Saturday, January 11, 2014

கொழும்பு அணில்கள்

கொழும்பு  அணில்கள்

நம் நாட்டு எழுத்தாளர்கள் பலரின் உள்ளங்களைப் போல செலிப்பற்றுக் கிடக்கிறது. கொழும்பிலுள்ள பழ மரங்கள். அவை பூப்பதும் அப்படித்தான் காய்ப்பதும் அப்படித்தான். நமது எழுத்தாளர்களின் எழுத்துக்கள் போல வீரியமற்றவையாக.

குண்டுகள் வெடித்த போதும் கைதுகள் நடந்தபோதும் பெரிய வீச்சுடன் உழைத்த பேனைகள் இப்போது ஓய்வெடுக்கின்றன போலும்.
கவிதை எழுதினாலும் துப்பாக்கி வாசனை கதை எழுதினாலும் துப்பாக்கி வாசனை  நாவல், கட்டுரை, பத்தி, குறிப்பு எதுவாயினும் ஒரு துப்பாக்கி அரக்கன் அதற்குள் ஒளிந்து கொண்டிருப்பான்.

அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கும் அதுதான் தீனி. தலைப்பெல்லாம் சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். இப்போது மஹிந்தரின் சால்வையை வரைவதற்குத்தான் சிவப்பு மையைப் பயன்படுத்துகின்றன பத்திரிகைகள்.

யுத்தம் முடிந்த பின்னர் நிறையப் பேர் எழுதுவதையே விட்டுவிட்டனர். மிகவும் கவலையாக இருக்கிறது. மகிந்தரின் தம்பி கோபித்துக் கொள்வாரோ என்று பயத்தில் எழுதாமல்விட்டுவிட்டார்கள் போலும்.

இன்னும் சில வயது முதிர்ந்த எழுத்துச் சிங்கங்கள் உசும்பாமல் படுக்கின்றன. எங்கள் காலத்தில் இப்படியெல்லாம் என்று இலக்கியப் புராணத்தில் சுயவாழ்த்துப் பாடல்களையே வாசித்து கடுப்பேற்றியபடி

சிலர் இனிக் கவிதை எழுதுவதில்லையென்றும் கதை மட்டும்தான் எழுதப் போவதாகவும், கதையெழுதுவதில்லை நாவல் மட்டும்தான் எழுதப் போவதாகவும், அது இதெல்லாம் இல்லை வாழ்க்கைக் குறிப்பு எழுதப் போகின்றேன் என்றும் பொந்து தேடி அலைகின்றனர் கழிப்பதற்கோ ஒளிப்பதற்கோ தெரியாது.

கொழும்பிலும் அணில்கள் வாழ்கின்றன. கிராமத்து அணிகளைப் போல அவை பருமனில் பார்வைக்குக் குளிர்ச்சியளிப்பதில்லை. அவை ஏறித் திரியும் மரங்களும் கூட கண்களுக்குக் குளிர்ச்சியளிப்பதுமில்லை.

சோம்பேரிகள்! பலமாகப் பாய்ந்து கிளைவிட்டுக் கிளை தாவி நாட்டியமாடி ஓடிப்பிடித்து விளையாடி ஜாலியாக இருக்கத் தெரியாதவைகள். காகங்கள் கூட கொழும்பு அணில்களைத் துரத்துவதில்லை. அதனால் நம் உணர்வுகளுக்கு விருந்தாக அங்கு ஒன்றுமே இல்லை.

உயர்ந்த கொங்கிறீட் மதில்களிலும் தொலைபேசி வயர்களிலும் வித்தைகாட்டுபவன் கயிற்றில் நடப்பது போல கவனமாக மெது மெதுவாக அவை நடக்கப் பழகியிருக்கின்றன.

பெருச்சாலிகள் கூட இவற்றைவிட மிக வேகமாக ஓடி வித்தை காட்டி நொடியில் பார்வையில் இருந்து மறைந்துவிடும். அது என்னமோ தெரியவில்லை நகர அபிவிருத்தி என்ற பெயரில் பிக்காசியும் அலவாங்கும் மண்வெட்டியும் ஏந்தி இiடெயல்லாம் தோன்டிக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களைக் கூட அவை கண்டு பயந்ததாகத் தெரியவில்லை. சிறுநீரும் மலமும் கழிக்கவும் புனர்வதற்கும் பிள்ளை பெறுவதற்கும் கூட

அவை யுத்த காலத்தில் எப்படியோ தெரியாது ஆனால் யுத்த காலத்தில் அணிகள்  ஒளிந்திருந்தாக பதிவுகள் இல்லை. இப்போது போக்கிடம் இல்லாதபடியாலும் அச்சுருத்தல் குறைவென்றபடியாலும் ஊத்தைக் காண்களைக் கூட முகர்ந்து பார்க்கும் அளவுக்கு மரந்தாவிப் பழம் உண்ணும் அழகு அணில்கள் தரம் கெட்டுப் போன கொடுமை பார்க்கச் சகிக்கவில்லை.

