Thursday, October 30, 2014

தீரன் என்ற சைலன்ட் டெரர்


இலக்கிய உலகம் எத்தனையோ படைப்பாளிகளைக் கண்டுவிட்டது. பம்மாத்துக்காட்டிப் பீத்தித் திரியும் பன்னிக் குட்டிகளையும், திருட்டு ஆசாமிகளையும், வீர வசனமும் கோட்பாடுகளும் பேசித்திரியும் போதகர்களையும், அவிழ்த்துப்போட்டு நிர்வானமாய் உடலை வர்ணித்து ஆபாசமாய் எழுதிப் புகழ்பெறும் பெண்ணியக் குஞ்சுகளையும், முதுகு சொரிந்தே விரல் தேய்ந்து ஊராப்பட்ட வலிசல்களையெல்லாம் ஒன்று திரட்டி பட்டமும் சேலையும் போர்த்தி தனிமரமாகும் அச்சத்தில் தோப்பு செய்து குறளி வித்தை காட்டும் வித்துவர்களையும், முகாம் அமைத்து பேத்தைக் குட்டிகள் போல தம்மைப் பெரியவர்களாகக் காட்டும் அற்பர்களையும் அப்பப்பா... இது போல இன்னும் பல.. முடியல 
இது இப்படியே இருக்க,

வீரியமிக்க வாசிப்பு, ஆழமான பார்வை, தேடிப்படித்தும் போதாமையை உணர்ந்து தம்மைச் சிற்றெறும்பாய் உணர்ந்து காரியமாற்றுகின்ற, பேரையும் புகழையும் பாராட்டையும் எதிர்பார்க்காமல் அமைதியாகப் படைப்பிலக்கியத்தில் ஆழம் தேடிப் பாய்கின்ற பெரு நதிகளும் தன்பாட்டில் சலசலப்பில்லாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அவை யாருடைய பார்வையிலும் உருத்திக் கொண்டிருப்பதில்லை. ஓர் அழகிய சித்திரம் போல ஈர்க்கும் தன்மையோடு காலாகாலத்திற்கும் மொனாலிசா மாதிரி நின்று நிலைக்கும்.

என்.ஏ. தீரன் - இது ஒரு புது வகையரா.
எனக்குத் தீரனை அறிமுகப்படுத்தியது  முஸ்லிம் குரல் பத்திரிகையில் வெளிவந்த பள்ளிமுனைக் கிராமத்தின் கதை என்ற தலைப்பில் தொடராக வந்த நாவல்தான். அதில் ஒரு அத்தியாயம்கூட மிஸ் ஆகிவிடக்கூடாது என்ற தீவிரத்துடன் நான் படித்துவிட்டு அதை அப்படியே கிழித்து சேமித்து வைக்கும் அளவுக்கு ஈர்க்கச் செய்தவர் என்.ஏ.தீரன் என்ற ஆர்.எம். நௌசாத் 

மிக அண்மையில் மீண்டும் ஞானம் சஞ்சிகையில் புத்தளத்தைச் சேர்ந்த பரோபகாரி ஒருவர் எனது ஹராங்குட்டி என்ற சிறுகதைத் தொகுதி மீதான விமர்சனத்தை சிறுபிள்ளைத் தனமாக முன் வைக்க, அதற்கு நானும் ஒரு பீரங்கி வேட்டுத் தீர்க்க, இன்னும் பலரும் பலதும் எழுத, இப்படியே நான்கு மாதங்களாகிவிட்டது. அந்தத் தடுமல் பற்றி யாராவது ஏதாவது எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதன் பயனாய் விளைந்ததுதான் இவரின் நேரடித் தொடர்பு. அவராகவே பேசிய போது அதுவோர் இன்ப அதிர்ச்சிதானே. நாம் முகம் காணாமல் நேசித்த படைப்பாளிகள் நம்மோடு தொடர்புகொள்ளும் போது அப்படியொரு பேரின்பத்தை அனுபவிப்பது வாஸ்தவம்தானே.
இது போல பலரது தொடர்பையும் எனக்கு ஏற்படுத்தித் தந்த புத்தளத்துப் பரோபகாரிக்கு எனது நன்றிகள்.

