Tuesday, July 24, 2012

ஹராங்குட்டி



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.... 

என்று தொடங்கி அல்குர்ஆனின் ஓதல் ஒலி அழகான மெல்லிய ராகத்தில் அதிகாலைப் பொழுதின் அமைதிக்கு கூடுதல் இதம் சேர்த்து வியாபித்துப் பரவியது. கிராஅத்தின் ஈர்ப்பு அவனை அப்படியே கண்களை மூடி ரசிக்க வைத்தது. 
சுபஹூத் தொழுகையை முடித்துவிட்டு மிக நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த அவனை அந்த ஓதல் ஒலி ஒரு அமைதியான பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற மாதிரி இருந்தது. ஒருவித சிலிர்ப்பு அவனுள் பரவியது. அதை ஆழமாக அனுபவித்து உணர்ந்தான். அவனது கண்கள் கலங்கின கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது. ஏன் அழுகின்றான் என்பது கூட அவனுக்கு விளங்கவில்லை. சம்பந்தமில்லாது சம்பந்தமில்லாது பலகாட்சிகள் ஒன்று விட்டு ஒன்றாக மனத்திரையில் தோன்றி மறைந்தன.
 எல்லாவற்றுக்கும் நிறைய காரண காரியங்கள் இருந்தன. ஆனபோது அது எல்லாமும் அவனது மனதில் பதியவில்லை. எதுவும் அவனில் சலனத்தை உண்டுபண்ணவில்லை. 
அவர்கள் ஓதிக்கொண்டிருந்த அரபு வாசகங்களின் அர்த்தத்தினை மனதில் உருவகப்படுத்தத் தொடங்கியபோது அவனுக்காகவே போல 
'உங்களில் சிலரைக் கொண்டு நாம் அநியாயங்களை தடுக்கவிட்டால் இந்த பூமி குழப்பங்களால் நிறைந்து சீர்கெட்டுவிடும். 
அவனது மனது இறையச்சத்தால் கனத்துப் போனது இடுப்பில் மறைந்து இருந்த துப்பாக்கியை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டான். 
மெதுவாகத் தலையை திருப்பி ஓதிக் கொண்டிருந்த மாணவர்களை உற்று நோக்கினான். 
யாரையோ தேடினான் போலும், தேடிய நபரைக் காணவில்லை. அவன் பார்வை வெறுமையாய் மீண்டது.

வெள்ளை சார்ந்த லுங்கி கட்டி, வெள்ளை நிறத்தில் நீண்ட ஜூப்பா அணிந்து, வெள்ளைத் தலைபாகை கட்டி, நீண்டு பின்னால் தொங்கிய தலைப்பாகையின் ஒரு பகுதியை அப்படியே கழுத்து ஓரத்தால் எடுத்து தோளைத் தாண்டி மார்புப் பகுதியில் தொங்கவிட்டபடி முன்னும் பின்னுமாய் இருந்த இருப்பிலேயே உடலை அசைத்தபடி ஓதிக் கொண்டிருந்த மௌலவி மாணவர்களின் அந்த ஒருமித்த அழகு கண்கொள்ளாக் காட்சியாக விரிந்தது. ராகமெடுத்து உயர்ந்த தொனியில் ஓதிக் கொண்டிருந்த மௌலவி மாணவர்களின் முகத்தை அர்த்தத்தோடு தனித்தனியாக அவன் உற்று நோக்கினான். அவனுக்கு ஏதோ தேவைப்படுகிறது. அது இன்னும் சரியாக கிளிக் ஆகவில்லை. 
அப்போது தான் அவன் முகம் பிரகாசமாகியது. அழகான ஒரு சிறுவன் தளர்ந்த நடையோடு பள்ளியினுள் நுழைந்தான் அலட்சியமாகக் குர்ஆனைத் தூக்கிக்கொண்டு வெறுப்போடு எல்லோருடனும் அமர்ந்தான். எந்த உணர்வுமற்று சுருதியற்ற தொனியில் குர்ஆனை ஓதத் தொடங்கினான். அந்த மௌலவி மாணவனையே அவதானித்தபடி மெதுவாக எழுந்து வெளியேறிச் சென்றான். 

அதிகாலை இளந் தென்றலின் குளிர் அவனுக்கு இதமாக இருந்திருக்க வேண்டும். ஒரு நீண்டமூச்சை இழுத்து விட்டான். 

