிமானமற்றது. எத்தனை கோடி மனித உரிமைச் சட்டங்கள் இருந்தாலும் அவற்றால் எதையும் சாதிக்க முடியாது, 
வெறுமனே ஒரு கோஷம்தான்...இந்த மனித உரிமை மயிர் மண்ணாங்கட்டியெல்லாம் 
யாராலும் எதையும் தடுத்து நிறுத்த முடியாது. அதிகாரம் வாய்க்கப் பெற்றவர்கள் நினைத்ததைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்,  மனித உரிமைப் போராட்டம் ஒரு அழகான கோஷம், அத்துடன் அது ஒரு நாய்ப் பொழப்பு. சும்மா சத்தம் போடுவதற்குச் சரியது, எளிதாக ஒரு உதாரணம் சொல்வேன் 
கடல் நீரை நன்னீராக மாற்றுவோம் என்று கூஜாக்களில் நன்னீர் சுமந்து கடலில் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். 
அத்தோடு சும்மா சத்தம் போடுவது, சின்னதாய் ஒரு சலசலப்புக்கும், நாய் தொண்டை நீர் வற்றக் குரைக்குமல்லவா அது போல, அதனால் இதை 'நாய்ப் பொழப்பு' என்றேன். 
இந்தியாவில் பொடா, தடா என்று பல்வேறு பிரிவுகளில் கைது செய்யப்பட்டு லட்சக்கணக்கில் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் அப்பாவிகளையும் அபு கரீப், குவாதனாமோ போன்ற அமெரிக்காவின் சிறைக் கூடங்களில் நடக்கும் மனித இனத்துக்கெதிரான பாதங்களையும் இஸ்ரேலிய சிறைகளில் அனுவனுவாக சிதைத்துக் கொல்லப்படும் மனிதத்தையும்  இந்த உரிமைகளால் காப்பாற்ற முடிந்ததா? முடியுமா? ஒரு நாளும் முடியாது. உலகம் அழியும் வரை சிறைக் கூடமும் சித்திரவதையும் தொடரும் அதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு கிக் வேண்டுமல்லவா அதுதான் இந்த மனித உரிமைக் கோஷம். எந்த நாட்டில் வதை கூடம் இல்லை?. 
என்னை அவர்கள் நிர்வாணப்படுத்திய போது இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டேன். அவர்கள் செய்த வதைகள் அனைத்தும் எனது உறுதியை திடப்படுத்தி அதிகரிக்கச் செய்தனவே தவிர கொஞ்சம் கூட என்னை அது தளரச் செய்யவில்லை. அந்த வதைகளின் மூலம் என்னை நான் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டேன் என்று எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. நான் வீரன் என்று எனக்கு உள்ளுணர்வு சொல்லியது. 
வதை செய்பவனுக்கு அவன் எதிர்பார்ப்பது தேவை, அது கிடைத்து விட்டால் விட்டுவிடுவான், வதைக்கப்பட்டவன் பொய் சொன்னாலும் கூட. 
அத்தனை வதைகளையும் தாங்கிக் கொண்டு நானும் அவர்களை மிக மோசமாக வதைத்தேன். அதுதான் எனது மாறாத புன்னகை. அனைத்தையும் தாங்கிக் கொண்டு நான் புன்னகைக்கும் போது அவர்கள் மிருகமாக மாறிப் போவார்கள். 
நித்திரை கிடையாது. சாப்பாடு கிடையாது, தண்ணீர் கிடையாது எனக்கு அவை மிகவும் சுவாரஷ்யமாக இருந்தன. அவர்கள் எதிர்பார்த்த எதையும் நான் கொடுக்கவில்லை. நானும் நடிக்கத் தொடங்கினேன். அவர்கள் நினைத்தார்கள் நான் கும்பிட்டு சரணாகதி அடைந்து கெஞ்சுவேன் என்று. 
கைகளைப் பின்னால் வைத்து கழுத்துக்கு மேலால் முதுகுப் பக்கமாக ஒரு கையையும் இடுப்போடு இணைந்து மறு கையையும் முதுகுப் பக்கமாக இணைத்து விலங்கு போடுவதற்கு மூன்று பேர் முயற்சித்தும் அது அவர்களால் முடியாமல் போனது. நான் தீவிரவாதி தானே அதனால் அவர்கள் நினைத்த மாதிரி என்னைக் கையாளலாம். கொன்றால் கூட சட்டமும் நீதியும் நியாயமும் சரியென்று விழி நிலையில் மௌன அங்கீகாரம் கொடுக்கும், கடைசியில் விலங்கு மாட்டத் தோற்றுப் போய், இரண்டு விலங்குகளில் கைகளை இணைத்தார்கள். அதை எனக்கு சொகுசாக நான் மாற்றிக்கொண்டேன். ஒரு கைவிலங்கினால் இரண்டு கைகளையும் பிணைத்துவிட முடியும். ஆயினும் அதற்கு நான் அவகாசம் கொடுக்கவில்லை. ஒரு விலங்கினால் பிணைத்தால் பத்து நிமிடத்தில் செத்து விடலாம் என்று தோன்றும் ஆறு மணித்தியாலங்கள் அதே நிலையில் தொங்கிக் கொண்டிருந்தால் எவ்வளவு சுவையாக இருக்கும். அவ்வளவு எளிதில் எதையும் அவர்களுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. என்னை வதை செய்த எவர் மீது எனக்கு கோபம் வரவில்லை. இப்போதும் கூட அவர்களை நான் உண்மையாக நேசிக்கிறேன். வதை செய்தல் மூலம் என்னை எனக்கு அடையாளம் காண்பித்த அவர்களை கோபிக்க முடியுமா? 
அப்போது எனக்கு ஒன்று தெளிவாய் புரிந்தது அதைச் சொல்ல நான் யாருக்கும் பயப்படவும் தேவையில்லை. அது ஆணவத்தின் வெளிப்பாடும் இல்லை. முட்டாள் தனமுமல்ல. யாராலும் என்னைத் தகர்த்து விட முடியாது. நான் எதற்கும் அஞ்சுபவனுமல்ல. அச்சம், பயம் என்று எதுவும் என்னிடம் ஒரு துளியளவும் கிடையாது. என்னால் எல்லாம் செய்ய முடியும். என்னால் எதுவும் செய்ய முடியும். ஒரு போர்க்களத்தில் தளபதியாகவும் நிற்க முடியும். கடைக்கோடியில் பண்டம் சுமக்கும் ஒரு கழுதை போலவும் இருக்க முடியும். பேனை தூக்கி ஒரு பத்திரிகை ஆசிரியராய், வானொலியில், தொலைக்காட்சியில் எதிலும், அதுபோல கெமரா தூக்கிய ஒரு ஒளிப்பதிவாளனாய், இயக்குநராய், ஏன் ஒரு ஆன்மீகத் தலைவனாய், அரசியால் வாதியாய், பெருஞ்செல்வந்தனாய், ஒரு எளிமையான ஏழ்மை வாழ்வு வாழும் ஏழையாய் .... யாராலும் என்னைத் தகர்த்துவிட முடியாது. என்னால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் எல்லாவற்றையும் மிஞ்சி நான் அல்லாஹ் என்ற ஏக இறைவனின் ஒரு பலவீனமான மனித அடிமை அவனுக்கு முன்னால் மட்டுமே எனது சிரம் பணியும். மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒருவன்  வேறு எப்படிச் சிந்திக்க முடியும். நான் சொல்ல நினைப்பதைச் சொல்லி விடுவேன், செய்ய நினைப்பதைச் செய்து விடுவேன். யாருக்கும் அடி பணிந்து தாழ்ந்து போகும் எண்ணம் எனக்குக் கிடையாது. 
'தலை வணங்கு, சரணடைந்து விடு இல்லாவிடின் அடுத்த செக்கன் உன்னைக் கொல்வோம்' என்றாலும் கூட சும்மா ஒரு பேச்சுக்காகவேணும் அடிபணிய நான் தயாரில்லை 
'கொல்லப் போகிறாயா கொல்' 
அதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது உலகத்தைக் கட்டியாள நான் நினைக்கவில்லை பிறகு ஏன் சாவைப் பற்றி பயப்பட வேண்டும். 
நான் எனது சிறுவயது முதல் ஒரு கொள்கையைச் சுமந்திருக்கிறேன். அதற்காக என்னால் முடிந்ததை நான் செய்ய வேண்டும். அந்தக் கொள்கையை நான் தான் காப்பாற்ற வேண்டும் என்பதில்லை. அதற்கு என்னால் முடிந்ததைச் செய்தல், அவ்வளவு தான் என் பணி. என்னைப் போல லட்சம் பேர் கொல்லப்பட்டாலும் அந்தக் கொள்கையானது  வாழ்ந்து கொண்டுதானிருக்கும், உலகின் கடைசி மனிதன் மரணிக்கும் வரை. பின்னர் ஏன் நான் அதற்காக அலட்டிக்கொள்ள வேண்டும். எனது பங்கு என்னவென்பதை மட்டும் நான் யோசிக்கின்றேன். அதைச் செய்ய துடிக்கின்றேன், முயற்சிக்கின்றேன், செயற்படுகின்றேன். 
யாருடைய அங்கீகரமும் எனக்குத் தேவையில்லை,  ஒரேயொருவரின் அங்கீகாரம் மட்டுமே தேவை, அது அந்தக் கொள்கையின் சொந்தக்காரன். அவன் எனது உள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குத் தெரியும் நான் யார் என்று. ஆக பலவீனமான மனிதர்கள் பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை, அதற்கு தயாருமில்லை. என்னைப்பற்றி யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். அவையொன்றும் எனது கொள்கைப்பிடிப்பிலும், லட்சியத்திலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திடாது. அதே நேரம் அவர்கள் மீது கோபமோ ஆத்திரமோ கூடக் கொள்ளத் தேவையில்லை. அனைத்தையும் ஒரு புன்னகையால் எதிர்கொள்ள எனக்குத் தெரியும். எனவே தான் யாருக்கும் எதற்கும் அஞ்சும் அவசியம் எனக்குக் கிடையாது என்று சொன்னேன். எனக்குள் இந்த ஓர்மத்தைப் பட்டை தீட்டியது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள வாழ்வுதான். அதைப் பட்டை தீட்டியவர்கள் அதிகாரிகள் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக நான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை நேசிக்கிறேன். கனவுகளையும் லட்சியங்களையும் உறுதியையும் பற்றையும் பட்டை தீட்டிப் பொலிவு பெறச் செய்து ஒரு வெளிச்சத்தை எனக்குக் காண்பித்தது சிறைச்சாலையின் சூரிய ஒளி படாத எந்த வசதிகளும் இல்லாத ஒரு அறைதான். 

பொதுவாக சிறைச்சாலை ஓர் உயர்ந்த பாடத்தைக் கற்றுத் தரும். அது நம்மைச் சூழ இருப்பவர்கள் யார்? உண்மையாகவே நம்மை நேசிப்பவர்கள் யார்? நம்முடன் உண்மையான நட்பு பாராட்டியவர்கள் யார்? நமது நண்பர்கள் யார்? அவர்களின் தரம் என்ன? இதுபோக தனிப்பட்ட ரீதியில் சில விசயங்களை அது நமக்குக் கற்பிக்கும். எனது தாய், எனது மனைவி, எனது நெருங்கிய உறவுகள் அனைவரையும் மிகத் துல்லியமாக நான் கணித்துக்கொள்ள எனக்கு எத்தனை ஆயிரம் சந்தர்ப்பங்களை சிறைச்சாலையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏற்படுத்தித் தரும் தெரியுமா? மனிதர்கள் மாறும் நிலைப்பாடுடையவர்கள் எப்போதும் எல்லாமும் ஏறுமுகமாகவே இருக்க வேண்டும். வீழ்ச்சி வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். அப்படி ஒரு திடீர் வீழ்ச்சி வந்து விட்டால் அத்தோடு எல்லாம் முடிந்து விட்டன என்று நினைக்கிறார்கள். அதன் பின்னர்தான் அவர்களின் வார்த்தைகள் கடிவாளமின்றிய மூர்க்கத்தனமிக்க போர்க் குதிரைகள் போல் எல்லாப் பரப்புகளிலும் விரவித் தாக்குகின்றன. தம்மை நியாயப்படுத்துவதிலும், தன்னை நிலை நிறுத்துவதிலும் மட்டுமே, அனைவரும் மிக மிகக் கவனமாக இருப்பார்கள். 

அடுத்தது நண்பர்கள், ஒன்றாகப் படித்தவர்கள், எந்தவொரு யதார்த்தத்தையும் தேடாமல் நிகழ்வுகளை வைத்து முடிவெடுத்து மின்னல் வேகத்தில் அதைப் பரப்பி விடுவார்கள். 
நான் பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும் போது, நான் கல்வி கற்ற ஜாமியா நழீமியாவின் பழைய மாணவர் சங்கமான ரபிததுன் நழீமிய்யீன் தனது பொதுக் கூட்டம்மொன்றில், ஜாமியா நழீமியாவில் கல்வி கற்ற மாணவர்களில் நானும் ஒருவன் என்றவகையில் அவர்கள் பேசிக்கொண்ட விடயங்களில் எனது கைது பற்;றிய கருத்தாடல் மிக முக்கியமானதொன்றாகவும் இருந்ததாம். 
வெளியில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் பற்றிய செய்திகள் என்னை வந்தடைந்து கொண்டேயிருந்தன.