அறிந்திருப்பதும் அறிமுகமாகிக் கொள்வதும் பின்னர் நண்பராக உறவாக குடும்பமாக இறுகி உணர்வதும் நடத்தையின்பால் விளையும் நேசத்தின் பிரதிபலிப்புக்களே, அப்படித்தான் என்னைவிட 23 வருடங்கள் மூத்த எனது தந்தையின் வயதையொத்த ஆர்.எம்.நௌசாத் அவர்களின் தொடர்பும் எதிர்பார்ப்புகளில்லாத அன்பினால் அடைப்புக்குறியிடப்பட்டுத் தொடர்கின்றது. 

அடெல்ஸ் ஒன்லி  என்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் எனச் சிறிதாகப் பொறிக்கப்பட்டு நான்கெழுத்து விளக்கங்களுடனும் கவர்ச்சிப்படத்துடனும் அடிக்கடி ஒட்டப்பட்டுக் கிழிக்கப்படும், கள்ளப் பார்வைகளுக்கு மட்டும் தீனியாகும் நீலப்படப் போஸ்டர்கள் போல, சிலரின்  இலக்கியமும் சில இலக்கியவாதிகளும் தொங்கிக் கொண்டிருக்கும் முகநூல் சுவர்களில் கூட இவர் இன்னும் ஒட்டப்படவில்லை. அபோகலிப்டா, அவதார், ப்ளக், கலர் ஒப் பெரடைஸ் போன்ற கருத்தியல், வசூல், தொழிநுட்பப் பிரமாண்டம், அழகியல், ஆகர்சனமிக்க படங்களுக்கான போஸ்டர்கள் போலும் தரமான படைப்பும் படைப்பிலக்கியவாதியும்  முகநூல் சுவர்களில் தொங்காமலில்லை.

எந்த முகாமுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் பயணித்துக் கொண்டிருப்பவர். இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுதியையும் தந்திருப்பவர். சோளப் பொறி போல கொஞ்சோண்டு எண்ணெய்யில் பொரிந்து ஊதிப் பெருத்து வெண்மை காட்டி பார்வையைக் கவர்ந்து பின்னர் கொஞ்ச நேரத்தில் காற்றேறி ஜவ்வாகி எதற்கும் பிரயோசனப்படாது குப்பைத் தொட்டியைத் தஞ்சமடையும் துரதிஸ்டத்திலிருந்து பல காத தூரம் தள்ளியிருந்து தப்பித்து வாழும் ஓர் எளிமையான படைப்பிலக்கியவாதி. யாருடைய சிபாரிசும் பரிந்துரையும் சேர்டிபிகட்டும் இல்லாமலேயே காலச்சுவடு பதிப்பகம் இவரது மூன்று நூல்களைப் பதிப்பித்து இருக்கின்றது. 

காலச்சுவட்டின் பதிப்பு நேர்த்தியும் வாசகர் வட்டமும் கவனம் பெறுபவை. சுந்தர ராமசாமி என்ற ஆளுமைதான் காலச்சுவட்டின் ட்ரேட் முத்திரை, தரச் சான்றிதழ் என்பது எனது அவதானம். சுந்தர ராமசாமியின் நினைவாக நடாத்தப்பட்ட நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றதுதான் நட்டுமை. பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்புதான் வெள்ளிவிரல், இவை வெளிவந்த பின்னர் நௌஸாத்தின் புத்தகங்களை ஏன் பதிப்பித்தீர்கள் என்று கேள்வி கேட்டு கண்ணனுக்கு நிச்சயம் இங்கிருந்து கடிதம் போயிருக்க வேண்டும். அல்லது அவரைப் பற்றிக் கண்ணனிடம் தாறுமாறாக மோசமான தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் பிரதேச இலக்கியப் பொம்மைகளால் இவை மேற்கொள்ளப்பட்டிருக்கும். அப்படி நடந்ததா இல்லையா என்பதைக் காலச்சுவடு கண்ணன்தான் தெளிவுறுத்த வேண்டும். ஏனெனில் இங்குள்ள சில முக்கிய புள்ளிகளின் இரத்தத்தில் ஊறிப் போய் நாய் வாலைப் போல நிமிர்த்திட முடியாத பண்பு அது. ஆயினும் காலச்சுவடு இதெற்கெல்லாம் ஆட்டம்கண்டு முடிவெடுக்கும் வக்கற்ற கூனல் நிலையில் இல்லையென்பதும் எனது அவதானம். 

