Friday, January 19, 2018

புரவலர் ஹாஸிம் உமரும் அவரது விருந்துகளும்.

புரவலர் ஹாஸிம் உமரும் அவரது விருந்துகளும்.
சகிக்க முடியாத சில குறிப்புகள் - 01

புரவலர் ஹாஸிம் உமர் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆயினும் சில விடயங்களை எனது அனுபவக் குறிப்புகளோடு இணைத்து எழுத நினைக்கின்றேன்.

ஹாஸிம் உமர் என்ற பெயர் எனக்குப் பத்திரிகை வாயிலாகவே முதன் முதலில் தெரிய வந்தது. அப்போது நான் சாதாரண தர மாணவனாக மள்வானையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம். ஹாஸிம் உமர்பற்றி அடிக்கடி பத்திரிகையில் படங்கள் வரத்தொடங்கின. சில நாட்களில் அவரது படம் வராத பத்திரிகையே கிடையாது. அப்போதுதான் அவர் குறித்து தேடத் தெடங்கியிருந்தேன். அந்நேரம் நான் ஜாமியா நளீமிய்யாவில் உயர்தரத்தில் பயின்றுகொண்டிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த பதில் அவர் ஒரு கப்பலின் சொந்தக்காரர் சூர்யா அவருடைய நிறுவனம்தான். பின்னர் 2003 செப்தம்பர் 29 என்று நினைக்கின்றேன் மருதானை ஸாஹிராக் கல்லூரியில் இடம்பெற்ற 'காற்றுச் சுமந்துவரும் கனவுகள்' பாடல் அல்பம் வெளியீட்டு விழாவில் அவரை நேரில் கண்டேன். கைகுலுக்கிச் சலாமும் சொன்னேன். அதுதான் அவருடனான எனது முதல் சந்திப்பும் கூட ஐந்து செக்கன்கள் இருக்கும் அவ்வளவுதான். பின்னர் நிகழ்வுகள் இடம்பெறத் தொடங்கிய போது அவரைப் பற்றி மிக மோசமான ஒரு கருத்தை பின்னால் இருந்த ஒருவர் தனது நண்பருடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் ஒரு புகழ்விரும்பி என்பதுதான் அதன் சாரம்சம்.

சகிக்கமுடியாத குறிப்பு -01

மேலே சொன்ன அந்த நபர் பிற்காலத்தில் எனக்கும் மிக அறிமுகமுhன ஒருவராக மாறி இருந்தார். இப்போதும் அவர் அப்படித்தான் இருக்கின்றார். என்னைக் கண்டால் ஆரத்தழுவிச் சிரிப்பார். அப்போதெல்லாம் அவர் புரவலர் பற்றிச் சொன்ன அந்த மோசமான கருத்தும் அழுத்தமான வாசகமும் எனக்குப் பட்டென்று ஞாபகம் வந்துவிடும்.  பின்னொருநாளில் ஹாசிம் உமர் அவர்கள் அளித்த விருந்தொன்றில் குறிப்பிட்ட அந்நபரும் கலந்துகொண்டிருந்தார். எனக்கு அவரை அங்கு கண்டது ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பினேன் அதை அவரிடமே வெளிப்படுத்தினேன். கேளுங்கள் என்றார் ஒன்றல்ல இரண்டு என்றேன் 'நீங்கதான் வில்லங்கமான ஆள் ஆச்சே கேளுங்க' என்றார். அதற்கு மேலும் தாமதிக்காமல் அவரிடம் முதலாவது கேள்வியைத் தொடுத்தேன்.

கேள்வி 01: புரவலருக்கும் உங்களுக்குமிடையில் எந்தளவுக்கு நெருக்கம் இருக்கின்றது?
பதில் : இப்படி நெருக்கம் இருக்கின்றது (இரு கைவிரல்களையும் ஒன்றாகப் பிணைத்துக் காட்டினார்), ஹஹ்ஹஹா (என்று சிரிப்பு வேறு)

கேள்வி 02: புரலர் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? 
பதில் : நல்ல மனிசன் எங்களைப் போன்ற மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர்
இன்னும் இரண்டு கேள்விகள் கேட்கட்டுமா என்றேன்

என்னவாப்பா இது விருந்துக்கு வந்த இடத்துவ இன்டர்விவ்வா, கேட்காம உடமாட்டிங்களே கேளுங்க என்றதும்

கேள்வி 03: 2003இல் சாஹிராக் கல்லூரியில் காற்றுச் சுமந்துவரும் கனவுகள் வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொண்டது !hபகமிருக்கா?
பதில் : ம்...ம்...ஹ்...ஹா...(பிறவி யோசிக்கிறார்...பின்னர்) ஹா பாட்டு சீடி ஞாபகமிருக்கு