அணில்களோடு கொஞ்சும் ஆயிரமாயிரம் குழந்தைகளையும், அணில்கள் கொரித்த எச்சப்  பழங்களைப் பொறுக்கித் தின்ன ஆவலோடு சண்டை போடும் சிறுவர்களையும் அணில் மாமா பாட்டுப்பாடிக் குதூகளிக்கும் சிறுமிகளையும் இழந்து கொண்டிருக்கும் கிராமங்கள் நகரங்களாகிக் கொண்டிருக்கும் கொடுமைக்குப் பெயர் அபிவிருத்தி என்று வைத்துவிட்டார்கள்.

நகரத்து அணில்களையும் கிராமத்துக் குழந்தைகளையும் பார்க்க இப்போது பரிதாபமாக இருக்கின்றது.

பூக்காத காய்க்காத பழுக்காத வரண்ட சுருட்டை இலைகளுடன் கம்பீரமாக வீதியைப் பயத்துடனும் பரிதாபத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாமரத்தில் இரண்டு அணில்கள் எதையோ தேடிக் கொண்டிருக்கின்றன.
காகமொன்று எதையும் சட்டைசெய்யாமல் ஒரு பொலித்தீன் பையைக் கொத்தித் தின்று கொண்டிருக்கிறது.
பட்டப்பகலில் ஒரு எலி குப்பைவாளியை முகர்ந்து கொண்டிருக்கிறது
வாகனங்களும் மனிதர்களும் அவரவர்பாட்டில் பாதையில்...

Friday, January 10, 2014

இரத்தக் குளியல் குறுநாவலுக்கு பேராசிரியர் சபா.ஜெயராசா அளித்த ரசனைக் குறிப்பு


அன்பர் முஸ்டீன் எங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறந்த படைப்பாளி. 'இரத்தக் குளியல்' என்ற குறுநாவலை எனது பார்வைக்குத் தந்தார். வாசிக்கும் போது மிகுந்த உட்சாகமாயிருந்தது. நூலை வைத்துவிடாது வாசிக்கும் சுவை நீடிப்புக் காணப்பட்டது. 

அவரது புலக்காட்சி தனித்துவமானது. அதனால் அவரது படைப்பு மலர்ச்சியும் தனித்துவமானது. பட்டறிவிலே தோய்ந்தெழும் இந்த எழுத்தாக்கம் நடப்பியலின் செவ்விய வழியிலே நகர்ந்து செல்கின்றது. நடப்பியலைப் புனைவுக்குக் கொண்டுவரும் பொழுது நிகழக்கூடிய சமநிலைப் பிறழ்வைத் தவிர்த்து ஆக்கச்செயன்முறையைக் கலை முகிழ்ப்பினுக்கு உள்ளாக்கிய நூலாசியரின் திறன் பாராட்டுதற்குரியது. 

கணினிவழியான தொடர்பாடல் மிகுந்துள்ள சமகாலத்தில் அதன் இயக்கங்களைப் புனைவுடன் தொடர்பு படுத்தும் முயற்சியையும் நூலாசியர் முன்னெடுத்துள்ளார்.

 கதையின்  எடுத்தியம்பல் முறையிலே தனக்குரிய தனித்துவத்தைப் பதித்திருப்பதோடு மட்டுமன்றி அதனை மேலும் வலுப்படுத்தும் முயற்சியையும் இந்நூலில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தாம் அனுபவித்த வாழ்க்கை நெருடல்களை தெறிப்புக்குள்ளாக்கி, எழுதும் செயற்பாட்டில் தெளிவும் திடமும் மேலோங்கியுள்ள கலை நேர்மை கவனிப்பிற்குரியது. 

குறுநாவலை வாசிக்கும் பொழுது வித்தியாசமான அனுபவங்களூடே நகர்ந்து செல்லும் உற்சாகம் சூழ்ந்து கொள்கிறது. நூலாசிரியரின் சமூக நேர்மையும் மார்க்கக் கல்வியில் உள்ள ஈடுபாடும் தொடர் கோலங்களாக வந்து கொண்டிருக்கின்றன. உறுத்தும் உள்ளப்பதிவுகளை இலக்கிய வெளிக்குள் கொண்டுவருவதிலே சிரமமற்ற சிக்கனப் பாடு காணப்படுகின்றது. 

விபரணங்களூடே இடம்பெற்றிருக்கும் உரையாடல் வழியாக முன்வைக்கப்படும் கருத்தியலின் உறுதி சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒரு சிறப்புப் பண்பாகவுள்ளது. உரையாடல் நிலையிலிருந்து கருத்து வினைப்பாட்டு  (DISCOURSE) நிலைக்கு எழுத்தாக்கம் நகர்ந்து செல்வதைக் காணமுடிகின்றது. அதநூடே நூலாசியருக்குரிய இலட்சியத் தெளிவு நிலை கொள்கிறது. 

