Thursday, November 1, 2018

சொல்லப்படாத உண்மைளைப் பொய்களால் மறைத்தல் . - தமிழீழ விடுதலைப் போர் vs முஸ்லிம்கள்

சொல்லப்படாத உண்மைளைப் பொய்களால் மறைத்தல்
தமிழீழ விடுதலைப் போர் vs முஸ்லிம்கள்

-முஸ்டீன்-

இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுற்று இப்போது ஓர் அமைதியான சூழல் நிலவத் தொடங்கியிருக்கின்ற அடையாளங்களை காலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கையில் எழுத்துப் போராளிகள் பல்வேறு திசைகளிலிருந்தும் வெளிக்கிட்டுத் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளப் பல்வேறு விதமான வேடம்பூண்டு விதவிதமான எழுத்தாக்கங்களை முன்வைக்கின்ற பொழுதில் இப்போது நாம் இருக்கின்றோம். நிறைய எழுத்துகள் மீது நமக்கு ஏற்படுகின்ற அபிப்பிராய பேதம் எத்தகையது என்பதை பலரும் சொல்லாமலேயே கைவிட்டுக் கடந்து செல்கின்ற ஒரு போக்கை நாங்கள் அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. சமீபகாலமாக வெளிவருகின்ற யுத்த காலத்து சூழ்நிலைகள் பற்றிய எழுத்தாக்கங்கள் யுத்தகாலத்தில் இருந்ததை விட மிகவும் கொடூரமானதாகவும் யுத்தகாலத்தில் உயிர்குடிக்கும் துப்பாக்கிகளை விட மிகவும் பயங்கரமானதாகவும் மாறியிருக்கின்ற ஒரு நிலையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. 


சில எழுத்தாளர்கள் தங்களை நவீன மீட்பர்களாகவும் புதிய அவதாரங்களாகவும் நிறுவுவதற்குப் படுகின்ற அவஸ்தையைப் பார்க்கின்ற போது மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. அத்துடன் எம்மால் அவர்களது பிரயாசையைப் புரிந்துகொள்ள முடியுமாகவும் இருக்கின்றது. இன்னும் வாங்குகின்ற கூலிக்கு மாறடிக்காமல் தாராளமாக நடந்துகொள்கின்றனர். இன்னும் சில போராளிகளுக்கு எழுத்தே பஞ்சப் பிழைப்பாகப் போய்விட்டது. அதற்காக போராளி வேசம் போடும் நிலையில் அவர்களது பரிதாபம் தாங்க முடியாதது.


இந்த அடிப்படையில் அன்மைக் காலமாக வெளிவருகின்ற சில புத்தகங்கள் விதைக்க முயலும் கருத்தியலை கண்டுகொள்ளாமல் கடந்து போக முடியவில்லை. அவை ஆழமான வாசிப்பையும் கருத்தாடலையும் சமூகவெளியிலே அவசரமாகச் செய்யப்பட வேண்டுமென்ற அவசியத்தையும் பறைசாற்றி நிற்கின்றன. இந்த வரிசையில் வந்த பல்வேறு புத்தகங்கள் இன்னும் எனது வாசிப்புக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அவை பற்றிய பல்வேறு குறிப்புகளை வாசிக்கக் கிடைத்தது. என்ன இருந்தாலும் அவற்றை நான் வாசித்த பின்னர், அவை குறித்துக் கருத்துரைப்பதுதான் தர்மம். சில புத்தகங்கள் வெளியாகி ஒரு சிறிய இடைவெளியின் பின்னர்தான் கிடைத்தன. அந்த அடிப்படையிலே வாசு முருகவேல் எழுதிய 'ஜெப்னா பேக்கரி' தாமதித்தே எனக்குக் கிடைத்தது. என்னுடைய நண்பர்கள் பலர் என்னிடம் 'நீங்கள் வாசிக்க வேண்டிய நூல், கட்டாயம் எதிர்விணையாற்ற வேண்டிய ஒரு நூல்' என்ற வேண்டுகோளை ஏலவே முன்வைத்திருந்தார்கள். 


இந்தக் கட்டுரையில் நான் சில உண்மைகளைப் போட்டு உடைக்கலாம் என்று நினைக்கின்றேன். சில வேளை அந்த உண்மைகள் என்னை பயங்கரமாகக் கட்டமைத்த உருவங்களைப் பரிசளிக்கக் கூடும். அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனெனில் எழுத்தில் யாருக்கும் வளைந்து கொடுக்காதும் பக்கம் சாராதும் நான் நேர்மையாக இருக்கின்றேன் என்ற அடிப்படையொன்றே எனக்குப் போதுமானது. காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதமிக்க இனவாதச் செயற்பாடுகளை நியாயப்படுத்தி சரிகண்டு சின்னத்தனமாக எழுத உங்களது மனசாட்சி அனுமதித்து இருக்கும் போதும் அதை நாம் வாசிக்கும் அவலம் நேர்கின்ற போதும் இந்த எதிர்வினை அவ்வளவு பாரதூரமாக இருக்காது என்றே நம்புகின்றேன்.


ஈழத் தமிழர்களின் பக்கம் அனைவரது கவனமும் திரும்பட்டும் என்று 1995இல் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அப்துர் ரவுப் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து ஒருவித நியாயமான தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டுத்தான் இந்த ஆசாமி ஜெப்னா பேக்கரி என்ற பொய்மூட்டையை அவிழ்த்துக் கொட்டியிருக்கின்றார். (முத்துக்குமார் கண்டுகொள்ளப்பட்ட அளவுக்கு அப்துல் ரவுப் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. 2010களுக்குப் பின்னர்தான் அப்துல் ரவுப் அடையாளமே காண்பபட்டார் என்பது வேறு சங்கதி)


பொதுவாக நான் எந்தவொரு புத்தகத்தின் முன்னுரையையும் முதலில் படிப்பதில்லை. புத்தகத்தை படித்து விட்டுத் தான் அவற்றைப் படிப்பது வழக்கம். இருந்தாலும் இதன் பின் அட்டையில் போடப்பட்டிருந்த 'லக்ஷ;மி சரவணக்குமாருடைய பின்னட்டைக் குறிப்பைப் பார்த்த பின்னர் உடனடியாக, உள்ளே என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 


01. 'தமிழீழ விடுதலைப்புலிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து இஸ்லாமியர்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகளையும் அவர்களின் சொல்லொண்ணாத் துயரங்களையும் யாரும் மறுப்பதற்கில்லை, சந்தேகமின்றி அது பிழை, ஆனால் வெறுப்புகளுக்கும் வன்முறைகளுக்குமான காரணிகளையும் நாம் சற்றுக் கவனிக்கத்தான் வேண்டும்.'
02. இஸ்லாமியர் வெளியேற்றம் அன்றைய சூழலில் நாங்கள் தவிர்க்கவியலாமல் எடுக்க நேர்ந்த தவறான முடிவு, என பிரபாகரனே மன்னிப்புக் கேட்டது இங்கு யாராலும் கவனிக்கப்படவோ ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை. 
03. 'இந்தியப்படை வெளியேறும் போது 'ஊர்காவல் படை' என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது தமிழர் இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பகரமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்து தான் அதன் பிற்பாடு நடந்த பெரும்பான்மையான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை விதைத்து விட்டுப் போனது'
04. இஸ்லாமியர் மீதான வெறுப்பையோ கசப்பையோ எந்த இடத்திலும் வெளிப்படுத்தாமல் நிகழ்ந்த எல்லாவற்றுக்குப் பின்னாலுமான தன் பக்கத்து கசப்பான நியாயங்களை மட்டுமே முன்வைக்கின்றார் (வாசு முருகவேல்). 


இனி வாசு முருகவேல் என்னென்ன தன் முன்னுரையில் சொல்கின்றார் என்று பார்ப்போம்.

05. முஸ்லிம்கள், மொழி அடையாளத்தை உதிர்த்து மத அடையாளத்தை அடைய விரும்புதல் 
06. பிரிதலின் பரிணாம வளர்ச்சியை அதைப் பயன்படுத்தவும் தயாரான அரசியலின் நீட்சியே யாழ் வெளியேற்றம் என்ற ஈழழப்போராட்டத்தின் கரும்புள்ளி
07. யாழ் வெளியேற்றத்துக்கான அடிப்படை முகாந்திரங்களைக் கட்டியெழுப்பியது புலிகள் இயக்கம் அல்ல
08. வடக்கின் தமிழ் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் விடுதலைப் போரட்டத்தை ஒடுக்கும் அரசுக்குச் சேவையாற்றினார்கள். 
09. சிங்கள அரசாங்கத்தின் ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் நாசகார வேலைகளில் ஈடுபட்டனர்.
10. 'யாழ் வெளியேற்றத்தை இனச்சுத்திகரிப்பு என்றெல்லாம் திரித்து (சிலர்) தமக்கு மனித உரிமை முலாம் பூசிக் கொண்டனர்.'


இவை தவிர அவர் தனது நாவலில் நுட்பமாக நகர்த்தியிருக்கும் முக்கியமான சில விடயங்களை இறுதியில் பார்க்கலாம் அவற்றுக்கான விரிவானபதிலை முதலில் பதிவு செய்கிறேன்.

முதலாவது இங்கு யாழ் வெளியேற்றம் என்று குறிப்பிடப்படும் சொல்லே தவறானது. ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டுமே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் என்ற தவறான புரிதலை அது கொடுக்கின்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் முஸ்லிம்கள் எப்படி வெளியேற்றப்பட்டார்கள் என்பதை பதிவு முன்னதாக வெளியேற்றும் முடிவு தற்செயாக எடுக்கப்பட்டதல்ல என்பதைத் தெளிவுபடுத்த அதற்கு முந்திய சில நிகழ்வுகளையும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.


முதலில் கிழக்கு மாகாணந்தான் முஸ்லிம்களை முழுமையாக வெளியேற்றும் திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டது. அதன் முதற்கட்டமாக 1990 ஜூலையில் பல்பக்கத் தாக்குதல் பரவலாக கிழக்கு எங்கனும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கிள்ல இடம்பெற்றது. மிகச் சொற்பமான சிலவற்றைக் குறிப்பிடுவதாயின்
1990 ஜூலை 12 குருக்கள் மடப் படுகொலை, 
ஜூலை 23 வீரச்சோலையில் 8பேர் மரத்தில் கட்டிவைத்துப் படுகொலை. 
ஜூலை 31 அக்கறைப்பற்று நகரில் 12 பேர் சுட்டுப் படுகொலை, 
ஆகஸ்ட் 03 காத்தான்குடியில் இரு பள்ளி பள்ளிவாயல்களில் 103 பேர் உட்பட அன்றைய தினம்126 பேர் படுகொலை 
ஆகட்ஸ் - 06 அக்கறைப்பற்று நீத்தை வயல் பிரதேசத்தில் புலிகளுக்கு கப்பம் கட்டி அனுமதிபெற்றுச் சென்ற  33 பேர் புலிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். 
ஆகஸ்ட் 11 அக்கறைப்பற்று பள்ளிவாயலில் துப்பாக்கிச் சூடு, 
ஆகஸ்ட் 12 ஏறாவூர் சத்தாம் ஹூஸைன்  கிராமத்தில் 116பேர் அன்றைய தினமும் படுகாயமடைந்தவர்களில் பின்னர் மரணமடைந்தவர்கள் அடங்கலாக அந்நிகழ்வில் மொத்தமாக 123 பேர் படுகொலை. 
ஆகஸ்ட் 10ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தைவிட்டும் சகல முஸ்லிம்களும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டும் என்று துண்டுப் பிரசுரம் போடப்பட்டது (அதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஆகஸ்ட் 13ஆம் திகதி முஸ்லிம்களால் மற்றுமோர் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது அதில் 19ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துத் தமிழர்களும் கிழக்கு மாகாணத்தை விட்டே வெளியேறிவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்து) அத்துடன் அம்பாறையில் தமிழர்களுக்கெதிரான தாக்குதல்களும் ஆங்காங்கு அரசபடையின் துணையுடன் ஆரம்பித்தன. அதன் பின்னர்தான் புலிகளின் திட்டம் கிழக்கில் பலிக்காது என்ற முடிவு எட்டப்படுகின்றது. திட்டம் வடக்கு நோக்கித் திரும்புகின்றது. அதன் பிரகாரம்,

 வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தலைமையாகக் கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கருனா அம்மான் அப்போது  மட்டு-அம்பாரை சிறப்புத்தளபதி கிழக்கில் நடந்த அனைத்திற்கும் நம்முன்னே இருக்கும் பலமான ஒரே சாட்சி. ஜின்கெலி, ரெஜி,கரிகாலன், ரெஜினோல்ட், ரஞ்சித், நியூட்டன், விசு ரீசன், நல்லதம்பி இவர்களெல்லாம் அப்போது கருனா அம்மான் என்ற மட்டு-அம்பாரை சிறப்புத் தளபதிக்குத் துணையாக இருந்து செயற்பட்டார்கள்.


1990 காலப்பகுதியில் காத்தான்குடி அக்கறைப்பற்று ஏறாவூர் படுகொலைகளைத் தொடர்ந்து ஓட்டமாவடி,வாழைச்சேனை பிரதேசத்திலும் பாரியதொரு படுகொலைத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சில முஸ்லிம் இளைஞர்கள் கட்டவிழ்த்து விட்டிருந்த மிகப் பயங்கரமான அச்சுறுத்தல் மிக்க பொய்கள்தான் காப்பாற்றின என்பது மிக முக்கியமான விடயம். அந்த இடத்தில் தங்களை காப்பாற்றிக் கொள்ள எத்தகையதொரு பிரம்மையை கட்டமைத்தார்கள் என்பது பல்வேறு இடங்களில் நான் பதிவு செய்திருக்கின்றேன். என்னுடைய 'ஹராங்குட்டி' சிறுகதைத் தொகுப்பிலே 'கேர்ணலின் வாக்குமூலம்' என்ற சிறுகதை இருக்கின்றது. பாகிஸ்தானின் பயிற்சிபெற்ற மிகப்பெரும் இராணுவத் தளபதியாக கட்டமைக்கப்பட்ட 'கேர்ணல் லெத்தீப்' என்ற நபரை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. அவரது வாக்குமூலமாகவே அது நிகழ்கின்றது. அந்த வாக்குமூலத்தின் மூலமாக நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். அதுவொரு முக்கியமான ஆவணம். எனவே அந்த விடயத்தை இங்கு நான் விளங்கப்படுத்த வேண்டிய தேவை இல்லை. 


1990 ஆகஸ்டுகளில் ஓட்டமாவடி,வாழைச்சேனை பிரதேசங்களில் புலிகள் நிகழ்த்தவிருந்த படுகொலைத் திட்டம் ஏன் தோற்றுப் போகின்றது. இந்தத் திட்டத்தை செயற்படுத்த முடியாமல் போனதேன் என்பதை இப்போதும் உயிருடன் இருக்கின்ற 'கருனா அம்மான்' விளங்கப்படுத்தினால் மிகவும் சிறப்பாகவும், உணர்வுபூர்வமானதாகவும், ஆதாரபூ10ர்வமானதாகவும் இருக்கும் என்று நான் நம்புகின்றேன். அக்காலப்பிரிவில் ஓட்டமாவடி,வாழைச்சேனை பிரதேசங்களில் அந்தப் படுகொலைத்திட்டம் நிகழ்த்தப்படவில்லையாயினும் அதனைச் சூழவிருந்த கிராமங்களில் 'பாலை நகர், தியாவட்டவான், ஊத்துச்சேனை, உன்னிச்சை, காரமுனை, பனிச்சங்கேணி'  போன்ற பகுதிகளில் இருந்த எல்லா முஸ்லிம் மக்களும் தங்களுடைய கிராமங்களை விட்டு விட்டு ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தார்கள். அங்கிருந்த நிலங்கள் அனைத்தும் புலிகளுடைய கட்டுப்பாட்டின் கீழ் அவர்களுடைய ஆளுகைப் பிரதேசங்களாக அறிவிக்கப்படுகின்றது. 


காத்தான்குடி, ஏறாவூர் படுகொலையின் பின்னர் அந்தப் பிரதேசங்களில் எந்த மக்களும் இருக்கவில்லை. அனைவரும் வெளியேறி ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களில் தஞ்சமடைகின்றார்கள் பாலைநகர், தியாவட்டவான் மக்கள் உட்பட. இப்பொழுது புலிகளுக்குச் சாதகமான ஒரு விடயம் நடந்தது. உதிரிகளாக ஆங்காங்கே இருந்த அந்த பரந்த குடியிருப்புப் பிரதேசம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்கப்பட்டது, மிகப்பரந்த நிலப்பரப்புப் பிரதேசம் அவர்களுடைய எல்லைக்குள் வந்தது. காவத்தமுனையிலிருந்து புதுவெளிப்பாலத்துக்கு அப்பால் ஒருவர் சென்றால் அவருடைய உயிருக்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. வாழைச்சேனையிலிருந்து நாசிவந்தீவுக்குச் சென்றால் கூட அவருடைய உயிருக்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. நாவலடிக்கு அப்பால் சென்றால் அவருடைய உயிருக்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை என்ற நிலையை மிக அழகாக திட்டமிட்டுத் தோற்றுவித்தார்கள். ஆறு மணிக்கு பிறகு யாரும் அந்தப்பக்கம் செல்வதில்லை. 


பின்னர்தான் எல்லா ஊர்களிலுமுள்ள  இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள என்ற உணர்வோடு இராணுவத்தை மாத்திரம்தான் கடைசி நம்பிக்கையாகக் கொண்டிருந்தார்கள். இதற்காக இந்தப் படுகொலைகளை சிங்கள இராணுவம் திட்டமிட்டு செய்தது என்று நிருவி அதிலிருந்து புலிகளைக் காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் அதற்கான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். ஏனெனில் இந்தப் படுகொலைகள் புலிகளின் ஏற்றாட்டில் இடம்பெற்றது என்பது நிறுவப்பட்ட உண்மை. 


விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்ததன் பின்னர் 'பிரபாகரனுடைய கட்டளைப்படி திட்டங்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் அமைவாகத்தான் நாங்கள் அனைத்தையும் செய்தோம்' என்று கருணா அம்மானே சொல்கிறார். வடக்குப்; புலிகள் சொல்கிறார்கள் 'கிழக்கிலுள்ளவர்கள் தான்தோன்றித்தனமாக இதை செய்து விட்டார்கள்' என்று. அப்படியானால் விடுதலைப்புலிகளுக்கென்று ஒரு கட்டுப்பாடு இருக்கின்றது. ஒரு படுகொலை நடந்தாலும் சரி சிறு சம்பவம் நடந்தாலும் சரி கிழக்கிலுள்ளவர்களை அவர்கள் ஏன் கூப்பிட்டு விசாரிக்கவில்லை? கிழக்குப் படுகொலை நடந்ததன் பின்னர் தான் 'கரிகாலன்,நியூட்டன்,ரஞ்சித்' போன்றவர்கள் வடக்குக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு வடமாகாணத்தின் இனச்சுத்திகரிப்புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். விடுதலைப் புலிகளின் பொறுப்புக் கூறலை இனியும் யாராலும் மறுதலிக்க முடியுமா?


இது இப்படியே இருக்க 1990 இந்தப் படுகொலைகளுக்குப் பிற்பாடுதான் கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் ஊரிலும் எங்களுடைய ஊர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் முஸ்லிம் இளைஞர்கள் 'ஊர்காவல் படை' என்கின்ற அமைப்பிலே தங்களை இணைத்துக் கொள்கின்றார்கள். இலங்கை இராணுவம் அதற்கு அநுசரனை வழங்கினார்கள். கடைசி நம்பிக்கை தரும் இடமாக அரசஇராணுவக் கட்டமைப்பு மாத்திரம்தான் இருந்தது. எனவே ஊர்காவல் படையாக அவர்கள் சேர்ந்து கொள்கின்றார்கள். அதன் பிறகு தான் ஊர்காவல் படைக்கு இராணுவம் பயிற்சியளிக்கின்றது. பிறகு அந்தப்பயிற்சியின் கொடூரம் தாங்காமல் விட்டு விட்டு வந்தவர்களும் இருக்கிறார்கள். விட்டு வந்தவர்களை இராணுவம் மீண்டும் வந்து பிடித்துக் கொண்டு போனது. ஏனெனில் இராணுவத்தில் ஆள் பற்றாக்குறை இருந்தது. முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு சிங்கள இராணுவத்தை கொண்டு வந்து நிறுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே உங்கள் பிரதேசங்களை பாதுகாப்பதாக இருந்தால் நீங்களே உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்ற அடிப்படையிலே அரசாங்கள் எத்தனமான ஒரு போக்கை கடைப்பிடித்தன. ஊர்காவல் படை என்பது 1990 ஓகஸ்ட்களின் பின்னர் முஸ்லிம் ஊர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக மாறியது. (அப்போது இந்திய இராணுவம் முற்றாக இலங்கையிலிருந்து வெளியேறி இருந்தது.


ஊர்காவற்படை உருவாக்கமும் முஸ்லிம்களும்.

தமிழ் விடுதலை ஆயுதக் குழுக்கள் சிங்கள மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுக்கத் தொடங்கியதன் பின்னர் எல்லா சிங்கள எல்லைக் கிராமங்களிலும் பாதுகாப்புக்காக இஇராணுவத்தை நிறுத்த முடியாத சூழ்நிலையிலேயே 1985ஆம் ஆண்டுகளில் சிங்கள எல்லைக் கிராமங்களில் 'கம் ஆரக்ஷாவ' என்ற பெயரில் அந்தந்த ஊர்களைச் சேர்ந்த நபர்களைக் கொண்டு பாதுகாப்புக்காகக்  குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு மிகச் சாதாரணமான அடிப்படைத் தற்காப்புப் பயிற்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. பின்னர் சிங்கள எல்லைக்கிராம மக்கள் மீதான தாக்குதல் உக்கிரம் பெறவே இந்த ஊர்காவல்படைப்பிரிவு போதிய இராணுவப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டு சிங்களக் கிராமங்கள்தோரும் பெரியளவில் முக்கியத்துவம் கொடுத்து வலுவாக்கப்பட்டது. 1990கள் வரை கிழக்கு முஸ்லிம் ஊர்களில் இத்தகைய ஊர்காவல் படை உருவாக்கம் இடம் பெற்றிருக்கவில்லை.  


கிழக்கில் பரவலாக தாக்குதல்கள் இடம்பெறத் தொடங்கிய பின்னர் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த ஊர்களில் அந்தந்தக் கிராம மக்களினைக் கொண்டே அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பயங்கரவாதப் படுகொலைக் களங்களாக மாறிய பின்னர் முஸ்லிம் இளைஞர்கள் தாமாக முன் வந்து இந்தப் பாதுகாப்புப் பணியில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். 


இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர்தான் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டது என்பது சுத்தப் பொய்.
'லக்ஷ;மி சரவணக்குமார்'; எந்தச்சூழலில் அல்லது எந்தப் புரிதலில் இருந்து இந்த விடயத்தை முன்வைக்கிறார் என்பதில்தான் கேள்வி எழுகிறது, அதாவது இங்கு சொல்ல வருகின்ற முக்கியமான விடயம் 'இந்தியப்படை இலங்கையை விட்டு வெளியேறும் போது ஊர்காவல்படை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு தனிப்படை அமைத்தது'. இந்த முட்டாள்தனமான பொய்  நமக்குப் புரியவில்லை. 