ஜாமியா நழீமிய்யாவின் எனது தோழர்களே! உங்கள் யோக்கியம் என்னவென்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். என்னை விமர்சிக்கவோ என்னைக் குறித்து கருத்துச் சொல்லவோ உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அருகதை இல்லை. நான் நழீமியாவின் கற்கையை பூரணப்படுத்தவில்லை. அதைப் பூரணப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை. எனது பாதை நிதானமானது அது உங்களைப் போல கனவுகளாலும் கற்பனைகளாலும் உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளாலும் சோடிக்கப்பட்டதல்ல. அது எதார்த்தமானது. நீங்கள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் நிறைய விசயங்களைச் செய்து முடித்துவிட்டேன். எனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு விசயத்தைக் கூட உங்களால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் இன்னும் கோட்பாடுகளில்தான் கதையளக்கிறீர்கள் நான் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றேன். உங்கள் உலகம், நகர்வு, சிந்தனை, செயற்பாடு, நிதிமூலம் வளவாளர்கள் எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் யார்? அனைத்தும் எனது விரல் நுனியில் இருக்கிறன. ஆனால் பாருங்கள் என்னைப்பற்றி உங்கள் யாருக்கும் எதுவும் தெரியாது. 
காரணம் தெரியுமா நீங்கள் தேடல் நடாத்தவில்லை. நான் தேடல் நடாத்தினேன். உங்களைப் போல எனக்கு 'பலாய்' கழுவிக் கொண்டிருக்க அவகாசமிருக்கவில்லை. 
எனவே தோழர்களே இதன்பிறகாவது என்னைப்பற்றி தேடிவிட்டு கருத்துச் சொல்லுங்கள். 
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் பத்திரிகையான எங்கள் தேசத்தில் ஒரு கட்டுரை வந்தது. அதில் கட்டுரை எழுதியவனுக்கு எழுத மட்டும்தான் தெரியும். எதைப் பற்றியும் தேடல் நடாத்தாத எருமை மாடு அந்த எழுத்தாளன். அந்தக் கட்டுரையைப் படித்த போது எனக்குச் சிரிப்பு வந்தது. இப்படிப்பட்ட எருமைகளை நம்பி ஓரு இஸ்லாமிய இயக்கம் பத்திரிகை நடாத்துவதை நினைத்துத்தான் அந்தச் சிரிப்பு.

உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லவா?
சமூகக் களம் என்பது நளீமிய்யாவுக்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பது போல மொழிபெயர்ப்புச் செயற்பாடும் கிடையாது. தகவல்களைப் பொறுக்கி கோர்த்து விடும் செயற்பாடும் கிடையாது. 
'இன்வெஸ்டிகேஷன் ஜேர்னலிஸம்' பற்றித் தெரியுமா?  புலனாய்வுப் பத்திரிகையாளனாய் உள்ள ஒருவன் நீண்ட தேடலின் பின்னும் ஆய்வின் பின்னும் எழுத வேண்டிய விசயங்களை சும்மா கண்ட கண்ட மாதிரி நளீமிய்யாவுக்கு இறுதி வருட ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போக்கில் எழுதுவது பொறுத்தமானதல்ல. எனவேதான் எதையும் சரியாக துல்லியமாக ஆய்ந்தறிந்து மிகச் சரியாச் செய்ய முனைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பாலர் வகுப்புப் பிள்ளை திடுக்கதை சொல்வது போன்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சுமக்கும் பொறுப்புக்கேற்ப தகுதியை மேம்படுத்துங்கள். 

நீங்கள் அனைவரும் இந்த முஸ்டீனைப் புரிந்து கொள்ள மிக நீண்ட காலம் எடுக்கும். விரைவில் உங்கள் அனைவருக்கும் எனது உதவி தேவைப்படும் அப்போது அள்ளுண்டு வருவீர்கள், அது உங்களுக்குள்ள நிர்ப்பந்தம், காலத்தின் போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவத்தின் அறுவடையாகச் சொல்கின்றேன். நிச்சயம் வருவீர்கள், அப்போது உங்களைப் பார்த்துப் புன்னகைப்பேன். வஞ்சமின்றி. இன்ஷா அல்லாஹ்

சிறைச்சாலைக்குச் சென்றபின்னர் எனக்கு மிகவும் பெரிய ஓய்வு கிடைத்தது. நிறையச் சிந்திக்கவும் எழுதவும் அவகாசம் கிடைத்தது. வெளி உலகில் குற்றம் புரிந்து மாட்டிக்கொள்ளாத, உள்ளத்தை மறைத்து பொய்மையோடு வாழும் எதிர்மறை மனிதர்களோடு வாழ்ந்தேன். ஆனால் சிறையில் குற்றம் புரிந்து அகப்பட்டுக் கொண்டதும், குற்றம் நிரூபிக்கப்பட்டதுமானதும்,  சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து  வைக்கப்பட்டிருந்ததுமான மனிதர்களுடன் வாழ்கிறேன். மொத்தத்தில் குற்றவாளிகளுடன் வாழ்வதாக பொதுவாக எடுத்துக் கொண்டேன். இங்கு இவர்களிடம் வெளியில் உள்ள மனிதர்களிடம் போன்று போலி கிடையாது. அனைவரும் நேர்மறை மனிதர்கள், மிகவும் வெளிப்படையானவர்கள். உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி விடுவார்கள். அவர்கள் செய்த குற்றத்தை அப்படியே ஒழிவு மறைவின்றி காலப்போக்கில் ஒப்புவித்துவிடுவார்கள். கைதிகளுக்கு வேஷம் போடத் தெரியாது. வேஷம் போட்டால் அது வெளிப்படையாகத் தெரிந்து விடும் இந்த புள்ளியில் இருந்தது தான் எனது சிந்தனை சூடு பிடித்தது. வாழ்க்கை பற்றிய தேடல் நிதானத்துடன் என்னை தள்ளிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் புரிந்துக்கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகிறது. 

இந்நிலையில் கிடைக்கும் நிதானம் கடந்தகால வாழ்வையும், எனது வாழ்வில் கடந்துபோன அனைத்து மனிதர்களையும் ஒவ்வொருவராகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது. ஒவ்வொரு செயற்பாடுகளையும் வார்த்தைகள் கூட மாறாமல் நினைவுத் திரையில் இருந்து மீட்டெடுத்து மீள்படைப்புச் செய்துவிடுகின்றது. எல்லா நிகழ்வுகளையும் மிக அமைதியாக அசைபோட முடியுமாக இருக்கிறது. 
அப்போது பல விடயங்கள் தெளிவாகப் புரிந்தன, அவை... 
சிறைச்சாலை சென்று வந்த ஒருவன் ஏன் தெளிவாக இருக்கிறான் என்பதும், சிறைச்சாலையில் இருந்து வரும் எழுத்துக்கள் ஏன் வீரியம் மிக்கவையாக இருக்கின்றன என்பதும். சலனமில்லாத சிந்தனைக்கான சூழலை சிறைச்சாலை உருவாக்கி விடுகிறது என்பதும்தான். 
இங்கு பொறுப்புகள் குறைவு. சாப்பிடுவதும், நித்திரை செய்வதும் தான் முக்கியமான வரையறுக்கப்பட்ட கட்டாயம் செய்ய வேண்டிய பணிகள். ஆயினும் அதில் கூட பலத்த நிர்ப்பந்தம் கிடையாது, இப்போது எழுதும் ஒருவனின் மனோநிலை தெளிந்த ஓடை போன்றது. அந்த எழுத்தில் குழப்பம் இருக்காது. தடுமாற்றம் இருக்காது ஒரு ஞானம் இளையோடும். அது சிறைச்சாலையில் மட்டுமே வசப்பட்டுப்போவது. 

சமூகத் தளத்தில் நான் நிறையப் பேருடன் பல்வேறுபட்ட நிலையில் பழகி இருக்கின்றேன். அவர்கள் ஒவ்வொருவரையும் மனதார ஆழமாக நேசித்தேன். அவர்கள் மீது எந்த எதிர்பார்ப்புகளுமில்லாது உண்மையான அன்பை மட்டுமே செலுத்தினேன். அப்படிப்பட்ட ஒவ்வொருவரையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள என்னால் முடிந்தது. 
இரண்டு எளிய சம்பவங்களை நினைவு கூருகிறேன். 
ஒர் அரச அதிகாரி, என்னைவிட இரண்டு தசாப்தங்கள் வயதில் மூத்தவர். என்னுடன் மிகவும் நெருக்கமாகப் பழகுகின்றவர், சமூக விவகாரங்களில் ஒன்றித்து இயங்குபவர், பலர் என்னிடம் அவரைப் பற்றி மிக மோசமாகச் சொல்லியிருக்கிறார்கள் அப்போதெல்லாம் அவரை நியாயப்படுத்தி நான் அறிந்த உண்மைகளைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன். அவருடன் நான் கொஞ்சம் நெருங்கிப் பழகுவதன் காரணத்தினாலும் அவரை மிகவும் நெருக்கமாக ஓரளவு அறிந்தவன் என்ற வகையினாலும் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நான் புரிந்து கொண்ட நியாயங்களால் மறுதலிக்க முடியுமாக இருந்தது, அதற்காக அவரிடம் எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை, அவருக்காக நான் கொடுக்கும் குரலை பெரும்பாலும் அவர் அறிந்துமிருக்கமாட்டார், சிலவேளைகளில் யாராவது சொல்லியிருந்தால் வாய்ப்புண்டு,  அவருக்கு ஒரு முறை பொருளாதாரப் பிரச்சினை வந்துவிட்டது. ஒன்றரை லட்சம் ரூபாய் உடனடியாகத் தேவைப்பட்டது. அப்போது எனது பராமரிப்பில் இருந்த ஒருவருக்காக வீடு கட்டிக் கொண்டிருந்தேன். அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பணத்தில் உடனடியாக ஒரு லட்சம் ரூபாவையும் பின்னர் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஐம்பதாயிரமுமாக அவரின் தேவைக்கு அவசியமான தொகை கொடுக்கப்பட்டது. அவர் மீது நான் வைத்திருந்த மரியாதையும் அன்பும் அப்படி என்னை செயற்பட வைத்தன. எப்போது தரவேண்டும் என்ற காலம் கூட நிர்ணயிக்கவில்லை. அவருக்கு வசதிப்படும் போது என்னைக் கஸ்டத்தில் ஆழ்த்தாமல் தருவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆயினும் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பணம் வரவில்லை. நான் குறிப்பால் உணர்;த்தினேன் அவருக்கும் அது தெரியும் தரக் கூடிய நிலையில் அவர் இருக்கவில்லை. அதனால் நானும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை. 

ஒன்றரை வருடங்கள் வீடு கட்டும் பணி பிற்போடப்பட்டது. அதனால் அந்த ஜீவனின் திருமணமும் பின்னோக்கிப் போயிற்று. பின்னரும் நான் அந்தப் பணம் குறித்து பெரிதாக எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. எனக்கு இறுக்கம் வரும் போது இங்கிதமாக குறிப்பால் உணர்த்துவேன். அவரால் முடிந்தால் தருவார். இல்லாத போது விட்டுவிடுவார். இப்படி ஒரு நல்ல புரிதல், நான் மனதார அவர் மீது அன்பு சொரிந்தேன். பின்னர் படிப்படியாக அவர் தனது கடனை நிறைவேற்றினார். 

நான் சிறைச்சாலைக்கு வந்தபின்னர் எனக்கு கிடைத்திருந்த அவகாசத்தை நபிமொழிகளைப் படிப்பதில் செலவிடலாம் என்று தோன்றியது. எனது உறவுக்காரர் ஒருவரை அவரிடம் உரிமையோடு அனுப்பிவைத்தேன். அவரிடம் இருந்த நபிமொழித் தொகுப்பான ஸஹீஹூல் புஹாரியின் முதல் மூன்று பாகங்களையும் வாங்கி வரும்படி சொன்னேன்,  உறவினர் சென்று  அவரிடம் கேட்டபோது, அவர் ஒரு கேள்வி கேட்டாராம். 
'எப்போது திருப்பித் தருவார்' என்று 
மிக வேதனையோடு உறவுக்காரர் வந்து தகவல் சொன்னார், அனைத்தையும் மறந்து விடுங்கள் என்று அவரைச் சமாதானம் செய்து வைத்தேன். 
அந்த வலி அது மறக்காது மாறாது. பின்னர் நான் ஒரு நண்பர் மூலமாக நபிமொழித் தொகுப்புகளைப் பெற்றுக் கொண்டேன். 
அவர் எனக்காகவே புதிதாக அந்தத் தொகுப்புகளை வாங்கி அனுப்பியிருந்தார். 
சில புத்தகங்களை இரவலாக வாங்கிப் படிப்பதற்கு கூட அவரிடம் நான் பெறுமதியற்றுப் போனேனா என்று யோசித்தேன். என்ன செய்வது மனிதர்கள் இப்படித்தான் எப்போது மாறிப்போவார்கள் என்று சொல்லமுடியாது. ஆனாலும் ஒரு உண்மை என்னுள் ஆழமாகப் பதிந்து போனது. 
அவர் என்னை உண்மையாக நேசிக்கவில்லை. இப்படி எத்தனை பேர் இருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அவர்கள் மீது நான் கொண்டுள்ள உண்மையான அன்பையும் மரியாதையையும் என்னால் விலக்கிக் கொள்ள முடியவில்லை பரிதாபத்திற்குரியவர்களாக மாறிப்போன அவர்களை இப்போதும் நேசிக்கிறேன். 