அந்தப் பள்ளிவாயல் மிகவும் கம்பீரமாக இருந்தது. அழகான தோற்றம், அதையொட்டி ஒரு அரபுக் கலாசாலை அதில் இருநூறு மாணவர்கள். இஸ்லாம் மார்க்கத்தைக் கற்பதற்காக நாட்டின் நாலாப் பாகங்களிலிருந்தும் அங்கே தமது பிள்ளைகளைக் கொண்டு வந்து விட்டிருந்தார்கள் பெற்றோர். அவர்கள் கற்பனை கொண்டிருந்தார்கள். 
எல்லாமும் சரியாக நடப்பதாயும் தம் பிள்ளைகள் சத்தியத்தில் நிலைத்திருப்பதாயும் தமது பிள்ளைகள் நாளையொரு நாள் சமயப் பிரச்சாரர்கள் என்றும், போதகர்கள் என்றும், தூய்மையான சூழலில் அவர்கள் வளர்க்கப்படுவதாயும், கருத்துக்கள் உறுதியான போது களங்கத்தை அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. மதபோதகர்களை மக்கள் அப்படித்தான் கௌரவப்படுத்தினார்கள். 

ஆயினும் அவர்களுக்கான உரிய இடம் சரியாகக் கொடுபடவில்லை. ஏழு வருடங்கள் இஸ்லாமிய சட்டக்கலை தர்க்கவியல், பெருமானார் போதனைகள், இறைவனின் திருமறையான அல்குர்ஆன் இஸ்லாமிய வரலாறு என பல்துறைசார் விடயங்களை கற்பதற்கு மூலமான அரபு மொழியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது அடிப்படை அதற்காகவே அதிக காலத்தை அவர்கள் செலவிட்டார்கள். இப்படி ஏழு வருடங்களும் கற்றுத் தேறுபவர்கள் வெகு சொற்பமான தொகைதான். அவர்களில் மிகத் தரமானவர்கள் பத்தில் இரண்டு பேர் என்று கணக்கீடு செய்யலாம். 

மற்ற எல்லா மௌலவிகளும் டம்மி பீஸ்தான் ஆழ்ந்த அறிவும் கிடையாது. தெளிவும் கிடையாது. அரபு மொழியில் கூட புலமை கிடையாது, ஏதோ சமூகத்தில் பிழைப்பு நடாத்துவதற்காக பள்ளிவாசல்களில் தஞ்சமடைந்து பெரிய தாடியும் வைத்துக்கொண்டு மார்க்கப் போதனை என்ற பெயரில் கழுத்தறுக்கும் பேர்வழிகள். அவர்களால் துளியளவு மாற்றத்தையும் செய்ய முடியாது. பேசிக் கொண்டே இருப்பார்கள். அதற்கு அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். ஒழுக்கத்திலும் ரொம்பவே போதாது. போதனை செய்வது மட்டும் தான் தமது பணி அவற்றை வாழ்வில் அமுல்படுத்துவது. அதெல்லாம் இரண்டாம் பட்சமான அம்சம். 

இன்னும் ஆழமாகச் சொன்னால் சமூகத்தில் தன்னை அந்தஸ்துள்ள மனிதர்களாய் நிலை நிறுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒரேயொரு வழி இருக்கிறது. ஏதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்தில் அங்கத்துவம் பெற்று அந்த இயக்கத்தை வளர்க்கத் தம் பிரதேசத்தில் தொண்டு செய்வது. இவர்களை வைத்தே அந்த இஸ்லாமிய இயக்கம் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் கம்பனியாகி விடும் இதெல்லாம் ஊர் அறியாத உச்ச ரகசியம் ஆனால் பரகசியமானது. பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல. 

யாரோ ஒரு அரபு நாட்டுப் பரோபகாரி கொடுத்த நன்கொடையில் ஊர் ஊராக அந்த இயக்கம் கிணறு வெட்டும், வீடு கட்டும், உணவுப் பொதிகள் பங்குவைக்கும் அவசர நிலைமைகளில் சாப்பாடு கொடுக்கும், குர்பானி கொடுக்கும் இதற்கெல்லாம் சம்பளமில்லாது செயற்படும் அதிகாரிகளாக இந்த மௌலவிகளும் அவர் பின்னால் இருக்கும் தொண்டர்களும் பயன்படுத்தப்படுவார்கள் அனைத்துத் திட்டங்களிலும் நூற்றில் குறிப்பிட்டதொரு பகுதி லாபம் இருக்கும் அனுபவிக்கும் உரிமை இஸ்லாமிய இயக்கம் என்ற கம்பனிக்கு மட்டுமே உரித்து. எல்லா சேவைகளும் செய்து முடித்த பின்னர், அவர்கள் அனைவரும் சேர்ந்து சமூகத்திற்கு ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள்
'எவ்வளவுதான் செய்தாலும் நன்றிகெட்ட மக்கள் 
உண்மையான மாற்றத்தை விரும்பும் தியாக மனப்பாங்கு கொண்ட ஒழுக்கமான மௌலவிகளுக்கு இப்படிப்பட்டவர்கள் செய்யும் வேலைகளால் எப்போதும் இடைஞ்சல்தான். கெட்டபெயர் அந்த நல்ல மனிதர்களையும் சேர்த்தே பதம் பார்த்துவிடுகிறது. பாவம் அந்த நல்லவர்கள் இறைவனிடம் பாரத்தை சுமத்திவிட்டு அமைதிகாப்பார்கள்.

அவனைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும், அவன் ஒரு வித்தியாசமான பேர்வழி, அவனுக்கு யார் மீதும் வெறுப்பு கிடையாது அது போல எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளவும் மாட்டான். சில விடயங்களுக்காக  அவன் நியாயமாகக் கோபப்படுவான். அவனது கோபம் எல்லை கடந்து விட்டால் துப்பாக்கியைத் தூக்கி சரிபார்த்து தயார்படுத்தி இடுப்பில் செருகிக் கொண்டு சென்று விடுவான். பெரிய பிரச்சினைக்குத் சிறிய செலவில் தீர்வு கண்டுவிட்டு அதாவது முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அமைதியாகவே அவன் தன் காரியங்களில் மிகவும் இயல்பாக ஈடுபடுவான். அவன் மிகவும் நிதானமானவன். சமய விடயங்களில் மிகவும் பேணுதலானவன். சமூக விவகாரங்களில் முன்னணியில் நிற்பான். அவனைப் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு சாந்த சொரூபி. அமைதியான எரிமலை, தென்றல் போல உலாவரும் புயல். இன்று பள்ளிவாசலில் மையங் கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஏதோவோர் பலமான காரணம் இருக்கும். அவன் விசயத்தில் யாரும் எதையும் அவ்வளவில் எளிதில் தீர்மானித்து விடவும் முடியாது. அனுமானித்து விடவும் முடியாது. 

பள்ளிவாயலின் வெளிச் சூழலையும் அதனோடு இணைந்திருந்த அரபுக் கலாசாலையின் வெளிச் சூழலையும் அவன் அங்குலம் அங்குலமாக அளவீடு செய்து கொண்டிருந்தான். 
ஒரு துல்லியமான திட்டமிடலின் வெளிப்பாடும் கூர்மையும் அவன் கண்களில் தெரிந்தது. அனைத்தையும் தீர்மானித்து விட்டுதான் களத்தைத் துணிவான். அவன் இயல்பு அப்படி, பெரும்பாலும் அவனைத் தனிமையில்தான் காணமுடியும். 

மௌலவி மாணவர்கள் அல்குர்ஆனை ஓதி முடித்திருக்க வேண்டும் பள்ளிவாயலில் சிரிப்பொலி வெளியேயும் எதிரொலித்தது. அவன் எட்டிப் பார்த்தான், அவர்கள் அனைவரும் வரிசையாக விடுதிக்குச் செல்லத் தயாரானார்கள் போலும், 
அப்போது அவன் உள்ளே நுழைந்து பார்வையைப் படர விட்டான்,  
சோர்வோடு எதையும் அலட்டிக்கொள்ளது வெற்றுப் பார்வைகளை வீசியபடி இருந்த அந்த மாணவனிடம் சென்று அமர்ந்தான். 
அந்த மாணவனின் கண்கள் பிரகாசமாகின. முகம் சோர்வைக் களைத்தெறிந்து பொழிவு பெற்றது. எதிர்பார்ப்புகளுடன் அவனை உற்றுநோக்கிய மாணவனின் கரங்களைப் பற்றியபடி கேட்டான். 
எங்கே அவன்? 
'உள்ளே இருப்பதாக பார்வையால் பதில் சொன்னான் மௌலவி மாணவன்.
'இன்னும் பிரச்சினையா? இது அவன்
'ஆமாம் என்று தலையசைத்தான்.
மிகவும் மோசமானவர்கள் எத்தனை பேர்? என்று கேட்க. ஒரு விரலைக்காட்டி ஒருவர்தான் என்று பதிலளித்தான். அவன் பார்வையை ஒரு முறை சுழல விட்டான். 
தம்பி நீயும் உள்ளே போ எல்லோரும் போய்விட்டார்கள். என்றதும் அந்த மௌலவி மாணவனும் எழுந்து உள்ளே செல்லத் தயாரானபோது 
'நீ எதற்கும் கவலைப்படாதே எல்லாம் நல்லபடி முடியும்' என்றான் 
அந்த மௌலவி மாணவனும் தலையசைத்தபடி மகிழ்வுடன் சென்றான். 
மெதுவாக எழுந்து அவன் பள்ளியை விட்டு வெளியே சென்றான். பெருமூச்சுடன் சலனமற்ற முகத்துடன் நேரம் பார்த்தான்.