ஏனெனில் இந்திய, இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் தான் இந்தியப்படை இலங்கையில் சமாதானத்தை காப்பதற்காக வந்தது. 'சமாதானத்தை பாதுகாக்கும் படை' (ஐனெயைn Pநயஉந மநநிiபெ கழசஉந - ஐPமுகு) என்று வந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு சிறிய இடைவெளியின் பின்னர் 'சமாதானத்தை கொல்லும் படையாக' ( ஐனெயைn Pநயஉந மடைடiபெ கழசஉந - ஐPமுகு) ஆக மாறினார்கள். அவர்கள் சமாதானத்தை பாதுகாக்க முன்னெடுத்த நடவடிக்கைகளை விட சமாதானத்தை கொன்று புதைக்கின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமை தான் மிக அதிகம். அந்த அடிப்படையில் இந்தியப்படையினர் பல்வேறு இடங்களிலும் தமது அராஜகக் கரங்களை நிலைநிறுத்திக் கொண்ட போது அவற்றை துப்பாக்கிமுனையிலே தக்க வைத்துக்கொள்வதற்கான பல்வேறு முயற்சிகளையும் எடுத்தார்கள். அதிலே அவர்கள் எந்தெந்த பிரதேசங்களிலெல்லாம் தங்களுடைய அமைதியைக் கொல்லும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்களோ அந்தந்தப் பிரதேசங்களில் இருந்த எல்லா மக்களும் முழுமையாக பாதிக்கப்பட்டார்கள். அதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. அதில் தமிழ் பேசுகின்ற மக்கள் இஸ்லாமியர்களாக இருக்கட்டும், ஏனையவர்களாக இருக்கட்டும் அனைவரும் முழுமையாக பாதிக்கப்பட்டார்கள். இந்த இடத்திலே இந்திய இராணுவம் 'ஆயுதம் தூக்கிய இயக்கங்கள்' என்கின்ற ஒரு சூத்திரத்தை நோக்கியவர்களாகத்தான் தங்களுடைய அனைத்து படையெடுப்பு வேலைத்திட்டங்களையும் அல்லது அழித்தல் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தார்கள். 


அவ்வாறு அவர்கள் தங்களுடைய அழித்தல் வேலைத்திட்டங்களை அமுல்படுத்த பொதுவாக இந்தியாவுடைய வெளியுறவுக் 
கொள்கையில் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற பொழுது இந்தியப் புலனாய்வு அமைப்பான சுயுறு எப்பொழுதும் செய்கின்ற மிக நுனுக்கமான பல்வேறு வேலைத்திட்டங்கள் தங்களுக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கிக் கொள்வது. அதாவது தங்களது செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய ஒரு குழுவை உருவாக்கிக் கொள்வது.  அடிப்படையில் இங்கு இந்திய அமைதி காக்கும் படையினர் வருகை தந்த பொழுது இலங்கையில் எந்தவொரு முஸ்லிம் ஆயுதக் குழுவும் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. அவ்வாறு எந்தவொரு முஸ்லிம் ஆயுதக்குழுவும் இருந்ததற்கான எந்தவொரு சான்றும் ஆதாரமும் இல்லை. அப்படியொரு ஆயுதக்குழு இருந்ததாக யாராவது நிரூபிப்பார்களாயின் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இதன் பிறகு எந்தவொரு எழுத்தையும் எழுதுவதற்கு நான் தகுதியற்றவனாவேன் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றேன். என்னுடைய வாதம் நிச்சயமாக இலங்கையில் அந்த நேரத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்திய எந்தவொரு ஆயுதக்குழுவும் இருந்ததில்லை என்பதுதான். இந்திய இராணுவம் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட பிரதேசங்களிலெல்லாம் தங்களுக்குச் சாதகமான செயற்பாட்டாளர்களாக அமைத்துக் கொண்டது தமிழ் ஆயுதக் குழுக்களைத்தான். பின்னர் ஒரு கட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தங்களது பிரதான எதிரிகளாக மாற்றப்பட்ட பொழுது  அல்லது மாறிய பொழுது அதாவது இந்திய வெளியுறவுக் கொள்கைகளுக்கு அமைவாக பிரபாகரன் தலைமை வகித்த அணியினர் தங்களோடு ஒத்துழைக்க தயாரில்லை என்பதை வெளிப்படுத்தியதன் பின்னர் இந்திய இராணுவம் தன்னுடைய இராணுவ ஆற்றலைக் கொண்டு அனைத்தையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவந்து விட முடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கையை செயற்படுத்தத் தொடங்கிய பொழுதிலிருந்து தான் இந்தப் பிரச்சினை பூதாகரமாகின்றது. 


அந்த அடிப்படையில் சில விடுதலைப் போராட்ட இயக்கங்களை இந்திய புலனாய்வுப் பிரிவு மிகச்சாதகமாக தங்களுக்குரிய செயற்பாட்டாளர்களாகவும் தம்முடைய ஏஜென்டுகளாகவும் இலங்கைச் சூழலில் உருவாக்கிக் கொண்டார்கள். அத்தகைய அமைப்புகளை நான் பெயர் சொல்லி குறிப்பிட வேண்டுமென்ற எந்தவொரு அவசியமும் இல்லை. இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13வது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு தேர்தல்கள் நடந்து அவற்றுக்கு ஆட்சி அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதே போன்று தமிழர் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு,கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்டு வடக்கு,கிழக்கு ஒற்றை மாகாண சபையாக திருகோணமலையை தலைமையாகக் கொண்டு இயங்கியது. தேர்தல் நடாத்தப்படுகையில் அந்தத் தேர்தலை பகிஷ;கரிக்குமாறு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலைமையிலும் 'வரதராஜபெருமாள்' தலைமையில் போட்டியிட்ட அணியினர் வெற்றி பெற எதிர்க்கட்சியாக ஒரு அமைப்பு இருக்கவே வேண்டும் என்கின்ற நிலையில் ரோவ் வகுத்த திட்டப் பிரகாரங்களின் படி மிகுந்த அச்சுறுத்தல் உள்ள நிலமைக்குள் அஷ;ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு அதிலிருந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு மாகாண சபையின் எதிர்க்கட்சியாக சேகு இஸதீன் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸூம் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராகவும் செயற்படத் தொடங்கினார்கள். (முஸ்லிம் காங்கிரசின் வேட்புமனுவில் பாதுகாப்புக் கருதி யாருடைய சொந்தப்பெயரும் இடம்பெற்றிருக்கவில்லை. அப்போதைய இணைந்த மாகாண சபைக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படவுமில்லை, உதிரிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் பின்னர் கட்சியால் பெயர்குறிப்பிட்டு நியமிக்கப்பட்டவர்களே)


இந்திய இராணுவத்தின் அனுசரனையில் வட-கிழக்கு மாகாணங்களை நிர்வகித்த வட-கிழக்கு மாகாணசபைக்கூடாக வுNயு (வுயஅடை யேவழையெட யுசஅல) என்கின்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இந்த 'வுயஅடை யேவழையெட யுசஅல' என்கின்ற அமைப்பிலே உள்வாங்கப்பட்ட இஸ்லாமியர்களை மட்டும் தேர்ந்தெடுத்து காரைதீவில் வைத்து தமிழ் அமைப்பினரே படுகொலை செய்கின்றார்கள். அதன் பின்னர் தான் முஸ்லிம்கள் தங்களுக்கான பாதுகாப்பு உறுதிப்பாட்டை கட்டாயம் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு இக்கட்டான நிலைக்கு வருகின்றார்கள். அப்போதும் தனி முஸ்லிம் ஆயுத இயக்கம் அமைக்கத் தலைப்படவில்லை. அம்பாறையில் சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிசார் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட பின்னர் முஸ்லிகள் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த மாகாண சபைக்கூடாகவே ஆயுதம் கோரி நின்றனர். அப்போது இராணுவப் பிரிவுப் பொறுப்பாளராக பத்மநாபா இயங்கிக் கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்கு அரச அணுசரனை பெற்ற ஆயுதங்களை மாகாணசபைக்கூடாக விநியோகிப்பது தமிழர் அமைப்புகளால் கேள்விக்குட்படுத்தப்பட்ட போது அவர் சொன்ன வார்த்தைகள் (பொலிசார் படுகொலையை முன்வைத்து) ' நீங்கள் தமிழனையும் சேர்த்துக் கொன்றிருந்தால் இன்று நான் ஆயுதம் கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் இருந்திருக்காது'  (நீங்கதான் அப்பிடிச் செய்யல்லயே, சிங்களவனையும் முஸ்லிமையும் மட்டுந்தானே தெரிவு செய்து கொன்றீர்கள் என்ற தொனியில் வெளிப்படுத்தினார்) நுPசுடுகு கிழக்கு மாகாணத்திலே ஆதிக்கம் செலுத்திய காலங்களில் விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளாக இருக்கவில்லை. 


ஆர்.பிதேமதாச அவர்கள் ஜனாதிபதியாக வந்த பிறகு இந்த நாட்டுக்குள் இருக்கின்ற அந்நிய சக்தியை வெளியேற்ற வேண்டும் என்கின்ற ஒற்றை முடிவில் மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். அதற்காக அவர் விடுதலைப் புலிகளோடு தேநிலவு கொண்டாடியதையும் வரலாறும் இந்த மக்களும் சமூகமும் மறுக்க முடியாது. அதன் பிரகாரம் இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக தங்களுடைய எதிரியாக சித்தரித்த 'சிங்கள அரசு' என்கின்ற பிரேமதாசாவைத் தலைமையாகக் கொண்ட அரசிடமிருந்து விடுதலைப் புலிகள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை பெற்றுக் கொண்டதும் இந்திய இராணுவத்துக்கெதிராக பலவாறான போராட்டங்களை முன்னெடுத்ததென்பதும் பரவலாக அறியப்பட்ட ஒரு விடயம். 1990 மார்ச் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன் அவர்கள் அமைத்த ஆயுதப்பிரிவான தமிழ்த் தேசிய இராணுவம் முற்றாகச் செயலிழந்தே போயிற்று. பத்மநாபா சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் பலவீனப்பட்டிருந்த அமைப்பு இறுதியில் எங்கு தஞ்சம் புகுந்தது என்பது பற்றி நான் விளக்கத் தேவையில்லை.


அதன் பின்னர் கிழக்கில் இருந்த இடைவெளியை குறிப்பிட்ட மூன்று மாதங்களின் பின்னர் விடுதலைப்புலிகள் தமக்குச் சாதகமாகக் கொண்டு வந்தமையும் அதன் பின்னர் நடந்தவை பற்றியும் பேசுவது இங்கு அவசியமில்லை என்று நினைக்கின்றேன். இந்திய இராணுவம் வெளியேறியதன் பின்னர் வந்த இடைவெளியை அரசாங்கத்தின் அனுசரனையோடு கிழக்கிலே பிடித்துக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக சகோதர இயக்கப் படுகொலைகளை மேற்கொள்கின்றார்கள். இதில் அவர்கள் தமிழர், இஸ்லாமியர் என்ற பாகுபாட்டைக் காட்டவில்லை.
(இந்த வரலாறு பற்றிய அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் போதையில் உளறும் மடையனின் கூற்றுக்கு ஒப்பானது லஷ்மி சரவணகுமாரின் முன்னுரை. )


தான் அங்கம் வகித்து அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுத்த ஈபிஆர்எல்எவ் அமைப்பு தன்னுடைய உயிரைப் பறிக்க முனைகையில் அவர்களிடமிருந்து தப்பி தனதுயிரைப் பாதுகாத்துக்; கொள்வதற்காக கழியோடை பாலத்தினூடாக நிந்தவூருக்கு வந்து தனது நண்பர் மூலமாக பாதுகாப்பு அமைச்சிடம் சரணடைகிறார் அக்கறைப்பற்று ராபி. அதன் மூலம் தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றார். அப்போது பாதுகாப்பு அமைச்சர் ராபியை பார்த்து கேட்ட முதலாவத விடயம் 'உம்மை நம்பலாமோ?' என்பது தான். அதன் பின்னர் அவருக்கு பாதுகாப்பு கொடுத்தது. 'அல்-பதா' என்கின்ற 'யாசீர் அரபாத்' அப்போது உருவாக்கியிருந்த இயக்கத்தின் ஆகர்சனத்தின் விளைவாக 'அல்-பதா' என்ற பெயரில் ஓர் அமைப்பை ராபி இங்கு உருவாக்குகின்றார். அவர்கள் எந்தவொரு தமிழ் இயக்கத்தோடும் தங்களுடைய பாதுகாப்புக்காக உதவி ஒத்தாசைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வசதி வாய்ப்புகள் இருக்கவில்லை. அதனால் அவர் இராணுவத்தோடு சேர்ந்த ஒரு அமைப்பிலேயே தங்களுடைய பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றார். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு வியடத்தை கவனிக்க வேண்டும் அரச தரப்பு முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான முழுமையான பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அது கிழக்கு மாகாணத்திலும் சரி, வட மாகாணத்திலும் சரி. வடமாகாணத்திலிருந்து இளைஞர்கள் தாமாகத் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு முன் வந்த பொழுது அவர்களுக்கான சில உதவிகளை செய்கின்றார்கள். அவர்களுக்கு அதற்குரிய உத்தியோகபூர்வமான அரச உதவிகளை,ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார்கள். இது முதலாவது விடயம். 


அதே போன்று தான் கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர்கள் தங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்ற பொழுது மாத்திரம் தான் அதற்குரிய உதவி ஒத்தாசைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் ஆயுதங்களை அரசாங்கம் முழுமையாக அவர்களை நம்பிக் கொடுக்கவில்லை. இது முக்கியமான விடயம். தேவையான குறிப்பிட்டளவு ஆயுதங்களைத்தான் இலங்கை அரசாங்கம் இவர்களுக்கு வழங்கியிருந்தது. அதே நேரம் இவர்களுக்கு முழுமையான சம்பளக் கொடுப்பனவுகள், வேறு கொடுப்பனவுகள் எதையும் கொடுப்பதற்கும் அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. இந்த இடத்திலே மிக முக்கியமான சில விடயங்களை நாங்கள் அவதானிக்க வேண்டியிருக்கின்றது. இவர்களை தொழில்முறை நபர்களாக உள்வாங்குவதற்கு அரசாங்கம் சுமையாகக் கருதி விட்டது. இவர்கள் தங்களுடைய இருப்பை பாதுகாப்பதற்கான இவர்களுடைய உணர்வை அரசாங்கம் செலவில்லாமல் பயண்படுத்திக் கொண்டது. 


இரண்டாவது இவர்களுடைய பாதுகாப்புக்காக வடக்கு,கிழக்கிற்கு வெளியில் இருக்கின்ற சிங்கள இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்கின்ற முக்கியமான தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. அநியாயமாக அங்கு கொண்டு சென்று அவர்களை பலி கொடுக்க தேவையில்லை என்ற அடிப்படையில் படையினரை அனுப்ப பின்வாங்கிய நிலைப்பாட்டில் தான் அரசாங்கம் அப்போது காணப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் மிகவும் கவனமாகவும், நுணுக்கமாகவும் திட்டமிட்டுத்தான் எல்லா விதமான நகர்வுகளையும் செய்தார். அதாவது அரசாங்கத்துக்கு சுமையில்லாத விதமாக செய்தார். பலரும் சொல்கின்ற விடயம் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இருந்த பிரிவினையை சிங்களம் மிகவும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது என்கின்ற விடயத்தை பல்வேறு இந்திய எழுத்தாளர்களும் பதிவு செய்கின்றார்கள். அது அவர்கள் இங்குள்ள சூழ்நிலையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இட்ட பதிவு என்பதை இந்தக் கனத்திலிருந்து அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நான் இந்த விடயத்தை வெறும் கற்பனையில் பேசவில்லை. இந்த விடயங்களோடு சம்பந்தப்பட்ட பல்வேறு நபர்களை சந்தித்துப் பேசி, உறவாடி, பல்வேறு ஆய்வுகளை செய்து அவர்களுடைய அனுபவங்களையும் அவர்கள் கடந்து வந்த பாதையையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டதன் பின்னர்தான்  எழுதுகின்றேன். இவற்றை வெளிப்படுத்தும் வடிவமாகத்தான் என்னுடைய சிறுகதைகள் இருந்தன. அவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக இத்தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றேன். 


கிழக்கு மாகாணத்திலிருந்த 'அல்-பதா' என்ற இயக்கம் அதுவொரு உளவியல் ரீதியான இயக்கம், அதுவொரு திறம்பட்ட ஆயுத இயக்கம் அல்ல. ஈபிஆர்ல்எப் இல் இருந்து பிரிந்த பின்னர் 'ராபி' என்கின்ற ஆகர்ஷனம் மட்டுமே மிகத் தெளிவாக அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்தது. வடக்கில் முஸ்லிம் அமைப்புக்களில் முக்கியமானவர்கள் எப்படி தமிழ் ஆயுதக்குழுக்களால் சவாலாகப் பார்க்கப்பட்டு அவர்கள் தனித்தனியாக படுகொலை செய்யப்பட்டார்களோ அதே போன்று கிழக்கிலும் படுகொலை செய்யப்பட்டார்கள். அதில் ராபியின் படுகொலையும் மிக முக்கியமான ஒன்று. ராபியை படுகொலை செய்யப் பலர் முய்னறாலும்  நுசுழுளு இயக்கம் அதில் வெற்றி கொண்டது. மன்னாரிலே எருக்கலம்பிட்டி பாயிஸை படுகொலை செய்வதில் விடுதலைப்புலிகள் இயக்கம் வெற்றி கண்டது. நுசுழுளு இயக்கம் முயற்சி செய்தது, நுPனுP முயற்சி செய்ததுஇ நுPசுடுகு முயற்சி செய்தது. ஆனால் வெற்றி கிடைத்தது விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு. அதே போன்று ஏனைய முக்கிய முஸ்லிம் இளைஞர்களைக கொல்வதற்கான சந்தர்ப்பங்களை வௌ;வேறு இயக்கங்கள் பயண்படுத்திக் கொண்டன. (இவை குறித்து பின்னால் ஒரு குறிப்பு இடம்பெறும்)


இது அப்படியே இருக்க கிழக்கு மாகாணத்தில் 'அல்-பதா' என்கின்ற உணர்வியல் சார்ந்த இளைஞர்களைக் கொண்ட குழுவைத் தவிர வேறு எந்த அமைப்பும் நிர்மாணிக்கப்பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட முஸ்லிம் இயக்கமாக இருக்கவில்லை. இந்திய இராணுவம் அரசோச்சிய காலத்திலே இந்த அமைப்பு பலமிக்கதாக இருக்கவுமில்லை இந்திய அமைதிப்படை இவ்வமைப்பைச் சவாலாகவோ அச்சுருத்தல் மிக்கதாகவோ கண்டுகொள்ளவுமில்லை. அத்துடன் ஊர்காவல் படையாக இவர்கள் ஒழுங்கு படுத்தப்படவுமில்லை. இந்திய இராணுவம் செல்லுகின்ற பொழுது 'வுயஅடை யேவழையெட யுசஅல' தான் இந்திய இராணுவத்தின் இடைவெளியை நிரப்புகின்ற ஒரு படையணியாக கிழக்கு மாகாணத்தில் காரைதீவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு இந்திய இராணுவம் தான் ஆயுத அனுசரனைகளை வழங்கியது. இந்திய இராணுவம் வெளியேறிச் சென்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் முழுமையான கட்டுப்பாட்டை 'வுயஅடை யேவழையெட யுசஅல' தனக்குள் கொண்டு வருதவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தது. அதே நேரத்தில் அப்போதைய தருணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களோடு பகைத்துக் கொண்ட ஒரு செயற்பாட்டுத்தளத்தை முன்னெடுத்திருக்கவில்லை. ஏனெனில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு கிழக்கு மாகாணத்துக்குள் பலமாக ஊடுறுவுவதற்கு குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே முஸ்லிம்களைவ விட்டால் வேறு தெரிவும் இருக்கவில்லை.  அதன் காரணமாக பொத்துவில், அக்கறைப்பற்று, இறக்காமம் பகுதி மக்களோடு கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை மக்களோடும் வௌ;வேறு விதமான அனுகுமுறைகளை அவர்கள் கையாண்டு வந்தார்கள். மட்டக்களப்பு நிலைமைகள் வேறு விதமாக இருந்தன. 


ஒவ்வொரு பகுதியிலும் முஸ்லிம் ஆயுதக்குழுக்குள் பலமுள்ளவையாகத் தோற்றம் பெற வேண்டும் என்கின்ற நிலைப்பாடு வலுப்பெறுகின்ற பொழுது அஷ;ரப் அவர்கள் அரசியல் ரீதியில் பலமான ஒரு நிலைக்கு வந்து சேர்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரசின் மிகப்பெரும் செயற்பாட்டு வீரராக சேகு இஸ்ஸதீன் அவர்கள் மாறுகின்றார்கள். இன்று குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகின்ற முஸ்லிம் ஊர்காவல்படை, முஸ்லிம் தனிப்படை, முஸ்லிம் ஜிஹாதிக்குழுக்கள், முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் பற்றிப் பேசுகின்ற எழுதுகின்ற நபர்களில் யாராவது சேகு இஸ்ஸதீனை நேரில் சென்று சந்தித்து (அவர் இ;ன்றும் உயிரோடுதான் இருக்கின்றார்) இந்த விடயங்கள் தொடர்பில் அவருடைய வாக்குமூலங்களை பெற்றார்களா?, பதிவு செய்தார்களா? என்றால்; அது இல்லை. அதை செய்யாமல் ஒரு கற்பனையில் தான் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். 


ராபியின் இழப்புக்குப் பிறகு பலமான ஒரு முஸ்லிம் அமைப்பு இருக்கவில்லை. அதே நேரத்தில் உதிரிகளாக ஆங்காங்கே இருந்த முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற அரசியல் கட்சியின் அலையின் பின்னால் அடிபட்டுச் சென்று விடுகின்றன. அஷ;ரப் ஆயுத ரீதியாக இந்த இயக்கத்தை வழிநடாத்துவதற்குத் தயாரில்லாத ஒரு நிலையில் இருந்தார். அதே நேரத்தில் ஆயுதம் இல்லாமல் சில விடயங்களை செய்ய முடியாது என்பதை சேகு இஸ்ஸதீன் மிக தெளிவாக விளங்கப்படுத்;தியிருந்தார். பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சில நபர்கள் விஷேட அதிரடிப்படையினரால் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்களோடு கைது செய்யப்பட்ட பொழுது சேகு இஸ்ஸதீன் அந்த இடத்தில் ஆஜராகி இது அரசாங்கத்துக்குரிய ஆயுதங்கள். எனவே நீங்கள் இவர்களை தனித்த குழுவாக பார்ப்பது பிழையான விடயம் என்ற வாதத்தை முன்வைத்து அந்த நபர்களை அவர்கள் விடுதலை செய்கின்றார்கள். இந்த இடத்தில் கவனிக்க வேண்டும் விஷேட அதிரடிப்படையினர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்களை வடக்கு,கிழக்கு மாகாண சபைகளின் ஊடாக வழங்கப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்த முஸ்லிம் நபர்களை தனித்த ஆயுதக்குழுவாகக் கருதி கைது செய்திருந்தார்கள் என்பது மிகவும் முக்கியமாக பதிவு செய்யப்பட வேண்டிய விடயம். 


வடக்கும் முஸ்லிம் ஆயுதப்படையும்

தமிழர்களைத் தலைமையாகக் கொண்டு ஆயுதக்குழுக்கள் இயங்கத் தொடங்கிய பொழுது அவர்கள் முஸ்லிம் மக்களுடைய பாதுகாப்பில் எந்த விதமான கரிசனையும் அற்றவர்களாகவே செயற்பட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் தான் மன்னார் மாவட்ட 'எருக்கலம்பிட்டி'யைச் சேர்ந்த எச்.எம்.பாயிஸ் இன்னும் சில நண்பர்களோடு இணைந்து ஒரு முஸ்லிம் இளைஞர் குழுவை உருவாக்கினார். அந்தக் குழு உருவாக்கத்திற்காக பாயிஸ் மிகவும் கடுமையாக உழைத்தார். அவரது நன்நடத்தையும் உறுதியும் சமூகத்தின் மீதான பற்றும் அதைச் சாத்தியமாக்கியது. உடனடியாக இராணுவத்தின் தொடர்பைப் பெற்றுக்கொண்டு ஆயுதப் பயிற்சியைப் பெற்ற நபர்களாக அவர்களை உருவாக்க முயலவில்லை. எல்லா விதமான தமிழ் ஆயுதக் குழுக்களுடனும் நீண்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தியதன் பின்னர் அவர்களால் முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் உத்தரவாதமளிக்க முடியாது என்று கண்டதன் பின்னர் இஇராணுவத்தின் உதவியைப் பெறுவது மட்டுமே சரியானது என்பதை பாயிஸ் உணர்கின்றார். ஆயினும் இராணுவத்துடன்  தொடர்புகள் ஏதும் அவருக்கு இருக்கவில்லை. சுங்க அதிகாரி எம்.ஏ.கபூர் என்பவருக்கு அமைச்சர் எம்.எச்.முஹம்மத்துடன் இருந்த நெருக்கத்தின் பலனாய் அமைச்சரைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டை கபூர் செய்து கொடுத்தார். அதன்படி 1984 பெப்ரவரி 07 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பாயிஸ் தலைமையில் 12 பேர் அமைச்சின் காரியாலத்தில் அமைச்சரைச் சந்தித்தார்கள். இரண்டு விடயங்களை அவர்கள் தெளிவுபடுத்தினார்கள் 
01. தமிழ் ஆயுதக் குழுக்களால் வடக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்களும் மக்களும் எதிர் நோக்கும் பிரச்சினைகள்
02. அத்துமீறும் ஆயுதக்குழுக்களை எதிர் கொள்ள உடல் மற்றும் உள ரீதியில் பலமான இளைஞர் குழு தயாராக இருக்கின்றது அதனால் அரசாங்கம் எமக்குப் பயிற்சியும் ஆயுதமும் தர ஏற்பாடு செய்யுங்கள். 