சம்பவங்களின் குரூரமான நிலைகளினூடே நிதானித்து, தமது கருத்தாடல்களை முன்னெடுக்கும் வேளை கலைத்துவத்திற்குரிய வனப்புடன் நூலாசியரின் எழுத்தாக்கம் நீட்சி கொள்கிறது. 

அன்பர் முஸ்டீனுக்குரிய தனித்துவம் பின்ணினைப்பு என்ற பகுதியை ஆக்கங்களுடன் இணைத்து விடுதலாகும். மிகவும் பிரச்சினைக்குரிய விடயங்கள் அவரால் எடுத்தாளப்படுகின்றன.  ஆயினும் எனது அணிந்துரை அந்த இணைப்போடு தொடர்புபட்டிருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

சுவையுள்ள ஒரு குறு நாவலைப் படிக்கும்  மகிழ்ச்சியுடன் அன்பர் முஸ்டீனுக்கு எனது வாழ்த்துக்கள். 

போராசியர் சபா.ஜெயராசா.

Thursday, January 9, 2014

ரசனைக் குறிப்பு: யோ.கர்ணனின் சேகுவேரா இருந்த வீடு

முஸ்டீன்

சேகுவேராவின்ற வீட்ட எங்க தேடியும் கிடைக்கயில்ல, கிடைக்கயில்ல என்டத்துக்காக விடுவனோ, பௌசரின்ற  எதுவரை இணைய இதழில யோகர்ணனின்ட கதையொண்டப் படிச்சனான், தீரும்பிவராத குரல் ரொம்பப் பிடிச்சுப் போச்சுது. அதனால நானும் ஒரு கொமென்ட் அடிச்சன் பின்ன பௌசருக்கு ஒரு மெய்ல் வெச்சனான் அதில யோகர்ணனின்ட ஈமெய்ல் ஐடி தர முடியுமோ வெண்டு கேட்டிருந்தன் அவரும் உடனே எதுக்கு என்னத்துக்கெண்டு கேக்கயில்ல உடனே அனுப்பிட்டார். அதுக்குப் பிறகுதான் யோ.கர்ணனுக்கு மெய்ல ஒண்டு வெச்சன் அதில யாத்திராவில அவரின்றகட்டுரை ஒன்டப் படிச்சதப் பத்தியும் சொன்னன். எனக்கு சேகுவேராவின்ற வீடு எப்பிடியாவது வேண்டு மென்டு கேட்டன் அவரும் ஓமென்டவர் பின்ன பிடிஎப் போமட்டில அனுப்பிஇருந்தார். பின்ன வாசிக்க அவகாசமில்லாமத் திரியேக்கதான் கொல கேசிக்குப்பிறகு மட்டக்களப்புக்கு ரெண்டாவது தடவையா போகக் கிடச்சுது கொழும்பில இருந்து ரெயின் ஏறின நான் மட்டக்களப்பு வரையும் அந்தக் கதப்புத்தகத்தப் படிச்சன் யோகர்ணனக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்ச வேணும் போல இருந்திச்சுது. இப்பெல்லாம் ஆம்பிளயள ஆம்பிளயல் கொஞ்சும் போது கவணமா இருக்கவேணும் கேய் காரனெண்டு ஹோமோ செக்ஸ்முத்திரை குத்திப் போடுவினம். 


பின்ன மூனுநாள் உத்யோகபூர்வப் பயணம் ஐஞ்சு நாளாச்சுது பிறகு மட்டக்களப்பில இருந்து கொழும்புக்கு ரெய்ன் ஏறேக்க திரும்பயும் படிக்கனும் என்டு முடிவெடுத்த நான், படிச்சி முடிக்கிறத்துக்கு இடையில அதுவும் கடைசிக்கு முந்தின கத படிக்கேக்குள்ள லெப் டொப்பின்ற சார்ச் முடிஞ்சு போச்சுது இல்லாட்டி அன்டைக்கு ராத்திரியே கதைகளப்பத்தி மனசுக்குப் பட்டதெயெல்லாம் எழுதி முடிச்சிருப்பன். இந்தியாவுல மாதிரி பஸ்ஸூக்குள்ளேயும் ரெயினுக்குள்ளேயும் சார்ச் பண்ணிக்கொள்ளுர மாதிரி ஒரு பெசலிடீஸ் இருந்தா எவ்வளவு சுகம் இதுகளுக்கு ஏன் இந்த விசயம் விளங்கயில்லண்டு தெரியேல்ல சரி அத விடுவம் இனி யோகர்ணின்ட சேகுவேரா இருந்த வீடு பத்திப் பாப்பம். 


அது என்னெண்டு தெரியேல்ல நல்ல சுத்தமான பிரதேசக் கலப்பிடமில்லாத தமிழிலதான் இத எழுதனும் என்டு நினச்சநான் ஆனாலும் யோகர்னன் பிசகொண்டும் இல்லாம யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில அற்புதமா எல்லாக் கதையளையும் படைச்சிருந்தார் அதன்ற தாக்கம் என்னையும் பிடிச்சுக் கொண்டிற்று, யாழ்ப்பாணத்துப் பாசை எனக்கு சுளுவா வரயில்ல ஆனாலும் யோ.கர்ணணின்ட புன்னியத்துல பாசை கொஞ்சம் வடிவா வந்துது. 

