Friday, November 30, 2012

மூர்க்கமான யுத்த வீரனாக



உணர்வுகளையெல்லாம் ஒன்றுதிரட்டி
அனைத்தையும் மறக்க நினைக்கிறேன்
காலம் புன்னகைத்துக் கொள்கிறது
முடியாததை முயற்சிப்பதாக

ஆதரவுக்காய் ஒரு குரலேனும் ஒலிக்காது
ஏகாந்தமாய்க் கைவிடப்பட்ட பொழுதில்
மனசாட்சி  சாந்தம் கொண்டிருந்தது
உணர்வுகளேதுமற்று மரத்துப் போய்...

இழைக்கப்பட்ட துரோகத்தை நினைக்கையில்
உடல் வெப்பம் உச்சமடைந்து வியர்த்து
வெறி கொண்டு செயற்படத் தூண்டிற்று மனது
புத்தி அமைதி தெளிக்க பொறுமை வியாபித்தது

இறையச்சம் கட்டிப் போட
கண்கள் கலங்கி சிரம் தாழ்ந்தது
இறைவா நீ
தண்டிக்கிறாயா?
சோதிக்கிறாயா?
இயல்பாக உதிரும் வார்த்தைகள்

ஆண்டவன் மீது அனைத்தும் சாற்றி
ஏதுமற்று வெறுமையாகிப்போகையில்
அனைத்தையும் மறக்க நினைக்கிறேன்
அப்போதும் முடியாமற்றான் போகிறது.

தண்டனையாயின் அனுபவிக்கவும்
சோதனையாயின் பொறுமையுடன்
எதிர்கொண்டு வெல்லவும்
வலுகொள்கிறது மனது.

உறுதியாக எனக்குத் தெரியும்
நான் வீழ்ந்துவிடவில்லையென்று
அறியாத உலகம் பழிக்கும்
எல்லாம் உயிர் கொண்டெழுகையில்
எல்லாமும் மாறும்

நானும்
வெறிகொண்ட மூர்க்கமான யுத்தவீரனாய்

No comments:

Post a Comment