இதை அமைச்சர் முழுமையாக மறுத்தார் தனது எதிர்ப்பையும் காட்டினார் ஒருபோதும் தன்னால் இதை நிறைவேற்ற முடியாது என்றதும் பாயிஸ் எழுந்து நின்று மிக நிதானமாக எங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு தான் செய்து தர வேண்டும். இந்த ஆயுதக்குழுக்கள் இவற்றை செய்து தராது என்று நாம் பலமாக நம்புகின்றோம். உங்களால் முடியாவிட்டால் நாங்கள் தமிழ் ஆயுதக் குழுக்களிடமே சரணாகதி அடைகின்றோம் அவர்கள் உங்களைக் கொல்லச் சொன்னாலும் நாங்கள் தயங்க மாட்டோம் என்று சொன்னதும் அதிர்ந்த அமைச்சர் 'சீச்சீ அப்படி விபரீதமா ஒரு முடிவும் எடுக்காதீங்க' என்றபடி பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியைத் தொடர்புகொண்டு விடயத்தை விளங்கப்படுத்தி அதன் சீரியஸ் தன்மையையும் சொல்ல அவர் உடனடியாக நேரம் கொடுத்தார்


அமைச்சரின் 190நு மேசிடிசீஸ் பென்ஸ் கரும்பச்சை நிறக்காரிலும் அமைச்சரின் மகன் சாஹூல் ஹமீதின் மஞ்சல் நிற மிட்சுபிசி லான்சரிலும் 11 பேர் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாதுகாப்பமைச்சர் நேரடியாக விடயத்துக்கு வந்து சொல்லுங்கள் என்றதும் பாயிஸ் பேசினார். 
சுருக்கமாக கள நிலவரங்களை விளங்கப்படுத்திவிட்டு 
1.முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வேண்டும் 
2. முழுமையான ஆயுதப் பயிற்சி வேண்டும் 
3. தற்பாதுகாப்புக்காக ஆயுதம் தர வேண்டும் 
4. சம்பளம் தேவையில்லை. 
5.இஇராணுவத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். 
6.இஇராணுவம் எமது மக்கள் மீது நியாயமற்ற முறையில் செயற்பட்டால் அவர்களையும் சுடுவோம். 


இதைக் கேட்டுவிட்டு பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி  ஆஹ் அப்படியா என்று சிரித்தார் 'எருக்கலம்பிட்டிய ஸ்மக்லிங் கொடுவ ஏகே இந்தலா ஆப்பு ஒயகொல்லு மகேன் உதவு இல்லனகொட மம வகாம கரண்ட ஓன' என்று சொல்லி உடனடியாக முப்படைத் தளபதி நழின் செனவிரத்னவுடன் பேசி உடனடிப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு பாயிஸிடம் ஏனைய விடயங்களை அறிவிப்பதாகக் கூறினார். அடுத்தடுத்த தினங்களில் உங்களைத் தொடர்பு கொள்வார்கள் ஒரு வாரத்தில் பயிற்சி பற்றிய இடமும் தவலும் கிடைக்குமென்றார். அனைவரும் ஊருக்குத் திரும்பினர் பயிற்சிக்கான அழைப்பும் வந்தது. ஆயினும் அப்போதைய நிலையில் அனைவரும் ஒன்றாகப் பயிற்சிக்குச் செல்வதில் தர்மசங்கடம். பெற்றோரைச் சமாளித்தல், ஊரைசமாளித்தல் என்பன மிகுந்த சவாலாக இருந்தன. 


ரனில்விக்ரமசிங்க இளைஞர்விவகார அமைச்சராக இருந்தகாலம் 1984இல் 2வது யொவன் புரய இளைஞர் யுவதிகளுக்கிடையான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நிகழ்சிக்கான அழைப்புக் கிடைக்கின்றது 1984 மார்ச் 25,26, மாத்தளையில் அது இடம்பெற்றது. 26 காலை பாயிஸ், ரம்ஸீன் ஆகியோர் கொழும்பு பயணமாகி. துழுஊ- தழiவெ ழிநசயவழைn உழஅஅயனெ சென்று பயிற்சிக்கான 'உழழசனiயெவழச' மேஜர் டீன் என்பவரைச் சந்தித்து ஏனைய ஏற்பாடுகளைச் செய்தனர்.  ஏனைய இளைஞர்கள் யொவன்புரய நிகழ்வில் கலந்துவிட்டு அவர்களை அழைத்துச் சென்ற மன்னார் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி கபூர், உதவியாளர் சக்திவேல் ஆகியோரிடம் தாம் மாத்தளையில் இருந்து சுற்றுலா செல்வதாக் கூறி தம்மை பேராதனை பூங்காவில் விடும் படி வேண்டினர். பின்னர் அங்கிருந்து 33 பேர் 'பொறுப்பாக நியமிக்கப்பட்ட மேஜர் டீன் , பாயிஸ், ரம்ஸீன் ஆகியோருடன் மட்டக்குளி டிப்போ பஸ்ஸில்  திகன பல்லேகல 'ளுடுயுஊ' ளசடையமெய யசஅழரச உழசிள  பயிற்சி முகாமுக்குச் சென்று  சார்ஜன் டிக்கிரிபண்டா (ஆனுராதபுரம்) சார்ஜன் விஜேசேகர(மாத்தள) கோப்ரல் நாஹூர் பிச்சை(கண்டி) ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்கள். ஒரு மாத பயிற்சியின் பின்னர் இரண்டு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு மதவாச்சி எனுமிடத்தில் விடப்பட்டார்கள் அங்கிருந்து அனைவரும் சாதாரணமாவர்களாக எருக்கலம்பிட்டி போய்ச் சேர்ந்தார்கள். பின்னர் தள்ளாடி இஇராணுவ முகாமிலிருந்து இவர்களுக்கு ஆயுதம் வழங்கப்பட்டது. 


சிறிது காலத்தின் பின்னர் இரண்டாவது அணியைத் தயார் படுத்தும் பணியில் பாயிஸ், ரம்சீன், முஹ்சீன் ஆகியோர் களத்தில் இறங்கினார்கள். அவர்கள் தமது பயணத்தில் இஇராணுவத்தின் எந்தப் புலனாய்வுக்காரனையும் இணைத்துக் கொள்ளவில்லை. மன்னார் சார்ந்த பகுதிகள் மாத்திரமன்றி வடக்கிலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கும் அவர்கள் பயணம் செய்கின்றார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள பல பிரதேசங்களுக்கும் பிரயாணம் செய்து அங்கிருந்த சமூக ஈடுபாட்டோடும், துடிப்போடும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களை சந்தித்து இவ்வாறு உங்களுடைய பாதுகாப்பு ஏற்பாட்டை செய்வதற்கான ஒரு முறை இருக்கின்றது. அரசாங்கத்தினூடாக அதை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களையும் நாங்கள் முன்னெடுக்க முடியும் என்ற விடயத்தை விளங்கப்படுத்துகின்றார்கள். விளங்கப்படுத்தியதன் பின்னர் அவற்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் இந்த இராணுவப்பயிற்சி என்கின்ற விடயத்துக்கு உடன்படவில்லை என்பது மிக முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும். இந்த விடயத்தோடு சம்பந்தப்பட்ட நபர்கள் இன்றும் சாட்சியாக உயிரோடு இருக்கின்றார்கள். இந்த விடயங்களில் சம்பந்தப்பட்டு உயிரோடு இருக்கின்ற அனைவரையும் நான் சந்தித்து உறவாடி அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கின்றேன், தொகுத்திருக்கின்றேன். 2010ம் ஆண்டு ஒரு சஞ்சிகையாக வெளியிடப்பட்டும் இருக்கின்றது. குறிப்பாக சொல்ல வேண்டிய விடயம் இது யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஆவணப்படுத்தல் வேலை செய்யப்பட்டிருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின் 2010ம் ஆண்டில் தான் அச்சுப்பதிப்பாக வெளியிடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அதுவும் 2010 ஒக்டோபர் 31ம் திகதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம். துரதிஷ;டவசமாக (எந்த அரசியல்வாதிக்கும் நாம் கூஜா தூக்காத காரணத்தால் ) அதை ஒரு பெரிய நிகழ்வாக எங்களால் செய்ய முடியாமல் போய் விட்டது. 


யாழ்ப்பாணத்திலிருந்த நபர்கள் இராணுவத்தினூடாக பயிற்சி பெறுவதையோ ஆயுத செயற்பாடுகளில் ஈடுபடுவதையோ தங்களால் முழுமையாக அங்கீகரிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தினார்கள். ஏனெனில் அப்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டிருந்த 'லுழரவா குநனநசயவழைn' மிக முக்கியமான அமைப்பாக இருந்தது. (இவ்வமைப்பு பற்றிய பதிவு பின்னர் இடம்பெறும்.) 


மன்னாரை மையப்படுத்திய முஸ்லிம் இளைஞர்களின் இஇராணுவப் பிரிவு யாருக்கெதிராகவும் போராடவில்லை. தங்களுடைய பகுதிகளில் தங்களுடைய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் செயற்பட்டார்கள். அது எல்லா விதமான அராஜகம் புரிந்த ஆயுத இயக்கங்களுக்கு எதிரானதாகவும் இருந்தது. அப்போதும் கூட எல்லா தமிழ் இயக்கங்களிலும் முஸ்லிம்கள் அங்கம் வகிப்பவர்களாக இருந்தார்கள். எருக்கலம்பிட்டியிலும் கூட. பாயிஸ் தலைமையிலான இளைஞர்கள் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார்கள், கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்கள், வவுனியாவில் முக்கியமான ஊர்களில் உள்ளவர்களுடனெல்லாம் தொடர்புகளை ஏற்படுத்தினார்கள். எல்லோரோடும் இணைந்து கொண்டு தற்காப்பு விடயத்தில் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கான முதலாவது விடயம். இரண்டாவது இந்த ஆயுத இயக்கங்களுடன் முஸ்லிம்கள் சென்று தங்களை சீரழித்துக் கொள்ளக் கூடாது என்பதிலுள்ள மிக முக்கியமான விடயம். ஆனால் அதன் பின்னர் முஸ்லிம்களில் அடையாளப்படுத்தப்பட்ட எல்லோரையும் வடக்கிலும் கொன்றார்கள், கிழக்கிலும் கொன்றார்கள். குறிப்பாக 1985ம் ஆண்டு பாயிஸ் கொல்லப்படுகின்றார், மூசின் கொல்லப்படுகின்றார், மன்னாரைச் சேர்ந்த ரம்சீன் கொல்லப்படுகின்றார். எல்லோரும் பாயிஸ் மிக கொடூரமாக கொல்லப்படுகின்றார். 
ஆனால் இந்த உண்மையான வரலாறு தமக்குத்; தெரியவில்லை என்பதற்காக அந்த உண்மையை மறைத்து விட்டு ஒரு பெரும் பொய்யை மிகவும் இலேசாக வெளியில் எழுதுவதற்கு இப்போதுள்ள எழுத்தாளர்கள் முனைகிறார்கள்? ஏன் தேடாமல் எழுதுகின்றார்கள்? என்பது தான் மிக முக்கியமான கேள்வி. 



23 ஜூலை 1985 செவ்வாய்
புலிகள் தனியாக பாயிஸை மட்டும் இலக்கு வைத்தால் அவரைக் கொல்ல முடியாது என்பதை நன்குணர்ந்ததன் விளைவு, 1985 ஜூலை 20ம் திகதி இளைஞர்கள் தமக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்காக சில தொலைத்தொடர்பாடல் சாதனங்களை கொழும்பில் கொள்வனவு செய்ய ஆயத்தமாகினர். அவற்றை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட பணப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்தற் பொருட்டு கொழும்பிலிருந்த பாயிஸ் மன்னார் சென்று சில தனவந்தர்களிடம் விடயத்தைச் சொல்லி பணம் பெற்றுக் கொண்டார். 23ம் திகதி பணத்துடன் மன்னாரிலிருந்து வவுனியா வந்தார். அங்கிருந்த அநுராதபுரம் செல்லும் பஸ்ஸில் தனது உற்ற நண்பன் மாங்குளம் கபூர் அவர்களுடன் பயணித்தார். இந்த பஸ்ஸை புலிகள் பாயிஸூக்காக இலக்கு வைத்தனர். வவுனியாவிலிருந்து சில கிலோமீட்டார்கள் தூரத்திலுள்ள ஈரப்பெரிய குளம் எனுமிடத்தில் வைத்து பஸ்ஸினுள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பாயிஸ் உட்பட தமிழ், சிங்கள, முஸ்லிம் மூவின மக்களுமாக மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டனர். அவரது நண்பர் கபூர் தெய்வாதீனமாக இரண்டு கால் எலும்புகளும் நொருங்கிய நிலையில் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பிரேதங்கள் அநுராதபுர வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டன. 24ம் திகதி மாலை ஜாபிர்,முஹ்ஸின் ஆகிய இருவரினாலும் அவரது பிரேதம் (ஜனாசா) மிகுந்த தேடலின் பின்னர் அடையாளம் காணப்பட்டது. துண்டம் துண்டமாக சிதறிப்போன நிலையிலேயே 90 வீதமான உடல்கள் இருந்தன. ஆனாலும் பாயிஸின் உடல் சிறிய கீறல்களுடன் முழுமையாக் கிடைத்தது அதிர்ஷ;டமான அம்சம். ஊரடங்கு சட்டம் காரணமாக மய்யத்து 25ம் திகதி அதிகாலை அநுராதபுரத்திலிருந்து மன்னார் கொண்டு வரப்பட்டு காலை 11.00 மணியளவில் துணிச்சல்மிகு இளைஞனின் பூதவுடல் மொத்த ஊர்மக்களினதும் கண்ணீருக்கு மத்தியில் எருக்கலம்பிட்டி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தத் தாக்குதல் விடுதலைப்புலிகளுக்கெதிரான மக்களின் மனோநிலையை மேலும் வலுப்படுத்தியது. மொத்த ஊர்மக்களினதும், வடக்கு மக்களினதும் நல்லபிப்பிராயத்தை வென்று மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒருவன் மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஒருவன். அவனது இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது என்பதை அன்று மக்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் பிரதிபலித்தது. இறுதியில் என்றுமே அழியாத இடத்தை மக்கள் மனங்களில் பாயிஸ் பெற்றுக் கொண்டார். அத்துடன் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை துல்லியமாக மக்கள் மனதில் இச்சம்பவம் பதித்தது. அதன் பின்னர் புலிகள் அமைப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர்களை சமூகம் மொத்தமாக வெறுத்து ஒதுக்கியது மட்டுமில்லாமல் புலிகள் அமைப்பில் தொடர்பு வைத்திருந்த சில முஸ்லிம் இளைஞர்களையும் புலிகள் அமைப்பிற்கு எதிராக செயற்படும் அபாயத்தையும் அது உண்டுபண்ணியது. இந்த முஸ்லிம் இளைஞர்களின் எதிர்ப்பு புலிகளுக்கு பலத்த அச்சுறுத்தலாக இருந்ததுடன் அது உரிமைகளுக்கான நியாயமான போராட்டத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர் முஸ்லிம் சமுதாயமும் தமிழ் போராட்டக்குழுக்களும் என்றுமே இணைய முடியாத தடத்தினையும் அது ஏற்படுத்ததியது. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் தான் பின்னர் ஆயுத இயக்கங்கள் தொடர்ந்தும் மேற்கொண்ட முஸ்லிம் விரோத செயற்பாடுகள் அமைந்தன. 

1987 ஆகஸ்ட் - மன்னார்
1987ம் ஆண்டு ஆகஸ்ட் ஈரோஸ் அமைப்பினால் மன்னார் இளைஞர் அமைப்பின் முக்கியஸ்தர் எருக்கலம்பிட்டி ஏ.ஜே.ரம்ஸீன் கடத்தப்பட்டார். இக்கடத்தலை முஸ்லிம் வேடிக்கை பார்க்கவுமில்லை, வாழாதிருக்கவுமில்லை. பலத்த எதிர்ப்பினை வெளிக்காட்டடியது. எந்த அச்சத்தினை ஏற்படுத்தி மக்களிடையே தமது காரியங்களை இலகுவாகச் சாதிக்கும் உத்தியை விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் செய்தனவே அதே அச்சமேற்படுத்தும் செயலை செய்ய மன்னார் உப்புக்குள குவைதிர்கான் தலைமையிலான முஸ்லிம் இளைஞர்கள் தயாராகினர். மன்னனர் தீவில் மிக சர்வசாதாரணமாக ஆழ்கடலில் மீன் பிடிக்க பயன்படும் ஜெலிக்னைட் குச்சிகளை இதற்காக பயன்படுத்த திட்டமிட்டனர். இருபுறம் வெல்டிங் பண்ணி அடைக்கப்பட்ட கல்வனைசு குழாயினுள் ஜெலிக்னைட் குச்சிகளை இட்டு வெடிக்கச் செய்து பாரிய சப்தத்தினை ஏற்படுத்தினர். இது பாரிய வெடிகுண்டின் சப்தத்தினையும் அதிர்வினையும் ஒத்திருந்தது. அப்போதிருந்த ஆயுதங்களைப் பொறுத்த வரையில் அனைத்து விடுதலை இயக்கங்களையும் இது கிலி கொள்ளச் செய்ததுடன் தமிழ் மக்களையும் அச்சுறுத்தியது. உடனே பட்டித்திலிருந்த தமிழ் முதலாளிமார்களும், மக்களும் இளைஞர் அணியினரை அணுகி ஏடாகூடமாக ஏதும் செய்து விடாதீர்கள். அவரின் விடுதலைக்கு நாமே பொறுப்பு என்று அவர்களே சென்று யாழ்ப்பாணத்தில் காரை நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரம்ஸீனை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். உடனடியாக ரம்ஸீன் விடுவிக்கப்பட்டார். (இக்காலப்பகுதியில் கிழக்கில் இடம்பெற்ற வன்முறை மற்றும் படுகொலைப் படலங்களை விரிவாக பின்னர் பார்ப்போம்)

வடமாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசமாக மன்னார் தீவுப்பகுதி திகழ்கின்றது. அன்று மன்னார் பொலிஸ் நிலையம் தாக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதாய் இத்தாக்குதல் அமைய அவர்களின் ஆதிக்க மனப்பான்மையையும் அது வலுப்படுத்தியது. இத்தாக்குதலின் பின்னணியில் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளை புலிகள் வைத்திருந்தனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தை தமது ஆளுகைக்குள் கொண்டு வருதல் என்பது மிகப்பிரதானமான அம்சமாகவும் அடிப்படையாகவும் இருந்தது. அத்துடன் தாம் முன்னெடுக்கப்போகும் பாரிய நடவடிக்கையினை பொலிசாரும் இஇராணுவமும் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதையும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான களத்தை உறுதிப்படுத்திட எவ்வகையான உத்திகளை படையினர் மேற்கொள்வார்கள் என்பதை துல்லியமாகக் கணத்திடவும் இத்தாக்குதலையே புலிகள் நம்பியிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி படையினரின் மன்னாரை நோக்கிய நகர்வு அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. அத்துடன் இஇராணுவம், பொலிஸ் தவிர புலிகள் எதிர்நோக்கிய அடுத்த சவால் முஸ்லிம் இளைஞர்கள். முஸ்லிம் பிரதேசங்களின் தனித்துவத்தை பாதுகாக்கவும் புலிகளின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் சட்டபூர்வமாகவும் சட்டபூர்வமற்ற முறையிலும் அவர்கள் ஆயுதம் தாங்கியிருந்தார்கள். துப்பாக்கி யார் சுட்டாலும் ஆளைக் கொல்லும் என்பதை அவர்களும் வலியுறுத்தினர். 

மன்னார் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதும் பாரிய இஇராணுவ நடவடிக்கையொன்றை இராணுவம் திட்டமிட்டது. இதனால் அச்சம் கொண்ட மன்னார் நகரை அண்டிய தமிழ் மக்கள் அனைவரும் தமது பாதுகாப்பு கருதி எருக்கலம்பிட்டியில் தஞ்சமடைந்தனர். அத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் எருக்கலம்பிட்டி மக்கள் தஞ்சமடைந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் பாடசாலைகளில் தங்குமிட வசதிகளை செய்து கொடுத்ததுடன் அவர்களுக்கான உணவு, மற்றும் ஏனைய வசதிகளையும் நிறைவாகச் செய்து கொடுத்தனர். தமிழ் ஆயுதக்குழுக்கள் முஸ்லிம்கள் மீது வஞ்சம் பாராட்டிக் கொண்டிருந்த போது முஸ்லிம்கள் இப்பாரிய உதவியை செய்தது என்பது அவர்களின் மனோநிலையின் மென்மையை எடுத்துக் காட்டப் போதுமான எளிய நிகழ்வாகும். சுமார் ஏழு நாட்கள் வரை அவர்களுக்கு யாதொரு தீங்கும் வராத வண்ணம் இளைஞர் அணி அவர்களின் பாதுகாப்பில் கூடுதல் எடுத்துச் செயற்பட்டது. நிலைமைகள் சீரானதும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றனர். 
இந்திய இஇராணுவத்தின் வருகைக்குப் பின்னர் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. மன்னாருக்கான இந்தியக் கட்டளைத் தளபதி அவர்களிடம் அரசாங்கத்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கென்று வழங்கப்பட்ட ஆயுதங்கள் இளைஞர் குழுவால்  சென்.சவேரியார் கல்லூரியில் வைத்துக் கையளிக்கப்பட்டன. (இந்தப்பின்ணணியில் இருந்து இனி பிரதான பல்வேறு அம்சங்களைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. இக்கட்டுரை நீண்டுவிடுமென்பதால் அதைத் தவிர்த்துக் கொள்கின்றேன்)
அதன் பின்னர் தாராபுரம் நியாஸ்; பணிக்காக மன்னார் 'இலங்கை போக்குவரத்து சபைக்கு' செல்கின்ற வேளை புளொட் இயக்கத்தால் வஞ்சிக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டுக் கொடூரமான முறையில் ஆணுறுப்பு பனைக்கருக்கு மட்டையால் அறுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். சிலாபத்துறை செய்னுலாப்தீன் ஈரோஸ் இயக்கத்தால் கொல்லப்பட்டார். 1988 மார்ச் ரம்சீன் மற்றும் அமீன் ஆகிய இருவரும் மீண்டும் ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கத்தால் மன்னார் தாராபுரத்துக்கிடைப்பட்ட காட்டில் வைத்து கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அதன் பின்னர் புதுக்குடியிருப்பு காசிம் புலிகளால் கொல்லப்பட்டார். ஆக முக்கியமான அனைவரும் தமிழ் ஆயுத இயக்கங்களால் குறி வைக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர்.


யாழ்ப்பாணம் 1986
இஸ்லாமிய இளைஞர் அமைப்பு 782 உறுப்பினர்களுடன் ஒரு பலமான நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் கையாண்டு கொண்டிருந்தனர். இளைஞர்கள் இந்த ஆயுதக்குழுக்கள் எதிலும் பங்கு பெற்று விடக்கூடாது என்ற பாரிய நோக்கை லட்சியமாகக் கொண்டு தனது அனைத்து நடவடிக்கைகளையும் இவர்கள் செயற்படுத்தி வந்தார்கள். அதற்கு பிரதான காரணம் 30க்கும் மேற்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்கள் அப்போது யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தன. முஸ்லிம்கள் இயக்கத்தில் சேர்தல் என்ற நிலை வந்தால் இந்த அனைத்து இயக்கங்களிலும் அங்கத்துவம் பெறுவார்கள். பின்னர் சின்னச்சின்ன பிரச்சினைகள் கூட குழு மோதலாக வெடித்து முஸ்லிம் சமுதாயம் சீரழிந்து விடுமோ என்ற அச்சத்தின் விளைவாகவே இஸ்லாமிய இளைஞர் அமைப்பு தோற்றம் பெற்றது. 