எல்லாம் மொத்தமா பதின் மூன்று கதைகள் 128 பக்கத்துல வடலி பதிப்பகம் பதிப்பிச்சிருக்கு. இந்தியாவுல பதிப்பிச்சதாலயோ என்னவோ இஞ்ச மார்க்கெட்டுல புத்தகம் கிடைக்கயில்ல. யோகநாதன் முரளி என்ற இவர் ஏற்கனவே தேவதைகளின் தீட்டுத் துணி என்று ஒரு கதைப் புத்தகமும் போட்டிருக்கார், அத்தோட கவிதை சிறுகதை குறும்படம் எல்லாத்திலயும் ஆழமாகக் கால் பதிச்சிருக்கார், அவரின்ற எல்லாக்கதையுமே பிடிச்சிருந்தது, எதையும் குறச்சி மதிப்பிடயில்ல எல்லாம் நூத்துக்கு இருந}று பர்சண்ட்  ஓகே இல்லாட்டி டபுள் ஓகே, உங்களுக்குக் கூட  ஒரு கதையெண்டாலும்  கூடப் பிடிக்காமப் போனா நான் மூக்க அறுப்பன். அது ஆர்ரெதென்பது இன்னும் முடிவாகயில்ல. அப்பிடி ஒரு கதையாவது பிடிக்காமப் போயிருந்தா நேர்ல கண்டு சொல்லுங்கோ.


யோவின்ற சிறுகதைகளப் பத்திப் பேசுறத்துக்கு நான் ஒன்டும் கொம்பர் கிடையாது ஆனா நானும் ஏதோ கதையென்று கிறுக்கித் திரியிறன் அந்தவகையில மனசில பட்டத எப்பிடியாவது போட்டு உடச்சிடுவன் அதப்போலத்தான் யோவும் மனதில் பட்டதையெல்லாம், ஆருக்கும் பயப்பிடாம போட்டு உடைக்கிறார், அவரின்ற சினமா ரசனையும் கதகளில விரவிக் கிடக்கு, இப்போதுள்ள எழுத்தாளர்கள் ஆறும் பார்க்காத பக்கங்களையெல்லாம் வித்தியாசமான யதார்த்தப் பாங்கில் அவர் பாக்கிறார், அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. கதைகளப்பத்தி விளாவாரியாச் சொல்லி என்ற ரசனைய உங்களிட்டத் திணிக்க நான் தயாரில்ல நீங்களும் வாசிச்சுப் பார்த்திட்டுச் சொல்லுங்கோ நான் சொன்னது சரிதானெண்டு. 


இப்ப யாழ்ப்பாணத்தில இருக்கிற யோ என்னைப் பொருத்தவரைக்கும் வித்தியாசமான தளத்தில் வைத்து நோக்க வேண்டிய கதைஞர். இசகு பிசகெல்லாம் இல்லாம கதை தன் பாட்டில் சலிப்பில்hம ஓடுது, வாசிச்சி முடியும் வரையும் பிறகென்ன ?பிறகென்ன? எண்டு மனசுக்குள்ள ஒரே படபடப்பு கடைசியில எதிர்பார்க்காத முடிவு அப்பிடியே ஷெல் அடிச்சமாதிரி இருக்கும். கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை அப்பிடியே நிகழ்காலவோட்டத்தின் போக்கில் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தித்தி விடுவார் துரும்பை இழுத்து கம்மாரிஸ் அடிச்சமாதிரியோ அல்லது துரும்பை இழுக்காமலேயே கம்மாரிஸ் அடிச்ச மாதிரியோ, 


கதைகளைத் தேடி அலைந்து திரியும் போக்கிலிருந்து மாறுபட்ட கதைஞர்களில யோவைத் தனித்துவமானவராக நான் பார்க்கிறேன். யாவும் கற்பனை என்ற போக்கு இப்போதெல்லாம் பெரிதாக இல்லை இன்றே எண்ணத் தோன்றுகிறது. அதுவும் வடபுலத்திலிருந்து யாவும் கற்பனைப் பேர்வழிகள் இப்போதெல்லாம் எழுதுவதும் குறைவு போலத்தான் தெரிகிறது. ஈரானியத்திரைப்பட இயக்கநர் அப்பாஸ் கியாரெர்ஸதமி 'என்னைச் சூழ நடப்பவைகளைத்தான் நான் படமாக்குகிறேன்' என்பார் அது போல தன்னைச் சூழ இருக்கும் மக்களின் அண்றாடங்களுக்குள் புகுந்து கதை சொல்லும் யோ.கர்ணன் மாயாஜாலப்புலத்தில் நின்று புரியாதபடி சொற்களைப் புணைந்து  ஏதேனுமார் இசத்தின் பாற்பட்டு வசனங்களைக் கொழுவிச் சென்று வாசகனைத் திணறடிக்கும் காரியத்தைச் செய்யவில்லை, அது ஒரு பெருத்த ஆறுதல், 