அண்மையில் கண்ணன் அவர்கள் வருகை தந்த போது பல்வேறு குழுக்களைச் சந்தித்துவிட்டுச் சென்றதாக அறிந்தேன் நௌஸாதையஉம் சோலைக் கிளியையும் சந்திக்க அவர் விரும்பியிருக்கக் கூடும் ஆயினும் அது நிறைவேறியிருக்காது என்று நம்புகின்றேன். இதனால்தான் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் தொடர்ந்த சந்திப்பில் முக்கால்வாசி என்னைக் கதைக்க வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். விடைபெறும் போது அவரது நட்டுமை, வெள்ளிவிரல், கொல்வதெழுதுதல் 90 ஆகிய மூன்று புத்தகங்களையும் அன்பளிப்புச் செய்தார். அன்றைய பிராயாணத்திலேயே கொல்வதெழுதுதல் 90 நாவலைப்படித்து முடித்துவிட்டேன், அத்துடன் பாதிச் சிறுகதைகளையும் கூட,

கொல்வதெழுதுதல்90

ஏற்கனவே பள்ளிமுனைக் கிராமத்தின் கதை என்ற பெயரில் முஸ்லிம் குரலில் படித்ததற்கும் இப்போது புத்தகமாகப் படித்ததற்கும் நிறைய வேறுபாடுகளை உணர முடியுமாக இருந்தது. கதையிலும் கூட மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. பார்த்துப் பார்த்துச் செதுக்கிச் சிற்பமாக்கி இருக்கின்றார் என்பதை முதலிரு அத்தியாயங்களைத் தாண்டும் முன்னரே புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது. பள்ளிமுனைக் கிராமத்தின் கதை ஏன் கொல்வதெழுதல்90 ஆக மாறிப் போனது என்று தெரியவில்லை, செழுமை பெற்ற படைப்புக்கு என்ன பெயர் வைத்தால்தான் என்ன!
ஆரம்பித்தவுடன் முழுமையாகப் படித்துவிட்டே மூட வைக்கும் எழுத்துக்கள் இப்போதெல்லாம் வெகு குறைவு அண்மையில் வாசித்த புத்தகக் குவியவில் மனதில் நிற்பது அஷ்ரப் சிஹாப்தீனின் ஒரு குடம் கண்ணீர் மற்றும் தீர்க்கவர்ணம், சோலைக்கிளியின் பொன்னாலே புழுதி பறந்த பூமி, யோகர்ணணின் சேகுவேரா இருந்த வீடு, நாச்சியாதீவு பர்வீனின் பேனாவால் பேசுகின்றேன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மொழிபெயர்த்த அல்லாமா இக்பாலின் ஜவாபே ஷிக்வா ஜவாபே, சுதாராஜின் மனைவி மகாத்மியம், ஹாமித் அன்சாரியின் எழுச்சியின் சரிதை ஆகியவைகள்தான். இவற்றின் ஈர்ப்பு இன்னும் மனதில் இருக்கிறது. அது போன்றதொரு அலாதி வாசிப்பனுபவத்தை ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல்90 உம், வெள்ளிவிரலும் தந்தன. அதிலும் கொல்வதெழுதுதல்90 அலாதி. 

ஒரு கதையினதோ அல்லது நாவலினதோ வெற்றியில் பங்காற்றும் முக்கிய விடயம் பாத்திரங்கள் மனதில் பதிந்து போவது, பாடசாலைக்காலத்தில் படித்த வைரமுத்துவின் 'வானம் தொட்டுவிடும் தூரம்தான்' நாவலில் வரும் அம்சவள்ளியும் வாஞ்சிநாதனும் இன்னும் மனதில் அப்படியே அதே செழுமையுடன் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட பாத்திரப்படைப்பினை கொல்வதெழுதுதல் 90 இல் முத்து முகமதுவும், மைம்னாவும், தலைவரும், சப்பு சுல்தானும் பெற்றுவிடுகின்றார்கள். 