அப்படியிருந்தும் கூட பல முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயத இயக்கங்களுடன் அங்கத்தவராகி செயற்பட்டமையும் நிகழ்ந்தது. ஆயினும் பெருவாரியாக இவர்கள் பங்குபெறுதலை தடுத்த பெருமை இஸ்லாமிய இளைஞர் அமைப்பைச் சாரும். யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளில் தமிழ் ஆயுதக்குழுக்கள் மூக்கை நுழைப்பதால் வரும் பிரச்சினைகள் குறித்து தமிழ் ஆயுதக்குழுக்கள் அனைத்துடனும் பேச்சுவார்த்தை நடாத்தப் போகிறோம். ஆகவே தமிழ் ஆயுதக்குழுக்கள் அனைத்து குறிப்பிட்ட கூட்டத்திற்கு சமூகமளிக்கும்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. 

ஜின்னாஹ் வீதியிலுள்ள எஸ்.ஏ.சீ.நிலாம் அவர்கள் வீட்டு வளாகத்தில் 36 தமிழ் ஆயுதக்குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் சமுதாயப்பிரமுகர்கள் அனைவரும் கூடியிருந்தனர். ஹிஜாஸ் என்பவர் தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். அந்தக் கூட்டத்தின் பிரதான பேசுபொருளாக இருந்தது முஸ்லிம் சமுதாயத்தை தமிழ் ஆயுதக்குழுக்களால் கையாள முடியாது. அதனால் முஸ்லிம்கள் குறித்த எந்தப்பிரச்சினையானாலும்; அதை இஸ்லாமிய இளைஞர் அமைப்பிடம் கையளிக்க வேண்டும். அதை அவர்களே தீர்த்து வைப்பார்கள். அத்துடன் முஸ்லிம்கள் மீது எந்தத் தமிழ் ஆயுதக்குழுவும் அத்துமீறக் கூடாது. தன்னிச்சையாக செயற்படவும் கூடாது என்பதாகவே இருந்தது. இதை அங்கு சமூகமளித்திருந்த 36 தமிழ் ஆயுதக்குழுக்களின் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனாலும் தமிழ் ஆயுதக்குழுக்கள் அதை ஓரளவு நிறைவேற்றினாலும் முழுமையாகப் பின்பற்றவில்லை. இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவுற்றதன் பின்னர் தான் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஹனீபா என்பவரை யாழ்ப்பாணத்தில் வைத்து ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பினர் கடத்தினர். உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய இளைஞர் அமைப்பு குரல் கொடுக்க ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பினர் அதனை தாங்களே கையாள வேண்டும் என்றும் மட்டக்களப்பில் இவர் எமது அமைப்புக்கெதிராக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால் அவரைத் தாமே தண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக இருந்தனர். ஆனாலும் இஸ்லாமிய இளைஞர் அமைப்பினர் மட்டக்களப்பில் அவரைப் பிடித்திருந்தால் நாம் அமைதியாக இருக்கலாம். ஆனால் எமது பிரதேசத்தில் வைத்து நீங்கள் அவரைக் கடத்தியிருப்பதால் அதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே விடுதலை செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் திரளாக நின்று குரல் கொடுக்க வேறு வழியில்லாமல் கடத்தியவரை விடுதலை செய்தார்கள். 

அதன் பின்னர் புலனாய்வு வேலையில் ஈடுபடுபவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சித்தசுவாதீனமற்றவர்களாக வீதிகளில் அலையும் நபர்கள் தொடர்ந்தேச்சையாக கொல்லப்படும் நடவடிக்கை விடுதலை இயக்கங்களால் செயற்படுத்தப்பட்டது. கடைசியா ஜெமீல் என்ற ஓரளவு தெளிவுள்ள புத்தி சுவாதீனமற்றவர் கொல்லப்பட இதைக் கண்டித்து ஹரத்தால் அனுஷ;டிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் அந்தக் கொலைப்படலம் நிறைவு பெற்றது. இதை முழுமையாக வழிநடாத்தும் பொறுப்பினை இஸ்லாமிய இளைஞர் அமைப்பே எடுத்துக் கொண்டது. இது நடந்தது 1986 மே மாதமாகும். இந்த ஹர்த்தாலை தனவந்தர்களும் வர்த்தகர்களும் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளவில்லை. பைத்தியக்காரர்கள் கொல்லப்பட்டால் நமக்கென்ன? என்பது தான் அவர்களின் வாதம். தமது வர்த்தகத்தில் தளும்பலையும் இடைஞ்சலையும் ஏற்படுத்தும் ஒரு செயலாக மட்டுமே அவர்கள் அதை நோக்கினர். அதனுள்ளால் புதையுண்டு போயிருந்த மனிதாபிமானத்தை அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை. இது பெரும்பாலான வர்த்தகர்களின் பொதுப்புத்தியாகும்.

சுபியான் ஹஸ்ரத்தின் தலைமையில் இக்காலகட்டத்தில் ஜமாஅதே இஸ்லாமி தன்னை யாழ்ப்பாணத்தில் ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருந்தது. இஸ்லாமிய இளைஞர் அமைப்பு தம்முடன் இணைந்து தமக்குச் சாதகமாக செயற்பட்டு இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அங்கத்தவர்ளாக செயற்பட வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பை இஸ்லாமிய இளைஞர் அமைப்பு அங்கீகரிக்கவில்லை. சமய இயக்கம் சார்ந்து செயற்படுதல் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் இஸ்லாமிய இளைஞர் அமைப்பு அதை தவிர்த்தது. ஆனாலும் ஜமாஅதே இஸ்லாமி இளைஞர்களை மையப்படுத்தி தனது திட்டங்களை செயற்படுத்தத் தொடங்கியது. ஆனாலும் அவர்களின் செயற்பாட்டுத்தளம் வெற்றியளிக்கவில்லை. காரணம் அப்போதைய செல்வாக்கு இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்கே இருந்தது. இதனால் ஜமாஅதே இஸ்லாமியின் வளர்ச்சிக்கு பிரதான தடையாக இஸ்லாமிய இளைஞர் அமைப்பு இருப்பதைக் கணித்துக் கொண்ட சுபியான் ஹஸ்ரத் தலைமையிலான ஜமாஅதே இஸ்லாமியினர் தனது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அமைப்பை செயலிழக்கச் செய்யும் பிரச்சாரங்களிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர். சமயச்சார்பு இயக்கங்கள் தமது சிந்தனைக்குச் சாதகமாக இருப்பதையே பிரதானமாகக் கொண்டு செயற்பட்டமையினாலும் தாமே சரியான வழியில் செயற்படுபவர்கள் என்ற கற்பிதம் இருந்தமையாலும் ஏனையவர்களும் தமக்கான அங்கீகாரத்தை இலகுவாக வழங்க வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இது தான் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. அதன் விளைவாக யாழ்ப்பாண ஜமாஅதே இஸ்லாமி கிளை விடுதலைப்புலிகள் அமைப்புடன் தனது நெருக்கத்தை வளர்த்துக் கொண்டது. புலிகளுடனான தொடர்புகளைப் பேணுவதில் சுபியான் ஹஸ்ரத்தே முன்னோடியாக இருந்தார். 

இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் வளர்ச்சி பல விதத்திலும் ஆயுத இயக்கங்களுக்குத் தடையாக இருப்பதை உணர்ந்த தமிழ் ஆயுத இயக்கங்கள் அவர்களின் செல்வாக்கை சரியச் செய்ய பல்வேறு விதமான சட்டதிட்;டங்களை மேற்கொண்டன. அதே வேளை இலங்கை இஇராணுவத்துடன் இணைந்து வேலை செய்வதற்கான அழைப்பு இளைஞர் அமைப்புக்கு கிடைத்தது. ஆயினும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் இஇராணுவம் சந்தர்ப்பத்துக்கு பயன்படுத்தி விட்டு கைவிட்டு விட்டால் அதன் பின்னர் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல் என்பது பலத்த சிக்கலைத் தோற்றுவிக்கும் என்பதாகும். ஆனாலும் கூட சில இளைஞர்கள் இந்த அழைப்பையேற்று இஇராணுவத்துடன் சேர்ந்து பணியாற்றச் சென்றனர். அதற்கு அவர்கள் தெரிவித்த நியாயம் இஇராணுவத்துடனும் தொடர்புகளைப் பேணுதல் சில வேளை நமக்கு பாதுகாப்பளிக்கக்கூடும் என்பதாகும். அவர்கள் முடிவெடுத்த பின்னர் உள் முரண்பாடுகளைத் தோற்றுவித்து விடும் என்பதால் இந்த விடயத்தில் இளைஞர் அமைப்பு அந்த சிலரையும் அவர்கள் போக்கில் விட்டுவிட்டு ஏனைய இளைஞர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்காதிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது
1986 ஜூன் 20ம் திகதி இரண்டு தனிப்பட்ட முஸ்லிம் நபர்களுக்கிடையே ஒரு பிணக்கு ஏற்பட்டது. இந்தப்பிணக்கை ஜமாஅதே இஸ்லாமி வஞ்சகமாகக் கையாண்டு இஸ்லாமிய இளைஞர் அமைப்பினை முடக்குவதற்கும் செல்வாக்கிழக்கச் செய்வதற்கும் பயன்படுத்தியது. ஜூன் 22ம் திகதியளவில் தனிப்பட்ட தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான பிரச்சினை குழுப்பிரச்சினையாக மாறியது. ஒரு தரப்பினை இஸ்லாமிய இளைஞர் அமைப்பு கையாள மற்ற தரப்பினரை விடுதலைப்புலிகளின் பின்புலத்துடன் ஜமாஅதே இஸ்லாமி கையாண்டது. பெரும் பிரச்சினையாக மாறி விடுமோ என்ற அளவுக்கு நிலைமை மிக மோசமானது. பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இஸ்லாமிய இளைஞர் அமைப்பைச் சேர்ந்த வெள்ளையன் என்றழைக்கப்பட்ட நமீஸ் அனைவரையும் கலைந்து போகச் செய்யும் நன்னோக்கில் கிரனைட் ஒன்றை எடுத்து பயமுறுத்த அது கையை விட்டு நழுவியது. அது வெடித்ததில் ஸ்தலத்திலேயே இருவர் கொல்லப்பட ஒருவர் வைத்தியசாலையில் மரணமடைந்தார். 32 பேர் காயமடைந்தனர். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இஸ்லாமிய இளைஞர் அமைப்பினர் குண்டு வீசி பலரைக் கொன்று விட்டனர் என்ற செய்தி எங்கும் பரவியது. இதற்கிடையே பிரச்சினையை எதிர்பார்த்து ஏற்கனவே தயாராக இருந்த விடுதலைப்புலிகள் இப்படியொரு பாரிய விபத்து நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. குண்டுத்தாக்குதல் என்பது புலிகளையும் கொஞ்சம் யோசிக்க வைத்தது. பெரும் பட்டாளமொன்று சம்பவ இடத்துக்கு விரைந்தது. இதற்கிடையே விடுதலைப்புலிகளின் ஆயுதம் தாங்கிய படையொன்று வரும் செய்தி கேட்டு மக்கள் விரைவாகக் கலைந்து சென்று விட்டனர். காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பும் பணியில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் முக்கியமான ஒன்பது பேரை விடுதலைப்புலிகள் பிடித்துச் சென்றனர். இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு ஒரு மாதகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஒன்பது பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சொல்லொணாத சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். ஆயுதங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தன? இதை வைத்துத் தானே எங்களைக் கட்டுப்படுத்தினீர்கள்? இது தவிர வேறு என்னென்ன வகை ஆயுதங்கள் உள்ளன? அவை எங்கே இருக்கின்றன? என்ற கேள்விகள் தொடர்ந்தன. இதற்கிடையே வெடித்த குண்டு புலிகளுக்குரியது என்பது நிரூபணமானதும் புலிகளுக்கு கோபம் தலைக்கேறியது. எமக்குரிய குண்டு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? இந்தக் கேள்விகள் எதற்கும் அவர்களிடமிருந்து எந்த பதிலையும் புலிகளால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தான் சொற்ப விலைக்கு இளைஞர் அமைப்புக்கு விற்றார்கள் என்பது கடைசி வரையும் புலிகளுக்கு தெரியாமலேயே போயிற்று. முக்கியமான அனைவரும் புலிகள் தடுப்பில் இருந்ததால் இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன. 


இதற்காகவே காத்திருந்த ஜமாஅதே இஸ்லாமி விரைந்து வேலை செய்தது. இளைஞர் அமைப்பின் பக்கமிருந்து வந்த சவாலை முறியடிக்க முற்பட்டனர். அதனால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால் புலிகளுக்கு அவர்களால் பாரிய அச்சுறுத்தல் இருக்குமென்றும் அவர்களுடைய இயக்கக் கட்டமைப்பு இத்தகையதென்றும் முழுமையான தகவலை புலிகளுக்குச் சொல்ல முக்கியமாகக் கருதப்பட்ட இருவரைக் கொல்வதென்றும் இதை மக்கள் அலட்டிக் கொள்ளாவிட்டால் ஏனையவர்களையும் கொல்வதென்றும் புலிகள் முடிவெடுத்தனர். 


1986 ஜூலை 22ம் திகதி அதிகாலை ஜலீல் மாஸ்டர் என்பவரையும் நமீஸ் என்பவரையும் அன்சந்தி என அழைக்கப்பட்ட ஐந்து சந்திக்கு கொண்டு வந்து உங்களின் கடைசி ஆசை என்னவென்று கேட்டனர். இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்று வேண்டினார்கள். அதற்கு அனுதித்த புலிகள் அவர்கள் தொழுகையை நிறைவேற்றி முடிக்கையில் நடு சந்தியில் வைத்து தலையில் சுட்டு இருவரையும் கொன்றனர். இதன் பின்னர் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ஏனைய ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டமாகச் சென்றனர். இதற்கிடையே ஜமாஅதே இஸ்லாமி உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சுபியான் ஹஸ்ரத் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க ஜமாஅதே இஸ்லாமியினர் மௌனமாக இருந்து விட்டனர். மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டுமானால் ஏனைய ஏழு பேரையும் விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்பட்ட புலிகள் வேறு வழியின்றி அவர்களை விடுவித்தனர். 


1986 செப்டம்பர் லிபியா மீது அமெரிக்கா குண்டுத்தாக்குதல் மேற்கொண்டதைக் கண்டித்து அமெரிக்காவுக்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை இஸ்லாமிய இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்தது. இதில் அப்போதுள்ள அனைத்து தமிழ் ஆயுத இயக்கங்களும் கலந்து கொள்ள இளைஞர் அணியிடம் அனுமதி கேட்டனர். ஆயுதம் இல்லாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமது பங்களிப்பு இருக்க வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு தமிழ் ஆயுத இயக்கமும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை நல்கினர். குறிப்பாக யாழ்ப்பாணத்து அனைத்து தமிழ் பாடசாலை மாணவர்களும் இதில் கலந்து கொள்ள தமிழ் விடுதலை இயக்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன. அமெரிக்காவின் தேசியக் கொடி வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கச்சேரிக்கு முன்னால் எரிக்கப்பட்டது. அத்துடன் மகஜர் ஒன்றும் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டு அங்கேயே பொதுக்கூட்டமும் இடம்பெற்றது. 

இதன் பின்னர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஹனீபா எனும் இயற்பெயரையும் பாருக் என்ற இயக்கப் பெயரையும் கொண்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் இவர் தான் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒன்பது முஸ்லிம் இளைஞர்களிடமும் அதிக விசாரனைகளை மேற்கொண்டவர். இஸ்லாமிய இளைஞர் அணி விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு பலத்த தலையிடி என்பதை வெளிப்படையாக அணியின் முக்கிய உறுப்பினர்களிடம் தெளிவாக வலியுறுத்தி உங்களை நம்பி உங்களுடன் கைகோர்த்துள்ள முஸ்லிம் இளைஞர்களின் நலனுக்காவேனும் இங்கிருந்து வெளியேறி விடுங்கள் என்று உபதேசித்தார். இல்லாதபட்சத்தில் உங்கள் உயிர்கள் எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம். அதற்கு உத்தரவாதம் கிடையாது என்று வினயமாக வேண்டுகோள் விடுத்தார். ஆயுத ரீதியாக புலிகளும் ஏனைய அமைப்பினரும் உங்கள் மீது தாக்குதல் தொடுத்தால் எத்தனை நாளைக்கு உங்களால் தாக்குப்பிடிக்க முடியும்? என்று அவர் உணர்வுபூர்வமாகக் கேட்டார். அதன் பின்னர் அதிகமான இளைஞர்கள் யாழ்ப்பாணத்தை விட்டும் வெளியேறினார்கள். பிற்பட்ட காலம் எந்தத் தமிழ் ஆயுதக்குழுவுக்கும் முஸ்லிம்கள் பெரும்பாலும் பாரிய அச்சுறுத்தலோ தடையோ இருக்கவில்லை. 
இந்தவரலாறுகள் தெரியாமல் மூளை பழுதாய்ப்போன பித்தன் மாதிரி எழுத்தாளர்கள் தமது இஸ்டத்துக்கு பொய்களைப் புனைந்துவிடும் துர்ப்பாக்கிய நிலையை வெறுமனே கடந்து செல்ல முடியவில்லைதான். அத்துடன் இங்கு குறிப்பிடப்படும் பலர் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்பதே மிகவும் பலமான விடயமாகும்.

10.10.1990- புதன் கிழமை - முல்லைதீவு 

விடுதலைப்புலிகளின் முல்லைதீவுப் பிரதேசத்திற்குப் பொறுப்பான அரசியல் துறைப் பொறுப்பாhளர் சந்திரன் மற்றும் பிரதேசப்பொறுப்பாளர் ரகு இராணுவப்பொறுப்பாளர் பிரசாந்த் மற்றும் திவாகரன், கைலாஸ் உள்ளிட்டவர்களடங்கிய குழு முஸ்லிம் பிரமுகர்களைச் சந்தித்து புலிகளின் தலைமை கிழக்கிழிருந்து ஒரு படையை வடக்கிற்கு வரவழைக்கப் போவதாகவும் அவர்கள் கருணையற்ற கொடூரமானவர்கள் என்றும் முஸ்லிம் இளைஞர்களைத்தான் பெரும்பாலும் பிடித்துச் செல்வார்கள் என்றும் உங்கள் இளைஞர்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்வதுதான் நல்லது என்றும் இதைத் தங்களுக்கு எத்திவைப்பதைத் தவிர தமக்கு வேறு வழியில்லை என்றும் உபதேசம் செய்தார்கள். ஒக்டோபர் 10ம்திகதி துவக்கம் ஒக்டோபர் 15ம் திகதி வரை இதே பாணியிலான பிரச்சாரத்தை முல்லைதீவில் முஸ்லிம்கள் வாழ்ந்த அனைத்துப் பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக இந்தக் குழுவினர் மேற்கொண்டனர். இந்தப் பிரசாரம் தம்மீது கொண்ட அன்பினாலும் பற்றினாலும்தான் மேற்கொள்ளப்படுகிறது என்பதை ஊர்ப் பெரியவர்கள் அனைவரும் உளப்பூரிப்புடன் அகமகிழ்ந்து ஏற்றுக்கொண்டனர். முஸ்லிம் இளைஞர்களைப் பாதுகாப்பதற்காகத்தானே விடுதலைப்புலிகள் இப்படி சொல்கிறார்கள் என்பதனால் அனைத்து இளைஞர்களையும் ஊரை விட்டும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வேலைகளைக் கவணிக்கலாயினர்.

18.10.1990 வியாழன் - முல்லைதீவு

பத்து இளைஞர்கள் இருந்தால் ஒரு முதியவர் இருந்தார். முதியவர்களின் வழி காட்டுதலில் முல்லை தீவைவிட்டும் முஸ்லிம் இளைஞர்கள்  அனைவரும் வெளியேறுகின்றார்கள்.அத்துடன் மிக வேகமாகப் பரவிக்கொண்டிருந்த செய்தி கிழக்கில் இருந்து புலிப்படை வந்துவிட்டதாயும் அவர்கள் வடக்கின் சகல பிரதேசங்களிலும் முகாமிட்டு இருப்பதாகவும் அவர்கள் ஓரிரு நாட்களில் தங்களின் பணியை ஆரம்பிக்கப் போவதாகவும் அத்துடன் வந்திருப்பவர்கள் முரட்டுத்தனமிக்கவர்கள் அவர்களுக்கு இரக்கமனமே கிடையாது என்பதாகும். முல்லை தீவில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்வதாயின் ஒரேயொரு பிரதான பாதைதான் இருந்தது. அது ஏ9 மட்டுமே.  இளைஞர்களைப் பிடிப்பதற்கான குழு இந்தப் பிரதான வீதியிலேயே முகாமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் முல்லைதீவு இளைஞர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு உகந்த ஒரே வழி காட்டுப்பாதைதான் என்பதால் அதையே தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் புளியங்குளம் காட்டுப்பாதையூடாக நொச்சிமோட்டை, புதுக்குளம் சாஸ்திரி, பூலாங்குளம் சந்தி, என்று சூடுவெந்தபிளவை வந்தடைந்தனர். சூடுவெந்த பிளவு அரசாங்கப் பாடசாலையிலும் பாவற்குளம் பாடசாலையிலும் இரண்டு நாட்கள் தங்கினார்கள். அங்கு அவர்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதி வாய்ப்புகளும் இருக்கவில்லை. சாப்பிடுவதற்குச் சரியான உணவு கூடக்கிடைக்க வில்லை அவர்களைக் கவனிப்பதற்கு  எந்த விதமான ஏற்பாடுகளும் இருக்கவில்லை. பொடி நடையாகவே பெருந்தூரத்தைக் கடந்து வந்த அவர்களுக்கு ஓய்வெடுக்க மட்டுமே அவகாசம் கிடைத்தது மாதிரியான ஒரு உளப்பூரிப்பு அவ்வளவுதான் எப்படியிருந்தாலும் உணவு குடிபானமின்றி எத்தனை நாளைக் கழிப்பது இரண்டு நாட்களை அந்தப் பாடசாலையில் கழித்து விட்டு  ஒக்டோபர் மாதம் இருபதாம் திகதி பூணாவ சந்தியூடாக இiளைஞர்கள் அனைவரும் இக்கிரிகொல்லாவையை அடைந்தனர் அங்குள்ள அரசாங்கப் பாடசாலையொன்றில் தஞ்சமடைந்த அவர்களுக்கு மூன்று நாட்களின் பின்னர் தணணீரும் உணவும் கிடைத்தன.