நேரம் காலை ஆறு முப்பது ஆகியிருந்தது. சூரியன் அப்போதுதான் மெதுவாகப் எட்டிப் பார்த்தது. நேராகச் சென்று ஒரு கடையில் அமர்ந்து குடிப்பதற்கு தேயிலை கொண்டுவருமாறு பணித்துவிட்டு ஒரு ரொட்டியை எடுத்து மெதுவாகக் கடித்து அதை அசைபோட்டபடி அன்று இரவு வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை எடுத்துப் படித்தான்.
ஓரினச் சேர்க்கைக்கு ஒத்துழைப்பு - இஸ்லாத்தை இலக்கு வைக்கும் அந்நிய சக்திகள் 
என்பதுதான் அதன் தலைப்பு. 
இஸ்லாம் முற்றாகத் தடைசெய்த ஓரினச் சேர்க்கைக்கு ஒத்துழைப்பு நல்க இன்று முஸ்லிம் சமூகத்தின் இளைஞர் யுவதிகள் திட்டமிட்டு உள்வாங்கப்பட்டு ஓரினச் சேர்க்கை செய்வது அவரவர் உரிமை என்ற அடிப்படையில் மூளைச் சலவை செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு சில மௌலவிமாரின் ஒத்துழைப்பும் குறிப்பிட்டதொரு யூத நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளது.. 
என்று நிறையத் தகவல்களை வழங்கி சமூகத்தை விழிப்பூட்டல் செய்யும் பிரகாரம் அந்தத் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. அதன் கீழ் பிரதேச ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் இஸ்லாமிய தஃவா இயக்கங்கள் என்று உரிமையும் கோரப்பட்டிருந்தது. ஆனபோதும் விநியோகிப்பதற்கு மட்டும் தைரியமில்லாது போயிற்று போல அதனால்தான் எங்கும் வீசப்பட்ட நிலையில் மக்கள் பொறுக்கியெடுத்து வாசித்தார்கள். 