கேள்வி 04: அதில் எனக்குப் பின்னால் இருந்து புரவலர் பற்றி உங்களுக்குப் பக்கத்தில் இருந்தவரிடம் நீங்கள் கருத்து ஞாபகமிருக்கா?
பதில்: ... (அவரின் முகம் மாறி இருந்தது. ... கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னார்) இல்லியே ஞாபகமில்லியே என்னசொன்னேன்?
இப்போது உங்கள் கேள்விக்கான பதில் ஒன்றுதான் நீங்கள் என்ன பேசினீர்கள் என்பது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கின்றது, ஒரு போதும் அதை மறக்க முடியாது, சரி சரி விருந்தை என்ஜோய் பண்ணுங்க என்று கூறிவிட்டு நான் புரவலரின் அருகே சென்று ஒரு ஜோக் அடித்துவிட்டு எல்லோரும் சேர்ந்து சிரித்தோம்.

அதன் பின்னர் அவர் அவருக்கு சாப்பாடு எங்கே இறங்கி இருக்கப் போகின்றது. விருந்து முடிந்து எப்போது அவர் அங்கிருந்து கிளம்பினார் என்பது தெரியாது, அதன் பிறகு அவர் என்னைச் சந்தித்தால் ஒரு கள்ளச் சிரிப்புடன் கடந்து செல்லவே முயல்வார் நான் விட்டால்தானே, பின்னரும் பின்னரும் புரவலர் அந்நபரை விருந்துக்கு அழைத்தார் அவரும் வருவார் அதிலிருந்து அவருக்கு ஒரு உண்மை தெரிந்திருக்கும் நான் அவரைப் பற்றி எதையுமே போட்டுக் கொடுக்கவில்லை என்று. (போட்டுக் கொடுக்கும் பண்பு நம்மிடம் ஒரு போதும் இருப்பதில்லையே) 

கடைசியாக இரண்டாரு நாட்களுக்கு முன்னரும் அவரைச் சந்தித்தேன் அப்போது அவர் என்னை முன்னயமாதிரி நெருங்கி ஆரத் தழுவி 'யூ ஆர் கிரேட் பேர்சென்' என்றுவிட்டு 'என்னை மன்னிச்சிடுங்க,' என்றார். அப்போதும் புன்னகை மாறாமல் அவரிடம் சொன்னேன் 'நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டியது என்னிடமல்ல புரவலரிடம்,' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன். 
சில வேளை ஹாசிம் உமர் அவர்கள் எனக்கு நெருக்கமானவராக மாறி இருக்காவிட்டால் அவர் போட்ட அந்தத் தப்பான கருத்தோடு நானும் பலருக்கும் அவரை அறிமுகப் படுத்தி இருக்கக் கூடும். அல்லது அந்தப் புரிதலோடே எனது காலத்தைக் கடத்தி இருக்கவும் கூடும். இது குறித்து இன்னும் ஒரு சமரி சொல்ல வேண்டும் அதைக் கடைசியில் சொல்கின்றேன்

கருத்துப் பறிமாறல் செய்கின்றவர்கள் சுற்றிஇருப்பவர்களைப் பற்றிய எந்தவிதமான பிரக்ஞையுமின்றி தமது மனதில் பட்டதை அப்படியே கக்கிவிடுவர் அது விசமாக இருந்தாலும் கூட, அத்தோடு அவர்கள் அதை மறந்தும் விடுவர், அதன் தாக்கம் பிறரில் எந்தளவுக்கு இருக்கும் என்பதை அறிவதுமில்லை உணர்வதுமில்லை. குறிப்பாக ஊடக இலக்கிய நண்பர்கள். 

இது போன்ற பல்வேறு நபர்கள் குறித்தவிடயங்களை எழுதுவது ஒருவகையில் நமது நண்பர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடும் அல்லது அல்லது அவர்களது கசடான பக்கத்தை அவர்களுக்கு காண்பிக்கக் கூடும். முடிந்தவரை நாகரீகமாக எழுத முனைகின்றேன். அதற்கு ஒரேயொரு காரணந்தான் அவர்கள் மாற வேண்டும் முகஸ்துதியை மறக்க வேண்டும். சில தகவல்களைச் சொல்லிச் செல்லும் போது அது இன்னார்தான் என்று புத்திசாலிகள் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. முடிந்தவரை நேரடியாக அத்தகையவர்களது அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவே விரும்புகின்றேன். இது போன்ற ஒரு டஜன் கதை இருக்கின்றது அவை ஹாஸிம் உமர் என்ற மனிதனைப் புரிந்து கொள்ள உதவும்.
தொடரும்...

No comments:

Post a Comment