18.10.1990 வியாழன் - மன்னார்
கரிகாலன் தலைமையில் கிழக்கிலிருந்து வந்த புலிப்படையினர் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகளின் மூலை முடுக்கெங்கும் நிறுத்தப்பட்டனர். மாலை நேரம் அவர்கள் பல்வேறு விதமான ஆடைகளை அணிந்திருந்தனர் தங்கள் முகங்களை பலர் மறைத்திருந்தனர். முஸ்லிம்களைப் போன்று பலர் தொப்பி அணிந்திருந்தனர் ஒவ்வொரு வீதியிலும் அவர்கள் பரந்து நின்றனர் துப்பாக்கி தாங்கியிருந்தனர் கூர்மையான கத்திகள் கரங்களிலும் இடுப்பிலும் தாங்கியிருந்தனர். அவர்களில் முகம் மறைத்திருந்தவர்கள் முஸ்லிம்களையண்டிப்பிழைப்பு நடத்திய தமிழர்கள் முஸ்லிம்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் அவர்களோடு பழகியவர்கள் அவர்களிம் உதவி பெற்றவர்கள் அவர்கள் செய்யப் போகும் துரோகத்தனத்தின் கடுமை விளங்கியதால்தான் தங்களை யாரும் அடையாளம் காணாத வண்ணம் முகங்களை மறைத்திருந்தனர். அப்படி அவர்கள் திட்டமிட்ட பாரிய நடவடிக்கைதான் என்ன?
கொள்ளை கொள்ளை கொள்ளை முஸ்லிம்களினது சகல வீடுகளிலும் புகுந்தார்கள் நகைகள் அனைத்தையும் பறித்தார்கள் மூலை முடுக்கெங்கும் புகுந்து புகுந்து பார்த்தார்கள் அனைத்தையும் புரட்டிப் போட்டார்கள் கண்ணில் பட்ட தங்கத்தையெல்லாம் வாரிச்சுருட்டினார்கள் சின்னஞ்சிறுசுகளின் காதில் கழுத்தில் உள்ளதுகளையும் பறித்தார்கள். பணம் பணம் என்று பெருந்தொகையை கப்பமாகக் கேட்டார்கள் அனைத்துச் சேமிப்பையும் அள்ளிக்கொண்டார்கள் அப்போது அவர்களின் சிந்தையும் செயற்பாடும் பணமும் நகையும் என்றுதான் இருந்தன. அந்த சேமிப்புகளுக்குப் பின்னால் இருந்த எதிர்பார்ப்புகளும் தேவைப்பாடுகளும் எத்தனையோ கன்னியர்களின் வாழ்க்கையும் எத்தனையோ பிள்ளைகளின் கல்வியும் வாழ்க்கையும் பிணைந்திருந்தன அத்தனையையும் மொத்தமாகச் சுருட்டினார்கள். அவர்கள் பணத்திற்காகவும் நகைகளுக்காகவும் பிரயோகித்த வார்த்தைகள் செல்வத்தை இழப்பதைவிடக் கொடியதாக இருந்தது.
இந்தக் கொள்ளையின் பின்னால் உள்ள மொத்த சூத்திரத்தையும் அப்போது மக்களில் எவறுமே சரியாகப்புரிந்து கொள்ளவில்லை. கிழக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட படையின் செயற்பாட்டுத்தளம் முஸ்லிம்களின் செல்வத்தைக்ககொள்ளையடிப்பதை பிரதானமாகக் கொண்டியங்கும் என்பதை இஇராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு கூடச் சரியாகக் கனிப்பிடத் தவறிப்போனது. மறுபக்கம் முஸ்லிம் இளைஞர் அணியினை இலக்கு வைத்து தேடுதல் நடாத்திய புலிகளின் விஷேட அணியினர் முக்கியமானவர்கள் என்று கருதிய அனைவரையும் தேடினார்கள். ஆயினும் அவர்கள் இலக்கு வைத்த யாரையும் அடையாளப் படுத்தி பிடித்துச் செல்ல முடியவில்லை. இறுதிக் கட்டத்தில் முஸ்லிம் இளைஞர் அணியின் உறுப்பினர்கள் என்று அவர்களால் சந்தேகிக்கப் பட்ட ஏஸ்.ஏ.அனீஸ் சீ.எஸ்..ஜாபிர் ஆகிய இருவரும் கடத்திச் செல்லப் பட்டனர். அத்தோடு அனடறைய நாள் பெருந்தொகைப் பணமும் தங்காபரணங்களும் தமிழீழ விடுலைப் புலிகளால் கொள்ளையடிக்கப்பட்டது.


19.10.1990 வெள்ளி – முல்லைத்தீவு
இளைஞர்கள் அனைவரும் வெளியேறியதால் முல்லைத்தீவின் முஸ்லிம் பிரதேசங்கள் எல்லாம் சோபையிழந்து காணப்பட்டது. தாய்மார்களால் நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை. தந்தையர்களால் தமது வேலைகளைக்கவனிக்க முடியவில்லை. பெண்களும் வயோதிபர்களும், குழந்தைகளும் என பலவீனமானவர்களே முல்லைத்தீவிலிருந்தனர். சென்ற அனைவரும் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்தார்களா? இடையில் ஏதும் இன்னல்கள் நடந்தனவா? உணவுக்கும் தண்ணீருக்கும் என்ன செய்தார்கள்? காட்டுப் பாதையூடாக பொடி நடையாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சென்றவர்கள் பற்றிய திருப்திகரமான செய்தி கிடைக்கப்பெறும்வரை அவர்களால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றியபின் அனைவரும் பேசிக்கொண்டது சென்ற நமது பிள்ளைகளுக்கு என்ன நடந்திருக்குமோ என்பது பற்றி மட்டும்தான் யாரிடமும் பதில் இருக்கவில்லை அனைவரும் கேள்விகளையே சுமந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கடந்து சென்ற பொழுதுகள் எல்லாம் மிகமிகக் கொடூரமானதாகத் தோன்றியது. 

20.10.1990 சனி – முல்லைதீவு
விடியல் வந்தது இனச்சுத்திகரிப்பின் ஆரம்பப் பொழுதுகளின் தன்மை தெரியாமல் முல்லைதீவு முஸ்லிம்கள் தமது அன்றாடக் கடமைகளைத் துவங்கினர். இங்க பாருங்கோ இன்றைக்கே வன்னி மண்ணை விட்டு நீங்கள் போயிருங்கோ அப்படி போகயில்லையெண்டால் நாங்கள் ஒண்டும் செய்யமாட்டம் கிழக்கிழ இருந்து வார ஆட்கள் கருனை காட்டமாட்டாங்கள், எங்களின்ற கண் முன்னாலேயே சுடுவாங்கள், வெட்டுவாங்கள், எங்களின்ற எந்தக் கதையையும் அவங்கள் கேட்கமாட்டாங்கள், அத்தோட நீங்கள் எதையும் எடுத்துச் செல்ல முடியாது, உதலெல்லாம் இந்த மண்ணில இருந்து சம்பாதித்தது என்றபடியால எல்லாவற்றையும் விட்டுட்டுத்தான் போக வேனும் சரியே! இப்பவே எல்லோரும் வெளியேறிட வேணும் சரியே! இதுதான் விடுதலைப் போராளிகளான புலிகளின் வார்த்தைகள். அப்போதுதான் எல்லோரும் எல்லாவற்றையும் தெளிவாக விளங்கிக் கொண்டார்கள். புலிகள் மிகப் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டார்கள். முதலில் திட்டமிட்டு இளைஞர்கள் அனைவரும் வெளியேற்றப்படுகின்றார்கள். அதற்காக அவர்கள் பயன்படுத்திய இலகு வழிதான் முஸ்லிம்கள் மீது அக்கரை கொண்டவர்கள் போலவும் அவர்கள் மீது பற்றுக் கொண்டவர்கள் போலவும் இளைஞர்களை கிழக்கிழிருந்து வரும் அணியினர் பிடித்துச் செல்லப்போகின்றனர் என்ற புரளியைக் கிளப்பி மக்களை அச்சங்கொள்ளச் செய்து இளைஞர்கள் அனைவரையும் சடுதியாக வெளியேறச் செய்தனர். இரண்டு நாட்களின் பின்னர் எஞ்சியிருந்த வயோதிபர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றும் போது எந்த எதிர்ப்பும் அவர்களுக்கிருக்கவில்லை. மிகக்கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமலேயே முல்லைதீவு இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டது. முல்லைதீவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் நகர்ப்பகுதி அவர்கள் வசமிருந்தது. போதியளவு வயற்காணிகள் அவர்களுக்கிருந்தது. கனகச்சிதமாகச் செய்யப்பட்ட இவ்வினச்சுத்திகரிப்பு மிகத்தெளிவான அடிப்படை உரிமை மீறலுமாகும்.

முல்லை மக்கள் அனைவரும் அனைத்தையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென்பது அப்போதைய கட்டளை. ஒரேயொரு பாதை மட்டும் அவர்களுக்கிருந்தது அது ஒட்டுச்சுட்டான் ஊடாக வெளியேறுதல். முஸ்லிம்மக்கள் கொண்டு வரும் அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்வதற்காக ஒட்டுச்சுட்டான் சந்தியில் புலிகளின் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. காத்திருந்தார்கள். யாருடைய கண்ணீரும் யாருடைய அழுகையும் அங்கே நின்றிருந்த எந்தவொரு தமிழ் ஈழ விடுதலைப் புலியினதும் காதில் விழவில்லை. காதில் கழுத்தில் கிடந்த அனைத்தையும் பிடுங்கினார்கள் ஒரு சமூகத்தின் மொத்த உழைப்பையும் சில மணித்தியாளங்களில் தம் வசப்படுத்திக் கொண்டார்கள். தமிழ் ஈழத்தை கட்டமைப்பதற்கான காணிக்கை முஸ்லிம்களின் கண்ணீரும் சாபமும்.
 மிக நீண்ட சோர்ந்த பயணத்தின் பின்னர் ஆதரவற்று இக்கிரிகொல்லாவையை வந்தடைந் முல்லை மக்களுக்கு அதிர்;ச்சியிலிருந்து விடுபடுதற்கிடையில் மற்றுமோர்; பாரியதிர்ச்சி காத்திருந்தது.

23.10.1990 செவ்வாய் - மன்னார்
காலை பத்து மணியளவில் முதலாவது அறிவித்தல் வேப்பங்குளப் பள்ளிவாசலில் இருந்த ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் எல்லோரும் 48 மணித்தியாளங்களுக்குள் வெளியேறிவிட வேண்டும் என்ற கால அவகாசமும்கொடுக்கப்பட்டது. அதற்கிடையே வழிப் பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றதொரு கட்டளையும் இடப்பட்டது. இவ்வறிவித்தல் குறித்து ஆலோசனை நடாத்திய பள்ளிவாசல்கள் சமாஜம் பரவலாக எல்லோரையும் மையப்படுத்தியதாக இவ்வறிவித்தல் வந்திருப்பதால் மேற்கொண்டு இதில் முடிவெடுப்பதற்கு ஒன்றுமில்லையென்பதால் வெளியேறுவதனத் தீர்மானித்தார்கள். அதைத் தவிர வேறு முடிவுகள் எதனையும் எடுக்கமுடியவில்லை.

24.10.1990 புதன்
இதற்கிடையே முக்கியமான சில தகவல்களைப் பெற்றுக்கொண்ட யு.பு.ஜாபிர் ர்.ஆ.நியாஸ் ஆகிய இருவரும் வடமாகாணத்தை விட்டும் முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற்றப்படப் போவது பற்றிய முக்கியமான சில தகவல்களைப்பெற்றுக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணமாக வேண்டிய அவசர நிலையேற்பட்டது. அவர்கள் கடல் மார்க்கமாக விடத்தல் தீவையடைந்து பின்னர் அங்கிருந்து பண்டிவிரிச்சான் காட்டுப்பாதையூடாக வவுனியா நோக்கிப் பயணமாயினர். இதற்கிடையே இவர்களைப் பிடிப்பதற்காக புலிகள் வலை விரித்திருந்தனர். பேயர் விபரங்களை மட்டுமே பெற்றுக்கொண்ட அவர்கள் பாரிய தேடுதலை மேற்கொண்டனர். பண்டிவிரிச்சான் காட்டுப் பாதை யூடாக வந்த இருவரையும் புலிகளின் ஒரு குழுவினர் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது சந்தேகம் கொண்டு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர் அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர்கள் இவர்கள்தான் என்பதை அறியாத புலிகள் ஆறு மணித்தியாலங்களின் பின்னர் விடுவித்தனர். இறைவன் தம்மைக் காப்பாற்றிவிட்டான் என்ற மனநிறைவோடு இருவரும் கொழும்பை வந்தடைந்தனர். 

25.10.1990 வியாழன்
நடக்கவிருக்கின்ற பேரபாயத்தைப் புரிந்து கொள்ளாது வட மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் தமது செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் அத்துடன் குறிப்பிட்ட சில முக்கியமா வர்த்தகர்களுக்கு புலிகளின் அறிவித்தல் பற்றிய தொலைபேசி அழைப்புகள் வந்தன ஆனாலும் அவர்கள் அதை வதந்தியாக இருக்குமென்று பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. கொழும்பை வந்தடைந்த இருவரும் உடனடியாக அங்கிருந்த தமது நண்பர்களை அழைத்து விடயத்தின் பாரதூரத்தை விளங்கப்படுத்தினார்கள் அத்துடன் துரிதமாக கொழும்பிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வர்த்தகர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களையும் வடக்கிற்கு செல்லா து தடுப்பதற்கான அனைத்து வேளைகளையும் பார்ப்பதென அவர்கள் முடிவெடுத்தார்கள். இளைஞர்கள் வேகமாகச் செயற்பட்டார்கள். கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த அனைவருக்கும் செய்தி எத்திவைக்கப்பட்டது. அத்துடன் தொலைபேசி மூலமாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர்கள் அறிந்தவர்கள் உட்பட முடியுமானளவு செய்தி எத்திவைக்கப்பட அடுத்த கட்டமாக கொழும்பில் ஒரு மத்திய தளமாக இயற்கும் சம்மாங்கோட்டைப் பள்ளிக்குச் சென்று அற்கிருந்த அனைவருக்கும் பகிரங்க அறிவித்தலாக இந்தத் துயரச் செய்தி எத்திவைக்கப்பட்டது. ஆனால் யாருமே இதை நம்பவில்லை புலிகள் ஒருபோதும் இப்படியான அக்கிரமமான முடிவை எடுக்கமாட்டார்கள் அப்படி புலிகள் ஒரு முடிவை எடுத்தாலும் நமது சகோதர தமிழ் மக்கள் அதற்கு அனுமதிக்கமாட்டார்கள். தமிழ் புத்திஜீவிகள் இதற்கு எந்த வகையிலும் துணை போக மாட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் கப்பம் அறவிட்டாலும் கொள்ளையடித் தாலும் முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றும் திட்டத்தை ஒரு போதுமே செயற்படுத்த மாட்டார்கள். அவர்கள் அப்படி ஈனத்தனமான முடிவெடுக்கக் கூடியவர்களல்ல என்று பள்ளிவாசல் எங்கும் கருத்து மோதல் இடம்பெற்றது. அனைத்து முஸ்லிம்களும் இவர்கள் சொன்ன செய்தியை முற்றாக மறுதலித்தார்கள் ஒருவர் கூட இதை ஏற்றுக் கொள்ளவில்லை. புலிகளின் திட்டத்தை முன்வைத்தவர்களுக்கு பெருந் தர்மசங்கடமாகி விட்டது. அவர்களும் விடுவதாக இல்லை ஒரு ஆதரவுக்குரல் வந்தாலாவது விடயத்தின் பாரதூரத்தை விளங்கப்படுத்தி விடலாம் என்பது அவர்களின் பிரயாசை. சூடான வாதப் பிரதிவாதம் நடந்தேறியது முஸ்லிம்கள் தமது சகோதரர்கள் பாரிய இன்னல்பட்டு தப்பித்து வந்து இந்தச் செய்தியைச் சொல்லி நம்மைக்காப்பாற்ற முயற்சிக்கின்றார்களே இதை எத்தி வைப்பதால் அவர்களுக்கென்ன லாபம் வந்துவிடப் போகிறது என்றெல்லாம் யாரும் சிந்திக்கவில்லை அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருந்தது. அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள். அது குருட்டு நம்பிக்கைதான் என்பதை விரைவில் புரிந்து கொள்வார்கள் இவர்களோடு நேரத்தை விரயமாக்காது ஆக வேண்டிய வேளைகளை வேறு விதமாகப் பார்ப்போம் என்ற முடிவுடன் மிகவும் சோர்ந்த மனதுடன் தமது மக்களின் நிலையை நொந்தவர்களாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஆர்ஆ.எம்.எச்.எம்.அஷ்ரப்அவர்களைச் சந்தித்து விளக்கமளிப்பதென அவர்கள் முடிவெடுத்து அங்கிருந்து சென்றார்கள்.

26.10.1990 வெள்ளி
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் ஏ.கே.ஹபீப்முஹம்மது, எஸ்.லுக்மான், எச்.எம்.நியாஸ் ஆகியவர்கள் முஸ்லிம்காங்கிரசின் தலைவர் எம்எச்எம்.எம்.எச்.எம்.அஷ்ரப்அவர்களைச் சந்தித்து விடயத்தின் பாரதூரமான அம்சங்களை எடுத்துரைத்தனர் அதைத் தெளிவாக உள்வாங்கிக் கொண்ட எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று வினவினார்கள். உடனே அரசாங்கத்தின் உதவி வேண்டும் என்றும் மக்களை வெளியேறாமல் தடுக்க உடனடியாக புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டினார்கள். அதற்கு எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் தான் எதிர்க்கட்சியில் இருக்கும் ஒரு உறுப்பினர் என்பதால் தன்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்றும் ஒரேயொரு உதவியைச் செய்யமுடியும் என்று அமைச்சர் ஏசீஎஸ். ஹமீத் அவர்களை உடனடியாகச் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். அமைச்சர் ஏசீஎஸ். ஹமீத் அவர்களிடம் விடயங்களை விளங்கப் படுத்தியதும் அவர் உடனடியாக பாதுகாப்புப் பிரதியமைச்சர் ரன்ஜன்விஜேரத்னவை அழைத்து விடயங்களை விளங்கப்படுத்தினார்கள். மக்கள் எக்காரணம் கொண்டும் வெளியேறிவிடக் கூடாது என்பதில்தான் சென்ற தூதுக் குழுவினர் உறுதியோடு இருந்தார்கள். அத்துடன் அதே கருத்தில். எம்.எச்.எம்.அஷ்ரப்அவர்களும் அமைச்சர் ஏசீஎஸ். ஹமீத் அவர்களும் உறுதியுடன் உடன்பட பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரன்ஜன்விஜேரத்ன அவர்களும் உடன்பட்டார்கள். அத்துடன் மேலதிக நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்வது என்றும் உறுதி கூறிய பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக சிசில் வைத்திரத்னா அவர்களை அழைத்தார்கள் அத்துடன் இது விடயமாக தங்களுடன் இணைந்து பணிபுரிய விடயங்களை நன்கு அறிந்த யாராவது இரண்டு பேரை தறுமாறு வேண்டினார்கள் அதற்கினங்க அங்கேயே எச்எம்.நியாஸ் மற்றும் எஸ்.இஹ்திசாம் ஆகிய இருவரும் இது தொடர்பில் பாதுகாப்புப் பிரதியமைச்சருக்கு முழு ஒத்தழைப்பையும் வழங்குவார்கள்  என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பிரதியமைச்சர் மற்றும் சிசில் வைத்திரத்னா ஆகியவர்களுடன் நியமிக்கப்பட்ட இருவரும் இனைந்து பிரததியேகமான சந்திப்பை மேற்கொண்டதுடன் தாக்குதல் நடத்துவதற்கான அனைத்துத் தளங்களும் அடையாளப்படுத்தப்பட்டன. புலிகளின் தளங்கள் பற்றிய மிகத்துள்ளியமான தகவல்களை பெற்றுக் கொண்ட இரு அதிகாரிகளும் ஆச்சரியமடைந்தனர். அத்தோடு நின்றிடாது வடக்கிற்கான கட்டளைத் தளபதி டென்ஷில் கொப்பேகடுவ அவர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஏற்கனவே இஇராணுவத்தினருடன் சீரான தொடர்பைப் பேணிவந்ததினால் கட்டளைத் தளபதி அவர்களுக்கு இவர்களைப்பற்றிய மேலதிக விளக்கங்கள் தேவைப்படவில்லை. இதற்கிடையே மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் வெளியேறுகின்றார்கள் என்ற செய்தியும் புலிளின் நிலைகளை இஇராணுவம் தாக்கப்போகிறது என்ற செய்தியும் ஒருமித்தே எங்கும் பரவத் துவங்கின. ஆரம்பத்தில் மடத்தனமாக யோசித்து வந்த தகவல் எதனையும் நம்பாமல் தமது போக்கிற்கேற்ப முடிவெடுத்து செயற்பட்ட வர்த்தக சமூகம் உடனடியாக ஒன்று கூடியது மேற்கொண்டு என்ன செய்வது என்பதை அவசர அவசரமாக ஆராய்ந்து மீண்டும் ஒருமுறை முட்டாள்தனமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு வர்த்தக சமூகமும் பெரிய புள்ளிகளாக தம்மைக் கருதிக்கொண்டு செயற்படும் மாந்தர்களும் இணைந்து அமைச்சர் ஏசீஏஸ். ஹமீத் அவர்களை உடனடியாகச் சந்தித்து தமது மடத்தனமான முடிவை முன்வைத்தார்கள் அது எக்காரணம் கொண்டும் அரசாங்கம் தாக்குதல் ஏதும் நடத்தக் கூடாது என்றும் மக்கள் வெளியேறுகின்றபடி வெளியேறட்டும் என்றும் உருக்கமாகவும் தமது முடிவில் உறுதியுடனும் நின்றார்கள். அவர்கள் திரும்பத்திரும்ப முன்வைத்தது எங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள் எங்கள் குடும்பத்தினர் இருக்கிறார்கள் எங்கள் உறவுகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு எதுவும் நடந்துவிடக்கூடாது எங்கள் பிள்ளைகளும் எங்கள் குடும்பத்தினரும் பாதுகாக்க ப்பட வேண்டும், என்பதுதான். சுயநலத்தின் மொத்த வடிவத்தையும் அன்று காணக்கிடைத் திருக்கும் இதுதான் எமது சமூகத்தின் தலைவிதி என அனைத்து ஏற்பாடுகளிலும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் நொந்து கொண்டார்கள். அமைச்சர் ஏசீஏஸ். ஹமீத் அவர்கள் குழம்பிப் போனார்கள் தாக்குதல் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் பாதுகாப்புத் தரப்பு பூர்த்தி செய்திருந்தது. அனைத்தையும் இழந்து வெளியேறும் மக்களை வெளியேறவிடாமல் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை தோற்கடித்து விட்டால் இடம்பெயர்ந்து எதிர்கொள்ளும் அவலவாழ்விலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றலாம் அதற்கு சிறியதொரு விலையைத்தான் முஸ்லிம் சமூகம் கொடுக்க வேண்டி வரும் மற்றபடி இடம் பெயர்ந்து விட்டால் மீண்டும் குடியேறுதல் என்பது விரைவில் சாத்தியப்படாது என்பது புலனாய்வுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு நீண்ட காலம் பெருந்துன்பத்தை அனுபவிப்பதைவிட குறுகியகாலத்தில் சிறு துன்பத்தை அனுபவித்து சொந்த மண்ணோடு பொழுதைக் கழிக்கலாம் என்ற இளைஞர்களின் வாதம் அங்கு எடுபடவில்லை. வர்த்தக சமூகத்தின் சுயநலத்திற்கு முன்னால் அவர்களால் நின்றுபிடிக்க முடியவில்லை மடமைத்தனத்திற்கு முன்னால் கருத்தியல் வாதம் எடுபடாது என்பதை கருத்திற்கொண்டு அவர்களின் முடிவிற்கேற்பவே செயற்படுவதெனத் தீர்மானித்த இளைஞர்கள் அமைச்சர் ஏசீஎஸ். ஹமீத் அவர்களிடம் விடயத்தை விளக்கிவிட்டு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரன்ஜன்விஜேரத்ன அவர்களை மீண்டும் சந்தித்து வர்த்தக சமூகத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடாத்தும் திட்டத்தைக்கைவிட்டு  மேலதிக நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்வது என்று வேண்டிக் கொள்ள பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரன்ஜன்விஜேரத்ன அவர்களும் உடன்பட்டார்கள். இப்படியே இருக்கும் போது முதலாவது படகு கற்பிட்டியை வந்தடைந்த செய்தி கிட்டியது அனைவரும் கற்பிட்டிநோக்கி விரைந்தனர்.