முத்துமுகம்மது மீது நமக்கேற்படும் பரிதாபமும் பிடிப்பும் மைம்னாவின் மீதேற்படும் கழிவிரக்கமும் தலைவர் மீதேற்படும் மரியாதையும் சப்பு சுல்தான் மீதேற்படும் பொல்லாத கோபமும் நாலலை வெற்றியடைச் செய்துவிடுகின்றது. ஊர்ப்பாசை அப்படியே நம்மை அந்த மண்ணுக்குள்ளேயே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது. தென்னிலங்கைச் சமுகம் அந்தப் பேச்சுவழக்கில் பரிச்சயமற்றுத் தள்ளிநிற்க முயன்றாலும் கதை வளர்ந்து செல்லும் பாங்கு அப்படியே கட்டிப்போட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை. சமுகத்தளத்தில் அப்போது மட்டுமல்ல இப்போதும் புரையோடிப் போய் நின்று மிரட்டிப் பார்க்கும் பல பிரச்சினைகளை இலாவகமாக நகர்த்திச் சென்று ஆங்காங்கே போடப்படும் முடிச்சு அவிழ்க்கப்படும் வரை நமக்குள் பரவும் பரவசத்தின் வேகம் குறைவதில்லை.

வெள்ளிவிரல் 

இது போலவே வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதியும், ஒவ்வொரு கதையும் படிக்கத்தூண்டும் சுவையை ரகசியமாகத் தன்னுள் பதுக்கி வைத்திருக்கும் அதிசயத்தை படிக்கும் போதுதான் உணர்ந்து கொள்ள முடியும். 
தமிழர் விடுதலைப் போராட்டம் ஆயுதம் தரித்தது, ஊர்காவற்படை, அரச ஆயுதப்படை என்பவற்றின் பாலும் வெகு இலகுவாகப் பயணித்து மீளும் கதை லாவகம் இவரது எழுத்துக்களில் இயல்பாய் ஊடுறுவுகின்றது. அத்துடன் முஸ்லிம் காங்கிரசின் தோற்றம் சிதைவு வக்கற்ற போக்கு ஆகியவற்றிலும் நிலைகுத்தி மீண்டு சுய விமர்சனம் செய்கின்றது. தலைவர் அஸ்ரபின் மரணத்திற்குப் பின்னர் என்னென்ன கூத்தெல்லாம் நடந்து முடிந்தது என்பதையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உம்மாவாகச் சித்தரித்து நகர்த்தப்பட்டிருக்கும் கதை ஒரு வகையில் வரலாற்றுப் பதிவும் கூட. அதில் சொல்லப்பட்டிருக்கும் பாத்திரங்களின் உண்மைப் பெயர்களை நாம் ஊகித்துக் கொள்வது அவ்வளவு பெரிய கஸ்டமாக இல்லை. 

'தலைவர் வந்திருந்தார்' என்ற கதை படிக்கும் போது, உடனேயே மனதில் தோன்றியவர், அரபு இஸ்லாமிய இலக்கியவாதியான நஜீப் அல்கைலானிதான். அவரது 'உமர் யழ்ஹரு பில் குத்ஸ்' என்ற நாவல் மிக முக்கியமானது. 'குத்ஸ்சில் உமர் தோன்றினார்' என்றோ 'குத்ஸில் உமர் உதித்தார்' என்றோ தமிழ்ப்படுத்தலாம். தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனைத் தட்டியெழுப்புவதுடன் கதை ஆரம்பிக்கிறது. யூதர்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்திருப்பது பற்றியும் மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்கள் இழந்திருப்பது பற்றியும் முஸ்லிம் உம்மத்தின் கையாளாகாத் தனத்தையும் பிழவுகளையும் பலவீனங்களையும் அப்படியே சுயவிமர்சனத்திற்குட்படுத்துவதோடு அரபுத் தலைவர்களின் யோக்கியத்தையும் தோலுரித்துக் காட்டும் நாவல் அது. நஜீப் அல்கைலானியின் அரபு நாவலை ஆர்எம்.நௌசாத் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஒரே சிந்தனைப் போக்கு. உலக இஸ்லாமிய உம்மத்தின் மீது நஜீப்; அல்கைலானி கொண்ட தீராக்காதலை, ஆர்எம் நௌஸாத் தனது சமுகத்தின் மீதும் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டு, தியாகங்களால் செதுக்கப்பட்ட கட்சி மீதும் கொள்வதில் ஆச்சரியமில்லை. உண்மையான கலப்பற்ற கவலை அவ்வாறு ஒத்த சிந்தனைகளை மனிதர்களில் விதைப்பது அதிசயமானதுமல்ல. மரணித்த தலைவர் அஸ்ரப் ஒரு போராளியிடம் வந்திருக்கிறார் அதன் பின்னர் நடைபெற்ற, மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துச் சித்து விளையாட்டுக்களையும் முஸ்லிம் கட்சிகளையும் அரசியல் வாதிகளையும் மக்களையும் சேர்த்தே செருப்பால் அடிக்கின்ற மாதிரி ஒரு கதை. 