பாலியல் சார்ந்த சொல்லத் தயாரில்லாத பல விசயங்களை விரசமில்லாமல் போட்டு உடைத்துச் செல்லும் போக்கு கதைகளில் இழையோடுகிறது. அவை சொல்லப்படவேண்டியவைதான்  ஆனாலும் பலர் அதைச் சொல்லத்தயாரில்iலாத போக்கு பரவலாக இருப்பது நமக்குத் தெரியும் ஆயினும் இங்கு யோ தெளிவாக இக்கட்டான சூழலிலும் கூட பொதுப்புத்தி இப்படித்தானிருந்தது என்பதை அலட்டிக் கொள்ளாமல் கண்ணத்தில் அறைந்தாற்போலச் சொல்லுவது அற்புதமானது. 

விடுதலைப் புலிகள் தொடர்பில் சொல்லவேண்டியவைகளைச் சொல்வது என்பதைத் தாண்டி ஒரு நியாயமான நேர் கோட்டுப் பாதையில் பயணிப்பது போன்றே தென்படுகின்றது. இயக்கம் சார்ந்த விடயங்கள் சலிப்பில்லாத இயல்பான போக்கில் தானாக நகர்வது போலத்தான் தோன்றியது, சொல்லத்தயங்கி அச்சப்பட்டுப் பதுங்கிஇருக்கும் போக்கு அல்லது சாடைமாடையாக சுற்றிவளைத்து பூடகமாக உண்மை சொல்லுதல் என்ற சிக்கலுக்குள் யோ. கர்ணன் அகப்பட்டுக்கொள்ளவில்லை. புலிகள் சார்ந்த இலக்கியம் படைப்பதென்றால் இப்படித்தான் என்பதைத் தாண்டி யோ பாடமெடுப்பதாகவே எனக்குப்பட்டது. 

யுத்தத்தின் பின்னரான வாழ்க்கை குறித்தும் அது என்ன என்பதிலும் தேடல் உள்ளவர்கள் யோவின் கதைகளைப்படிக்கும் போது கூடுதல் தகவல் பெற்றுக் கொள்ள முடியுமெனக் கருதுகின்றேன், அப்படியான விடயப்பரப்பினுள் யோ அலட்டிக்கொள்ளாமல் நுளைந்து வெளியேறுகிறார். விளிம்பு நிலை மக்கள் என்றொரு சொல்லாடல் இப்போதெல்லாம் ரொம்பப் பரபரப்பாகப் பயன்படுத்தப்படுவதுண்டு அப்படிப்பட்ட மக்கள் மீதான கழிவிரக்கம் மிக முக்கியமானதொன்றாகவும் பார்க்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் வாழ்வியலுக்குள் நின்று சில விடயங்களைப் பேசுதல் என்பதும் கவனயீர்ப்புப் பெறவேண்டியதொரு அம்சமே. அந்தப் பணியையும் யோ செய்திருப்பதாகப் படுகிறது. 


பச்சை பச்சையாகச் சொல்லப்படும் விடயங்கள் களத்தில் இருந்த ஒருவனின் நேரடி வாக்குமூலமாகவே இருக்கவேண்டும் அப்படியானால் அது அழகிய இலக்கியத்தில் உண்மை வடிவம் பெறுதல் தவிர்க்கவொணாததுதான். அந்த உண்மைகளைப் பலர் ஏற்றுக்கொள்ள மறுப்பதும் பலர் ஆ!! பாத்தீங்களா, எங்களுக்குத் தெரியும்தானே என்று சப்புக் கொட்டிக் கொள்வதும் எங்கேனும் அரங்கேறும். ஒன்றை மறுத்தால் இன்னொன்றை ஏற்றல் இன்னொன்றை ஏற்றால் மற்றொன்றை நிராகரித்தல், பிடித்துப் போதல் பிடிக்காமல் போதல் பிடித்தும் பிடிக்காமலும் போதல் இப்படித்தானே வாழ்க்கை பல முரண்களுக்குள்ளால் சிக்குப்பட்டுப் பயணிக்கிறது, அல்லது இழுத்துச் செல்லப்படுகிறது, இங்கும் வாழ்க்கையைப் பலர் இழுத்துச் செல்கிறார்கள் வாழ்க்கை பலரையும் இரும்புப்பிடி பிடித்து இழுத்துச் செல்கிறது, வாழ்க்கையின் போக்கில் அடித்துச் செல்லபபடுதலும் நிகழ்கிறது, சாவதற்கு நியாயம் சொல்ல வேண்டும் ஆனால் வாழ்வதற்கு நியாயம் சொல்லத் தேவையில்லை சாகும் வரை வாழ்வதுதான் நியாயம் வாழ்க்கை இப்படித்தான் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் பல்பரிமாணங்களை அதுவாக எடுத்துக் கொள்கிறது. யோவின் கதைகள் அப்படித்தான் யதார்த்தமான போக்கில் விளாசித் தள்ளுகிறது. 