27.10.1990 சனி
இதன்பின்னர் மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்க்க ஆர்வமற்று ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் கிட்டத்தட்ட கைவிட்டது மாதிரியான நிலை தோன்றியது. மக்கள் பெருந்தொகைப் பணத்தினை படகுகளுக்காக் கொடுக்க வேண்டியிருந்தது ஏற்கனவே புலிகள் அனைத்தும் பிடுங்கிக் கொண்டு வெறுங்கையோடு விட்டநிலை வேறு, இப்படி இருக்கும் போது ஏ.எம்.சம்சுதீன் என்ற தனவந்தர் மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்துசேர்க்குமாறு பெருந்தொகைப்பணத்தை எருக்கலம்பிட்டிபள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களிடம் கொடுத்தார்கள் அது வழியேது மற்று தவிக்கும் அப்பாவிகளுக்கு பேருதவியாக அமையும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பு. பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடன் பல்வேறு வர்த்தகர்களும் அந்தப் பணியை நிறைவேற்ற ஒன்றினைந்தனர்.
     வெளியேறுவதுதான் முடிவென்றால் அடுத்து என்ன செய்ய முடியும் அனைவரும் களத்தில் குதித்தார்கள். இதற்கிடையே கற்பிட்டியை நோக்கி வந்த படகுகள் பற்றிய உண்மை நிலையறியாத கடற்படையினர் படகுகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இச்செய்தி கேள்விப்பட்டதும் ஏச்எம்.நியாஸ் மற்றும் எஸ்.இஹ்திசாம் ஆகிய இருவரும் உடனடியாக ரியர்அட்மிரல் வீரசிங்க அவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கினர். அத்துடன் ரியர் அட்மிரல் வீரசிங்க அவர்கள் கடற்படையினரின் அதிவேகப் படகு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்து முஸ்லிம்கள் வரும் வள்ளங்கள்தானா கடற்பரப்பில் இருப்பகைவள் அனைத்தும் என்பதை அடையாளப்படுத்தி உறுதிசெய்து கொள்ளுமாறு பணித்தற்கிணங்க இருவரும் கடற்படையினருடன் பயணித்து முஸ்லிம்கள் வருகின்ற வள்ளங்களனைத்தையும் அடையாளம் காட்டினார்கள். அதன்பின்னர்தான் கடற்படையினர் தமது பூரண உதவிகளை முஸ்லிம்களுக்கு வழங்கினார்கள். கடற்படையின் படகில், முஸ்லிம்கள் பயணிக்கும் படகுகளை அடையாளப்படுத்தச் சென்ற இருவரும் அப்போதுதான் ஒருவிடயத்தை அவதானித்தார்கள் தனவந்தர் ஏ.எம்.ஸம்சுதீன் அவர்கள் அளித்த பணத்தின் சரியான நோக்கம் அங்கு நிறைவேற்றப் படவில்லை. பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களின் உறவினர்களும் அவர்களுக்கு நெருங்கியவர்களும் வசதிபடைத்தவர்களும் மற்றும் வர்த்தகர்களும் அவர்களின் உறவினர்களும் உற்றார்களும் தெரிந்தவர்களும் என முன்னுரிமை பெற்று இலவச படகுச்சேவையை அநீதமாகப் பயன் படுத்தினார்கள். இதைக் கண்ணுற்றதும் கொதித்தெழுந்த அவர்கள் இன்னும் சில துடிப்பான இளைஞர்களையும் அழைத்துக்கொண்டு நேரடியாக பொறுப்புக்களைக் கையேற்று மக்களில் எந்த வித்தியாசமும் பாராமல் அனைவரையும் பாரபட்சம் அற்றமுறையில் அனுப்பிவைக்க ஏதுவான வழிகளில் செயற்பட்டனர்.   

1990 ஒக்டோபர் 24தொடக்கம் 26 வரை – மன்னார்
இந்த மூன்று நாட்களும் மன்னார் முஸ்லிம் பகுதி அனைத்தும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. மூன்று நாட்களும் ஒவ்வொரு வீடாகச்சென்று கொள்ளையடித்தார்கள். முழுமையாகச் சோதனையிட்டுப் பெறுமதியான அனைத்துப் பொருட்களையும் பறித்துக் கொண்டார்கள். பள்ளிவாசல்களில் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன. நீங்கள் விரும்பியதை எடுத்துச் செல்லலாம் என்று அவர்கள் அனுமதிக்கின்றார்கள். காரணம் என்னவென்றால் மூன்று நாட்களாக முழுமையாக கொள்ளையடித்து விட்டார்கள். இனி அவர்கள் எடுத்துச் சென்றால் என்ன? விட்டுச் சென்றால் என்ன? என்று எடுப்பதை எடுத்துச் செல்லுங்கள் என்று விட்;டு விட்டார்கள். எனவே முடிந்தவற்றை அவர்களின் கைகளில் சிக்காமல்  பாதுகாத்துக் கொண்ட நபர்கள், வெளியேறும் போது அவற்றை எடுத்துச் சென்றார்கள்.  அடுத்தது இந்த இடத்தில் இன்னுமொரு முக்கியமான விடயத்தை பதிவு செய்ய வேண்டும். பல முஸ்லிம் நபர்கள் தங்களை அண்டி வாழ்ந்த, சார்ந்து வாழ்ந்த தமிழ் மக்களிடம் தங்களுடைய நகைகளையும் பணங்களையும் பொறுப்புக் கொடுத்தார்கள். பின்நாளில் அந்த தமிழ் அன்பர்கள் அவற்றை பத்திரமாக முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுத்தார்கள் என்பது வரலாறு. இந்த இடத்தில் தமிழ் மக்கள் முஸ்லிம்களுடைய எதிரிகளாக இருக்கவில்லை. இந்த ஆயுத இயக்கங்கள் தான் எதிரிகளாக இருந்தனர் என்பது முக்கியமான விடயம். ஆனால் புலிகளுக்குப் பின்னால் சாதாரண மக்களில் பெருந்தொகையினரும் இருந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது. 


28.10.1990 ஞாயிறு மாலை
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் முக்கிய தளபதிகளின் கூட்டம் இடம் பெறுகிறது பொதுவாக எல்லாப்பிரதேசங்களும் வெற்றிகரமாக அவர்களது ஆளுகைக்குள் வந்து விட்டதற்கான வெற்றிக் களிப்புக்கான கூட்டமாக அது இடம்பெற்றது. இராப்போசனமும் ஏற்பாடு செய்து இறுதிக்கட்ட வேளையில் ஈடுபடும் அனைத்துத் தளபதிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒன்றாக இருந்து இராப்போசனம் உண்ணும் பாக்கியம் அன்று இரவு வழங்கப்பட்டது. முஸ்லிம்களை வேரோடு பிடுங்கியெறிந்து விட்டு தமிழீழத்தைக் கட்டமைக்க கனவு கண்டார்கள். (வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது அல்லது இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டது தற்செயலானது என்று இதற்குப் பின்னரும் எப்படி வாதிட முடியும்?

29.10.1990 திங்கள் - யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் அனைத்து வீதிகளிலும் புலிகளின் ஒரு ஜீப் வண்டி காலையிலிருந்து வலம் வந்தது அதில் கரிகாலன் உட்பட முக்கிய பிரமுகர்கள் சிலர் இருந்தனர். அன்றையபொழுது மட்டும் விஷேடமாக ஏன் இப்படியொரு விஜயம் என்பதை பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனாலும் கூட நடக்கப்போகும் விபரீதத்தின் பின்விளைவுகளை ஒரு சில முஸ்லிம்கள் விளங்கிக் கொண்டார்கள். சற்றைக்கெல்லாம் புலிகளின் அறிவித்தல் மக்களையெட்டியது சரியாக பிற்பகல் 03.00 மணிக்கெல்லாம் அனைத்து முஸ்லிம்களும் யாழ் ஒஸ்மானிய்யா பாடசாலையின் மைதானத்தில் ஒன்றுகூட வேண்டும் என்றும் புலிகளின் வார்த்தைகளில் சொல்வதானால் 'யாழ் மாவட்டத்தில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும் இன்று சரியாக மூன்று மணிக்கு ஒஸ்மானிய்யா பாடசாலை மைதானத்தில் ஒன்று சேர வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எடுத்துள்ள சில தீர்மானங்களை தங்களுக்கு எத்திவைக்க விரும்புகின்றோம். மக்கள் அனைவரும் ஒஸ்மானிய்யா பாடசாலை மைதானத்தில் ஒன்று கூடினார்கள் புலிகளின் பல முக்கியஸ்;தர்கள் வந்தனர் ஆஞ்சநேயர் என்றழைக்கப்படும் இளம்பரிதி மற்றும் கரிகாலன் ஆகியவர்கள் கதைத்தார்கள். முஸ்லிம்கள் அனைவரும் இரண்டு மணித்தியாலங்களுக்குள் வெளியேறிவிட வேண்டும். அப்படி வெளியேறிவிட்டால் உயிராபத்துகள் எதுவும் இருக்காது இல்லாதபட்சத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வேண்டிவரும். அதனால்தான் கிழக்கில் இருந்து பலமானதொரு அணியினை தலைவர் வரவழைத்திருக்கின்றார். எங்களை போல அவர்கள் கருணை காட்டமாட்டார்கள் ஆகவே அனைவரும் சொன்னதை சரியாகச் செய்வீர்கள் என்று நம்புகின்றோம். அவர்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டார்கள். இனி எதற்கும் நேரமில்லை, இந்த அதிர்ச்சித் தகவல் முஸ்லிம்களின் காதுகளில் விழுந்தது அவ்வளவுதான் அவர்;களுக்குத் தெரியும். ஏது பேசுவது என்ன கேட்பது எதுவும் புரியாமல் மக்கள் விறைத்துப் போய் நின்றார்கள் புலிகள் இப்படியொன்றை அறிவிப்பார்கள் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லையாதலால் அதிர்ச்சியை விட்டும் நீங்க அவர்களுக்கு கனநேரம் எடுத்தது. மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மிகுந்த அமைதியோடு நின்றார்கள். யாரிடம் என்ன கேட்பது? வெளியேறுவதா இல்லையா? என்னமுடிவெடுப்பது? இருக்கும் கால அவகாசம் ஆக இரண்டுமணித்தியாலங்கள் மட்டுமேயாகும். குழப்பங்களும் அச்சமும் பீதியும் நிறைந்திருக்க  கேள்விகள்மட்டும்தான் மிகைத்திருந்தன.
சூரியன் மறைந்தது. துப்பாக்கி மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்தது. மக்கள் மெதுமெதுவாக மூட்டை முடிச்சுகளுடன் பாதையோரங்களை நிறைக்கத் தொடங்கினர்.

29 ஒக்டோபர் 1990 திங்கள் - கிளிநொச்சி
முஸ்லிம்களில் மிகச் சொற்ப தொகையினரே கிளிநொச்சியில் இருந்தார்கள். இவர்கள் தமிழ் மக்களுடன் மிக அன்யயொன்யமாக வாழ்ந்தார்கள் அத்துடன் சகலவிதமான கொடுக்கல்வாங்கள் நடவடிக்கைகளும் தமிழ் மக்களுடனேயே இடம்பெற்றது. விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்ற காலத்திலிருந்தே கிளிநொச்சி மக்கள் தமது பூரணமான ஒத்தழைப்பையும் தமிழர்களுக்கு வழங்கினார்கள். அத்துடன் இயக்கங்களிலும் அங்கத்துவம் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய அமைதியான வாழ்விலும் இன்றைய தினம் அடி விழுந்தது நாளையே எல்லோரும் வெளியேறிவிட வேண்டும் என்று திடீர் அறிவித்தல் எந்த முன்னுரையும் இல்லை முகவுரையும் இல்லை வெளியேறிவிட வேண்டும் அவ்வளவுதான். மேற்கொண்டு கிளிநொச்சிவாழ் முஸ்லிம்களுக்கு பேசுவதற்கோ, கருத்துச் சொல்வதற்கோ, வேறு வேண்கோள் விடுப்பதற்கோ அதிகாரம் இருக்கவில்லை. நாளை வெளியேற வேண்டும் என்ற விடயதானம் மட்டும் அவர்களின் காதுகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. 

30.10.1990 செவ்வாய் - மன்னார்
 மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த சகல பிரதேசங்களிலும் புலிகள் தமது கைவரிசையைக் காட்டினார்கள். அனைத்து வீடுகளிலும் நுளைந்து தமக்கு தேவையான அனைத்தையும் அள்ளிச் சுருட்டினார்கள் பல வாகனங்களில் அவர்கள் பொருட்களை அள்ளிச் சுமந்தார்கள் சந்தேகத்தின் பேரில் பல இடங்களையும் தோண்டித் தோண்டிப் பார்த்தார்கள் பெறுமதியான பொருட்களை சோனகர்கள் புதைத்து விட்டுச் சென்றிருக்கலாம் என்ற ஆதங்கமும் நப்பாசையும் அவர்களை ஆட்டிப் படைத்தது. 
பாயிஸ் அவர்களின் தலைமையில் வளர்க்கப்பட்ட இளைஞர் அணி வெறுமனே ஆயுதத்தை மையப்படுத்திய செயற்பாட்டாளர்களாக இருக்கவில்லை. அவர்களுடைய பாதுகாப்புக்கு ஓரிரு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஓர் ஆயுத இயக்கமாக இருக்கவில்லை. அவ்வாறு அவர்கள் ஒரு முஸ்லிம் ஆயுத இயக்கமாக இருந்திருந்தால் 1990 ஒக்டோபர் 24 தொடக்கம் 26 வரை மன்னாரில் நடந்த கொள்ளைகளின் போது ஊருக்குள் வந்தவர்களை அவர்கள் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். ஏன் அப்படியொரு யுத்தம் நடைபெறவில்லை? அவர்கள் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் என்ற அடிப்படையில் இருக்கவில்லை. தங்களுடைய பிரதேசத்தில் தற்பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக ஒரு குழுவாகவும், எச்சரிக்கையாளர்களாகவும் செயற்பட்டார்கள். அது தவிர ஆயுதக்குழுவாக முஸ்லிம்கள் செயற்படவில்லை என்பதற்கு மிகச்சிறந்த எளிய உதாரணம் இது. விடுதலைப்புலிகள் புகுந்து கொள்ளையடிக்கின்ற போது இவர்கள் ஆயுதக்குழுவாக இருந்திருந்தால் அவர்களை சுட்டுத் தள்ளியிருப்பார்கள். ஏன் அவர்கள் சுடவில்லை? ஆயுதம் இல்லை. இந்த உண்மைகளை புறந்தள்ளி விட்டு கண்மூடித்தனமாக எழுதுகின்ற எழுத்துக்களை பார்க்கின்ற போது தான் சளிப்பு ஏற்படுகின்றது. 
இந்த தமிழ் பேசுகின்ற இனங்களுக்கிடையில் ஒற்றுமை வராதோ என்கின்ற நிலையை இத்தகைய புரிந்துணர்வற்ற, உண்மைகளை மறுதலிக்கின்ற எழுத்துக்கள் தான் தோற்றுவிக்கின்றன.


30.10.1990 செவ்வாய் - யாழ்ப்பாணம்
அன்சந்தி என்றழைக்கப்படும் ஐந்து பிரதான பாதைகள் சந்திக்கும் ஐந்துசந்தியில் புலிகளின் பிரதான சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் கொட்டடி, ஓட்டுமடம், கேகேஎஸ் வீதி ஆகிய இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. யாரும் தன்னிச்சையாக புலிகளின் சோதனைச் சாவடிகளை எதிர் கொள்ளாமல் வெளியேற முடியாதபடி அனைத்தும் ஏலவே திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது. சோதனைச் சாவடிகளில் நடந்த அநியாயங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது. தங்க நகைகள் மற்றும் பணம் ஆகிய மொத்தமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. புலிகள் மிக வேகமாக அனைத்தையும் அபகரித்துக் கொண்டிருந்தார்கள் அவசரமாக அனைத்தையும் முடிக்கவேண்டும் என்பதற்;காக பெண்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றுவதற்குக் கூட அவகாகசம் கொடுக்காது பிய்த்தெடுத்தார்கள். முஸ்லிம் பெண்களின் காதுகள் கிழிய இரத்தம்சொட்ட கழுத்துகள் பிராண்டப்பட குழந்தைகளின் காதுகள் கூடக்கிழிய நாளை தமிழர்களுக்காக மட்டும் என்று அமைக்கப்படப்போகும் தனித் தமிழ் ஈழத்தின் இறுதி இனச்சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரல் வெற்றிகரமாக நிறைவேறியது. பிரதான வீதியில் பஸ்வண்டியிலும் மடு ஊடாகவும் மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டும் வெளியேறினார்கள். அது தவிர பெரும்பான்மையான மக்கள் கால்நடையாக ஆனையிரவு காட்டுவழியாக விசுவமடு, புளியங்குளம் சென்று அங்கிருந்து சாந்தசோலையைச் சென்றடைந்தனர். சாந்தசோலை இஇராணுவ முகாம் ஊடான இலகு பாதையூடாகப் பிரயாணிக்க இஇராணுவத்தினரின் அனுமதி கிடைக்கவில்லை பின்னர் அங்கிருந்து பெருஞ்சிரமங்களின் மத்தியில் வவுனியா போய்ச் சேர்ந்தார்கள். விடுதலைப் புலிகளைப்  பொறுத்தவரை இது மிக வெற்றிகரமான இனச்சுத்திகரிப்பு.

30 ஒக்டோபர் 1990 செவ்வாய் - கிளிநொச்சி
யாழ்ப்பான முஸ்லிம்களும் வெளியேறி விட்டார்கள் என்ற தகவலுக்கு முன்னமே யாழ் முஸ்லிம்களில் சிலரை கிளிநொச்சி முஸ்லிம்கள் கண்டார்கள். புலிகள் விடுத்த கட்டளை நிறைவேற்றப்பட்டது. வெளியேறாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்பதற்குப் பின்னர் என்ன செய்ய வேண்டிக் கிடக்கிறது மனதால் நொந்து முழுமையாக இறைவனை மனதில் இருத்தி மனமுறுகிப் பிரார்த்திக்க மட்டுமே முடிந்தது.  அனைவரும் வவுனியாவை நோக்கி நகர்ந்தார்கள். அனைத்து ஆதனங்களும் சூரையாடப்பட்டு உயிர்களை மட்டும் சுமந்து கொண்டு சென்ற அம்மக்களின் சாபம் புலிகள் கனவுகண்ட தனித் தமிழ் ஈழத்தைச் சுற்றிக்கொண்டே இருந்தது. கிளிநொச்சி புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெருநகராக அன்றோடு மாறியது, சகல பாகங்களையும் முஸ்லிம்கள் விட்டசாபம் சூழ

31 ஒக்டோபர் 1990 முதல் 04 நவம்பர் 1990 வரை
வடக்கிலிருந்து அனைத்து முஸ்லிம்களும் வெளியேறிவிட்டனர். இக்கிரிகொல்லாவையிலும், வவுனியா காமினி வித்தியாலத்திலும் கற்பிட்டியிலும் ஏனைய பிரதேசங்களில் இருந்த தமது உறவினர்கள் வீடுகளிலுமாக முஸ்லிம்கள் பல்வேறு பிரதேசங்களிலும் தங்கியிருந்தனர். இதற்கிடையே சமூகநலத் திட்டங்களுக்காக டென்ஷில் கொப்பேகடுவ அவர்களால் கேர்னல் சரத்பொன்சேகா பிரிகேடியர் லால்வீரசூரிய ஆகியவர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஏற்கனவே பல செயற்பாடுகளை முன்னெடுத்த இளைஞர்களுடன் இணைந்து ஏனைய பணிகளைக் கவனிப்பதற்காக வடக்கிற்கான கட்டளைத்தளபதி டென்ஷில் கொப்பேகடுவ அவர்கள் கேர்னல் சஹீர், கேர்னல் மீராசாஹிப், மேஜர் டீன், கெப்டன் சல்மான் ஆகியவர்கள் உட்பட்ட ஒரு அணியை நியமித்தார்கள். இதற்கிடையே புலிகளின் மீது கொண்ட வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள முஸ்லிம் இளைஞர்கள் எடுத்த ஒரே தீர்மானம் இஇராணுவத்தில் சேர்வதுதான் என்பதாகும். பலர் அவசரமாக இஇராணுவத்தில் இணைந்து கொண்டனர் அத்துடன். ஆங்காங்கே சிதறிப் போயிருந்த வெளியெற்றப்பட்ட மக்களை அவர்களின் விருப்பத்திற்கினங்க பெரும்பான்மையான முஸ்லிம்கள் இருந்த கற்பிட்டியை நோக்கி நகர்த்தும் பணியையும் இந்த உயர் இஇராணுவ அதிகாரிகளுடன் இணைந்து இளைஞர்கள் சிறப்பாகவும் வேகமாகவும் செயற்பட்டார்கள். அத்துடன் பல இளைஞர்கள் இஇராணுவத்தில் இணைந்துவிட்டசெய்தி கிடைக்கப்பெற்;றதும் ளு.இஹ்திசாம், ர்ஆ.நியாஸ், ளுயு.அனீஸ், ஆஐ.ஸைபுல்லா, ஊளு.ஜாபிர் ஆகியவர்களடங்கிய குழு உடனடியாக டென்ஷில் கொப்பேகடுவ அவர்களைச் சந்தித்து இஇராணுவத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்கனவே இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைத்து முஸ்லிம்களைக் கையாளவேண்டிய முறைகளையும் தெளிவுபடுத்தி அதற்கொப்ப நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட டென்ஷில் கொப்பேகடுவ அவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் தனிப்படையாக இயங்குவர் என்றும் தமது பிரதேசத்தை பாதுகாக்கும் அடிப்படைப் பொறுப்பு மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படும் என்றும், சகலவிதமான இஇராணுவப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும், உறுதி கூற வடக்கிலிருந்து வந்த இளைஞர்கள் தங்கியிருந்த அனைத்து முகாம்களுக்கும் சென்று ஆட்சேர்ப்பு செய்யும் பணியில் குதித்தார்கள் கெப்டன் ஸல்மான் அவர்களின் உதவியோடு ஸ்டாப் சார்ஜன்களான நயீம் மற்றும் பஸீர் ஆகிய இருவரும் இந்நடவடிக்கைக்கு பூரணமாக நின்று ஒத்துழைப்பு நல்குமாறு பணிக்கப்பட்டனர். முழுவடமாகாணத்திலிருந்தும் 750பேர் ஓரிரு நாட்களில் இஇராணுவத்தில் சேர்வதற்காக இணைந்தனர். அவர்கள் உடுத்திருந்த உடையோடு கிளம்பினார்கள் புலிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக. இதற்கிடையே உடனடியாக ஒரு திடீர் நவடக்கையை மேற்கொண்டால் புலிகள் தம்மை ஸ்திரப் படுத்திக் கொள்ளமுன்னர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர்கள் கருதுகின்ற மன்னார்த் தீவுப்பகுதி உட்பட இன்னும் சில பகுதிகளைக் கைப்பற்றலாம் என்று முஸ்லிம் இளைஞர்கள் கொடுத்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட டென்ஷில் கொப்பேகடுவ அவர்கள் தள்ளாடி இஇராணுவ முகாமைப் பலப் படுத்துவதுடன் தீவுப்பகுதியைக் கைப்பற்றுவதற்கான திட்டமிடலைப் பூரணப் படுத்துவதற்காக முஸ்லிம் இளைஞர்களில் சிலரை கெப்டன் ஸல்மான் அவர்களுடன் ஹெலிகப்டரில் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அடையாளப்படுத்திக் கொடுத்த வரைபின்படி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது வெற்றிகரமாக நிறைவும் பெற்றது. 

05 நவம்பர் 1990 
 மன்னார்த் தீவில் இஇராணுவம் ஸ்திரம் பெற்றது. கஜபா பிரிவுதான் நடவடிக்கையை முன்னெடுத்தது. அப்போது கஜபா பிரிவின் செயலணித் தலைவராக கேர்னல் கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள் செயற்பட்டார்கள். 