எதுவும் பண்ண முடியாது. ஓரினச் சேர்க்கை அவர்கள் உரிமை என்று வெளிநாட்டுப் பணத்தில் பிழைப்பு நடாத்தும் ஒரு ஊதாரி சொன்னான். 
என்னதான் நியாயப்படுத்தினாலும் எதையும் சகித்துக்கொள்ள முடியவில்லை போலும் அவனால் மிகவும் கோபமாக இருக்கிறான் என்பதை புருவங்களின் சுழிப்பில் மட்டுமே விளங்க முடியும். 
அந்தளவுக்குப் பழகிப்போயிருந்தான். 
உணர்ச்சிகள் எதையும் முகத்தில் காட்டாமல் அப்படியே மறைத்துப் போகுமளவுக்கு 
அவனைப் பொறுத்தவரைக்கும் எப்போதுமே ஒரு அப்பாவிதான். 
அவனால் யாருக்கும் எந்தத் தொல்லையும் கிடையாது. யாருக்கும் எந்த இடைஞ்சலும் கிடையாது அப்படியொரு அமைதி. 
ரொட்டியும் சாப்பிட்டு, தேயிலையும் குடித்து அங்கிருந்து வெளியேற அவனுக்கு நாற்பது நிமிடங்கள் எடுத்திருந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் பஸார் சன நடமாற்ற மற்றிருந்தது. ஆங்காங்கே இருந்த ஹோட்டல்கள் மட்டும் திறந்திருந்தன. 
அவன் அப்படியே ஒரு நோட்டம் விட்டவாறு மீண்டும் பள்ளிவாசலினுள் நுழைந்தான். 
வுழுச் செய்து கொண்டான். 
இரண்டு ரக்அத்து ழுஹா தொழுதான். மீண்டும் எழுந்தான். இன்னும் இரண்டு ரக்அத்துகள் இஸ்திஹாரா தொழுதான். 
நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டான். 
அவனது கண்கள் கலங்கி கண்ணீர் சொரிய வானை நோக்கி ஏந்தப்பட்ட கரங்களும் வானை நோக்கிய பார்வையும், இறைவனைச் சரணடையும் ஒருவன் இப்படித்தான் இருப்பான் என்பதற்கு விளக்கம் சொல்வது போலிருந்தது, அதற்கு அவனும் ஒரு பொருத்தமான உதாரணமாகியிருந்தான். 
பிரார்த்தனையின் பின்னர் அவனது உள்ளம் சாந்தி அடைந்திருக்க வேண்டும். பள்ளவாயிலை நோட்டமிட்டான். வெளிப் சப்தங்களுக்கு காது கொடுத்தான். மொளலவி மாணவர்களின் சிரிப்பொலியும் கதைச் சப்தமும் குதூகல ஓசையால் ஒலித்தது. அவர்கள் சந்தோஷமாயிருக்கிறார்கள். அதற்காக நகைச்சுவைகள் சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருமித்த சிரிப்பொலி அப்படித்தான் எண்ணத் தூண்டியது. 
மத்ரசாவிலிருந்து நீண்ட தாடியுடன் ஒரு மௌலவி வந்தார். நேராக அவன் அருகே வந்தவர் அழுது வீங்கியிருந்த அவனது முகத்தைப் பார்த்தபடி அவனருகே அமர்ந்து கொண்டார். அவன் சுறுசுறுப்பானவள் மௌலவியின் கரங்களைப் பற்றினான் மௌலவி எதுவும் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். தனது சட்டைப்பையில் இருந்த துண்டுப் பிரசுரத்தை எடுத்து அவரிடம் நீட்டினான். அவரும் அதைப் பார்த்தார். 
'நான் வாசித்தேன்' என்றார் 
'என்ன மௌலவி நடக்குது இந்த சமூகத்தில் 
'அல்குப்ரு மில்லதுன் வாஹிதா – எல்லா காபிர்களும் ஒரே அணியில் இருப்பார்கள். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிடுவதில் அவர்கள் தமக்கிடையே ஒத்துழைப்பாக இருப்பார்கள். முஸ்லிம்களுக் கெதிராக அவர்கள் தமது முரண்பாடுகளை மறந்து ஒன்று படுவார்கள் 
'இதன் சூத்திரதாரி யார் மௌலவி 
'வேறு யார் யூதர்கள் தான் இஸ்லாத்தை அழிக்க உலகளாவிய அளவில் அவர்கள்தான் செயற்படுகின்றார்கள். நமது நாட்டில் உள்ள இந்த இயக்கத்துக்கும் அவர்கள் தான் பணம் கொடுக்கிறார்கள்.  அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் இஸ்லாம் ஹராமாக்கிய எல்லாவற்றையும் மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள் இதையெல்லாம் சமூகம் தட்டிக் கேட்காததால் தான் எல்லோரும் மிஞ்சிப் போகிறார்கள். 
'ஓரினச் சேர்க்கைக்கும் இந்த அமைப்புக்கும் என்ன சம்பந்தம் மௌலவி
'இந்த இயக்கம் ஆணும், ஆணும், பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்யலாம் உறவு கொள்ளலாம் என்று மக்கள் மத்தியில் போதிக்கிறது. அதற்கு அமெரிக்க யூதர் அமையம் பணம் கொடுக்கிறது. அமெரிக்காவும், யூதர்களும எப்போதும் முஸ்லிம்களின் எதிரிகள் தான். அவர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும். அல்லாஹ் கட்டமைத்து வைத்துள்ள எல்லா ஒழுங்குகளையும் சிதைத்து மனிதர்களின் அழிவின் பக்கம் அழைத்துச் செல்வதுதான் அவர்களின் நோக்கமும் இலக்கும். 
'சரி மௌலவி இந்த விசயம் எப்படி தெரியவந்தது. 
அதுதான் அல்லாஹ் செய்த மாபெரும் கிருபை இஸ்லாத்துக்கு எதிராக முஸ்லிம்களே பணம் பெற்றுக்கொண்டு செயற்படுகின்றார்கள் அவர்களே அந்த தன்னினச் சேர்க்கையை நியாயப்படுத்தும் நிறுவனத்துக்கு தமது சமூகத்தின் இளைஞர்களையும் யுவதிகளையும் செமினார் என்று அழைத்துச் சென்று இது போன்ற இஸ்லாத்துக்கு விரோதமான கருத்துக்களை அவர்கள் மனதில் விதைத்து வழிகெடுக்க முயற்சி செய்கிறார்கள். அல்லாஹ் அதைத் தடுத்து விட்டான். 
'மௌலவி ஓரினச் சேர்க்கை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 
'நபி லூத் அலைஹிஸலாம் அவர்களுடைய சமூகம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் தான் அந்த சமூகத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டி அல்லாஹ் அழித்தான். அந்தளவு மோசமான செயலது. 
'இப்போதுள்ள சூழலில் நமது சமூகத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது மௌலவி? 
'என்னைப்பொறுத்தவரைக்கும் அவனை நடு வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்ல வேண்டும். என்ன செய்வது இந்த நாட்டில் அப்படிச் செய்ய முடியாதே' 
மௌலவி ஆதங்கப்பட்டார். 
'ஓரினச் சேர்;ககை ஹரமானது என்பதை எப்படி மௌலவி ஊருக்குப் தெரியப்படுத்தலாம்?
'இன்றைக்கு குத்பாப் பேருரை இது பற்றியதுதான். மக்களை இந்த யூத சதியில் இருந்து பாதுகாப்பது பற்றி தான் இன்று குத்பா செய்யப் போகிறேன். நம்மால் முடிந்ததைத் தான் நாம் செய்யலாம். 
'இந்தத் தீமையை எப்படித் தடுக்கலாம் மௌலவி 
ஓவ்வொருவரும் அவரது பலத்தைப் பொறுத்து தீமையைத் தடுக்கும்படி முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் சொல்லி இருக்கிறார்கள். ஒரு தீமையைக் கரங்களால் தடுக்க முடிந்தால் கரங்கலால் தடுக்க வேண்டும். அல்லது பேசி வார்த்தைகளால் தடுக்கும் பலமிருந்தால், அப்படி முடிந்தால் வார்த்தைகளால் தடுக்க வேண்டும். எதற்கும் பலமில்லா விட்டால் மனதால் வெறுத்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதுதான் இஸ்லாம் நமக்குக் காட்டும் ஒரே வழிமுறை.