மற்ற சம்பவம் இரண்டு இலக்கியப் பேர்வழிகள் அவர்கள் பற்றிய தப்பான புரிதல்களை கொண்டுள்ள பலரிடம் நேரடியாகச் சென்று அந்தத் தப்பான புரிதல்களை நீக்குவதற்காக நீண்டநேரம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அவர்களுடன் கூடவே இருந்து கொண்டு நட்பு பாராட்டிக் கொண்டிருக்கும் சிலர் மற்றவர்களிடம் மோசமாகப் பேசும் போது அதை உடைத்து நான் அவர்களை நியாயப்படுத்தியிருக்கிறேன். ஒருவர் மூத்த இலக்கியவாதி, ஒரு சிறுகதையாசிரியர், ஒரு தேர்ந்த வாசிப்பாளன். மற்றவர் அவருக்குப் பிந்திய தலைமுறை, அவர் ஒரு மௌலவியும் கூட, அத்துடன் கவிதை. சிறுகதை பத்தி எழுத்து என்று நன்கு அறியப்பட்டவர், ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் பிரதிநிதியும் கூட, இவர்கள் இருவரும் என்னைவிட வயதில் மிகவும் மூத்தவர்கள். அவர்களைப் பற்றி அரசல் புரசலான நிறையச் செய்திகள் வரும் அது தானே இலக்கிய உலகத்தின் நியதி. பிரதேசத்தின் பிரபல கவிஞர் ஒருவருடன் அவருடைய வீட்டிலேயே அந்தக் குறிப்பிட்ட இரு இலக்கியவாதிகள் தொடர்பாகவும் கவிஞர் முன்வைத்த அவர்களது சமயக் கொள்கை, இலக்கிம் சார்ந்து தன்னிலையான குற்றச்சாட்டுக்களை நான் பலமாக எதிர்த்து உடைத்தேன். அந்தக் காரசாரமான விவாதத்தின் பின்னர் எமக்குள் சின்னதாய் ஒரு இடைவெளி கூட வந்தது. அதைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. 

காரணம் அந்த இலக்கியவாதிகள் இருவரோடும் மிக நெருக்கமாக நான் பழகியிருக்கிறேன், அவர்களின் நடையுடை பாவனைகளை அவதானித்திருக்கிறேன், அனைத்திற்கும் மேலாய் குரோதமாகப் பேசும் அல்லது தப்பபிப்பிராயம் கொண்டு கருத்துரைக்கும் போக்கு என்னிடம் இருக்கவில்லை, யாரோ சொன்னார்கள் என்று அதில் தொங்கிக் கொண்டு யாரையும் வார்த்தைகளால் நான் தாக்குவதுமில்லை அப்படித் தன்னிச்சையாகத் தாக்குபவர்களை அப்படியே விட்டுவிடுவதுமில்லை, அதனால்தான் அவர்களினைப் பற்றிய தப்பான கருத்தியலை அது தப்பானதுதான் என்று நிறுவ முயன்றேன். 
ஆனால் நான் சிறைக்குச் சென்ற பின்னர் அது எல்லா ஊடகங்களினதும் செய்தியாக மாறியது, அது முழுமையாக ஒரு பக்கச் செய்தி மட்டுமே, எந்தவொரு ஊடகத்துக்கும் செய்தி வழங்கும் உரிமை எனக்களிக்கப்படவில்லை, ஒவ்வொருவரும் எழுதியது செய்தியானது, பொலிசார் சொன்னது உண்மையானது என்னைப் பிடிக்காதவர்கள் நினைத்ததெல்லாம் சத்தியமானது, குறிப்பிட்ட அந்நிகழ்வு தொடர்பில் என்னால் சொல்லப்படாத அனைத்தும் மறைந்து போக நான் குற்றவாளியாக்கப்பட்டேன், அப்போதும் எனக்கு ஒரேயொரு உறுதியான நம்பிக்கையிருந்தது
'என்னைப் புரிந்து கொண்டவர்கள் நிச்சயம் என்னை நியாயப்படுத்துவார்கள், அவர்கள் தன்னிச்சையாக இந்தப் போலியான கருத்துக்களின் பின்னால் இழுபட்டிட மாட்டார்கள்' என்பது அது. ஆனால் நடந்தது???

 அந்த இரு இலக்கியவாதிகளும் வெளியிட்ட கருத்துக்களும் இணையத் தளத்தில் இட்ட பின்னூட்டங்களும் இப்படியமைந்தது, 
'சம்பவம் நடந்து எமது பிரதேசத்தில்தான் இப்படி ஈனத்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்ட அந்த ஒருவருடன் இவ்வளவு காலமும் பழகி இருக்கிறோமே என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது. பணத்திற்காக இப்படியெல்லாம் செய்வார்களா என்று அதிர்ச்சியடைகிறோம்' 

அவர்கள் இருவருக்கும் சபாஷ் சொன்னேன். 
சத்தியமாக நான் இப்போது வெட்கப்படுகின்றேன். இவர்கள் மீது நேசம் கொண்டதற்காக, 
எதையும் ஆய்வு செய்யாது தேடல் செய்யாது ஒருபக்க செய்திகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எப்படி இவர்களால் இப்படி அநாகரீகமான கருத்துச் சொல்ல முடிந்தது. 
அப்படியாயின் அவர்களின் எழுத்துக்களும், சமூகத்தின் மீதான அவர்களின் பார்வையும் மற்றவர்களின் மீதான அவர்களின் விமர்சனமும் 'ஒன்லி வன் சய்ட்' தான், ஒரு பக்கச் செய்திதான். 
அவர்களின் எழுத்தில், பேச்சில் உண்மையில்லை 
அப்படியாயின் செயற்பாடுகளும் கூட உண்மையாக இருக்காது. இப்போது நான் படும் வெட்கம் அப்படியாக உண்மைகளை உணர்ந்ததன் விளைவாகத்தான். அவர்களைப் பற்றி மோசமாக ஒரு செய்தி வரும்போது நான் உரத்து மறுதலிப்பேன் ஏனெனில் எனக்குத் தெரியும் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. அதுதான் உண்மையான புரிதல் மற்றும் உண்மையான நேசத்தின் வெளிப்பாடு. என் மனதில் நிலைகொண்ட குறைபாடு அவர்களுடன் நான் பழகியிருக்கிறேன். பிரயாணம் செய்திருக்கிறேன். கருத்துப் பறிமாறியிருக்கிறேன் அப்போது என்னைவிட வயதில் மூத்த அவர்கள் என்னை விளங்கிக்கொள்ளாமலா போனார்கள். 
'சேச்சே' முஸ்டீன் அப்படி செய்திருக்காது. அதற்குப் பின்னால் ஏதோ ஒரு உண்மை மர்மமாக மறைந்திருக்கும். எங்களுக்குத் தெரியும் தானே முஸ்டீனைப் பற்றி' இப்படித்தான் அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அது தான் உண்மை, யதார்த்தம். புரிதலின் சரியான அர்த்தம். 
ஆனால் அவர்கள் வன் சைய்ட்.... சிக்கிக்கொண்டு அதை எவ்வளவு தைரியமாக இணையதளத்தில் பதிவு செய்து விட்டார்கள். அதிலிருந்து இரண்டு விஷயங்கள் எனக்குப் புரிந்தன. 
ஒன்று இதை இனி முஸ்டீன் எங்கே பார்க்கப்போகிறான் என்று கருதிக் கொண்டது 
இரண்டு, இந்த முக்கியமான தருணத்தில் நமது கருத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதுவும் விசயத்தின் போக்கிற்கு ஏற்ப, காரணம் நாம் பெரிய இலக்கியவாதிகள் என்ற மூன்றாந்தர சாக்கடைச் சிந்தனையும் அழுகிப் போன ஆசையும் அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். 

தோழர்களே!  முஸ்டீன் மட்டும் தான் சிறைச்சாலையில் அவனது கண்கள் சிந்தனைகள், மூளை, இதயம் என்ற எல்லா வார்ப்புக்களும் சிறைச்சாலைக்கு வெளியேதான் உயிர்ப்போடு இருந்தன. மறந்து விடாதீர்கள் ஆனால் ஒன்று விரைவில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன். இது குறித்தெல்லாம் கேட்பேன். அப்போது போலியான புன்னகையாலும் புணைந்தெடுக்கப்பட்ட வறண்ட வார்த்தைகளாலும் என்னை திருப்திப் படுத்தலாம் என்று நினைத்து விடாதீர்கள், நீங்கள் திருப்தியாக பதிலளிக்காவிட்டால் நான் பேனையாலும் கெமராவாலும் உங்களைத் தண்டிப்பேன், அது மிக மிகக் கேவலமான தண்டனையாக இருக்கும். சட்டம் அப்போது மௌனித்துப் போகும். 

காத்தான்குடியில் ஒரு நண்பன் பற்றிய செய்தி வந்தது. 
ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டிருந்த வேளை ஊர் மக்களால் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு பள்ளிவாசலில் ஒப்படைக்கப்பட்டார். 
எனக்கு இச்செய்தி எத்தி வைக்கப்பட்டபோது அது ஹொட் நியூஸ், ஆனால் அது என்னில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. தகவல் சொன்னவருக்கு நான் சொன்னேன். அவன் அப்படி ஒருபோதும் தகாத உறவு கொண்டிருக்க மாட்டான் அதில் வேறு ஏதோ சிக்கல் இருக்கிறது. ஏனெனில் அவன் எனது நண்பன் அவனுடன் பழகியிருக்கிறேன். அவனை எனக்குத் தெரியும். 
எல்லோரினதும் ஒருமித்த கருத்து அவன் தப்புச் செய்தான் என்பதுதான் 
சம்பவம் நடந்திருக்கிறது. பள்ளிவாயலில் கூட அவன் விசாரிக்கப்பட்டு இருக்கிறான். அந்தச் செய்திகள் எல்லாம் கிடைத்த போது கூட நான் கொஞ்சமும் அவன் மீது அவநம்பிக்கை கொள்ளவில்லை. அவன் மீது கோபம் வரவில்லை. எனக்கு கிடைத்த தகவலை அப்படியே நான் பலருக்கும் சொல்லவும் இல்லை, என்னிடம் தகவல் கேட்பவர்களுக்கும் நான் சொன்னது 
'சம்பவம் நடந்தது உண்மை ஆனால் குறித்த நபர் அப்படிச் செய்யக் கூடியவரல்லர். அதன் பின்னால் ஏதோ ஒரு சதி இருக்கக் கூடும்' 
அப்படித்தான் அதன் மீதான வேகத்தை என்னால் உடைக்க முடிந்தது. இறுதியில் எனது நம்பிக்கை வென்றது. சதியின் பிடி வலு விழந்தது. அவனுக்காக எதிரிகளை வீழ்த்த, எனது உயிரை இழப்பதற்கும் சிரமமிக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கும் நான் தயாராக இருந்தேன். அவனுக்காக நானும் சிந்தித்தேன். 
இப்படித்தான் என்னால் எந்தவொரு விஷயத்தையும் எடுத்துக்கொள்ள முடிந்தது. உலகமெல்லாம் அளந்த அந்த நண்பனுக்கு சிறைச்சாலைக்கு வந்து என்னைப் பார்க்க அவகாசம் இல்லாமல் போனது மிகவும் துரதிஷ்டமானது. அதைவிட மிகவும் துரதிஷ்டமானது அவனது கருத்துக்கள்

'உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். மதியாதோர் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதர்க்கு ஒளவை சொன்னது அதில் அர்த்தமுள்ளது' 

எல்லாப் புரிதல்களையும், என் நண்பர்களையும் நேசத்துக்குரியவர்களையும் நான் இப்படியே எடுத்துக் கொள்கிறேன். அவர்களுடன் நெருக்கமான உறவு பாராட்ட இனி நான் தயாரில்லைதான் ஆனாலும் அவர்களிடம் கேட்பதற்கு என்னிடம் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. அவற்றை நான் அவர்களிடம் கட்டாயம் கேட்பேன். அவர்களின் நியாயப்படுத்தல்கள் எப்படிப்பட்டவை என்பதை அறிய வேண்டாமா? 