நல்லதொரு துரோகம் என்ற கதை இன்னுமோர் ஆய்வுக் கதவைத் திறந்து விட்டிருக்கின்றது. ஆயுதம் தரித்த பேரின மற்றும் ஆக்கிரமிப்புச் சக்திகளால் பெண்கள் வன்புணரப்படுவதை எதிர்க்கும் கதை மாந்தர்கள் என்பதுதான் அது. அல் அஸூமத்தின் புறமுதுகுகள் கதையின் இறுதிப்பகுதி இப்படி வருகின்றது
ஒரு ஜவான் தனது துப்பாக்கியை கீழே போட்டுவிட்டுக் குப்புறக் கிடந்த அவளின் கையைப் பற்றியிழுத்து 
அவளை மல்லாக்கக் கிடத்தி...
'டேடேய்...' என்று கத்திக் கொண்டே ஓடினான் இவன்
அவள்மீது உட்கார்ந்தான் அவன்
'எந்திரிடா ' என்று கத்தினான் இவன். 'அந்த வெளயாட்டுக்கெல்லாம் போய்றாதீங்க! அது ஒன்ன மட்டும் உட்டுட்டு மத்ததுகள வெளயாடுங்க'
என்று ஒரு பெண் வன்புணர்வுக்குட்படுத்தப்படுவதைத் தடுக்கிறான் அதுவரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்

ஆர்.எம்.நௌஸாத்தின் நல்லதொரு துரோகம் கதையின் இறுதிப் பகுதி
அய்யுபைக் கண்ட நிஸ்ஸங்க ஆத்திரம் பொங்க 
-அடோ ஹூத்திக்க புத்தோ... பளயாங்...பளயாங் என்று கத்தினார். ஆனால் அய்யுப் சிறுமியைக் காப்பாற்றும் உச்ச வேகத்தில் வர 
சட்டென எழுந்த நிஸ்ஸங்க, கைத் துப்பாக்கியால் சிறுமியின் தலை மீது மிக இரக்கமின்றிச் சுட்டார். கூந்தல் பிய்ந்து தலை வழியாக, சிவப்புத் துண்டங்கள் வெளிப்பறந்தன. அதே வேகத்தில் திரும்பி வெறியுடன் ஓடி வந்த அய்யுபை நோக்கி 
-உம்பத் பளையாங் ஹூத்தோவ்...!
என்று கத்திக் கொண்டே கைத் துப்பாக்கியை நீட்...டிய, சரியாய் அதே கணத்தில், அய்யுப், மின்னல் வேகத்தில் எஸ்எல்ஆரை உயர்த்தி, ஒரே குறியில்... அந்தத் துரோகத்தைச் செய்து முடித்திருந்தான்.
இங்கு அய்யுப் என்பவன் ஒரு ஊர்காவற்படை வீரன். நிஸ்ஸங்க என்ற பொலிஸ் அதிகாரியின் கையாள் போன்ற ஒரு மிகச் சாதாரனமானவன். அதிகாரி  ஒரு தமிழ்ச் சிறுமியை வன்புணர்வதை அவன் விரும்பவில்லை அதைத் தடுக்க முயல்கின்றான் இறுதியில் தனது அதிகாரியையே சுட்டுக் கொல்கின்றான். 

