Thursday, January 23, 2020

கொழும்புக்குப் பொருத்தமான தமிழ் வேட்பாளர் யார்?



-முஸ்டீன் முஹம்மத்-

நம்நாட்டின் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் மட்டுமே தமிழ்க் கட்சிகள் செயற்பாட்டுத் தளத்தை நிறுவியிருந்தன மலையககக் கட்சிகள் கொழும்பு உட்பட இந்திய வம்சாவழித் தமிழ்ர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமது அரசியல் செய்பாட்டுத் தளத்தை நிறுவிக் கொண்டன. இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் இந்தியத் தமிழர் பகுதிகளில் அரசியல் நடவடிக்கையில் இடையீடு செய்வதில்லை அதுபோன்றே மலையகக் கட்சிகளும் இலங்கைத்தமிழர் பகுதிகளில் அரைசியல் தலையீடுகளைச் செய்வதில்லை. இலங்கைத் தமிழர் ஓரளவுக்குச் செறிந்து வாழும் கொழும்பில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது வரையிலும் அரசியல் செயற்பாட்டுத்தளத்தை தேர்தலை இலக்கு வைத்து செய்ததில்லை. ஆனால் இந்த எழுதப்படாத ஒப்பந்தமும் புரிதலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வந்துவிடும். இந்தப் புரிதல் அரிசயலில் கல்லெறிந்தவர் மனோகனேசன்தான். மட்டக்களப்பில் தனக்கான அமைப்பாளரை அவர் நியமித்து அதை ஆரம்பித்து வைத்தார். அப்படியே இந்தியத் தமிழர் புறக்கணிக்கப்படுவதாக வடக்கில் எழுந்த கருத்தியல் அலை கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தாக்கம் செழுத்தாமலும் இல்லை.

கொழும்பை மட்டுமே மனோ நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை கடந்த அனைத்துப் பாராளுமன்றத் தேர்தல்களும் நிரூபித்து நிற்கின்றன. அத்துடன் மணோ ஒரு சாதாரண அரசியல்வாதி மட்டுமே. அவர் மக்களின் அரசியல் சிந்தனையில் தாக்கம்செழுத்தும் அல்லது மாற்றத்தை உண்டுபண்ணும் நபரும் கிடையாது அந்தளவுக்கு கணதியான அறிவுஜீவியும் கிடையாது அதுவே அவரது தோல்வியை அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் உறுதி செய்யப் போகின்றது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் களமிறங்கும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் களமிறங்குவதற்கு உள்ளும் புறமும் இருக்கின்ற சில தடைகள் பற்றியும் அலச வேண்டிய தேவை இருக்கின்றது. அதாவது கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனதுபிரதிநிதித்துவத்தை முதல் முறையாகப் பெறுவதாக இருந்தால் அதன் பிரதான வேட்பாளர் சக்திமிக்கவராகவும் தலைமைத்துவப் பண்புமிக்கவராகவும் நிச்சயம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராசாதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கே.வி.தவராசா கொழும்பை மையப்படுத்தி அரசியலில் குதித்தால் மணோகனேசன் புத்திசாலியாக இருந்தால் எடுக்க வேண்டிய இரண்டு முடிவுகள், ஒன்று ஒதுங்கிக் கொள்வது அல்லது தவராசாவின் வெற்றிக்குத் துணை நிற்பது. ஆயினும் மனோ புத்திசாலி அல்ல அவர் திரும்பவும் யானைச் சின்னத்துக்குள் தன்னைப் புதைத்தே வெளிப்படுவார். அது தவராசாவுக்கு குறிப்பிடத் தக்க சவாலாக அமையும் ஆனாலும் அந்தச் சவாலை இலகுவாகச் சமாளிக்கும் தலைமைத்துவ ஆற்றல் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவுக்கு வெகுவாக இருக்கின்றது. அவரது வெற்றிக்குத் தடையாக அந்தச் சவால் இருக்கப் போவதில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைக்குள் அல்லது தமிழரசுக் கட்சிக்குள் இருந்து எழுகின்ற சவாலை தவராசா எப்படிச் சமாளிக்கப் போகின்றார் என்பதில்தான் பல முக்கிய விடயங்கள் தங்கியிருக்கின்றன.

அவருக்குக் கட்சிக்குள் இருக்கும் முதன்மையான சவால் சட்டத்தரணி சுமந்திரன்தான். ஏனெனில் தவராசா கட்சிக்குள் அரசியல் ரீதியில் ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியாக வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கண்ணும் கருத்துமாக இருப்பவர் சுமந்திரன்தான். அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது தொடர்பான முடிவுகளை எட்டுவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் சுமந்திரனது வாதம் பொதுமைப்படுத்தியதாக நிச்சயம் அமையும். கூட்டமைப்பு கொழும்பில் தேர்தலில் போட்டியிட்டால்  கொழும்புத் தமிழ்ப் பிரதிநித்துவம் கிடைக்காது என்ற வாதத்தை நிச்சயம் வலியுறுத்தத் தவற மாட்டார். ஏனெனில் மனோகணேசன் ஒரு போதும் சுமந்திரனுக்குச் சவாலாக வரப்போவதில்லை அதனால் மனோ அவருக்குப் பொருட்டே கிடையாது. தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் என்ற அச்சத்தை விதைத்து தவராசாவை போட்டியிடாமல் தவிர்ந்துகொள்ளச் செய்வதே அவரது இலக்காக இருக்கும். ஒரு சென்சிட்டிவ்வான விடயத்தைக் கொண்டுதான் தவராசாவைத் தனக்கு நிகரான போட்டித்தளத்தில் இருந்து ஒதுக்க முடியும் என்பதை சுமந்திரன் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார். தவராசா மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய இடமும் இதுதான்.