இப்படி ஒவ்வொருவராக இவ்வளவு துல்லியமாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது சிறைச்சாலையில்தான். இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை எனக்கு உருவாக்கித் தந்தது சிறைச்சாலைதான். 
அடுத்துவரும் முப்பது வருடங்களுக்கு எனது செயற்பாட்டுத்தளம் எப்படி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே போடப்பட்ட எனது எதிர்காலத் திட்டத்தை மிகமிக வினைத்திறன் கொண்டதாக வடிவமைக்க எனக்குப் போதிய அவகாசம் சிறைச்சாலையில்தான் கிடைத்தது. 
எனது மரணம் எப்போது என்பது எனக்குத் தெரியாது. அடுத்த செக்கனும் மரணிக்கலாம், இன்னும் ஐம்பது வருடங்களின் பின்னும் மரணிக்கலாம், மரணத்தை தீர்மானிப்பது இறைவன். எனவே மரணம் வரும்போது வரட்டும் அதுவரைக்கும் வாழ்வதற்கான திட்டமிடலை நான் போட்டுக் கொள்ளத்தானே வேண்டும். சிறைச்சாலை என்னை எல்லாத் தளங்களிலும் மிக வலுவாக ஒழுங்கு படுத்தியிருக்கிறது. ஒவ்வொருவர் பற்றிய மிக நுண்ணிய அறிவூட்டலை அது செய்துவிட்டது. உண்மையாகவே நான் சிறைச்சாலைக்கு வராதுவிட்டிருந்தால் வாழ்க்கையில் தோற்றுப் போய் இருப்பேன். வேஷதாரிகளை நம்பி எல்லாவற்றையும் இழந்திருப்பேன் இறுதியில் நிம்மதியில்லாமல் அலைந்து திரியும் பைத்தியமாகிப் போயிருக்கவும் கூடும்.
வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களையும் அதன் தூய்மையான வடிவில் சிறைச்சாலையில் தான்; தரிசிக்க முடிந்தது. பிரச்சினை இல்லாத மனிதனே உலகில் கிடையாது. அந்தப் பிரச்சினைகளை எப்படி ஒழுங்குப்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் எமது நிம்மதி, வெற்றி, தோல்வி எல்லாம் தங்கியிருக்கிறது. சில தவறுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. சில தவறுகள் மிகவும் நியாயமானவை ஆயினும் சட்டத்தின் முன்னால் அவை அவனைக் குற்றவாளியாக்கி விடுகின்றன. 

ஒருவன் இரட்டைக்கொலை செய்கிறான். முதலில் ஒரு வாலிபனைக் கொலை செய்கிறான். அது சட்டத்தின் முன் யார் செய்தது, என்று நிரூபிக்கப்படவில்லை மர்மம் இன்னும் தொடர்கிறது. ஆனால் அந்தக் கொலையைச் செய்தவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். பின்னர் தன் மனைவியைக் கொன்றதை மட்டும் ஒப்புக் கொள்கிறான். 
ஏன் தன் மனைவியைக் கொன்றான்? அவள் அவனுக்குத் துரோகம் செய்திருக்கிறாள். தன் மனைவி அந்த இளைஞனுடன் சல்லாபித்திருப்பதை அவன் தனது கண்களாலேயே கண்டுவிட்டான். நிதானித்து செயற்பட்டான். உடனே உணர்ச்சி வசப்பட்டு எதையும் செய்து குழப்பிக் கொள்ளாது, முதலில் அந்த இளைஞனைக் கொன்று விட்டு பின்னர் மனைவியைத் துண்டம் துண்டமாக வெட்டி மிக மிகக் கொடூரமாக அவள் மரணத்தின் ஒவ்வொரு துளியையும் அனுபவித்து செத்துப் போகச் செய்தான். 
இப்போது அவனுக்கு நிறையச் சந்தேகம் அவனுடைய பிள்ளைகள் மூன்றும் அவனுக்குப் பிறந்தது தானா என்று? அவனது ஆத்திரம், கோபம், வழிமுறை அனைத்;துமே நியாயமானது. அவன் மானஸ்தன் அதனால் தான் ஒரு வாரத்தில் இரண்டு கொலை. ஆனால் சட்டத்தின் முன்னால் அவனது நியாயம் எடுபடுமா. 
'ஏன் மனைவியைக் கொன்றாய்?'
'அவளோடு வாழப் பிடிக்கவில்லை அதனால் கொன்றேன்' அப்போதும் கூட அவன் அவளுடன் வாழ்ந்த வாழ்வை கொச்சைப்படுத்தி இறந்து போன அவளை அவமானப்படுத்தவில்லை அவளது மோசமான நடத்தையை பகிரங்கப்படுத்தவில்லை. ஆயினும் அவன் சட்டத்தின் முன் குற்றவாளி. நியாயம் இங்கு எடுபடாது. சாட்சியங்கள் அனைத்தையும் தீர்மானித்து விடுகின்றன. தர்மம், நியாயம் எல்லாம் மௌனிகளாகி விடுகின்றன. அவனை சமூகம் ஒதுக்கும் ஆனாலும் அவன் இனி ஒரு நடைப்பிணம் தான். ஆழமாக நேசித்த ஒருத்தியை அவன் கையால் கொன்று விட்டு ஒரு பேருண்மையை மனதில் போட்டுப் பூட்டிக் கொண்டு அவஸ்தைகளுடன் ஒரு பிணமாகத்தான் வாழ முடியும். தனக்கு துரோகம் செய்தவளைத் தண்டித்துவிட்ட திருப்தியுடன் அவன் இன்னொரு பெண்ணை ஏறெடுத்துப் பார்ப்பதற்கும் தயாரில்லை. அப்படியாயின் அவன் சத்தியவான் தானே. அவன் செய்த கொலை நியாயமானது தானே. ஆயினும் சட்டம் அதையெல்லாம் கண்டு கொள்ளாது அவனைத் தண்டிக்கும். சில வேலை சாட்சிகள் சரியாய் அமையாவிட்டால் அவனைச் சட்டம் தண்டிப்பதற்குச் சிரமப்படும்.  சட்டத்தின் முன்னால் அவன் மறைத்த உண்மையை சிறைச்சாலையில் மறைக்க முடியாமல் போயிற்று. இதுதான் இங்குள்ள பெரிய விநோதம். ஓவ்வொரு நிகழ்வுகளின் மீதான கேள்விகள் மிகவும் அர்த்தம் பொதிந்தவை. கைதிகளுக்கு அனுபவம் தான் இவ்வாறான கனதி மிக்க கேள்விகளுக்கான அடித்தளத்தை இட்டுள்ளது. ஒருவன் எத்தனை முயன்றாலும் சிறைச்சாலைச் சூழலில் அவனால் நடிக்க முடியாது. காரணம் இங்குள்ளவர்கள் எல்லோரும் வாழ்க்கையின் நிஜ நடிகர்கள் அவர்களின் முன்னால் போலியாக போடப்படும் வேஷங்கள் நீண்ட நேரம் நிலைக்காது. அதனால் அவர்களிடம் உண்மைகளை அதிக காலம் மறைக்க முடியாது. 

எனது மனது இப்போது மிகவும் ஆழமான அமைதியைச் சுவாசிக்கின்றது. வாழ்க்கையின் சரியானதோர் படிமத்தையும் அதன் மீதான ஆழமான வாசிப்பைப் புரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் எனக்கு சரியான சந்தரப்பத்தை பொருத்தமான நேரத்தில் இறைவன் அருளினான். அதனால் தான் எனது வாழ்வின் பொற்காலமாக சிறைச்சாலையில் இருந்த காலத்தைக் கருதுகிறேன். இப்போது மிக எளிதாக என்னால் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள சூத்திரத்தை விளங்கிக்கொள்ள முடிகின்றது. ஒருவர் மிக நீண்ட நாட்களுக்கு என்னை ஏமாற்ற முடியாது. அப்படி ஏமாற்றுபவன் என்னை விட அதிகமாக சிறைச்சாலையிலும் தடுப்புக் காவல் தண்டனைகளாலும் புடம் போடப்பட்டவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவனிடம் நான் தோற்றுப் போவது மிகவும் வாஸ்தவமானது, காரணம் அவன் என்னைவிட புத்திசாலி. என்னை ஏமாற்ற முடியும். ஆயினும் அவ்வளவு எளிதில் அவனால் அது முடியாது. இந்தப் பின்னணியில்தான் கௌரவமான எனது நண்பர்களையும் தாய் உட்பட்ட குடும்ப உறவுகளையும் மனைவி உட்பட்ட சொந்தங்களையும் மிக எளிதாக என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியுமாக இருக்கிறது. இதற்கு முந்தைய காலங்களில் மனிதர்களை எதிர்கொள்ளும் போது எனக்கிருந்த வாசிப்பறிவும் சிந்தனையும், ஓரளவு சமூகத் தளத்துடனான தொடர்பும்தான். 
ஆனால் இப்போது அவை பலமடங்காகப் புடம் போடப்பட்டு ஒளியேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் வாழும் உலகம் தான் சிறைச்சாலை தினம் தினம் பலர் வருவார்கள். அவர்களின் வாழ்வின் மொத்தச் சரிதத்தையும் அப்படியே கொட்டிவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. அவர்கள் எந்த வயதினராய் இருந்தாலும் சரி எந்த நிலையிலும் இருந்தாலும் சரி, எல்லாம் சிறைச்சாலையில் பூச்சியத்திலிருந்து தொடங்குகின்றது. அவரது பெறுமானம் பூச்சியம். அவரது கௌரவம், உழைப்பு, சமூகநிலை, மானம், மரியாதை, பதவி, செல்வம் எல்லாமும் பூச்சியம்தான். 

ஒரு குழந்தை பிறக்கும் போது எதையும் கொண்டுவருவதில்லை. பூச்சியத்திலிருந்து தான் அதன் வாழ்க்கை தொடங்குகின்றது. அது போலத்தான் சிறைச்சாலையிலும் ஒருவர் அனைத்தும் இருந்தும் பூச்சியத்திலிருந்து எல்லாவற்றையும் தொடங்குகின்றார். இந்த வாழ்வின் தத்துவம் மிகவும் வித்தியாசமானது. அதைச் சரியாகப் புரிந்து கொள்கின்ற போது உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் மிக மிக எளிதாகக் கையாள முடியும். அவர்கள் எந்தப் பெரிய கொம்பர்களாக இருந்தாலும் சரியே. 

தொங்கிக் கொண்டிருந்த எனது வாழ்க்கை சிறைச்சாலை என்ற பல்கலைக்கழகத்தில் நிலைநிறுத்தப்படுகின்றது. அது ஒரு சக்தி வாய்ந்த நிகழ்வு. அமைதியும், தெளிவும் அந்நிலை நிறுத்தலின் பின்னால் நிறைந்து கிடக்கின்றன. உலகில் யாரிடமுமில்லாத நிதானத்தால் அது அலங்கரிக்கப்படுகின்றது. அந்த அலங்காரம் மிகவும் கவர்ச்சிகரமானது. மிகவும் கனதியானது. பின்னால் அவ்வளவு உள்வாங்கிக் கொள்ள முடியாது. பொதுவாக நான் எந்தவொரு விடயத்திலும் அதிகம் பேசுபவன். எனக்குத் தெளிவான ஒருவிடயத்தை மிகமிக ஆக்ரோஷாக விவாதிப்பேன் சில வேளைகளில் பலர் சலித்துக் கொள்வதும் உண்டு. 
'முஸ்டீன் அதிகம் பேசுவான்' என்று 
அப்போதுகளில் அது தப்பில்லை அது எனக்குச் சரி, அவர்களால் சரியாக அது உள்வாங்கப்படவி;ல்லை. என்னை அதிகம் பேசவிடாமல் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாத களமாக இருந்துவிட்டது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிப் போய்விட்டது. 
நான் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தெளிவான சாத்தியமான களத்தில் கூட நான் அதிகம் கடைப்பிடிப்பது மௌனமும்,அர்த்தங்கள் பொதிந்த புன்னகையும் தான் 
வாழ்க்கையின் மிக உயரிய இந்தத் தத்துவத்தை இந்த இருபத்தெட்டு வருடங்களில் என்னால் எங்கும் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஏழுமாத சிறை வாழ்க்கை எவ்வளவு தத்ரூபமாக என்னை செதுக்கிவிட்டது. 