அல் அஸூமத் கதையில் வரும் கதா பாத்திரமும் அதைத் தடுக்கப் பாய்து ஓடுகின்றது, நௌஸாத்தின் பாத்திரமும் அவன் குடிகாரனாக இருந்தாலும் கூட இந்த விடயத்தைத் தடுக்க பாய்ந்து வருகின்றான். அதுதான் முக்கியமானது. பல்வேறு ஈழத்துக் கதைகளிலும் இது ஒரு பேசு பொருளாக கதை புணையும் அம்சமாக மாறிப் போகும்அளவுக்கு பெண்கள் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு கால வரையறை கிடையாது. இந்திய அமைதிப்படையும் அதைச் செய்தது, இராணுவமும் அதைச் செய்தது, இயக்கம் உடைந்த போது விடுதலைப் புலிகளும் வெருகலில் அதைச் செய்தார்கள், கருணாவுடன் பிரிந்தவர்களும் அதைச் செய்தார்கள். இப்படி ஒரு தரப்பும் வன்புணர்ச்சி விடயத்தில் சுத்தம் என்று சொல்வதற்கில்லை.

காலவட்டம் கதை மிகவும் வித்தியாசமான புனைவு. ஆச்சரியமிக்க கதையுக்தி. மிக வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறார். கதை வளர்த்துச் செல்லப்படும் பாங்கு இன்னும் நம்மை அதிசயிக்க வைக்கிறது. காலச் சுழற்சியில் ஒவ்வொரு நிகழ்வும் அற்புதமாகக் கோக்கப்பட்டுள்ளன. அது போல மீள்தகவு கதை மனதைக் கனக்கச் செய்கின்றது. நீலாவணிண் போதியோ பொன்னியம்மா என்ற கவிதை ஞாபகத்திற்கு வந்து போகின்றது. பிச்சைச் சம்பளத்திற்காக பத்து வருடங்கள் அலைந்து திரிந்து இறுதியில் பிச்சைச் சம்பளம் கிடைக்கும் போது பொன்னியம்மா செத்துப் போயினாள். அது போலவே இந்த ஏழையும் இழப்பீடு பெறுவதற்காக அலைவது. ஆயினும் நிறைந்த அரசியல் விவகாரங்களை அடுக்கடுக்காகச் செருகிச் செல்கின்றார். தமிழ் அதிகாரிகளிடமும் சிங்கள அதிகாரிகளிடமும் சிக்கித் தவிக்கும் விசயம் தெரியாத முகம்மது யூசுப் அப்துல்லாவின் பரிதாபம் மனதில் சோகத்தை விதைத்துவிடுகின்றது.  இந்தக் கதையை நேரடியாக ஒரு குறும்படமாக்கவுள்ளேன். இந்தக் கதையை வைத்து இந்திய சினமாப் பானியில் ஒரு சீர்திருத்த ஹீரோவைக் கொண்டு முழுநீளத் திரைப்படமாகவே ஆக்க முடியும். அவ்வளவு விசயம் புதைந்து கிடக்கிறது அதற்குள். பாவம் பொதுமகன்.

ஸீனத்தும்மா கதையின் முக்கிய நிகழ்விலிருந்துதான் எனது இரத்தக்குளியல் எனும் நாவல் பிதுங்குகின்றது. ஸீனத்தும்மாவில் ஆக்ரோசமாகத் தொனிக்கும் அதே விடயங்கள் கொஞ்சம் வேறுபட்ட வார்த்தைகளில் இரத்தக் குளியல் நாவலிலும் தொனிக்கிறது. இப்படிப்பட்ட பெண்கள் மீது நௌஸாத்தும் நானும் கொண்டிருக்கும் நிலைப்பாடு ஒன்றுதான் என்பதற்கு இது நல்ல சான்று. நௌஸாத்தின் ஸீனத்தும்மா, இரத்தக் குளியலில் வரும் எனது ஹூதா ஆகிய இரண்டு பாத்திரங்களும் விபச்சாரக் குற்றச் சாட்டில் கொல்லப்படுதல் என்பதுதான் விடயம். பின்னாட்களில் வரும் ஓர் ஆய்வாளன் ஸீனத்தும்hவின் கருவில் இருந்துதான் இரத்தக் குளியல் பிறந்தது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியொரு ஒற்றுமை. ஸீனத்தும்மா பிறந்தது 1989ல் இரத்தக்குளியல் பிறந்தது 2011ல் ஆக மொத்தத்தில் சும்மா இருக்கும் வாய்க்கு அவள் கிடைத்தமாதிரி. 