மௌலவியின் போதனைகளை அப்படியே உள்வாங்கிய அவனது முகம் சிவந்து போயிருந்தது. 
சற்று முன்னர் இறை சந்நிதானத்தில் சிரம் தாழ்த்தி அழுது வீங்கிய அவன் கண்களில் தீட்சன்யமாய்த் தெரிந்தது.
அவன் மௌலவியின் கரங்களைப் இறுகப் பற்றினான்.
மௌலவி அவனை வியப்போடு பார்த்தார் 
அவன் சொன்னான். 
'மௌலவி நான் ஒரு பாவி! நான் ஒரு கொலைகாரன் ஒரு உயிரைப் பறித்து பெரும் பாவியாகிவிட்டேன் என்றான். ஆச்சரியத்துடன் உற்று நோக்கிய மௌலவி கேட்டார், 
'அப்படி என்ன செய்து விட்டாய்? ஏன் கொன்றாய்...? 
'தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஒருவனைக் கொன்று விட்டேன். எனக்கு மன்னிப்பு இருக்கிறதா? 
'தம்பி கவலைப்படாதே நீ ஒரு பாவியைத்தான் அழித்திருக்கிறாய்? நீ சமூகத்திற்கு நன்மை தான் செய்திருக்கிறாய். நீ அல்லாஹ்விடம் தொழுது அழுது மன்னிப்புக் கேள். அவன் உன்னை நிச்சயம் மன்னிப்பான்.
'அது சரி மௌலவி இந்த மத்ரஸாக்களில் மாணவர்களை இப்படி தன்னினச் சேர்க்கைக்கு பெரிய ஹஸ்ரத் மார் பயன்படுத்துவதாக ஒரு செய்தி கேள்விப்பட்டேன். உண்மையா? 
அவர் அதிர்ந்து போனார். 
'மத்ரசாக்களிலா அந்த ஹராம் அல்லாஹ்வின் போதனையை படிப்பிக்கும் இடத்திலுமா? 
அவர் கேள்விகளில் ஆச்சரியம் தொனித்தது. 
'ஆமாம் மௌலவி பெரும்பாலும் எல்லா மத்ரசாக்களிலும் மௌலவிமார் அங்குள்ள மாணவர்களை தன்னினச் சேர்க்கைக்குப் பயன்படுத்துவதாக நான் நிறையக் கேள்விப்பட்டேன். அப்படி பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் மத்ரசாக்களை விட்டும் ஓடி இருக்கிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டு மனமுடைந்து போன உங்கள் மத்ரசாவின் ஒரு மாணவன் தற்கொலை செய்ய முற்பட்ட போது நானே அவனைப் பாதுகாத்தும் இருக்கிறேன். இப்படியான செயல்களை எப்படி மௌலவி தடுக்கலாம்? 
'எங்கள் மத்ரஸாவிலா...? 
கேள்வியோடு மௌலவி விரைத்துப் போய் இருந்தார் அவரால் எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை அவன் சொன்னான். 
'மௌலவி இப்படி செய்பவர்களை நடுரோட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லலாம் தானே! இந்தப் பாவத்தை எனது சக்திக்கு உட்பட்டுத் தடுக்கலாம் தானே. நான் செய்யும் அந்தக் கொலை சமூகத்துக்கு நன்மை தானே. எனக்கு மன்னிப்பும் இருக்கிறது தானே! 
அவன் சொல்லிக்கொண்டே போனான். அவர் அவனுக்குச் சொன்ன போதனைகளில் சாரம்சமாய் அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு இருப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்தான். 
மௌலவியின் நெற்றிப் பொட்டில் வைத்தான். 
'எத்தனை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறாய்? இனி மேலும் நீ உயிரோடு இருக்கத் தேவையில்லை. 
விசையை அழுத்தினான் 
'டப்' என்று ஒரு சிறு சப்தம் கேட்டது. 
இரத்தம் எங்கும் தெரிக்க மிம்பர் மேடைக்கு முன்னால் மௌலவி நீண்ட தாடி குருதியில் நனைய வெள்ளை ஜூப்பா சிவப்பாக மாற சரிந்து விழுந்தார் பள்ளிவாயலின் நடுவே
காற்று போல அவன் மறைந்தான்.
மொத்த ஊரும் பள்ளிவாயலில் கூடியது. மௌலவியை யாரோ பள்ளிவாசலில் வைத்து சுட்டுக் கொன்று விட்டார்களாம் என்ற செய்தி பரபரப்பாய் பரவியது. பொலிசாரும் விரைந்தார்கள் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகின எந்தப் பயனுமில்லை. ஒரு தடயமும் இல்லை. குருதியில் நனைந்தபடி மௌலவியின் ஜூப்பா பையிலிருந்து சில பேப்பர்களை எடுத்தார்கள். அதில் அரபியிலும் தமிழிலுமாக ஏதோ எழுதியிருந்தது. இன்றுமொரு மௌலவியிடம் அதைக்கொடுத்து என்னவென்று கேட்டார்கள். 
அவரும் அதைப் பார்த்து விட்டு 
'இன்று வெள்ளிக்கிழமை இவர்தான் குத்பா பிரசங்கம் செய்ய வேண்டும். அந்தப் பிரசங்கம் தான் இது. என்றார். 
'என்ன தலைப்பில் இருக்கிறது. 
என்று பொலிஸ் அதிகாரி கேட்டார். 
'ஓரினச் சேர்க்கை சம்பந்தமாகவும் அதைத் தடுப்பதற்கும் அமெரிக்க மற்றும் யூத சதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்று திரள வேண்டியதன் அவசியம் பற்றியும் அதில் எழுதப்பட்டிருக்கிறது. என்றார் 
பொலிஸ் அதிகாரி பல கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவிட்டார். ஆன பலன் ஒன்றுமில்லை முகத்தைத் தொங்கப் போட்டபடி வெளியேறினார். 
ஒருவன் சொன்னான் 
'மௌலவி அமெரிக்கா மற்றும் யூதர்களுக்கு எதிராகத்தான் இன்று குத்பா செய்ய இருந்தாராம். அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். நிச்சயம் இதன் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருக்கும். 
பல்லாயிரம் பேரில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவன் மெதுவாக சிரித்துக் கொண்டான். ஒவ்வொருவர் கருத்தையும் ஆழமாக உள்வாங்கினான். இன்னொருவர் சொன்னார் 
'தன்னினச் சேர்க்கை செய்பவர்கள் பற்றி மௌலவி கடுமையாக சாடி குத்பாப் பேருரை நிகழ்த்த இருந்திருக்கிறார். அதனால் தான் யாரோ கொலை செய்திருக்கிறார்கள். இரவு இது சம்பந்தமாக நோட்டீஸ் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அப்படிப்பார்த்தால் அந்த இயக்கம் தான் மௌலவியைக் கொண்டிருக்க வேண்டும். எல்லோரும் எங்கோ தூரத்தில் நின்று யோசித்தார்கள்.
இஸ்லாத்தின் பெயரால் தஃவா இயக்கம் நடாத்தும் எல்லோரும் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். பத்திரிகைக்கு செய்தி சேகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாது தமது மேதாவித் தனத்தை நிலை நிறுத்தும் வண்ணம் கருத்தும் சொன்னார்கள். 
எல்லோர் முகமும் சோகத்தாலும் அச்சத்தாலும் சந்தேகத்தாலும் வாடிக் கறுத்துப் போய் இருந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை அவர்களால் அனுமானிக்க முடியவில்லை. குழப்பத்தைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. 
சுற்றிலும் பரவியிருந்த இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த உடலை எல்லோரும் அச்சத்தோடு நோக்கினர். 
ஏன் கொல்லப்பட்டார் என்று மட்டும் யாரும் தெரிந்திருக்க வில்லை. அவரின் மாணவர்கள் ஆச்சரியத்தோடு அவர் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