இப்போது தெரியும் எனது வார்த்தைகளின் பெறுமதி எத்தகையது என்றும் அதன் கனதி எத்தகையதென்றும். அதற்காக பேசவேண்டிய இடத்தில் மௌனியாகிச் சென்றுவிடுவேன் என்றும் அர்த்தம் கிடையாது. பேச்சும் செயற்பாடுகளும் மிகச் சமாந்திரமாக இருக்கும். இரண்டும் வலுவானவை, மனிதர்களை ஒரு புன்னகையாலும் மௌனத்தாலும் எதிர்கொண்டு செற்பாடுகளால் வெற்றி கொண்டு புத்தியாலும் உழைப்பாலும் நிலைநிறுத்திக் கொள்ளல் எனும் உயரிய கோட்பாட்டை எனக்குள் தினம் தினம் பட்டை தீட்டிய விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் கைதிகள் தான். 
கட்டணமில்லாது அரச செலவில் நான் கஸ்டங்களைத் தாங்கியபடி, என்னைப் பூச்சியத்தில் இருத்திக் கொண்டு கற்றுக் கொண்ட பாடமிது. இந்தப் பாடம் எனது வாழ்வில் வசப்படாது போய் இருந்தால் சத்தியமாக வாழ்ந்து கெட்டவர்களின் பட்டியலிலும், வென்று தோற்று அடையாளம் தொலைத்தவர்களின் பட்டியலிலும், எனது பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கும். அது எனது பரம்பரைக்கே ஈடுசெய்ய முடியாத பாரிய வீழ்ச்சியாக அமைந்துவிட்டிருக்கும். ஆனால் காலம் என்னை நஷ்டவாளியாக்க விரும்பவில்லை. என்னைக் கொண்டு எதையோ முடிக்க வேண்டுமென்பதை திட்டமிட்டுள்ளது போலும், என்னைக் கொண்டு முடிக்க வேண்டியவைகளைக் காலம் மிகச் சரியாக செய்து முடிக்கும். ஒரு கருவியாக நின்று செயற்படுவது மட்டும்தான் இப்போது எனக்குள்ள ஒரே ஒரு பணி. 

இனி வரும் பொழுதுகளில் மிகுந்த யோசனையின் பின்னர்தான் முடிவுகள் எட்டப்படும் அவை மிகுந்த உறுதியானதாக மாற்ற முடியாததாக இருக்கும். யாராலும் எப்போதும். 
50 ரூபாய் திருடிய ஏழையும் 50 கோடி மோசடி செய்த பணக்காரனும் ஒரே தளத்தில் நின்று நமக்கு வாழ்க்கை பற்றிய அறிவூட்டல் நடக்கும் ஒரே தளம் சிறைச்சாலைதான். 
தனது சொந்த மகளை கற்பழித்தவன், 
60 வயது மூதாட்டியுடன் வல்லுறவு கொண்ட 25 வயது இளைஞன், 
சிறுமியைக் கற்பழித்த புத்தபிக்கு, 
தகாத உறவு கொண்டு வன்மம் செய்து மாட்டிக் கொண்ட செல்வந்தன். 
பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிகாரி,
திருடன், கொள்ளைக்காரன், குடிகாரன், போதைப்பொருள் வியாபாரி, கடத்தல்காரன், தாயுடன் உறவு கொண்டவன், மோசடி செய்தவன், வசியம் செய்த பூசாரி, கையாடல் செய்த ஹாஜியார், மனைவியைக் கொன்றவன், தாயைக் கொன்றவன், தந்தையக் கொன்றவன், மகளை, நண்பனை, அதிகாரியை என்று தொடரும் கொலை பட்டியல்காரர்களும் 
ஜனாதிபதியை, அமைச்சரைக் கொல்ல சதி செய்தவன், 
கொள்கைக்காக ஆயுதம் ஏந்தி போராடியவன், 
கொள்ளையடிக்க ஆயுதம் ஏந்திப் போராடியவன், 
அடிபுடி, சண்டை மல்லு, பழங்கால பொக்கிஷங்களை, புதையல்களை தோண்டியவன்,  என்று உலகில் உள்ள எல்லாக் குற்றவாளிப் பட்டியலும் சங்கமிக்கும் ஒரே தளம் சிறைச்சாலை.

இங்கு என்னால் இரண்டு அம்சங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. 
ஒன்று வயிற்றுப் பசிக்கான போராட்டம். அதில் முறையாக, முறைகேடாக ஏதோவொரு விதத்தில் சட்டத்தின் முன் குற்றவாளியாக்கப்பட்டவர்கள், குற்றவாளியாகக் கருதப்பட்டவர்கள் 
அடுத்தது பேராசை கொண்டு உலகைச் சுருட்டி தன் பையில் வைத்துக் கொண்டு வாழ நினைத்த பேராசைக் காரனும் உடல் பசிக்காக தன்னை மீறிச் செயற்பட்டவனும் 
இவை இரண்டினதும் அடிப்படையில் அடைந்து கொள்ளுதல் தீர்த்துக்கொள்ளுதல் என்ற என்ற அம்சங்கள் தான் இருக்கின்றன. 

இத்தனை பேருக்குள்ளும் நின்று வாழ்க்கையை ஒரே தளத்தில் புரிந்து கொள்ளக் கிடைத்த காலத்தை பொற்காலம் என்று விளிப்பதில் தவறில்லை. இப்போது எனக்கு மிக எளிதாக கிடைக்கப்பெற்ற வரம் ஒருவனின் செயற்பாடுகளை கொஞ்சம் அவதானித்தால் போதும் அவன் எத்தகையவன் என்று தீர்மானித்துக் கொள்ள முடியும். 
உள்ளத்தில் உள்ளதை இறைவன் மட்டுமே அறிந்தவன். 
வெளிப்படையான செயற்பாடுகள் பார்வை, உடலசைவு அவன் பேச்சு இவை உள்ளத்தின் எண்ணவோட்டங்களால் வழிநடாத்தப்படுபவை எனவேதான் அவதானிப்பின் மூலம் அவன் உள்ளத்தில் மறைத்து வைத்திருக்கும் ஒன்றை துல்லியமாகக் கணிப்பீடு செய்து கொள்ளலாம். 
இப்போது ஒன்றை மட்டும் என்னால் உரத்துச் சொல்ல முடியும். 

இந்த முஸ்டீன் இனி வாழ்வில் என்றுமே தோற்றுப் போகமாட்டான் இறைவன் அருளால் மரணம் கூட அவனின் உயர்ந்த வெற்றிதான். வீழ்ச்சி கிடையாது தோல்வி கிடையாது.

பேயன்




'ரபாய்'
அவனை அறியாதவர்களே இருக்கமாட்டார்கள்,
மடையன் என்றால் அப்படியொரு மடையன்,
பேயன் என்றால் அப்படியொரு பேயன்.
அவனை யாரும் கணக்கிலெடுப்பதில்லை. அதே நேரம் பேயன் என்பதால் கணக்கெடுக்காமல் இருப்பதுமில்லை. ஆச்சரியம் என்னவென்றால் அவனைச் சூழ எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவன் ஒரு பதினைந்து வருடக் கதை. பதினேழு வயதிலிருந்து முப்பத்திரண்டு வயது வரையானது. அவனைப் பற்றி யாரிடமாவது ஒரு மதிப்பீடு கேட்டால் கிடைக்கும் ஒரே பதில்.
'ஈய்யீ அவனா? அவன் பேயன்'
என்பதுதான்.
ஆமாம் அவன் பேயன் தான். அவன் பார்க்கும் வேலைகள் அப்படி. அவன் ஊருக்குள் பழகாத மனிதர்களே இல்லை. படித்தவர், பாமரர், இராணுவம், பொலிஸ், விடுதலைப்புலி, கஞ்சா குடியன், சூது விளையாடுபவன், பொண்புடியன், குடிகாரன், ஆயுதம் விற்பவன், கடத்தல்காரன், கொள்ளைகாரன், கள்ளன், என்று தொடங்கி ஆன்மீகவாதிகள், வைத்தியர்கள், அரச உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், அதிபர்கள் எல்லாத் தரப்பினருடைய தொடர்பும் அவனுக்கிருக்கிறது. எல்லோரைப் பற்றியும் அவனுக்குத் தெரியும். அவன் என்ன கேட்டாலும், அதற்கு அவர்கள் பதில் சொல்லுவார்கள். இத்தனைக்கும் சிறுவர்களைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை. அவர்கள் தாம்; அவனின் நல்ல சிநேகிதர்கள். அவனைச் சூழ எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

அதுபோல அவன் திரியாத வீதிகளுமில்லை. அலையாத தெருக்களுமில்லை, அவன் திரிச்சலுக்கு நேரமும் இல்லை. அதிகாலையிலும் வீதியில் இருப்பான், உச்சி வெயிலிலும் இருப்பான், நடு நிசியிலும் இருப்பான். அவனை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. சந்திக்கு வருவான். சந்தைக்குப் போவான். ஆற்றங் கரைக்குப் போவான், அங்கு நீண்ட நேரமிருப்பான், ஆற்றில் தோணியில் திரிவான். மோட்டார் சைக்கிளில் வீதியில் திரிவான். சிலவேளைகளில் செருப்பில்லாது திரிவான். இத்தனைக்கும் கடைத்தெருவில் எதுவும் வாங்க மாட்டான். சந்தையிலும் எதுவும் வாங்க மாட்டான். அவ்வளவு மீன்வகை கொட்டிக் கிடக்கும். அவன் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். சும்மா கொடுத்தாலும் சில சமயம் வாங்க மாட்டான் அப்படியொரு பேயன்.

அவன் பேச்சில் இருக்கும் இனிமை எப்போதும் மாறியது கிடையாது. மரண வீட்டில் சந்தித்தாலும் அதே இனிமை திருமண வீட்டில் சந்தித்தாலும் அதே இனிமை. அவன் பேயன் என்பதால் அவனைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. எல்லோரும் அவனிடமிருந்து ஒதுங்கிச் செல்வதையே விரும்புவார்கள். ஆனால், அவன் விட்டால் தானே. வலிந்து சென்று கதைப்பான். அவன் கதையில் பத்தும் பலதும் இருக்கும். அறிவியல் மேதை போலவும் வடிகட்டின முட்டாள் போலவும் அவன் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் அவனோடு நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருக்கலாம்.

சில போதுகளில் ஓரிரு  மாதங்களுக்கு அவனைக் காண முடியாது. அப்படி எங்காவது சென்று வந்து விட்டால் கொஞ்சம் வேகமாக ஓடித்திரிவான். அவனை யாரும் பெரிதாகக் அலட்டிக் கொள்ளாததனால் அவன் இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்று தான்.

ஊருக்குள் ஒரு களவு நடந்து விட்டால் அவனும் சேர்த்துப் பேசப்படுவான், அதுபோலவே கொள்ளை நடந்தாலும் அவனது பெயரும் சேர்ந்து ஒலிக்கும் ஆனால் மற்றத் திருடர்களும் கொள்ளையர்களும் மாட்டிக் கொள்வார்கள். இவன் மட்டும் தப்பி விடுவான் அந்த ஆச்சரியம் ஒருவருக்குமே விளங்குவதில்லை.