கதை சொல்லும் பாங்கில் கறாறாக நடந்து கொள்ளாத யோ பாத்திரப்படைப்பில் கறாறாக இருந்திருக்கிறார் என்று படுகின்றது, கதைவடிவங்கள் மாறுபட்டுக் கோண்டே இருக்கும் சூழலில் யோவும் தனக்கான வகைப்படுத்தலைச் சட்டகத்தைத் தூக்கியெறிந்து விட்டுத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது, மனிதர்கள் போட்ட சட்டகங்களையெல்லாம் உடைத்தெறிவதில் எனக்கும் உடன்பாடுதான் காரணம் அது மனிதர்கள் போட்டது என்பது மட்டும்தான். ஏன் இந்த வடிவங்களில் மாற்றம் செய்தாய் என்று யாரும் எம்மை அழைத்து விசாரிக்கப்போவதுமில்லை, குற்றம் சுமத்தி குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடப் போவதுமில்லை, அதனால் தனக்குரிய வடிவங்களைத் தெரிவு செய்வதில் அல்லது புதிய வடிவங்களை உருவாக்கிக் கொள்வதில் தப்பில்லைதான் என்று தோன்றுகிறது. வேறு யாரேனும் மேதாவிகள் யோவைக் குற்றம் சொல்லட்டும் நான் மேதாவி கிடையாது என்பதால் அவர் முன்வைக்கும் பல்வேறு வடிவங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். 

கதைகளின் அரசியல் பல்வேறு பரிமாணங்களில் பேசப்பட வேண்டியதுதான் அதற்காக இங்கு அரசியல் பார்வையை நான் முன்வைக்கத் தயாரில்லை, அந்தவிடயத்தில் யோவுடன் நானும் கதைகளின் அரசியல் புலத்தில் ஒன்றித்து விடுகிறேன். குத்திக் கிழித்து மருந்து போட்டுப் பெரிய கட்டும் போட்டு யோவைக் கட்டிலில் கிடத்த நான் அவருடன் முரண்பட்டிருக்கவேண்டும் இங்கு உடன்பட்டுக் கொண்டதால் அதற்கு அவசியமில்லாது போகிறது. அவரவர்க்குரிய கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளை அவரவரே அறிவர் இங்கு யோவின் எல்லைகள் விசாலித்திருப்பது கவனிக்கத் தக்கதாகும். 

காக்கிச் சீருடைக்குள் புகுந்து துப்பாக்கி தூக்கி விறைப்பாக நின்று சல்யூட் அடிக்கும் கருத்தியலில் இருந்து யோ தன்னை விடுவித்துக் கொண்டதாகப் படுகிறது, அது நல்ல விடயம்தான் பலருக்கு அது பிடிக்காமலும் போகலாம் இன்னும் பலர் பயமுறுத்தி பேனையைப் பிடுங்கிக் கொள்ளவும் கூடும் ஆயினும் யோ ரொம்ப ஜாக்கிதையானவர் பேய் பிசாசுக்கெல்லாம் அவர் பயப்படமாட்டார் என்று நம்புகின்றேன். வாழ்த்துக்கள் யோகநாதன் முரளி என்கிற யோ.கர்ணனுக்கு.

யோ பற்றிய எந்தப் பின்புலமும் தெரியாமல் கதைகளைப்படித்துவிட்டு மட்டும் எழுதிய இது பெரும்பாலும் நியாயமானதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்

இரண்டு சொட்டுக்கள் 

அவள் கண்களிலிருந்தது கலவரமென்பதை அப்போது கண்டேன் இரண்டு அடி பின்னால் போய் சுவரோடு சாய்ந்து நின்றாள். கதவைப் பார்த்தாள் பூட்டியிருந்தது திறந்திருந்தால் வெளியே ஓடியிருப்பாள் மாதிரியிருந்தது.அவளுக்கு மூச்சு வாங்கியது பிறகு மெல்லச் சொன்னாள்
'இப்படி இந்த வேலை செய்றாவெண்டு எங்கட அம்மாவை நீங்கதான் சுட்டனீங்கள்'

(திரும்பி வந்தவன் - முதலாவது கதையின் கடைசிப் பகுதி)


'ச்சா எவ்வளவு பெரிய பிழை விட்டிட்டன்..' எனத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார் பிறகு, இந்தப் பிழைக்கு தான்மட்டுமே பொறுப்பில்லைதானே எனவும் யோசிக்கத் தலைப்பட்டார் ஏனெனில் குமரன் பத்மநாபன் எனும் பெயர் பத்திரிகைகளில் வருவதில்லை

அப்படி வந்தாலும் யாழ்ப்பாணத்திலும் பிற இடங்களிலும் யுத்தத்தின் அழிவுகளை நினைத்து கண்ணீர் விடுவது மாதிரி படங்களெதுவும் பிரசுரமாகியிருக்கவில்லைதானே 