காலை முழுவதும் சோர்ந்த முகத்தோடு இருந்த மாணவன் மலர்ந்த முகத்துடன் அகோரமாய்ச் சரிந்து கிடந்த அவர் உடலை மலர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சொன்னான் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் 
'மௌலவி ஒரு குற்றமும் செய்யாவிட்டால் ஏன் அவரை இப்படி பள்ளிவாயல் நடுவே அதுவும் வெள்ளிக்கிழமை இவ்வளவு கொடூரமாய்க் சுட்டுக் கொல்ல வேண்டும்? அவர் ஏதோ பெரிய தப்பு செய்திருக்கிறார் போல. 
அவன் சொல்லி முடிப்பதற்குள் ஒருவர் சொன்னார் 
'அதானே சும்மா ஏன் கொல்லப் போகிறார்கள்' 
மக்கள் மத்தியில் அதிர்ந்து பரவியது செய்தி. 
மக்கள் மனதில் கேள்விகள் பதிலை அன்மித்தது போல.  அமெரிக்காவையும், யூதர்களையும் விட்டுவிட்டு கொல்லப்பட்ட மௌலவியைச் சூழப் பதில் தேடத் தொடங்கினர். 
இன்னுமொரு முற்போக்குவாதி சொன்னான். 'யூதனுமில்லை மன்னாங்கட்டியுமில்லை இவரு எங்காவது போய் படுத்திருப்பாறு அதான் பள்ளில வெச்சே மண்டைல போட்டிருக்கானுங்கள் மௌலவி மாரும் மக்களும் படிப்பின பெறட்டும் என்டு
வெள்ளிக்கிழமை குத்பாப் பிரசங்கத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. 
மௌலவியின் உடலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக் கொண்டு சென்றார்கள். 
பள்ளிவாயலில் சனத்திரள் வழமையை விட ஜூம்ஆவுக்காக நிறையத் தொடங்கியது. 
பள்ளிவாயலின் பிரதான கதீப் குத்பாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தார். 
அவர் கைத்தொலை பேசி அலறியது. 
'அஸ்ஸலாமு அலைக்கும் மௌலவி! நான் ஹாலிக் மௌலவி பேசுரன் 
'வலைக்கும் ஸலாம் சொல்லுங்க மௌலவி
'விசயம் கேள்விப்பட்டேன் உங்களுக்கு யாராவது கோல் பண்ணினாங்களா? 
'என்ன விசயமா மௌலவி? 
'மத்ரஸா புள்ளையளோட லிவாத்ல ஈடுபட்டதால தான் அவர சுட்டதாம். அடுத்து என்னையும் சுடப்போராங்களாம் அதுக்குப் பிறகு உங்களயும் சுடப் போராங்களாம்... இனிப் பள்ளிக்குல்ல வச்சிதான் சுடுவாங்களாம். ....'
'எனக்கு யாரும் கோல் பண்ணல. யார் பண்ணினாங்கண்டு சொன்னாங்களா? 
'யாருண்டு தெரியா நம்பரும் விழல்ல... நான் ஹஜ்ஜூ டீம் ஒன்றக் கூட்டிட்டு போறத்துக்கு ரெடியா இருக்கன் போயிட்டு வந்து பேசுவம்.. 
'சரி மௌலவி' 
'அடுத்தது இன்டைக்கு குத்பா என்ன பன்னனும் என்டு உங்க ரூம்ல ஒரு கவர் இருக்காம் அதுல இருக்கர மாதிரி குத்பா செய்யட்டாம். மௌலவி ஹஜ்ஜ முடிச்சுட்டு வந்து நேர்ல சந்திக்கிறன். எல்லாத்தையும் கவனமா ஹேன்ட்ல் பண்ணுங்க. 
அந்த மௌலவி தொலைபேசியை வைத்திருக்க வேண்டும். 
இந்த மௌலவி வியர்த்து விருவிருத்துப் போனார். நேராக அவர் தனது அறைக்கு விரைந்து சென்று கதவைத் திறந்தார். ஆயினும் அது மூடி இருந்தது. வேகவேகமாக சாவியைத் தேடி எடுத்து கதவைத் திறந்தார். அவர் மேசை மீது வெள்ளை நிறத்தில் ஒரு கடித உறை. அவசர அவசரமாக உரையைப் பிரித்து உள்ளே அழகாக மடிக்கப்பட்டிருந்த சில தாள்களை எடுத்தார். 
பரபரப்புடன் படித்தார். 
தனது நெற்றி வியர்வையை ஒற்றியெடுத்தபடி இடிந்து போய் கதிரையில் சரிந்தார். 
அவர் மனதின் படபடப்பு முகத்தில் தெரிந்தது. 
நெஞ்சு அடைத்துக் கொண்டிருக்க வேண்டும். மார்பை தடவியபடி தொலைபேசியை எடுத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கத்தை சுழற்றினார்.
மறுமுனையில் ஹலோ என்றதும்
'மௌலவி நான் பைசல் மௌலவி பேசுறன். உங்கள் ரூம்ல... 
அதிர்ச்சி செய்தியாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். 