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் நேரடி யுத்தம் நடந்;து கொண்டிருந்து, அது ஒரு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கொஞ்சம் ஓய்ந்திருந்த வேளை 'ரபாய்' என்னைத் தேடி எனது வீட்டுக்கே வந்தான். 'அக்கினி சுவாசம்' என்ற ஒரு பாடல் சீடி வெளியிட்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுத்துக் கொண்டிருந்த போது தான் அவனுடனான மிக ஆழமான சந்திப்பு நிகழ்ந்தது. எல்லோரையும் போல அவன் என்னையும் கையாண்டான். எனது படைப்பைப் பற்றியும் புகழ்ந்தான். எனது கைகளைப் பற்றிக் கொண்டு
'இனி நீங்க தான் என் குரு' என்றான்
அப்போதுதான் நான் சுதாரித்துக் கொண்டேன். அவன் அடுத்து கேட்கப் போகும் கேள்விகள் இன்னதாக இருக்கும் என்று மனதில் எடை போட்டபடி அவன் பேச்சுக்கு ஒரு சின்ன 'ப்ரேக்' கொடுத்தேன்.
எதிர்பார்த்தபடியே அவன் கேட்டான்.
'உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா?'
நான் எந்த மாற்றத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.
'எதற்காக?' என்றேன்
'எல்லாவற்றுக்கும் தான்'
'அப்படியென்றால்?'
'உங்களின் எல்லா செயற்பாடுகளுக்கும் நானும் துணை நிற்பேன்'.
'அப்படி.. ஒரு திட்டமும் என்னிடமில்லை'
'இல்லை உங்களால் அப்படி இருக்க முடியாது'
'ஏன் அப்படிச் சொல்கிறாய்'
'எனக்குத் தெரியும்... உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது'
'அப்படியொரு பிரச்சினையும் எனக்கில்லை'
'அப்படிச் சொல்ல வேண்டாம், உங்கள் உயிர் பெறுமதியானது. அதைப் பறிக்க யாருக்கும் இலகுவில் சந்தர்ப்பம் கொடுத்துவிட வேண்டாம்'
நான் போலியாகச் சிரித்துக்கொண்டே
'அப்படி யாருக்கப்பா என் உயிர் தேவைப்படப் போகிறது'
அவன் என்னிடம் எதிர் பார்த்த எந்தத் தகவலும் எனது முகபாவனையில் கூடக் கிடைக்காததால் சற்று தனது பேச்சின் தொனியை மாற்றினான். ஐந்நூறு ரூபாயொன்றை நீட்டி நூற்றைம்பது ரூபாய் பெறுமதியான சீடியை வாங்கினான்.
'மிகுதியும் எனது அன்பளிப்பு' என்றான்.
கொஞ்சம் இடைவெளிவிட்டுத் தொடர்ந்தான்.
'இதை நான் ஐந்து முறை பார்த்து விட்டேன். எனக்கும் ஒரு பிரதி வேண்டுமென்பதால் வாங்குகின்றேன்'
'சந்தோஷம் எல்லோருமே உன்னைப் போல இருந்துவிட்டால் எனக்கு நஷ்டம் வராது. அடுத்த முயற்சிக்கு நான் யாரிடமும் கையேந்த வேண்டியுமிருக்காது'
'சரி நான் வருகிறேன், எதற்கும் வெளியில் பெரிதாகத் திரிய வேண்டாம், கொஞ்சம் அவதானமாகத் திரியுங்கள், இரவில் வெளியேறவே வேண்டாம்'
'அப்படி என்ன பிரச்சினை இருக்கிறது? தெளிவாகச் சொன்னால்தானே புரிந்து கொள்ள முடியும்'
கலவரப் படாமல் கதைத்தேன்.
'இது எனது தொலைபேசி இலக்கம். ஏதும் சிக்கல் என்றால் உடனே கூப்பிடுங்கள்'
வாங்கிக்கொண்டபடி சொன்னேன்.
'நீ யார்..? இனியும் மறைக்கலாம் என்று நினைக்கிறாயா?'
கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தேன்
'இதுவரையும் நீ எதிர்பார்த்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லையே! என்னுடன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததிலும் அர்த்தமில்லையே! இப்படியே போய்விட்டால் என்னவென்று ரிப்போர்ட் அனுப்பப் போகிறாய்?' என்றதும் அவன் கொஞ்சம் அதிர்ந்து போனான்.
ஆனால் கஷ்டப்பட்டு அதன் வெளிப்பாட்டை மறைத்தான். அழுத்தமாக எச்சில் விழுங்கினான். முதன் முறையாக ஓங்கியறையப்பட்டவன் போல போலியாக சிரிக்க முனைந்தான். அவனிடம் பேசுவதற்கு உடனடிப் பதில் இருக்கவில்லை போலும். யோசித்தான் எதைச் சொல்வது? எதை விடுவது? என்பதில் அவனுக்குள் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அல்லது எனக்கு எது தெரியும்? எது தெரியாது? சிலவேளை எல்லாம் தெரியுமோ! என்று அந்தப் பேயன் கலங்கி நின்றான்.
ஆனால் உண்மையில் அந்தப் பேயனைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை எனக்கு. ஒரு அணுமானத்தில் அப்படியொரு போடு போட்டேன். எனது கேள்விக்கான பதிலை என்னிடமே எதிர்பார்த்தால் ஏதோ இருக்கிறது மேற்கொண்டு சமாளிக்க பிடியெடுக்க நினைக்கிறான் என்பதை விளங்கிக் கொண்டபடி அவன் பதில் அல்லது கேள்விக்காக அவகாசம் விட்டபடி காத்திருந்தேன்.
'அப்படியென்றால்?  என்ன சொல்ல வருகின்றீர்கள்?? எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை'
'அவ்வளவு எளிதில் என்னை யாரும் கொன்றுவிட முடியாது. இந்த தொலைபேசி இலக்கம் எனக்குத் தேவைப்படாது. நீங்கள் போகலாம் மீண்டும் சந்திக்காமல் இருப்பது நல்லம் என்று நினைக்கிறேன். இறைவன் எப்போது நாடியிருக்கிறானோ அப்போது எனது மரணம் வரும் அதை யாரும் தடுக்க முடியாது. அப்படித்தான் அவர்களால் தான் எனது மரணம் என்றால், அது தான் விதியென்றால் அதை எதிர்கொள்ள நான் எப்போதும் தயார். எனது மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்'
மூச்சுவிடாமல் நான் சொல்லி முடிக்கவும்
'ஆ! அந்தா.. பார்த்தீங்களா? உங்களுக்கு பிரச்சினை இருக்கிறது தெரிந்திருக்கிறது. 'அவர்களால் தான் மரணம்' என்றால் 'யார் அந்த அவர்கள்?' இனியாவது பேசலாமா?'
நான் தலையில் அடித்துக்கொண்டேன். உணர்ச்சிவசப்பட்டுப் பேசி முக்கியமானதொரு விசயத்தை விட்டுவிட்டேன். சட்டென்று அவனும் அதைப் பிடித்துக் கொண்டு தன் கேள்விகளுக்கு பதில் தேட முனைந்தான்.
அவனது புத்திசாலித்தனத்திற்கும் அவதானிப்புத் திறனுக்கும் அது  நல்ல சான்றிதழ்.
'சரி பேசலாம் ஆனால் இருவரும் பரஸ்பரம் ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும் உங்களைப பற்றிச் சொல்லி முடியுங்கள். என்னிடம் இருக்கும் தகவல்களுக்கு அது பொருந்தினால் மேற்கொண்டு பேசலாம்;' என்றான்
'சரி என்னைப் பற்றிய உண்மை இப்போதைக்குத் தெரிய வேண்டாம். உங்களை குறைத்து மதிப்பிட்டு விட்டேன். நேரம் வரும்போது அது உங்களுக்கே தெரியும். மேற்கொண்டு பேச முன்னர் இறைவன் மீது ஆணையிட்டு சத்தியம் செய்யுங்கள். நானும் சத்தியம் செய்கிறேன்'
பரஸ்பரம் சத்தியம் செய்து கொண்டோம்.
இறைவன் மீது இறுதியாக பற்று வைத்து காரியம் நகர்த்தும் ஒருவனையும் சத்தியத்திற்குப் பின் சந்தேகமற்று காரிமாற்றும் ஒருவனையும் ஆன்மீகத் தளத்தில் எடைபோட எனக்கு கஸ்டமாக இருக்கவில்லை.
ஆனால் மற்றவர்கள் அவனை வெள்ளிக் கிழமைகளில் தான் பள்ளியில் கண்டிருப்பார்கள், எந்தப்பள்ளிவாயலில் விரைவாக தொழுகை முடிகிறதோ அங்கு அதை முடித்து விட்டு தொழுகை களையத் தாமதிக்கும். பள்ளிக்கு முன் சம்பந்தமில்லாது அலங்கோலமாக நிற்கும் அவனை இந்த மக்கள் புரிந்து கொள்ள தசம அளவிலும் சந்தர்ப்பம் இருக்கவில்லை.

அவன் அப்படித்தான் காரியங்களைத் துல்லியமாக நகர்த்தினான்.
அவனை யாரும் சரியாக மட்டிட அவகாசம் அளிக்க அவன் தயாராக இருக்கவில்லை.
அவன் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு 'மைனஸ்' புள்ளியும் தான் அவனது பலத்தை அதிகரிக்கச் செய்தது.
ஊரிலுள்ள எத்தனை புத்திசாலிகளைப் பார்த்து அவன் மனதால் எள்ளி நகையாடி இருப்பான்.

'உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. இந்தத் தரவுகளைப் படித்துப் பாருங்கள். அது உங்களுக்கு விளங்கும்' என்றவன் மேலும் சில விஷயங்களைப் பேசினான்.
'உங்கள் சீடி ஏற்படுத்தியிருக்கும் அதிர்வு மிகக் கனதியானது. அது பேசும் விலை உங்கள் உயிர். எப்படியும் அடிப்பார்கள். புலிகள் சோர்ந்து விட்டதாய் தப்புக் கணக்கு போட வேண்டாம். உங்களைக் கொல்ல தமிழ்ப் புலி வரத்தேவையில்லை. முஸ்லிம் புலிக் கைகூலியே வரக் கூடும். பிரயாணத்தில் 25 மீட்டர்கள் தூரம் வைத்துக் கொள்ளுங்கள். யாரும் தாக்கினால் எம்பிப்பாய வேண்டாம். துணிந்து தப்ப முயற்சி செய்யுங்கள். யாரும் அழைத்தால் உடனே நீங்கள் பதில் சொல்லவோ, கதவைத் திறக்கவோ வேண்டாம். சாப்பாட்டு விஷயத்தில் தண்ணீர் அருந்துவதிலும் கவனமாக இருங்கள், யாரையும் எளிதில் நம்ப வேண்டாம், மாலை நேரத்திற்குப் பின்னர் வெளியே செல்ல வேண்டாம், போக்குவரத்துக்கு ஒரே பாதையை பயன்படுத்த வேண்டாம், உங்கள் வருகையின் நேரத்தை சரியாக யாருக்கும் கணிக்க இடம் கொடுக்க வேண்டாம். உடையின் அமைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்'

அவனுக்கு என் உயிர் மீது அத்தனை கவனம் இருந்தது. அதை எந்தெந்த வழியிலெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ, முடியுமோ அவை அனைத்தையும் அவன் எனக்குத் தெளிவு படுத்தினான். அப்போதுதான் எனக்கு புரிந்தது இத்தனை விஷயங்கள் இதில் இருக்கின்றதா என்று. இவனுக்கு இந்த ஊர் வைத்திருக்கும் பெயர் பேயன். லூசன், மடையன், களவானி.

'ஒரு முறை ஒருவரைக் கண்டு, மீண்டும் அதே நபரை அதே பாதை ஒழுங்கில் காண நேர்ந்தால் விளிப்படையுங்கள். நீங்கள் கடந்து போகும் ஒவ்வொருவரையும், உங்களைக் கடந்து போகும் ஒவ்வொருவரையும் அவதானமாகப் பாருங்கள். கொஞ்சமேனும் சந்தேகம் வந்தால் உடனே பாதையை மாற்றுங்கள் அல்லது ஒரு ஆபத்தை எதிர்பாருங்கள்'
அவன் இப்படி விரிவுரை நிகழ்த்திக்கொண்டே போனான். அனைத்துமே எனக்குப் புதிய விடயங்கள்தான். என்னைப் பாதுகாப்பதில் அவனுக்குள்ள அக்கரையை அது வெளிப்படுத்தியது. அவற்றைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. அதனால் அவதானமாக உள்வாங்கிக்கொண்டேன். அவன் ஒவ்வொரு சாதாரண விடயத்திலும் மிக நுட்பமான பல அம்சங்களைச் சொன்னான். அவனை எனக்குப் பிடித்திருந்தது, அவனது அறிவும் ஆற்றலும் மேலும் அவனைப் பற்றி தேட வேண்டும் என்று சொன்னது. சத்தியத்திற்குப் பின்னரான முழுமையான நம்பிக்கைதான். ஆயினும் மனது அமைதியடைய சில விஷயங்களைத் தேடித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அவனைப் பற்றிய உண்மைகள் எதுவுமே எனக்குத் தெரியாது.

கொஞ்சம் சுதாரித்து, போட்டு வாங்கி, திருப்பி அடித்ததில், அவன் பற்றிய உண்மை இப்போதைக்குத் தெரிய வேண்டாம் என்று விட்டானே, அவன் கடும் புத்திசாலிதான். விடைபெற்றுக் கொண்டவன் மீண்டும் வந்து

'உங்கள் 'மொபைலுக்கு' எந்த 'ரிங்கிங் டோனும்' போட வேண்டாம். 'வைப்ரேஷனில்' போட்டு 'சைலன்ஸ் மூடில்' வைத்துக்கொள்ளுங்கள். எப்போது அழைப்பு வந்தாலும் உடனே பதில் அளிக்க வேண்டாம். வீதியிலும் பொது இடங்களிலும் அழைப்பு வந்தால் 'போனைக்' கையில் எடுக்கவே வேண்டாம். அது சிலவேளை உங்களை அடையாளம் காண்பதற்கான அழைப்பாக இருக்கலாம். இரவு வேளைகளில் வீட்டில் இருக்கும் போது அழைப்பு வந்தால் தெரியாத அழைப்பாக அது இருந்தால் பதிலளிக்க வேண்டாம். முடிந்தவரை குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் 'போன்' பாவிக்கவே வேண்டாம்'

எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஒரு 'போன் கோலில்' இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா? நம்மில் நமக்கு எவ்வளவு அவதானம் தேவை என்பதை அவன் அழுத்தம் திருத்தமாக கற்பித்து விட்டான்.
இறுதியாகச் சொன்னான்.
'முடிந்தால் நாட்டை விட்டு சிறிது காலம் எங்காவது சென்றுவிடுங்கள்'
விடைபெற்றுக் கொண்டான்.
அதன்பின்னர் நீண்ட நாட்கள் அவனைக் காணவில்லை, எங்கே சென்றானோ தெரியவில்லை.