(இரண்டாவது தலைவர், கடைசிக் கதையின் கடைசிப் பகுதி)

Monday, January 6, 2014

சோலைக் கிளியின் பொன்னாலே புழுதி பறந்த பூமி

- முஸ்டீன் - 

எல்லோருக்குமுள்ள பால்ய காலத்து நினைவுகள் பசுமையானவைதான். மீட்டிப்பார்ப்பதில் அவரவர் முதிர்ச்சி அதன் ரசனையைச் சுவைக்கச் செய்யும் ஒன்றாக மாற்றிவிடும். அதிலும் கவிஞனாக அவன் இருந்துவிட்டால் அந்த நினைவுகளில் கவிதை ரசம் சொட்டும். அது எல்லோருக்கும் இலகுவாக அமைந்துவிடுவதில்லை. கவிஞர்கள் என்று நாமம் போட்ட பலரும் தமது பால்ய நினைவுகளை எழுதியிருக்கிறார்கள்தான் அதற்காக அவையெல்லாம் ரசிக்கச் செய்யும் என்றில்லை. எல்லாவற்றிலும் கவித்துவம் கொளிக்கும் என்றுமில்லை. 

கானா மயிலாடக் கண்டிருந்த வான் கோழி அது போலத் தானாட என்று ஒரு விடயம் இருக்கிறது. சோளைக்கிளி பத்திக்கை தொடங்கிய பின்னர் பலருக்கும் தங்கள் நினைவுகளை எழுத வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அதாவது சோளைக்கிளி பத்திக்கை எழுதும் போது பத்தியென்ற பெயரில் பல சொத்திகளும் எழுதிய பின்னணிக் கதைகள் பலவும் இருக்கின்றன அவற்றைப் பேசினால் புழுதி வாசனையை இங்கே இழந்து விடுவோம். அந்தக் கொடுமைகளையும் சமீபகாலமாக நாம் பல பத்திரிகைகளில் அனுபவித்து வருகிறோம்.  சிலர் புத்திசாலித்தனமாக நிறுத்திக் கொண்டார்கள். இன்னும் சிலர் புத்தகமாகப் போடும் எண்ணத்தில் அலைகிறார்கள். அதுக்குள்ள அவங்க கவித எழுதினாங்களாம் அதப் பிறர் களவெடுத்து தங்களோடது என்றார்களாம் அதையெல்லாம் இவங்க பெருந்தன்மையோட மன்னித்துவிட்டாங்களாம் என்றெல்லாம் பக்கம் பக்கமாய்க் கதை வேறு. 

கண்ட கண்ட கழுதையெல்லாம் அனுபவம் எழுதத் தொடங்கிய பின்னர் பத்தி வாசிப்பதையே விட்டுவிட்டேன். அவர்களை மரத்தில் கட்டி வைத்துச் சோளைக்கிளியின் இந்தப் பொன்னாலே புழுதி பறந்த பூமியால் சோப்ப வேண்டும்.

பத்திக்கை என்று வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் உயிரெழுத்துப் பகுதியில் தொடராக சோளைக் கிளி எழுதியிருந்ததைப் படித்து அந்தப் பகுதியை அப்படியே பத்திரமாக சேமித்த ஞாபகம் இருக்கிறது. அப்போது ஆத்மா பல பயன் தரும் விடயங்களை அந்த நான்கு பக்கங்களுக்கூடாகவும் கொண்டுவந்து கொண்டிருந்த நேரம். ஆத்மா அந்தப் பக்கங்களை விட்டதோடு அந்தப் பக்கங்களும் கிளைமோருக்கு அகப்பட்டுச் செத்தவன் போலாயிற்று. பார்க்கச் சகிக்கவில்லை. 

தொடராகப் பத்திரிகையில் படித்ததை விட சுகமானதோர் அனுபவத்தை தொகுப்பாகப் படிக்கின்றபோது ஆனந்தமாக அடைய முடிந்தது. ரமீஸ் அப்துல்லாவின் நீண்ட அணிந்துரையை புத்தகம் படித்து முடித்துவிட்டுப் படித்திருக்கலாமே என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. உமாவரதராஜனின் சின்னஞ்சிறிய குறிப்பு ஒரு எகிப்து நாட்டுப் பேரீத்தம் பழத்தைச் சுவைத்தது போல இருந்தது.

தேவையில்லாத விடயங்களில் தலையிடுவதுமில்லை, மோசமான மனிதர்களுடன் தொடர்பாடுவதுமில்லை என்றும் ஒரு வரையறையைப் போட்டுக்கொண்டு அமைதியாக இருந்து இலக்கியம் படைக்கும் இனிய மனிதர் சோளைக்கிளி. அடுத்தது கிள்க்கு ரொசமும் கொஞ்சம் அதிகம்தான். மானமுள்ள மனிதனுக்குத்தானே ரோசம் இருக்கும். கவிதைகளாலேயே அறியப்பட்ட சோலைக் கிளியின் மறுபக்கம் போலவே இந்தப் பொன்னாலே புழுதி பறந்த பூமி தெரிகிறது. ஒரு இறுக்கமான கவிஞர் என்ற நிலையிலிருந்து சுவாரஷ்யமான மனிதர் என்ற நிலைப்பாட்டை  பொன்னாலே புழுதி பறந்த பூமி ஏற்படுத்துகிறது. 