எனது அவதானத்தின் படி தமிழ் மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய மிகச் சிறந்த அடுத்த தெரிவாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாதான் இருக்கின்றார். அதற்கடுத்த இடத்தில் சட்டத்தரணி காண்டீபன் இருக்கின்றார். இவர்கள் கொண்டிருக்கும் தலைமைத்துவப் பண்பு என்பு மக்கள்மயப்பட்டது மக்களுக்கானது. தமிழர்களுக்கான சரியான தலைமைத்துவத்தை நிறுவவிடாது போடப்படும் தடைகளில் இருந்து வெளிப்படத்துடிப்பவர் சுமந்திரன்தான் என்பது மறைக்கப்பட்ட விடயமுமல்ல. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தழிரசுக் கட்சியினதும் தலைவராக சுமந்திரன்தான் வரவேண்டும் என்பது ரணில் விக்ரமசிங்கவின் அலாதியான விருப்பம். அந்த விருப்பம் இலங்கைச் சூழலில் தீர்மாணிக்கப்பட்டதுமல்ல அது குறித்து அலசுவது இக்கட்டுரையின் நோக்கமுமல்ல. ஆனால் தமிழ் மக்களின் ஏகத் தலைவராக சுமந்திரனைக் கொண்டு வந்து நிறுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மிகவும் அபாயகரமானவை என்பதைத் தமிழ் மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது மக்களை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இதே நேரத்தில் சுமந்திரன் மிகச் சிறந்த மனித உரிமைகளுக்கான குரல் என்பதிலும் அந்தக் குரல் நியாயமாக பல இடங்களில் ஒலித்தது என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. மக்களுக்கான தலைமைத்துவம் என்றும் அடுத்த தலைவர் யார் என்றும் கேள்வி வருகின்ற போது அதற்குச் சுமந்திரன் சரிப்பட்டு வரமாட்டார் என்பதுதான் எனது அவதானம்.

அடுத்த தேர்தலில் தவராசா கொழும்பு மாவட்டத்தில் இறங்கினால் கூட்டமைப்பு நிச்சயம் தனக்கான ஒற்றைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும். தவராசா வெற்றிபெற்றால் மனோ நிச்சயம் தோற்றே ஆக வேண்டும். ஒரு தலைவனுக்குள்ள முக்கிய பண்பு தனது மக்கள் பகிரங்க அழுத்தத்துக்கு முகங்கொடுத்து அச்சங்கொண்டு ஒதுங்கி நிங்கும் போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் களத்தில் மூர்க்கத்துடனும் தெளிவுடனும் குதித்து அவதாகமாகச் செயற்படுவது யுத்த காலத்தில் இருந்து அதன் பிற்பட்ட காலத்திலும் பயங்கரவாதக் காட்சிகள் அரங்கேறியபோதும் தவராசா வெளிப்பட்டு நின்ற விதம் மிகவும் முக்கியமானது. தனக்கான நலன் எதையுமே கருத்தில் கொள்ளாமல் அவர் மனிதம்கொண்ட பேரியக்கமாக மக்களுக்காகக் காரியமாற்றினார். எனவே தவராசாவை முன்கொண்டு செல்வது மக்களின் கடமையும் பொறுப்புமாகும்.
தேர்தல் அரசியல் என்று வருகின்ற போது அதைச் சமாளிக்கும் அல்லது அதைக் கையாளும் குறுக்குப் புத்தி தவராசாவுக்கு இல்லாமல் இருப்பது மட்டுமே அடுத்த மாபெரும் சவால். ஏனெனில் இப்போதை நம்நாட்டு தேர்தல் அரசியல் கணவான் அரசியல் கிடையாது. எனவே இதை எதிர்கொள்வதுக்குத் தகுந்த தேர்தல் அரசியல் வல்லுநர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ளும் போது தவராசா வெற்றி பெறுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும். வாக்குகளைச் சேகரிக்கும் உபாயங்கள், ஊடகங்களைக் கையாளவும் சமூக ஊடகங்களைக் கையாளவும் தனித்துவமான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இலக்கியவாதிகள், கலைஞர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், இளைஞர் யுவதிகள் என்று அனைத்துத் தரப்பையும் மையப்படுத்திய தேர்தல் அரசியலுக்கான திட்டமிடல் திறம்ப மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் துறைசார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு பொது வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும்
தேரதல் அறிவிக்கப்படும் வரை காத்திராமல் இப்போதே அதற்கான செய்பாட்டுத் தளத்தை நிறுவிட வேண்டிய அவசியமும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராசாவுக்கு இருக்கின்றது. அதே போன்று வடக்கை மையப்படுத்திய தேர்தல் அரசியலில் சட்டத்தரணி காண்டீபன் தனது வெற்றியை எவ்வகையிலாவது உறுதிப்படுத்திட வேண்டியதும் அவசியமாகும் இது குறித்து பிரிதொரு கட்டுரையில் அலசலாம்.

மக்களுக்கான நியாயமான குரல் நிச்சயம் உரத்து ஒலிக்க வேண்டிய கட்டாயங்கள் நிறைந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்கள் இருப்பதை நாம் அனைவரும் அவதானத்தில் இருத்த வேண்டும்.