அவன் சொன்னபடி அவதானமாகவே இருந்தேன். ஆயினும் அவ்வளவுக்கு புத்திசாலியாக நான் இல்லாததால் என்னைச் சுட்டுக் கொல்லும் அளவுக்கு எதிரியாக கருதியவனுக்கு இரவு வேளையொன்றில் சந்தர்ப்பம் அளித்து விட்டேன், கடவுள் புண்ணியத்தில் உயிர் தப்பினேன் என்பதில் மட்டும் திருப்தி இருந்தது.
அவன் எச்சரித்து இரண்டு மாதங்களில் எல்லாம் நடந்திருந்தது.
மறுநாள் அவனுக்கு செய்தி எதையும் சொல்லவில்லை. ஆபத்து எல்லை கடந்து விட்டது என்றுமட்டும் சொன்னேன். அதன் பின்னர் அவன் சொன்னான்.
'கலவரப்படாமல் எதையும் காட்டிக் கொள்ளாமல் வீதியிலேயே திரியுங்கள். மக்கள் நடமாட்டமுள்ள பொது இடத்தில் அதிக நேரத்தைக் கழியுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்'
அதன்படி நான் செய்தேன். என்னைச் சூழ எப்போதும் பலர் இருந்தார்கள். எனக்கு முன்னாலும் பின்னாலும் தூரத்தூர எப்போதும் அனைத்தையும் அவதானித்தபடி ஆட்கள் போட்டிருந்தான். எனது வீட்டைச் சூழவும் அப்படியே ஆட்கள் போட்டிருந்தான். எதையும் யாரும் அவதானிக்காதபடி அதைச் செய்திருந்தான்.

எனது வீட்டுப்பக்கம் அப்படி இரவில் பாதுகாப்புக்கு நின்ற இருவரை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கண்டு விட்டார். விடிந்ததும் தகவல் வந்தது. 'பக்கத்து வீட்டில் கோழியைக் காணவில்லையென்று' ஒரு அசைவில் தகவல் எப்படி மாறுகிறது என்பதை அப்போதுதான் கண்டேன். ஒரு முக்கியமான நடமாட்டத்தை கோழித்திருட்டு அடியோடு மறைத்துவிட்டது. 'யாரோ இரவு வந்து போனார்கள் இரண்டு பேர் இங்கே நின்றார்கள்' என்று கண்டவர் கதை சொல்ல அந்த உண்மையை அப்படியே 'கோழித்திருட்டு' அடியோடு மறைத்து அச்சத்தைக் களைந்துவிட்டது. அது எனக்கு நிறையச் செய்திகளைச் சொன்னது. அவன் தன்னுடன் இருப்பவர்களைக் எப்படி கவனமாக வழிநடத்துகிறான் என்பதைப் புரிந்து கொண்டேன். என்னை சலனப்படாமல் பதுங்காமல் பொது இடத்தில் திரியச் சொன்னதன் மூலம் என்னையறியாமல் என்னை எதிரியாகக் கருதியவர்களுக்கு நான் மறைமுகமாகச் சொன்ன செய்தி
'என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்பதுதான். அவன் தான் அனைத்தையும் கட்டமைத்தான். நான் வெளிநாடு சென்று மீண்ட பின்னரும் கூட அவன் என்னை வழிப்படுத்தினான். அதன் பின் என்னிடம் கற்றுக்கொள்ள அவனுக்கு நிறைய இருந்தது. அது போல நிறைய விடயங்களை அவனும் எனக்கு கற்பித்தான். அவனைப் பற்றி எனக்குள் இருந்த கேள்விகளுக்கு நிறைய பதில்கள் கிடைத்தன.

என்னுடன் நெருங்கிய நண்பர்கள் என்னை எச்சரித்தார்கள். அவனுடன் பழகவேண்டாம் என்றார்கள். அவனைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு மோசமாகச் சொன்னார்கள். நான் உள்ளத்தால் சிரிப்பதை தவிர வேறு என்னதான் செய்ய முடியும். அவனுடைய செயற்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் வீரியம் பெற்றது. விடுதலைப் புலிகளின் பிளவின் பின்னர் கருணா அணியை ஒன்றிணைப்பதிலும் வலுப்படுத்துவதிலும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுடன் பகிரங்கமாக நடமாடும் அங்கீகாரம் பெற்றான். அப்போது அவனுக்கும் அவனோடு இருந்தவர்களுக்கும் ஊர் சூட்டிய பெயர் 'கருணாப் படை'. அவன் மீதான எந்தக் குற்றச்சாட்டு பற்றியும் அவன் அலட்டிக் கொள்ளவில்லை, ஊர் மக்களில் விசயம் தெரியாதவர்களின் வெறுப்பு பல மடங்காகியது. அவனை நிறைய விடயங்களில் நான் வழி நடத்தினேன். எனது சிந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் அவன் அதிக நாட்டம் காட்டினான். சில பொழுதுகளில் எல்லை தாண்டிச் செயற்பட்டான்.

முஸ்லிம்களைக் கொண்ட ஒரு புதிய படையணியை அரசாங்கம் உருவாக்கியது. அவர்களை புலனாய்வு இராணுவ வீரர்களாய் வேறு முகாமில் செயற்படுத்தினார்கள். அது 'முஸ்லிம் படை' என்று ஊரில் பெயர் பெற்றது, அவனும் முஸ்லிம் படையணி வீரனானான். அப்போதும் அவன் பேயன் தான். ஒரு பேயன் படிப்படியாக தனது பேத்தனத்தில் முதிர்ச்சியடைகின்றான் திருடனாக, கொள்ளைக்காரனாக, கடத்தல்காரனாக, இருந்து கருணாப் படையாகி இறுதியில் முஸ்லிம் படையான அவனின் உண்மையான தோற்றம் எது என்பதை யாரும் விளங்கிக்கொள்ள அவன் இடம் வைக்கவில்லை. அதுதான் அவனது பலம், எனக்கே பெரிதாக அவனது உண்மை முகம் எதுவென்று தெரியவில்லை,

எனதுயிரைப் பாதுகாக்க ஆயிரம் வழி சொல்லித் தந்த அவனுக்கு நான் ஒருநாள் சொன்னேன்,
'உனது போக்கு எல்லை மீறிச் செல்கிறது. உனது உயிரைப் பாதுகாப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்து'
'எனக்கு புரிகிறது இனியும் ஆமை வேகம் சரிவராது. நான் இறந்துவிட்டால் கவலையில்லை. எனது இடத்தை நிரப்ப பலர் இருக்கிறார்கள். உங்கள் இடத்தை நிரப்ப தாமதமாகும். எனவே நீங்கள் கவனம்'
'அது சரி என்ன இருந்தாலும் உனது கெட்ட பெயர் இன்னும் அதிகரிக்கிறது. அது ஆரோக்கியமானது அல்லவே'
'அதைப்பற்றிப் பிரச்சினையில்லை எனது மரணம் அதை மாற்றும். நீங்கள் இருக்க எனக்கென்ன கவலை...ஏழைகள் வருவார்கள் எனது ஜனாசாவை தூக்கிச் செல்ல'
'ஓஹ் ! அந்தளவுக்கு மக்களைச் சம்பாதித்து வைத்திருக்கின்றீர் போலும்...'
சிரித்தேன் அவனும் மனம்விட்டு உண்மையாகச் சிரித்தான்.
'இந்தப் படையணி நமக்கும் தேவையில்லை என்று தோன்றுகின்றது' என்றேன்.
'கொஞ்சப் பேரையாவது அடையாளப்படுத்திக்கொள்ள அது தேவை'
'சமூக நிலை மாறிச் செல்கிறது... நல்ல பெயர் எடுக்க வேண்டாமா?'
'நல்ல பெயர் இருந்தால் நிலைத்து நின்றுவிடும் அல்லவா..!'
'அதற்காக இந்தளவுக்கு மக்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது'
'எதிர்காலத்தில் இப்படி ஒரு ஆயுதப் படைக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக மாறவேண்டும் என்றால் இப்போது படுவது போதவே போதாது'
முஸ்லிம் படையணியின் மூலஸ்தனாக இருந்து இயங்கிக் கொண்டிருந்த அவன் சொல்லவரும் செய்தி எனக்குப் புரிந்தது. ஆனாலும் அவன் யார் என்பதுதான் புரியவில்லை. எனக்கே புரியாத போது அவனை மற்றவர்கள் எங்கே...?
'கவலைப்படாதீர்கள் அவன்தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றான்'
விரலை உயர்த்தி வானத்தின் பக்கம் சுட்டி இறைவனை முன்னிறுத்தி பொறுப்பனைத்தையும் அவன் மீது காட்டுபவனிடம் இனி என்ன கதைப்பது.

நான் எச்சரித்தபடியும் எதிர்பார்த்தபடியும் ஒரு பட்டப்பகலில் அவனை சுட்டுவிட்டார்கள். இரத்தம் வீதியெங்கும் சிதறிக் கிடக்க, எனக்கு தகவல் கிடைத்து உடனேயே தளத்திற்கு விரைந்தேன். எனக்கு நெஞ்சு அடைத்திருந்தது. அவனது உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்கக் கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டே தளத்தை அடைந்தேன். இராணுவ முகாமை சற்றுத் தள்ளி பலத்த பாதுகாப்பானதோர் பிரதேசத்தில் அவனைச் சுட்டிருக்கிறார்கள் என்றால் எதிரி மிக தைரியமானவன். அப்படியும் சுட்டுவிட்டு அவன் தப்பிச் சென்றிருக்கிறான் என்றால் மகா கெட்டிக்காரன். சுடுவதற்கு பயன்படுத்தியது  ரீ-56 ரக துப்பாக்கி எனின் தூரத்தில் இருந்தே இலக்கு வைத்திருக்கிறார்கள். எப்படியும் தப்பிவிடக் கூடாது என்பது எதிரியின் முக்கிய எதிர்பார்ப்பு. நான் அவனைத்தான் தேடினேன். மோட்டார் சைக்கிளில் அவனோடு கூடச் சென்றவன் ஸ்தலத்திலேயே இறந்திருந்தான். அவனைத் தேடி விழிகள் அலைபாய்ந்தன,

அதோ அவன் உயிரோடுதான் இருக்கிறான் முகம் முழுவதும் இரத்தம், உடல் முழுவதும் இரத்தம், கைகள் முழுவதும் இரத்தம், எனக்கு திக்கென்றாகிப் போனது, அப்போதும் அவன் கண்ணசைத்தான். நண்பர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு விரைந்தார்கள் அவனைத் தூக்கிக் கொண்டு, அப்போது மீண்டும் அவன் கண்ணசைத்தான், அவன் என்னைப் போகச் சொல்லிச் சொல்கிறானா? அல்லது அவனிடம் வருமாறு சொல்கிறானா புரியவில்லை, ஆயினும் நானும் வைத்தியசாலைக்கு விரைந்தேன்.

அவனால் கதைக்க முடியவில்லை. ஊர் முழுக்க செய்தி பரவியிருந்தது. கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. அப்போது எனக்கு ஞாபகம் வந்தது 'எனது ஜனாசாவைத் தூக்க ஏழைகள் வருவார்கள்' என்று அவன் என்னிடம் ஒரு முறை சொன்னது, கூட்டத்தை ஒரு முறை நோட்டம் விட்டேன், கூடியிருந்த  கூட்டத்தில் கொள்கை பேசிய புத்திஜீவிகளும் விமர்சகர்களும் சமூகத்தின் காவலர்களும் இருக்கவில்லை. எங்கிலும் ஏழைகள் இருந்தார்கள். அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

'இதன் பின்னரான எந்த நிகழ்விலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம். ஒதுங்கியிருங்கள் வேடிக்கை பாருங்கள். அமைதி காருங்கள்'
அவன் என்குச் சொன்னது,
அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் எனக்கு விளங்கியது.
மெல்லிய குரலில் கம்பீரமாகச் சொன்னான்
'உங்கள் கனிப்பு சரியானது. நான் தான் பிழை செய்து விட்டேன்...' என்றவனைப் பார்த்துக் கொண்டு அதற்கு மேலும் எனக்கு அங்கு நிற்க முடியவில்லை. எனது கண்கள் கலங்கின.
வாழ்க்கையில் எதற்குமே அழக் கூடாது என்ற கர்வத்துடன் இருப்பவன் நான்.

இந்நிகழ்வுக்கு முன்னர் எனது வீட்டுக்கு வந்தான்.
'ஒருவேலையாகப் போகப் போகிறேன்... இன்ன இடத்திற்கு...'
'தனியாகவா?'
'இல்லை இன்னொரு தோழர் வருகிறார்'
'எதில் போகின்றீர்கள்?'
'மோட்டார் பைக்கில் தான் போகிறோம்'
'நீ போகாமல் வேறு யாரையாவது அனுப்புவது நல்லது என்று படுகிறது'
'விதி வரைந்த பாதையில் வாழ்வென்றால் வாழ்வோம். சாவென்றால் சாவோம்'
'அது விடுதலைப் புலிகளுக்குரிய சுலோகம். நீ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் அதை எப்படி பயன்டுத்த முடியும்?'
'சுலோகம் நல்ல இருக்கு அதனால் சொன்னேன்,  ஒரு முஸ்லிம் எப்படிச் சொன்னால் சரியாக இருக்கும்?'
'இறை வகுத்த பாதையிலே வாழ்வென்றால் வாழ்வோம். சாவென்றால் சாவோம்'
'இதுவும் நல்லாத்தான் இருக்கு, சரி போய் வருகின்றேன்'
'கவனம்! நீயே பைக்கை ஓட்டிச் செல்வது நல்லம்... கவனம் நீ போகாமல் வேறு யாரைவாயது அனுப்பலாம் என்று படுது'
'அதுக்கு என்ன செய்யலாம் நான்தான் போயாகனும், எனக்கு இப்போ பத்தாயிரம் ரூபாய் காசு வேணும்'
'பத்தாயிரம் இப்போது இல்லை. ஐயாயிரம் இருக்கிறது தரட்டுமா?'
'சரி தாருங்கள்'
'போகும் போது பள்ளியில் இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டுப்போ'
பார்த்துக்கொண்டே இருந்தேன். அவனது மோட்டார் சைக்கிள் பள்ளிப் பக்கம் திரும்பும் வரை.