15 முதல் 20 வரை நவம்பர் 1990 வியாழன் முதல் செவ்வாய் வரை -  வவுனியா
வடமாகானத்தின் முல்லைதீவு, மன்னார், யாழ்ப்பானம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களையும் இத்தனை நாள் பராமரித்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தம்மால் முடிந்தளவு செய்து கொடுத்து அவர்களை அவர்கள் விரும்பிய இடங்களுக்குக் கொண்டுபோய்விட்டு பேருதவி செய்த வவுனியா முஸ்லிம்களுக்கு சோதனைக் காலம் வந்தது. அவர்களையும் வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புலிகளின் கொடுமை எத்தகையது என்பதை நன்கு அறிந்தவர்களாக வவுனியா முஸ்லிம்கள் மாறியிருந்தனர். முல்லைதீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறங்களையண்டியிருந்த முஸ்லிம்கள் இக்குறிப்பிட்டகாலத்துள் வேகமாக வெளியேறினார்கள். ஏனைய முஸ்லிம்கள் படிப்படியாக வவுனியாவை விட்டும் வெளியேறினார்கள். முஸ்லிம்களையண்டிய சில சிங்களக்கிராம மக்களும் வெளியேறினார்கள். வவுனியா முஸ்லிம்கள் தமக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை எடுத்துக் கொண்டு திரும்பவும் விரைவில் வந்து விடுவோம் எனும் நம்பிக்கையில் ஏனைய அனைத்துச் சொத்துக்களையும் வீடுகளில் வைத்து கதவுகளைப் பூட்டிவிட்டு வெளியேறினார்கள். மீண்டும் வரும்போது அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் புலிகளால் கொள்ளையடிக்கப் பட்டிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாமலேயே போயிற்று அத்துடன் விரைவில் சொந்த மண்ணில் வாழ முடியும் என்ற கற்பனையோடும்தான் அவர்கள் வெளியேறினார்கள் பாவம் அப்பாவிச் சனங்கள். மொத்தத்தில்  நவம்பர் 20ம் திகதியாகும் போது அங்கு பாவற்குளம் 2ம் யுனிட் எனப்படும் முஸ்லிம் கிராம மக்கள் மாத்திரம் எஞ்சியிருந்தார்கள். அவல்கள் சிங்களக் கிராமங்களையண்டி இருந்த படியாலும் இஇராணுவ முகாம்கள் அன்மித்து இருந்ததாலும் முஸ்லிம் இளைஞர்கள் ஊர்காவற் படையில் இருந்ததாலும் உறுதியோடு இருந்தார்கள். ஆயினும் புலிகள் அவர்களை எதிர்த்து சமர் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமானது. முதலாவது சண்டையில் முஸ்லிம் ஊர்காவற்படை வீரர்கள் 7 பேர் மரணமடைந்தனர். அதன் பின்னர் இஇராணுவத்துடன் சேர்ந்து பாரிய சில தாக்குதல்களிலும் ஈடுபட்டார்கள் ஆயினும் புலிகள் இதை வேறு விதமாக அனுக முற்பட்டார்கள் முக்கியமாகச் செயற்பட்ட அனைத்து இளைஞர்களையும் கைது செய்தல் அல்லது சுட்டுக் கொல்லுதல் எனும் முடிவோடு இறங்கினார்கள் நேரியகுளம்(மான்குளம்) என்றழைக்கப்படும் இடத்தில் வைத்து பல இளைஞர்கள்; புலிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர் பின்னர் இவர்கள்; புலிகளால் கடுமையான சித்திரவதை செய்யப்பட்டு ஒவ்வொருவராக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் பாரிய விசாரனைகளையும் புலிகள் மேற்கொண்டனர். இதன் பின்னர் இக்கிராம மக்களும் வெளியேறும் முடிவை எடுத்தார்கள் இவர்கள்தான் வட மாகாணத்திலிருந்து இறுதியாக வெளியேறிய முஸ்லிம்களாகும். இவர்கள்தான் கனேவல்பொல எனும் கிராமத்தில் இறுதியாக முகாமிட்டவர்களாகும். அத்துடன் பாங்கோசை இழந்த வடமாகாணத்தில் புலிகளின் தனி ராஜ்ஜியம் பேயாட்சி புரியத்துவங்கியது. 

ஜனாதிபதிக்கு விளக்கம்
 ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவர்களை சந்திக்க ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், எஸ்.அபூபக்கர், ஆரிப்கனி, எஸ்.இஹ்திசாம், எச்.எம்.நியாஸ் ஆகியவர்கள் கூடியிருந்தனர். அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் கிறிஸ்டி சில்வா, பாதுகாப்புச் செயளாலர் ஒஸ்டின் பெனான்டோ, மற்றும் டென்ஷில் கொப்பேகடுவா, சிசில் வைத்திரத்னா, விஷேடமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எம்.ஈ.எச்.மஹ்ரூப் ஆகியவர்களும் அங்கு பிரசன்னமாகி வெளியேற்றப்பட்ட மக்களின் நலன் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது சிங்கள மொழியில் உரையாடுதல் என்பது அனைவருக்கம் பிரச்சினையாக இருந்தது. அங்கு சிங்களத்தில் அனைத்து உரையாடல்களையும் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பு எஸ்.இஹ்திசாம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மக்கள் சார்பாக முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளில் என்பது வீதமானதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள் உடனடியாக தீர்வுகளை நோக்கி நகர்வதாக உறுதிமட்டும் அளித்தார். பின்னர் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் ஐம்பது மீனவக் குடும்பங்களை மீள் குடியேற்றுவதென விஷேடமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எம்.ஈ.எச்.மஹ்ரூப் அவர்களின் இடைவிடாத முயற்சி கைகூடியது. 

14 நவம்பர் 1990 புதன் மன்னார்
இவ்வாறு மீள்குடியேறியவர்கள் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஆறுபேர் காயமடைந்தார்கள். அதன்பின்னர் மக்கள் மீள்குடியேறுதல் என்பது அச்சுறுத்தலுக்குள்ளான தொரு விடயமாக மாறிவிட்டது. 

கார்ட்பெட்டாளியன் - பிந்திய குறிப்பு
வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற ;றப ;பட ;ட பின ;னர ; முகாம ;களில ; தங ;யிருந ;த இளைஞர ;களைக ; கொண ;டு புலிகளுக ;கு எதிராகப ; போராட என ;று 750 பேரைக ; கொண ;டு அமைக ;கப ;பட ;ட ஒரு படையணிதான ; கார ;ட ; பெட ;டாளியன ;.  சேர்க்கப்ட்ட இளைஞர்களுக்கு விஜயபா படையணிக்கூடாக இஇராணுவப் பயிற்சியளிக்கப் பட்டது. இந்த முஸ்லிம் இளைஞர் படையணிக்கு கார்ட் பட்டாளியன் என்று பெயர் சூட்டியவர் டென்ஷில் கொப்பேகடுவ அவர்கள். பயிற்சியை மிக வேகமாக முடித்துக் கொண்ட அவர்களின் உறுதியும் வேகமும் பயிற்சியாசிரியர்களையே வியப்பில் ஆழ்த்தியது. இத்தனை வருடகால தமது பயிற்சியளிக்கும் அனுபவத்தில் இப்படி வேகமான ஒரு அணியைத் தாம் கண்டதில்லை என்று பயிற்சியை முடித்துக் கொண்டு அனைவரும் விடைபெறும் போது கண்ணீர்விட்ட பயிற்சி ஆசிரியர்களைக் கண்டதும் அனைவரினதும் கண்கள் கலங்கிவிட்டன. பின்னர் கொழும்பு சென்று அங்கிருந்து கடற்படையினரின் கப்பல் மூலம் மன்னார் தீவை சென்றடைந்தனர். புலிகளின் பாரிய எதிர்ப்புகள் அத்தனையையும் அவர்கள் வெறித்தனமாக எதிர்கொண்டு வென்றார்கள். பின்னர் அரசியல் ரீதியில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் பாதித்தன. புலிகளுக்கும் அரசுக்குமிடையில் அப்போது ஏற்பட்டிருந்த இரகசிய உடன்படிக்கை அனைத்திலும் தாக்கம் செலுத்தியது. முஸ்லிம் இளைஞர்களை மட்டும் கொண்டிருந்த கார்ட் பெட்டாளியன் டென்ஷில் கொப்பேகடுவ அவர்களின் மறைவின் பின்னர் பாரிய சிக்கல்களை எதிகொள்ளவேண்டி வந்தது. முஸ்லிம் இஇராணுவ இளைஞர்கள் தமக்குக் கூட இருந்த சிங்கள பெரும்பான்மையின வீரர்கள் மீது அதிருப்பி அடையும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஏனெனில் அப்போது இஇராணுவத்தினருக்கு நவீன ரக ஆயுதங்களை விநியோகிப்பதில் அரசு பின் நின்றது. அரசு இஇராணுவத்தினருக்கென்று கெண்டைனர் கெண்டைனராக அனுப்பிய ஆயுதப் பெட்டிகள் உடைக்கப்பட்டு அதில் என்னமாதிரியான ஆயுதங்கள் இருக்கின்றன என்பதைக் கூடப் பார்ப்பதற்கு முன்னர் அவை பாரிய தாக்குhல்கள் முலம் புலிகளால் இலகுவாக அபகரித்துச் செல்லப்பட்ட பின்னணிகளெல்லாம் பார்க்கின்ற போது முஸ்லிம் இளைஞர்களுக்கு பாரிய சந்தேகம் எழுந்தது. அத்துடன் நாட்டிற்காக நாட்டிற்காக என்று டென்ஷில் கொப்பேகடுவ அவர்கள் தாய்நாட்டை நேசித்து தாய் நாட்டின் நலனுக்காகவே அனைத்தையும் செய்த அம்மாமனிதனின் மரணமும் கூட முஸ்லிம்களால் மிகுந்த சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டது. நாட்டின் மீது பற்றுக் கொண்ட பெருந்தளபதி அவர். அவரையே பாதுகாத்துக் கொள்ளத்துணியாத ஒரு நிலையேற்பட்டபோது நாட்டின் மீது உண்மையான பற்றுடன் போராடிய இஇராணுவ வீரர்களுக்கு பலத்த அதிருப்தியும் சந்தேகமும் எழுவது இயல்பானது தானே.  மொத்தத்தில் இஇராணுவத்தில் இருந்து இனி தூய்மையான பணி செய்தல் என்பது சாத்தியமானதாக அவர்களுக்கத் தெரியவில்லை. ஒரு சில இலட்சங்களுக்காகவும் சில உயர்ரக மது போத்தல்களுக்காகவும் இஇராணுவத்தையும் இந்த தேசத்தையும் காட்டிக்கொடுக்கும் மனிதர்கள் தோன்றியபோது உண்மையான ரானுவப் பணி செயலற்றுப் போனது. புலிகளைத் தோற்கடிக்க வேண்டியவர்கள் புலிகளுடன் திரைமறைவில் கை கோர்த்தார்கள். டென்ஷில் கொப்பேகடுவ அவர்களின் மரணத்தின் பின் உண்மையான போராட்டத்தின் உறுதியானதோர் நரம்பு அறுந்து விட்டதாகவேக கருதமுயும். அத்துடன் கார்ட் பெட்டாளியனும் செயலிக்க ஆரம்பித்தது.

இப்போது இந்த 'ஜெப்னா பேக்கரி' புத்தகத்தை பார்த்த பிறகு தான் இதனை முழுமையாக வெளிப்படுத்தி பதிவு செய்வது காலத்தின் கடமையாக இருப்பதை நான் உணர்கின்றேன். எனவே இந்தப் பதிவை முழுமையாக செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.; எனவே கட்டாயம் அதனை செய்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குள் நான் தள்ளப்பட்டிருக்கின்றேன். 

இலங்கையைப் பொருத்த வரைக்கும் தமிழ் நாட்டு அன்பர்கள் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் இலங்கையில் தமிழ் பேசுகின்ற முஸ்லிம்கள் என்பது மிகத் தெளிவாக விளங்க வேண்டிய ஒரு விடயம். பொதுவாக என்னுடைய பார்வையில் தமிழ் பேசுகின்ற அனைவரும் தமிழர்கள்,மளையாளம் பேசுகின்றவன் மளையாளி,ஆங்கிலம் பேசுகின்றவன் ஆங்கிலேயன். நான் என்னை ஒரு தமிழனாக நினைக்கின்றேன். ஏனெனில் என்னுடைய தாய்மொழி தமிழ். ஆனால் இலங்கைச் சூழலைப் பொறுத்தவரைக்கும் தமிழ் பேசுகின்ற முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்கான எந்தவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் தமிழ் அரசியல் தலைமைகள் தயாராக இருக்கவில்லை. அவர்களை 'இஸ்லாமியத் தமிழர்கள்' என்று அரசியல் ரீதியாகப் பிரித்த போது தான் முஸ்லிம்கள் தங்களுக்குரிய இனத்துவ அடையாளத்தை நிறுவ வேண்டிய அல்லது தனித்துவமாக அதனை அடையாளப்படுத்த வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்படுகின்றார்கள். 'இலங்கைச் சோனகர்கள்' என்ற அடையாளத்தை நோக்கி நகர்ந்து. அதனூடாக தங்களுடைய அடையாளத்தை நிறுவுகின்றார்கள். ஏனெனில் அப்போதிருந்த தமிழ் தலைமைகளுக்கு அது தேவையாக இருந்தது. இவர்களை தனித்துவமான இனமாகக் காட்டாமல் தங்களுக்கு கீழால் இருக்கின்ற உயர்த்தப்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினர் என்ற அடிப்படையிலே இஸ்லாமிய சமயத்தை பின்பற்றுகின்ற தமிழர்களை இவர்கள் தூய தமிழர்கள் அல்ல என்று புறந்தள்ளி விட்டு அவர்களுக்கும் சேர்த்து தாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்கான தந்திரமான விளையாட்டை செய்ய முற்படுகின்ற பொழுது தான் அப்போதிருந்த முஸ்லிம் புத்திஜீவிகள் தங்களை முஸ்லிம்களாக நிறுவி தங்களுடைய அடையாளத்தை சோனகர்களாகத்  தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் அவர்கள் தங்களை முஸ்லிம்களாவே முதன்மைப்படுத்தி  நிறுவினார்கள். தமிழர்கள் என்றால் தமிழ் பேசுகின்ற முஸ்லிம்கள் அல்லாத ஏனையவர்கள் என்றும் தமிழ் பேசுகின்ற முஸ்லிம்கள் சோனகர்கள் என்றும் பேசத் தொடங்கினார்கள், எழுதத் தொடங்கினார்கள். பதிவுகளையெல்லாம் இவ்வாறு தான் பதிவு செய்தார்கள். அரச பதிவுகளில் கூட இலங்கைத் தமிழர் என்றால் இலங்கை முஸ்லிம்களைக் குறிக்காது. முஸ்லிம்கள் அல்லாத ஏனைய தமிழ் பேசுகின்ற கிறித்தவ மற்றும் இந்து, நாத்திகர் உட்பட்ட ஏனையவர்கள். இந்திய வம்சாவழியினரை இந்தியத் தமிழர்கள் என்று இலங்கை அரசாங்க பதிவுகள் குறிப்பிடுகின்றன. புள்ளி விபரங்கள் அப்படித்தான் எடுக்கப்படுகின்றன. 

முஸ்லிம்களைப் பொறுத்த வரை இலங்கைச் சோனகர்கள் என்ற அடையாத்தை பிறப்பு பதிவு முதல் அவர்களுக்கு கொடுத்து வருகின்றார்கள். முஸ்லிம்களை தமிழர்களாக அரசாங்கத்தில் உத்தியோகபூர்வ பதிவுகள் இல்லை. இது சிங்கள அரசு திட்டமிட்டுச் செய்ததல்ல. தமிழர்கள் விதித்த அந்த நிர்ப்பந்தத்தின் ஊடாக முஸ்லிம்கள் தங்களைத் தனியாக அடையாளம் கண்டதன் விளைவாக தோன்றிய பிரிவு தானே தவிர முஸ்லிம்கள் தங்களை தனி அடையாளமாக முன்னுரிமைப் படுத்திக் கொண்டு, சர்வதேசத்துடன் இணைத்துக் கொண்டு என்று சொல்வதெல்லாம் பின்னர் வந்தவர்கள் கொடுக்கின்ற புதுமையான வியாக்கியானங்கள். அடிப்படைகளை மறந்து விட்டுத் தான் இவர்கள் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களை நீங்கள் வேறானவர்கள் என்று பிரித்துத் தள்ளிய வரலாற்றை மறந்து விட்டார்கள். அதை ஒதுக்கி விட்டு இப்பொழுது சிக்கல் வருகின்ற பொழுது முஸ்லிம் மக்களை நீங்கள் தமிழர்களாக உணர வேண்டும் என்று சொல்கின்ற நிலை காலம் கடந்து விட்டது. இஸ்லாத்தை பின்பற்றுகின்ற நபர் தன்னை தமிழன் என்று சொல்கின்ற பொழுது அவர் இஸ்லாத்தை விட்;டு வெளியில் சென்று விட்டவரைப் போன்று பார்க்கின்ற மனோநிலை உருவாகி விட்டது. அதை விதைத்தது யார் என்பதை இன்னும் உஙங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டுமா? எனவே காலம் கடந்திருக்கின்றது. ஆனால் இந்தியாவிலே தமிழ்நாட்டில் அந்தச் சூழல் இல்லை. கேரளாவில் இருக்கின்ற இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற ஒரு மலையாளி, தான் ஒரு மலையாளி என்பதில் தெளிவாக இருப்பான், ஒரு இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழ்நட்டுக்காரன், தான் ஒரு தமிழன் என்பதில் தெளிவாக இருப்பான். அங்கு கன்னடாவிலோ, தெலுங்கானாவிலோ, தமிழ்நாட்டிலோ, கேரளாவிலோ அந்தந்த மொழி பேசுகின்றவர்களை அந்தந்த மொழிக்கூடாகத் தான் அடையாளப்படுத்துகின்றார்கள், சமய ரீதியல் அவர்களை அடையாளப்படுத்தவில்லை. அந்த விடயம் இலங்கையில் பொய்த்துப் போயிருக்கின்றது. அதற்குரிய பொறுப்பை அப்போது முஸ்லிம்களை ஓரம் கட்டி விடுவதற்காக அவர்களுடைய தனித்துவத்தை வேறொரு அடையாளத்துக்குள் நீங்கள் உங்களை நிறுவிக் கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்தித்த தமிழ் தலைமைகள் ஏற்க வேண்டும். இது இப்படியே இருக்க இந்த விடயத்தை இந்தியத் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.


தமிழர் தேசியப் படையணி என்கின்ற அமைப்பு இந்தியப்படை வெளியேறுகின்ற பொழுது அமைக்கப்பட்ட உத்தியோகபூர்வ, அதிகாரம் கொடுக்கப்பட்ட, ஆயுதம் கொடுக்கப்பட்ட குழு என்பதை லஸ்மி சரவணக்குமார் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அந்தக் குழு முஸ்லிம்களுக்கு சாதகமாக செயற்படவில்லை என்பதையும் லஸ்மி சரவணக்குமார் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். வரலாற்று ஆவணங்களும், வரலாற்று நிகழ்வுகளும் அவற்றை உறுதிப்படுத்துகின்றன. 


ஓர் எழுத்தாளர் என்பவர் நியாயமாக உண்மையைப் பேசுகின்றவராகத்தான் இருக்க வேண்டும். ஓர் ஊடகவியளாலரும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் இன்று அப்படிப் பலர் இல்லை. அதனால்தான் உண்மைகள் போலிகளாக உருமாற்றம் பெற்று போலிகள் உண்மைகள் போன்று எங்கும் கூத்தாடித்திரிகின்றன. ஏனெனில் இது வரலாறு. இதை நாங்கள் நினைத்த மாதிரி எழுதி நிறுவி விட முடியாது. இதற்குச் சாட்சிகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசுகின்றார்கள். அந்த விடயங்களை நாங்கள் பதிவு செய்யாமல் தாம் நினைத்தபடி கருத்துக்களைக் கொண்டு இது தான் நடந்தது, இதுதான் வரலாறு, இது தான் உண்மை என்று நிறுவி விட முடியாது. 


ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதை மறந்து விட்டு முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அவர்களை வெளியேற்றியது, அவர்கள் அற்ற சுத்திகரிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணத்தை கனவு கண்டு வடமாகாணத்தை மட்டும் சாத்தியப்படுத்திக் கொண்டது இனச்சுத்திகரிப்பா இல்லையா? இது திட்டமிடப்பட்ட ஓர் இனத்தின் அடையாளத்தைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு செயற்பாடு. எனவே இதுவொரு இனச்சுத்திகரிப்பு. சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் இந்த விடயத்தை ஏற்றுக் கொள்கின்றார். மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். இதுவொரு இனச்சுத்திகரிப்பு தான். சட்டத்தரணி காண்டீபன் கூட இதனை இந்த விடயத்தை மிகவும் வெளிப்படையாகப் பேசுகின்றார். இந்த நியாயத்தன்மை ஏன் எழுத்தாளர்களிடம் இல்லாமல் போகின்றது?

இதுவொரு இனச்சுத்திகரிப்பு இல்லை என்று இவர் தனது முன்னுரையிலே சொல்கின்றார். மேலே நான் சொல்லியிருக்கின்ற கால அளவு அடிப்படையில் மிகவும் நுணுக்கமாகவும் கவனமாகவும் திட்டமிட்டு செய்யப்பட்டது. இந்த வெளியேற்றத்தை செய்து முடித்தவர்களுக்கு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் விருந்துபசாரம் நடைபெற்றதா இல்லையா? என்பதை விடுதலைப்புலிகளில் இருந்த உங்கள் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். (தீபச் செல்வனுக்கு இந்த இடத்தில் விளக்கு அளிக்கப்படுகின்றது. ஏனெனில் தனது தங்கையைப் புலிகள் பிடித்துச் சென்றாதாக புலிகளைச் சபித்துத் திரிந்தவர் யுத்தம் முடிந்த பின்னர் தனது தங்கை ஈழப்போருக்காக தன்னை அர்ப்பணித்தாள் என்று கதைவிட்டும் எழுதியும் திரிகின்ற கேஸ்)  

முஸ்லிம்களை வெளியேற்றியது அப்பட்டமான இனச்சுத்திகரிப்பு என்பதை தமிழ் மக்கள் அனைவரும் எழுத்தாளர்களும் சரி, அறிஞர்களும் சரி, புத்திஜீவிகளும் சரி மிக நியாயமாக ஏற்றுக் கொள்ளாத வரைக்கும் கடைசி யுத்தத்தில் நடந்தது இனஅழிப்பு என்பதை முஸ்லிம் தரப்பு ஏற்றுக் கொள்ளும் அல்லது நிறுவும் அல்லது அதற்கு ஆதரவாக நிற்கும் என ஒருக்காலும் எதிர் பார்க்க முடியாது. கடைசி யுத்தம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தமாக மாத்திரம் நடைபெறவில்லை என்பதை நான் வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கின்றேன். அதே போன்று கடைசி யுத்தம் இன அழிப்பு என்பதை வடமாகாண சபையிலே முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அவர்கள் தீர்மானமாக நிறைவேற்றிய பொழுது வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு வார்த்தையைக் கூட அவர் சேர்த்துக் கொள்ளவில்லை. சட்டத்தரணி பசீர் அவர்கள் தொடராக எழுதிய தனது கட்டுரையிலே அதை மிகத் தெளிவாக நிறுவியிருக்கின்றார். எனவே இத்தகையதொரு மாற்றாந்தாய் மனப்பாங்கோடு தமிழ் பேசுகின்ற முஸ்லிம்களை நீங்கள் கையாண்டுகொண்டே உங்களுடைய கட்டமைப்புக்குள் அவர்கள் வரவேண்டுமென எதிர்பார்ப்பதும் எந்த வகையில் நியாயமானதாகும்? ஆனாலும் முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் நியாயமான சிலரைத் தவிர பெரும்பான்மையானவர்கள் மௌனிகளாகக் கடந்து சென்றார்கள் என்பது தான் உண்மை. விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தான் சிலரின் வாய்கள் அசையத் தொடங்கின. விடுதலைப்புலிகள் அரசோச்சுகின்ற போது எதிர் முகாம்களில் இருந்த தமிழ் அன்பர்களால் தான் அவைகள் அநியாயமாக அல்லது இனச்சுத்திகரிப்பாக பதிவு செய்யப்பட்டது, அவர்கள்தான் இதுபற்றிப் பேசினார்கள் என்பதையும் நாங்கள் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனி ஜெப்னா பேக்கரி என்ற பொய்ப்புழுகு மூட்டை நாவலுக்கு வருவோம். கூடவே இருந்து நன்றாகப் பழகி விட்டு துரோகம் செய்கின்றவர்களாக முஸ்லிம்களை அவர் சித்தரிக்கின்றார். முஸ்லிம்களோடு நெருங்கி வாழ்ந்த தமிழ் மக்களுக்கு தெரியும் இந்த இயக்கங்களும் இயக்கத்தின் பிரச்சாரகர்களாக இருக்கின்ற நபர்களும் முஸ்லிம்களின் உதவிகளை எந்தளவுக்குத் தமக்குச் சாதகமாகப் பெற்றுப் பயனடைநதார்கள் என்று.