ஊரிலுள்ள பல கவிதை நாம்பன்களால் அவரும் பாதிக்கப்பட்டிருக்கார் போல. அதென்ன நாம எழுதினா அப்பிடி வருதில்ல அவரு எழுதினா ஆகா ஓகோன்னு பேசுறாங்க என்று முணுமுணுக்கும் பல கவிதை ஆசாமிகள் இன்னும் வாழ்கிறார்கள். கட்டாக்காலிகள் பறவாயில்லை. 

சோலைக் கிளியின் ரசனை மட்டத்தை ஓரளவுக்கு மதிப்பிட நமக்குத் துணைசெய்யும் பத்திக்கை, அவரது ரசனை ஒரு ஆழமான கிணறு போல, மிக நீண்ட தொலைவில்தான் நமது உருவம் சின்னதாய்த் தெரியும் நாம் சத்தம் போட்டால் கூட தாமதித்து மெதுவாகத்தான் திரும்பிவரும். அந்த அமைதிக்கு எதிரொலிக்கும் அழகு புதுமை சேர்க்கும். அப்படித்தான் பொன்னாலே புழுதிபறந்த பூமியை நான் பாரக்கிறேன். இந்தப் பதிவு ஒன்றும் பம்மாத்துக்கு எழுதப்படும் குறிப்பு போன்றதல்ல. எனக்குள் ஊர்ந்து குறும்பு செய்து வாய்விட்டுச் சிரிக்கச் செய்தும் ஏக்கத்தோடு பெருமூச்செரியச்  செய்ததுமான எழுத்துக்களின் ஆனந்தத்தை, ஒர் இளையவனின் பார்வையில் இறக்கி ரசனையில் அமிழ்த்தி அதை அப்படியே வெளிப்படுத்தி விடுவதுதான், இது அவரின் எழுத்துக்குக் கிடைக்கின்ற வெற்றி, அவரைவிட பல வயது இளையவன் ஒருவனையும் அவரது எழுத்து கிறுக்குப்பிடிக்க வைக்கிறது என்றால்  பெருவெற்றிதானே. இது காலம் தீர்மானிப்பது. 

நான் ஊர்ப் பாடசாலையில் படிக்கும் காலத்தில் பாடசாலை முடிந்து வீடு வந்து சேரும் வரையும் காட்டில் பனம் பழம் பொறுக்கி அதைச் சூப்பிக் கொண்டே நடப்பது இனிமையான நினைவு. அது போல புச்சிப் பனங்கொட்டை என்றால் அதற்குத் தனி மவுசு அதைச் சூப்புவது மதுரமானது. இனிப்புக் குட்டான். அந்தப் பனங் கொட்டை சூப்பும் இனிமையான நினைவுகளை மீட்டுத் தந்தவர் சோலைக்கிளி.

எதை விட்டு வைத்தார்? அவரின் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு நினைவினை மீட்டுத்தராமலில்லை. ஒன்பது வயதுவரை மட்டுமே எனக்கு எனது மண்ணோடு உறவு கொண்டாட முடிந்தது அதன் பின்னர் எனது மண்ணை நான் இழந்து மீண்டும் பெறும் போது நான் இளந்தாரியிகி இருந்தேன். அப்போதும் கூட அந்த நினைவுகள் விட்டுவைக்கிறதா? இதையெல்லாம் படிக்கும் போது பலர் மீது எனக்குக் கோபம் வருகின்றது. எனது குழந்தைப் பருவத்தைப் பலவந்தமாகப் பறித்து ரம்புட்டான் சோலைக்குள் மதில்களுக்குள்ளால் எறிந்துவிட்டமைக்காக. 

சோலைக்கிளிக்கு பொன்னால் புழுதி பறக்கவிட்ட பூமி அழியாத் தடங்கள் என்று நிறையவே அள்ளிச் சொரிந்து விட்டிருக்கிறது. இப்போது முகநூலில் வாக்கியங்களில் உட்காரும் கவிதை, பறவை போட்ட பழம் என்று நமது ரசனைக்குத் தீனி போடும் மகாரசனைப் பெக்டரி ஒன்றை அவர் நடாத்தி வருகின்றார். சின்னச் சின்னப் பத்திகள். குச்சிமிட்டாய் சாப்பிடுவது போலவும், மஸ்கெட்டியான் பழம் பறித்தும் பொறுக்கியும் நடு நாக்கில் வைத்து முரசோடு இணைத்து நசுக்கி சுவைத்துச் சாப்பிடுவது போலவும். 

இந்தக் கிளி இன்னும் நிறையப் பழங்கள் போட வேண்டும் கவலை மறந்து சிரிக்கவேணும்.