'அவன் உயிரோடு இருந்தான்'
அதுவரைத் திருப்தி, ஊரில் குழப்பம் பெரிதானது. இன முரண்பாடுகளைத் தோற்றுவித்து விடக் கூடாது என்று இறைவனைப் பிரார்த்தித்தேன். மூன்று நாட்கள் கர்த்தால் அனுஷ்டித்தார்கள். அவனைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக செய்திகள் கசியத் துவங்கியது,
நல்லதாயும் பொல்லாததாயும்,
அவன் பொலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர்தான். அவனுக்கும் பொலிஸூக்கும் ஏதோ தொழில் ரீதியில் சம்பந்தமிருக்கிறது என்றும், தேசிய புலனாய்வுப் பிரிவில் அங்கத்துவம் வகிக்கின்றான் என்றும் வெகு சொற்பமானோரிடையே கருத்துப் பரவியது. அப்போதும் கூட மக்கள் அவன் யார் என்ற உண்மையை புரிந்து கொள்ளவே இல்லை. ஏன் எனக்கும் கூடத்தான் நிறைய விடயங்கள் புரியவில்லை, ஆனாலும் நான் ஒவ்வொன்றாக ஊகிக்கத் தொடங்கினேன்,

மிக நீண்ட காலம் மருத்துவ மனையில் இருந்து மீண்டான். அவனால் சரளமாக பேச முடியாது. ஒரு பக்கத் தாடையும், ஒரு கையும் பாதிக்கப்பட்டிருந்தது. அவன் உயிர் பிழைத்தது அற்புதம். அவனது தர்மங்களும் இறை பக்தியும் அவனைக் காப்பாற்றி இருந்தது. அவனை விட்டும் நிறையப் பேர் ஒதுங்கி விட்டார்கள். அவன் ஒரு முரண்பாட்டின் அடையாளமாக விளங்கினான். களநிலைவரங்கள் வேகமாக மாறிக்கொண்டிருந்தன. கிழக்கு மாகாணம் விரைவாக இராணுவக் கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருந்தது. அவன் பற்றிய பேச்சு எங்கேனும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
எப்போதும் அவன் வீட்டில் கூட்டமிருந்தது, அதனால் அங்கு செல்வதைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன், அவனது மனவாழ்வு வித்தியாசமானது. அவனை விட வயதில் பல வருடங்கள் மூத்த ஒருத்தியைத் தான் அவன் மணம் முடித்திருந்தான். இரண்டு பிள்ளைகள். அவனே மனமுவந்து எடுத்த முடிவென்று ஏற்னவே ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறான், அவன் வித்தியாசமான ஒரு பிறவிதான்,
அவன் வீட்டிற்கு அடிக்கடி போவதைத் தவிர்த்து, சென்றால் நீண்ட நேரம் கதைப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அவனுடன் நிறையக் கதைத்தேன்.
அப்போது தான் அவன் பல பேருண்மைகளைச் சொன்னான்.
அதிர்ச்சிகளை அள்ளிக் கொட்டினான்.
என்னைத் திணரடித்தான்.
நிறைய ஆவனங்களைத் தந்தான்.
ஒருபெயர்ப் பட்டியலையும் தந்தான்.
அமைதியாகப் படித்தேன்.
நான் ஆடிப் போனேன், எனக்கு பேச்சு வரவில்லை.
பெயர்ப்பட்டியலை படித்த பின்னர் இதயத் துடிப்பு அதிகரித்தது, எத்தனை நல்ல முகமூடி அணிந்த கலிசரைகள். முஸ்லிம் என்ற பெயரில் சமூகத்தில்...! இருப்பினும் கொல்லுவதற்கு நாம் யார்? ஓ! இது அரசாங்கத்தின் அனுமதி அப்படியானால் சட்டபூர்வக் கொலை. சட்டபூர்வமற்று அமுல்படுத்தப்படும், எனக்கு எல்லாம் விளங்கியது, அவன் யார் என்றும் புரிந்தது, அவன் தந்த பெயர்ப்பட்;டியல் பெரியது. மொத்தம் முந்நூறு பேர், ஒவ்வொருவர் பற்றியும் மிகத் துல்லியமான தகவல்கள் சேகரித்திருந்தான், அவ்வளவும் இவன் பேயன் என்ற பெயரில் இருந்ததால் சாத்தியமானது, அவனை யாருமே கணக்கிலெடுக்காததால் அது அவனுக்கு இலகுவாகி இருந்தது,
அவன் சிரித்தான்.
நீண்ட அமைதியின் பின்னர் கேட்டேன்
'அடுத்து என்ன செய்யப் போகிறாய்'
'என்கௌன்டர் தான்'
'எத்தனைப் பேரை..? எவ்வளவு காலத்திற்கு?
'அனுமதி கிடைத்து விட்டது. ஆயுதங்கள் இன்னும் கிடைக்கவில்லை, பகிரங்கமாகச் செய்யக் கூடாது என்றும் உத்தரவு'
'எப்போது ஆரம்பிக்கப் போகிறாய்'
'இன்னும் ஒரு மாதத்தில்'
'எத்தனைப் பேரை கொல்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது'
'முதல் இருபது பேரை.. அது கிளியர் ஆகினால் அடுத்த என்பது பேரும்  பலமிழந்து போவர். நிறைய சமூக விரோதச் செயல்களும் நின்று போகும்'
'இதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் ஆவணமாக்க உதவியாக இருக்கும்'
'இவ்வளவு கேவலமான சமூகத்திலா உறுப்பினர்களாகவா நாம் இருக்கிறோம்'
'இது எவ்வளவோ பரவாயில்லை இன்னொரு லிஸ்ட் இருக்கிறது. தரட்டுமா அதில் நிறைய பேர் பெண்கள்'
'வேண்டாம் இந்த சமூகத்தை சீர்படுத்த உமர் தான் வரவேண்டும்'
'உமர் வரப் போவதில்லை, இங்கு இருக்கும் ஒருவர்தான் உமராக மாற வேண்டும். சாட்;டையைத் தூக்க வேண்டும். அப்போது தான் மாற்றம் வரும், கேவலம் மாறும்'
நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் கேட்டான்
'என்ன யோசனை'
'இந்த ஊரை விட்டு எங்காவது போய்விடலாமா என்று தோன்றுகிறது'
'நூறு இருநூறாகி நானூறாகி ஆயிரமாகி பல்லாயிரமாகும். அதை யார் தடுப்பது...? குர்பானி ஒன்றே வழி. அதுவும் சட்டபூர்வமான குர்பானி...'
என்றவன்
'இந்த லிஸ்டையும் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு தரவுக்காக'
அதையும் வாங்கிக் கொண்டேன். விடைபெற முன்னர் அவன் கேட்டான்.
'நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா'?
'உண்iமையில் தெரியாது ஆனால் இதுவாக இருக்கலாம் என்று அனுமானித்து வைத்திருக்கிறேன்'
'அப்படியானால் நான் தான் தப்பாகக் கணக்குப் போட்டு விட்டேன்'
'எல்லோருக்கும் பேயனாகத் தெரிந்த நீ இதில் உண்மையாளால் என்ன குறைந்துவிடப் போகிறது...'
'ஆனால் உங்களால் அப்படி என்னைப் போல பேயனாக மாறமுடியாது. காரணம் உங்கள் பெயர் வேறு தளத்தில் பதிந்து விட்டது. அந்தத் தளத்தில் இருந்து தான் நீங்கள் செயற்பட வேண்டும். என் அளவுக்கு இறங்கிச் செல்ல முடியாது. ஆனால் இதைவிடக் கேவலமாகவும் என்னால் மாற முடியும். இனி அது சாத்தியப்படாது. நானும் வேறு தளத்தில் தான் செயற்பட வேண்டி இருக்கிறது... நான் யார் என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதைப் பாருங்கள்...'
அவன் தந்தவைகளை பார்த்தேன்.
அதிர்ந்தேன்.
அவன் மீது மதிப்பும் மரியாதையும் வந்தது.
உண்மையான வீரன் அவன்,
வரலாறு நிச்சயம் அவனைப் பேசும்.
அவன் ஒரு சகாப்தம்.
எனது மன உணர்வுகள் வீரியம் பெற்று ஓடிக் கொண்டிருந்தன.
அவனிடமிருந்து விடைபெற்றேன், நானும் அவனும் கொஞ்ச மாதங்களுக்கு இனிச் சந்திப்பதில்லை என்றும் பேசிக் கொள்வதில்லை என்றும் முடிவெடுத்துக் கொண்டோம்.
கொஞ்ச நாட்களில் ஊரில் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வந்தது.
லிஸ்டைப் பார்த்தேன். முதல் இருபதுக்குள் அவர் பெயர் இருந்தது,
ஒபரேஷன் குர்பானி ஸ்டார்ட் என்று மனதில் எண்ணியபடி ஊடகங்களுக்கு செய்தி வழங்கத் தொடங்கினேன்.
இன்னொரு நாள் ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது.
தகவல் பிழைத்து இலக்குத் தப்பி அப்பாவிகள் பலியாகியிருந்தனர். அவர்களுக்காகப் பிரார்த்தித்தேன்.
அவன் களத்திற்குத் தகுதியான உடல் நிலை கொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரிந்தது.
என்ன செய்வது எல்லோரும் போல நானும் ஒரு பார்வையாளன்.

எனக்குள் நிறைய சிந்தனைகள் ஊடுறுவின, அது பரந்த தளத்தில் உலாவத் தொடங்கியது.
இன்னும் எத்தனை எத்தனை உளவுப் பிரிவுகள் எனதூரில் செயற்படும்,
தகவல் கொடுப்பவன் கட்டமைக்கும் விதத்தில்தான் அனைத்தும் இருக்கிறது.
ரபாய் ஒரு நள்ளிரவில் கடத்தப்பட்டான். அவனுடன் ஐந்து பேர் வஞ்சகமாக கடத்தப்பட்டனர்.
ஏதோவோர் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கியவனின் கையில் இருந்தது,
அவனைப் பற்றிய இறுதி நிலைப்பாடு எத்தகையது என்பது,
அத்தனை சித்திரவதைகளையும் எதிர்கொண்டு அவன் யார் என்ற உண்மையை இறுதிவரைச் சொல்லவில்லை என்பது அவன் இன்னும் உயிரோடு திரும்பவில்லை என்பதால் தெரிந்தது.
அவன் ஒரு நாள் சொன்னான்
'நான் மரணித்தால் எனது ஜனாசாவை நீங்கள் தான் தொழுவிக்க வேண்டும்'
நான் இன்னும் காத்திருக்கிறேன் அவனது ஜனாசாவைத் தொழுவிக்க. எத்தனையோ ஆயிரம் ஏழைகளும் காத்திருக்கிறார்கள் அவனது ஜனாசாவில் கலந்து கொள்ள.

புலனாய்வில் தங்கப் பதக்கம் பெற்ற தேசியப் புலனாய்வுக்காரன் அவன். உயர்ந்த சம்பளம் அவனுக்கானது. அதில் அவன் ஆயிரம் என்ன? ஒரு லட்சம் ஏழைகளைச் சம்பாதிக்கலாம்.
அவன் பேயனாக வீதிகளில் அழைந்தான்.
பேயனாகவே எல்லாத் தகவல்களையும் திரட்டினான்.
பேயனாக இருந்தே எல்லாவற்றையும் சாதித்தான்.
அந்தப் பேயன்  நுழையாத துறை கிடையாது.
அந்தப் பேயனின் உறுதிக்கு முன்னர் எல்லாம் தூசு.
கடைசி வரை அவன் யார் என்பதை யாருக்குமே சொல்லாமல் மாயமாகிப் போயினான்.
அந்தப் பேயன் திரட்டிய தகவல்களும் அவன் போட்ட பட்;டியலும் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறன.
நான் மரணிக்கும் போது அது இன்னொருவர் கையில் இருக்கும். அவர் மரணிக்கும் போது அது வேறொருவர் கைக்கு மாறியிருக்கும்.

அவன் 'போனில் ரிங்கிங் டோனாக' இருந்த எனது பாடல் எங்கோவோர் மூலையில் ஒலிக்கிறது.
'தேசம்... எங்கள் தேசம்... அன்பின் தேசம்... வீரம் தீரம் சொல்லும் எங்கள் தேசம்... எங்கள் தேசம்...
ஆயிரமாயிரம் உயிர்களை இழப்போம் ஆனாலும் நாம் இனி அழிந்திட மாட்டோம்.
குண்டுகள் கவசங்கள் கோடி வந்தாலும் தோல்விகள் கண்டு துவண்டிட மாட்டோம். .

அந்தப் பேயன் வாழ்வான் ஒரு ஒப்பற்ற வீரனாக...