அடுத்ததாக 'பலதாரமணம்'. இதில் வருகின்ற ஒரு பாத்;திரம் மனைவியை வீட்டில் வைத்துக் கொண்டு இன்னொரு திருமணம் செய்து அந்த மனைவியையும் பிள்ளைகளையும் கொண்டு வந்து ஒரே இடத்தில் வைக்கின்றார். அதுவும் மிகவும் மோசமாக நிர்க்கதியான நிலைக்குள் இட்டுச்செல்பவர்களாக குறித்த பாத்;திரத்தின் ஊடாக அவர் சித்தரிக்கின்றார். அடுத்ததாக வியாபாரம். மணியத்தாரின் கடை இருக்கின்றது. அவரின் எதிர்க்கடை நசீமாவின் கடை. இந்த இடத்தில் அவர் சொல்கின்ற விடயம் 'என்ன தான் செய்தாலும் லாபம் தரும் வகையில் நசீமாவைப் போல் பொருட்களை பதுக்கி விற்பது மணியத்தாரால் முடியாமல் போய் விட்டது' இவ்வாறு முஸ்லிம்கள் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் என்று சித்தரித்துக் காட்டுகின்றார். 

இதே பின்னனியில் தான் இளையதம்பி தயானந்தா அவர்கள் சுனாமி நேரத்தில் வெக்டோன் தொலைக்காட்சியில் (2004இல் நான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்) மிக கவலையாக அவர் ஒரு விடயத்தை பேசினார். மய்யத்துகளைக் கபனிடுவதற்கு வெள்ளைத்துணிகள் இல்லாமல் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த கபன் துணிகளை முஸ்லிம் வியாபாரிகள் நல்ல விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார். அதே ஒளிபரப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் அதனை வன்மையாகக் கண்டித்து தாராளமாக கபன் துணிகள் இலவசமாக கிடைத்திருக்கின்றன என்ற விடயத்தைப் பதிவு செய்தார். 

இளையதம்பி தயானந்தா நாட்டை விட்டு தப்பிச் சென்றது, அவர் காப்பாற்றப்பட்டது, அவரை அறியாமலேயே முஸ்லிம்கள் அவருடைய உயிரைப் பாதுகாத்தமை எல்லாம் பெரிய கதை. இளையதம்பி தயானந்தா தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் அவர் எப்படி முஸ்லிம் அன்பர்களால் இந்த நாட்டில் பாதுகாக்கப்பட்டார் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். தயானந்தா வகையறாக்களின் தொடர்ச்சிதான் இக்கட்டான நிலையிலும் முஸ்லிம்களை வியாபாரப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றவர்களாகக் காட்ட முனைவது. ஆனால் வெற்றிச்செல்வியினுடைய கடைசி யுத்தம் பற்றிய பதிவுகளில் வெற்றிச் செல்வி சித்தரிக்கின்ற பல பாத்திரங்களையும் வாசு முருகவேல் போன்ற வகையறாக்கள் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விநயமான வேண்டுகோளையும் நான் இந்த இடத்திலே முன்வைக்கின்றேன். 

அடுத்ததாக 'உஸ்மானிய பல்கலைக்கழகம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி நக்கலாக அந்த விடயத்தைச் சொல்கின்றார். 'உஸ்மானியக் கல்லூரி' என்பது அந்த நேரத்திலே செயற்பட்டுக் கொண்டிருந்த மிக முக்கியமான அரசாங்கப் பாடசாலை. 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களே அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். கல்வியை அடைவதில் வசதிவாய்ப்புகள் அற்ற அப்பாடசாலையை 'பல்கலைக்கழகம்' என்று மாற்றி அச்சிறார்களை வயது கூடியவர்களாக்கி ஆயுததாரிகளாக்கி உங்களுடைய வக்கிரத்தைத் தீர்த்துக் கொண்டுள்ளமையை மிகத் தெளிவாக ஒரு நியாயமான வாசகனால் உணர்ந்து கொள்ள முடியுமாக இருக்கின்றது. 

அடுத்தது 'முஸ்லிம் ஆயுத இயக்கம்'. இந்த புரூடாவுக்கு மிகத் தெளிவான விளக்கத்தை பெயர் விபரங்களுடன் மேலே எழுதி இருக்கின்றேன் அதை மேலும் ஒரு முறை வாசித்துப் பார்க்கவும். இருப்பினும் சாவகச்சேரியிலே இடம்பெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக சாவகச்சேரியிலே பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கத்திலே சேர்ந்து முஸ்லிம் ஆயுதக் குழுக்களாக மாறினார்கள் என்பதை இந்த சம்பவத்தினூடாக நீங்கள் பதிவு செய்ய வருவதன் பின்னால் வெளியேற்றத்தின் போதும் அதற்கு முன்னரும் கைது செய்யப்பட்ட 32 இளைஞர்கள், பின்னால் கைது செய்யப்பட்ட முல்லைத்தீவு மற்றும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த 5 பேராக மொத்தம் 37 பேர்கள் ஐ.நா மனித உரிமை சபையில் காணாமல் போனவர்களாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அந்த விடயத்தை நீங்கள் இங்கு எவ்வாறு நிறுவ வருகின்றீர்கள் என்றால் இவர்கள் ஆயுத இயக்கங்களோடு சேர்ந்திருந்ததனால் தான் இவர்கள் புலிகளால் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் கொலை செய்யப்பட்டார்கள். ஏனெனில் கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பாக 2002 சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டின் போது இலங்கை 'நேத்ரா' அலைவரிசையைச் சேர்ந்த சகோதரர் யாக்கூப் அவர்கள் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள் 'கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இன்னும் உங்களுடைய கட்டுப்பாட்டிலா இருக்கின்றார்கள்?' என்று மிகவும் சங்கடப்பட்டு கேட்கிறார். அவருடைய கேள்வியிலேயே அவருடைய அச்சம் தெரிகின்றது. அவர்களை உயிரோடு வைத்திருக்கின்றீர்களா? கொன்று விட்டீர்களா? என்ற விடயத்தைத் தான் அவர் கேட்கின்றார். கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் உங்களுடைய ஆளுகைக்குள் இருக்கிறார்களா? இதற்கு தலைவர் பதில் சொன்னால் நல்லாயிருக்கும் என்று சொன்ன போது அன்டன் பாலசிங்கம் சொன்னார் தலைவர் சொன்னாலும் ஒன்று நான் சொன்னாலும் ஒன்று. அப்படி எந்த முஸ்லிம் இளைஞர்களும் எங்களுடைய தடுப்புக் காவலில் இல்லை'. அப்படியாயின் நாங்கள் அவர்களைக் கொன்று விட்டோம் என்று அவர் மிகத் தெளிவாகச் சொல்கின்றார். எனவே அப்படி கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட அந்த இளைஞர்கள் ஆயுத இயக்கங்களோடு தொடர்பு வைத்திருந்ததன் காரணமாகத் தான் கைது செய்யப்பட்டார்கள் என்கின்ற வகையில் இந்த ஆசாமி நிறுவ முயல்கின்றார்.

அடுத்தது ஆயுதம் கடத்துவதற்கு இவர் சொல்கின்ற வழிமுறை பஸ்ஸில் பெட்டியில் வைத்துக் கொண்டு வருவதாகவும்,ஈச்சம்பழ பையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு வருவதாகவும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஈச்சம்பழத்தின் பிசுபிசுப்பு இருந்ததாகவும். இது என்னவொரு மொக்குத்தனமான பேச்சு! ஆயுதம் கடத்துவதற்கு ஈச்சம்பழ பைக்குள் வைத்துக் கொண்டு பேக்கரியை வைத்துக் கொண்டு பேக்கரிக்கூடாக ஆயுத விநியோகம் நடந்ததாக சொல்கின்றார். நீங்கள் முன்வைக்கின்ற இந்த விடயம் ஒரு நகைப்புக்குரியதாகத் தெரியவில்லையா? அடுத்தது இராணுவப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த நபர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள். அவர்கள் தாடி வைத்திருந்தார்கள். முஸ்லிம் நபர்கள் வந்து பேசி இவர்களை இராணுவக்கட்டமைப்புக்குள் எடுக்கின்றார்கள் அதற்கு சிங்கள இராணுவம் அனுசரனை வழங்கியிருந்தது என்பது. (அதிகம் இந்தியத் திரைப்படங்களைப் பார்த்துக் கெட்டுப் போய்விட்டீர் போலும்)

நேரத்தில் தப்லீக் ஜமாஅத்தினர் சாதாரண இயக்கமாக இருந்தார்கள். எப்பொழுது ஜமாஅதே இஸ்லாமி இயக்கம் யாழ்ப்பாண மண்னுக்கு வந்ததோ அப்பொழுது தான் அங்கு பிரிவினைகளும் பிரச்சினைகளும் உருவாகத் தொடங்கின என்ற ஒரு வியடத்தை நீங்கள் பதிவு செய்திருக்கின்றீர்கள். இந்த இடத்திலும் நீங்கள் பிழை விடுகின்றீர்கள். அடுத்ததாக முஸ்லிம் இராணுவ அதிகாரிகள் பேரம் பேசல் என்ற விடயங்களையெல்லாம் மிகத் தெளிவாக நான் மேலே சொல்லி விட்டேன். அதுவே போதுமான விளக்கமாக இருக்கும் என்றும் நம்புகின்றேன் .

அடுத்து ஒரு முக்கியமான விடயம் இந்த இடத்தில் இவர் ஒரு முஸ்லிம் இயக்கத்தை பிரதிபலிக்கின்றார். அது சாவகச்சேரியிலே ஒரு முஸ்லிம் இயக்கம் இருக்கிறது. ஓர வீட்;டிலே அவர்கள் ஆயுதங்களை புதைத்து வைத்து அதனை விடுதலைப்புலிகள் இயக்கம் கண்டு பிடித்திருக்கின்றது. எனவே அதோடு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். அதோடு சம்பந்நதப்பட்ட 'அஜ்மல்' என்கின்ற பாத்திரம் 'சர்மி' என்கின்ற ஒரு பிள்ளையோடு தொடர்பில் இருக்கின்றான். அவனை அவள் மிக ஆழமாக நேசிக்கிறாள். ஆனால் அவன் அவளுக்கு துரோகம் செய்கின்றான். அவளுக்கு குண்டெறிகிறான் என்று மிகவும் மோசமான அடிப்பiயிலே அவர் 'அஜ்மல்' என்ற பாத்திரத்தை முன்வைக்கிறார். அதே நேரத்தில் மிக நுட்பமாக ஒரு அத்தியாயத்தை பாருங்கள். இந்த அத்தியாயத்திலே அவர் முஸ்லிம்களை பாலியல் பிசாசுகளாக, போதை மாத்திரைகள் பாவிப்பவர்களாகவும், பாலியல் வக்கிரம் உள்ளவர்களாகவும் கொண்டு வருகின்றார். அதே நேரத்தில் விடுதலைப்புலிகளை பெண்களோடு மிகவும் நிதானமாக நடந்து கொள்கின்றவர்களாகவும் இந்த நாவலிலே கட்டமைத்திருக்கின்றார்.

 முஸ்லிம் ஆயுத இயக்கம் என்கின்ற பொய்மைக்குள் 'அஜ்மல்' என்ற பாத்திரத்தைக் கொண்டு வந்து. அங்கே ஒரு இளைய பெண்னையும், ஒரு முதிய பெண்னையும் கட்டி வைக்கின்றார்கள். அப்போது அவன் ஒரு மாத்திரையை எடுத்து வாயிலே போட்டுக் கொண்டு அப்படியே வருகின்றான். இவன் சர்மியோடு சம்பந்தப்பட்ட இடங்களில் கூட இவர் இவனை போதை வஸ்துக்கு அடிமையான ஒருவனாக சித்திரிக்கின்றார். இது மிக முக்கியமாக விரிவாகப் பேசப்பட வேண்டிய வியடம். ஆனால் இதை இந்த இடத்தில் பேசுவதற்கு முனையவில்லை. அஜ்மல் என்கின்ற பாத்திரம் ஒரு மாத்திரையைப் போட்டுக் கொண்டு உள்ளே கட்டி வைக்கப்பட்ட பெண்ணுடன் தவறாக நடக்க நினைத்து தனது கலிசனைக் கழட்டி ஹோலிலேபோட்டு விட்டு ஜட்டியோடு அந்தப் பெண்னுக்கு முன்னால் வந்து நிற்க அந்தக் கிழவி அவனுடைய மார்பிலே பிடித்து உதைத்து தள்ளி விடுகின்றாள், காரித்துப்புகின்றாள். அவனுடைய ஜட்டியை விட அவனுடைய முகம் பார்க்க அருவருப்பாக இருந்தது என்ற அடிப்படையிலே ஒரு விடயத்தை சொல்கின்றார். 

அதற்கு மேலுள்ள பந்தியிலே அஜ்மலோடு நெருக்கமாக இருந்த சர்மியை புலிகள் விசாரனைக்குக் கொண்டு செல்கின்றார்கள். விடுதலைப்புலிகளின் பெண்கள் பிரிவிலிருந்து இரண்டு பெண்கள் வந்து மிகவும் கௌரவமாகப் பேசி விசாரனைக்கு அழைத்துச் செல்வதாகவும் அஜ்மல் குழு வீட்டுக்குள் புகுந்து அடாவடியாக அடித்து நொறுக்கி இரண்டு பெண்களை கட்டி இழுத்துக் கொண்டு சென்று ஒரு அறையிலே அடைத்து வைத்து விசாரித்ததாகவும், அடுத்த பந்தி அவர்களை அடித்து விட்டு ஒரு போதை மாத்திரையைப் போட்டுக் கொண்டு பாலியல் வல்லுறவுக்கு முயற்சி செய்ததாகவும், அதற்கடுத்த பந்தி தமிழ் விடுதலைப்புலிகளின் 'அருனன்' என்கின்றவரின் தலைமையில் நடந்த விசாரனையில் அருனன் எவ்வளவு கௌரவமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்கின்றார் என்பதையும் வலியுறுத்திச் சொல்லிவிட்டு அடுத்த பந்தியிலே அஜ்மல் வெளியே சென்று விட்டான். அஜ்மலோடு பொறுப்பாக இருந்த வயது முதிர்ந்த 'அசன் அலி' அந்த இடத்திலே பொறுப்பாக இருக்கின்றார். பின் அசன் அலி அந்த இரண்டு பெண்களின் கைகளையும் கட்டி கட்டிலில் வைத்து வன்புணர்வு செய்து விட்டதாக சொல்கிறார். இப்படி மிக மோசமாக ஒரு சமுதாயத்தைக் கேவலமாகத் திட்டமிட்டு எழுத வக்கிரமாக முகவராக வேலை செய்கின்ற ஒரு கைக்கூலியினால் மட்டுமே முடியும். அந்த வேலையைத் தான் வாசு முருகவேல் செய்திருக்கிறார். பாலியல் பிசாசுகளாகவும் போதைக்கு அடிமையானவர்களாகவும் இந்த அத்தியாயத்திலே வருகின்ற பந்திகளுக்கூடாக அவர் நிறுவ முயல்கின்றார். இப்படியொரு விசாரனையோ, கட்டி வைத்து சித்திரவதையோ, அடக்குமுறையோ யாழ்ப்பாணச் சூழலில் முஸ்லிம்களால் நடாத்தப்படவில்லை. 

அடுத்ததாக தமிழர்கள் நல்ல மனதோடு செய்த எல்லா உதவி ஒத்தாசைகளையும் முஸ்லிம்கள் சுயநலனுக்காகவே பயண்படுத்துகின்றார்கள் என்ற விடயத்தை இந்த நாவலில் அவர் முன்வைக்கின்றார். தையல்மிசின் போட்டுக் கொடுத்த ஒரு பாத்திரம். அவர் சொல்கின்ற வார்த்தை 'நாம எல்லாம் நல்லது நடக்குமென்று நினச்சி தான செய்ரம்| என்பது மாதிரி இவர் இந்த நாவலிலே சொல்கின்றார். இப்படி சாதாரணமாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் உள்ள பழக்கவழக்கம், அந்நியோன்னியம். ஏனெனில் வடக்கிலுள்ள முஸ்லிம்கள் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பொழுது முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் தாங்கள் நம்பியிருந்த தமிழ் மக்களிடம் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒப்படைத்த பல்வேறு பொருட்களை அவர்கள் திருப்பி ஒப்படைத்தார்கள். அதே போன்று 1983 கலவரம் நடந்த போது கொழும்பிலுள்ள பெரும்பான்மையான தமிழர்களை முஸ்லிம்கள் பாதுகாத்தார்கள். அவர்கள் அமானிதமாக கொடுத்த பல பொருட்களை பின்னர் அவர்கள் தமிழர்களிடம் ஒப்படைத்தார்கள். 

அடுத்தது வெளியேற்றத்தின் போது நிறையப் பொருட்களை எடுத்துச் செல்ல புலிகள் அனுமதித்தார்கள். போக்குவரத்து ஒழுங்குகளை இயக்கம் செய்தது என்பது இட்டுக்கட்டப்பட்ட பொய். வெளியேற்றப்பட்ட ஒரு முஸ்லிமையாவது கொண்டு வந்து நிறுத்தட்டும்.

தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவர்களுக்கும் தமிழ் பேசுகின்ற இந்துக்களுக்கும் இடையில் பிணக்கு ஏற்படாமல் இருக்க தந்திரமாக ஒரு விடயத்தை கொண்டு வருகின்றார். அதாவது இராணுவத்துக்கு கைக்கூலிகளாக இருந்த அஜ்மலையும் இன்னொரு நபரையும் கிறிஸ்தவ பாதிரி ஒருவர் தன்னுடைய வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அவர் மனித உயிர்களாக மட்டும் தான் மதிக்கிறார். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எல்லா உயிர்களையும் உயிர்களாகத் தான் மதிக்கிறோம் என்ற அடிப்படையில் புலிகளின் பாதுகாப்பு இறுக்கமான அந்தக் கட்டமைப்பிலிருந்து ரகசியமாக தன்னுடைய வாகனத்தில் ஏற்றி வெளியில் கொண்டு சென்று விடுவதாக சொல்கிறார்.(இராணுவப் பார்வையில் இது தேசத் துரோகம். இத்தகு துரோகம் செய்த பாதிரிகளை புலிகள் கடைசி வரையும் கண்டுபிடிக்கவே இல்லீங்களா சாமி).  ஆனால் தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவர்கள் இயக்கத்துக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. முஸ்லிம்கள் மாத்திரம் தான் பிரச்சினையாக இருந்தார்கள் என்றும் அந்த பாதிரி என்ற பாத்திரத்தை கொண்டு வந்து அவர் நிறுவ முயல்கின்றார். இது என்ன விதமான மனோநிலை என்று என்னால் எழுத முடியவில்லை. ஏனெனில் இதை எழுதுவதற்கு நாகரீகமான வார்த்தைகள் தமிழில் எனக்கு கிடைக்காது. அதனால் இந்த மனநோயாளியைப் பற்றியும் அவரது  வக்கிரமான மனோநிலை பற்றியும் நான் எழுத விரும்பவில்லை. 

மொத்தத்தில் 'ஜெப்னா பேக்கரி' வாசு முருகவேல் என்கின்ற மனநோயாளி எழுதிய ஒரு நாவல். இந்த நாவலுடைய மொழி, கட்டமைப்பு, வடிவமைப்பு இவற்றைப் பற்றி நான் பேச வரவில்லை. ஏனெனில் யாழ்ப்பாணத்து பேச்சுத்தமிழிலே இந்த நாவலை எழுதியிருக்கின்றார். அது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் மொழிநடைக்கும் சம்பந்தமில்லாத சித்தரிப்புகளுக்கும் விபரிப்புகளுக்குமாக வாசிக்க முடியாமல் அலுப்புத் தட்டி தூக்கி வீசிவிடக்கூடிய ஒரு நிலை தோன்றியிருக்கும். வாசிப்பு என்பது ஒரு சுக அனுபவம். யோகர்னனின் 'தேவதைகளின் தீட்டுத்துணி' என்ற நூல் எனக்கு கிடைத்தது. ஆனால் இன்னும் நான் அதை வாசிக்கவில்லை. காரணம் அதனுடைய எழுத்துரு மற்றும் லேஅவுட் அவ்வளவு அலுப்புத் தரக்கூடியதாக, மோசமாக இருந்தது. அதனால் அந்தக் குறுநாவலை நான் இன்னுமே வாசிக்கவில்லை.ஷ

ஜப்னாபேக்கரி மிக மோசமான, அலுப்புத் தரக்கூடிய, சம்பந்தமில்லாத, கவர்ச்சிகரமற்ற இந்த நடையின் காரணமாக உண்மையிலேயே வாசிக்க முடியாது. இருந்தாலும் வாசு நீர் கடைந்தெடுத்த பொய்களை அவிழ்த்து விடுகின்ற பொழுது அவற்றை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. மிகுந்த சிரமத்தோடு குறிப்பாக எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகக் கொடூரமான தண்டனைகளில் ஒன்றாக உங்களுடைய புத்தகத்தை வாசிக்க நேர்ந்ததை நான் நினைத்துக் கொள்கின்றேன். ஏனெனில் எனது வாழ்க்கையில் இதற்கு முதல் வாசிப்புத் தளத்தில் கிடைத்த மிக மோசமான தண்டனையாக அனாருடைய கவிதைகளை வாசிக்க நேர்ந்ததை நான் நினைத்துக் கொள்கிறேன். அதற்குப் பிறகு வாசிப்பு உலகத்திலே கிடைத்த அடுத்த பெரும் தண்டனையாக உங்களுடைய எழுத்துக்களை வாசிக்க கிடைத்ததை நினைக்கிறேன

நீங்கள், தீபச்செல்வன் வகையறாக்கள் தொடர்ந்து எழுத வேண்டுமென்று முன்னுரையிலே லஸ்மி சரவணக்குமார் சொல்லியிருப்பது போன்று நீங்கள் எல்லோரும் எழுதாமல் இருப்பது தான் எதிர்காலத்திலே இந்த சமூகத்துக்குச் செய்கின்ற நன்மையாகவும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கிடையே இருக்கின்ற நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துகின்ற செயற்பாடாகவும் அமையும். எனவே தயவுசெய்து இதன் பிறகு நீங்கள் எதையும் எழுதி விடாதீர்கள். ஒரு நல்ல மனவள வைத்தியராகப் பார்த்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முகவராக வேலை செய்பவராக இருந்தால் வேறு வேறு துறையைச் தேர்வு செய்து விட்டு அமைதியாக உங்கள் வருமானத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து இலக்கியம் என்ற பெயரில் எழுதுவதற்கு வெளிவர வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த மறத்தல், மன்னித்தல் என்பது பரஸ்பரம் கொள்ள வேண்டும். பரஸ்பரம் அதை மேற்கொள்கின்ற பொழுது தான் அடுத்த சந்ததிக்கு ஒரு அமைதியான சூழலை நாம் கையளிக்க முடியும். இல்லாவிட்டால் நாம் அடுத்த சந்ததிக்கு விட்டுச்செல்வது வன்மம் நிறைந்த, முரண்பாடுகள் நிறைந்த, மனக்கசப்புகள் நிறைந்த, ஒருவரோடு ஒருவர் அந்நியோன்னியமாக பழக முடியாத, எதிரிகளாகப் பார்க்கின்ற ஒரு காலத்தைத் தான். எனவே எவ்வாறான எதிர்காலத்தை நாம் நமது சந்ததிக்கு கையளிக்கப் போகிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். குறிப்பாக எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியாலாளர்கள் பரஸ்பரம் முதுகு சொரிதல், சேலைக்கு மேலால் சொரிதல் என்ற நிலையை விட்டு விட்டு, உண்மையை உண்மையாக, நேர்மையை நேர்மையாக, தெளிவாகப் பேசுவோம். புரிதலற்ற விடயங்களில் புரிதிலுள்ள தெளிவான நிரூபிக்கப்பட்ட விடயங்கள் வருகின்ற போது ஏற்றுக் கொள்வோம். 

எனவே இந்த இடத்திலே எல்லா விடயங்களுக்கும் அப்பால் முஸ்லிம்களுடைய ஒத்துழைப்போடு அல்லது முஸ்லிம்கள் தரப்பால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எல்லாவிதமான அநீதமிகு செயற்பாடுகளுக்காகவும் முஸ்லிம் சமூகம் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். தவறுகள் சிலபோது நிகழ்ந்தே இருக்கின்றன என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஒரு எழுத்தாளனாக அல்லது ஒரு ஊடகவியலாளனாக நியாயமானவனாக என்னால் இதைச் செய்ய முடியுமாக இருக்கின்றது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இத்துடன் தொடர்ந்து கருத்தாடல் செய்வோம். 



No comments:

Post a Comment