நாட்டுப்புறப் பரிசாரிகள் மீதான குருட்டு நம்பிக்கைதான் இன்னும் அவர்களை ஜாம்பவான்களாக வைத்திருக்கின்றது. பாலியல் மன்னர்களாக அவர்கள் திகழ்வதற்கு மக்கள்தான் வழிவகுக்கின்றார்கள். இந்தியாவில் மலிந்திருக்கும் போலிச் சாமியார்களுக்கும் நமது பரிகாரிமார்களுக்கும் பெரிதாக இந்த விடயத்தில் வித்தியாசம் கிடையாது. அன்மையில் பரிகாரிமாரிடம் சிக்கிக் கொள்ளும் நிகழ்வினை மையப்படுத்தி ஒரு நீண்ட கவிதையை பொத்துவில் கிராமத்தான் கலீபா வகவக் கவியரங்கில் வாசித்திருந்தார். கிழக்கு மாகாணப் பரிகாரிகள் மட்டுமல்ல நாடு முழுவதுமுள்ள எல்லாப் பரிகாரி மார்களுக்கும் ப்ரேமானந்தா, சங்கராச்சாரியார், நித்தியானந்தா என இது போன்ற எல்லா வகையறாக்களும் செய்யும் சில்மிசம்தான் வெள்ளிவிரல் பரிகாரியும் செய்கின்றார். இதன் பின்னரும் பெண்களைக் கூட்டிக் கொண்டு பரிகாரிமாரிடம் போவீர்களா என்று கேள்வி கேட்பது போல ஓர் எள்ளளுடன் கதை முடிகின்றது அழகு. நமது தாய்மாருக்குப் பாசம் இருக்குமளவுக்குப் புத்தி கிடையாது.

நட்டுமை 

இந்த நாவல் பற்றி நான் அதிகம் எழுதத் தேவையில்லை. பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள், நான் சொல்ல நினைத்த அத்தனையையும் அச்சசொட்டாக அப்படியே சொல்லி முடித்திருக்கிறார். நீண்ட முன்னுரையைக் கண்ணுற்றதும் அதைப் படிப்பதைத் தவிர்த்துக் கொண்டு நாவலை வாசித்து முடித்துவிட்டுத்தான் படித்தேன். எப்போதும் அனைத்து உரைகளையும் படித்துவிட்டுத்தான் விடயத்திற்கே செல்வது எனது வழக்கம். சோலைக் கிளியின் பொன்னாலே புழுதி பறந்த பூமிக்கு கலாநிதி றமீஸ் அப்துல்லா வழங்கியிருந்த நீண்ட முன்னுரை அயர்ச்சியாக்கியது போல இதிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் நட்டுமையில் பேராசிரியரின் குறிப்பை முதலில் படிப்பதைத் தவிர்த்தேன். ஆயினும் கடைசியில் வாசித்ததன் சாதகத்தை முழுமனதோடு ஏற்கின்றேன். நட்டுமை குறித்து நான் ஏதேனும் எழுதுவதானால் பேராசிரியன் எழுத்துக்களை அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ணினால் சரி. ஆகவே எதற்கு வீண் வம்பு? எல்லோரும் பேராசிரியரின் குறிப்பைப் படியுங்கள், அதன் பின்னர் நாவலைப் படியுங்கள், 1930 களில் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்து முஸ்லிம் கிராமமொன்றில் வாழும் சுகானுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 

நௌஸாத் ஆகிய தீரன் என்ற சைலன்ட் டெரரின் அடுத்த படைப்புக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். இப்படி அடுத்த படைப்பை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும் படைப்பாளிகள் நம்மிடம் வெகு குறைவு என்பதை மனதிற் கொண்டு அவசரமாக செயற்படுங்கள்.

No comments:

Post a Comment