பள்ளிவாயலில் கூட்டம் குறைந்தபாடில்லை. ஒரு பரபரப்பான நாள் எல்லோரும் ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். உண்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. கூட்டம் கூட்டமாக நின்று எல்லோரும் ஆலோசித்தார்கள். கருத்துச் சொன்னார்கள். இறந்து போன மௌலவிக்கு சார்பாகவும் எதிராகவும், நடுநிலையாகவும் கருத்துகள் பறந்தன. 
மௌலவி ஏன் கொல்லப்பட்டார்? 
அதற்கு பள்ளிவாசலை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? யார் இதைச் செய்திருப்பார்கள்? 
வெளிப்படையாய் எதுவும் தெரிந்தபாடில்லை. ஏதோவோர் காரணி அதுவும் பலத்ததொரு காரணி இருக்கிறது. அது என்னவென்று தான் தெரியவில்லை. 
குத்பாவுக்கு வழமையை விட அதிகமான கூட்டம். வாழ்வில் பள்ளிக்கே வராதவனெல்லாம் கூட ஒரு தொப்பியை மாட்டிக் கொண்டு பள்ளிவாயல் முன்றலில் நிற்க இனிமையான குரலில் பாங்கொலி எங்கும் பரவியது. 
மக்களின் பரபரப்பு இன்னும் அடங்கியதாக இல்லை. இன்றைய குத்பா நிச்சயம் இந்த மரணம் பற்றியதாகவே இருக்குமென்பது மட்டும் எல்லோரினதும் எதிர்ப்பார்ப்பு.
 மக்கள் மிம்பரையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
மௌலவி மிம்பரில் ஏறினார். 
அவர் முகத்தில் அச்சம் அப்பியிருந்தது. அடிக்கடி எச்சில் விழுங்கினார். எல்லா வார்த்தைகளும் தட்டுத்தடுமாறி வந்தன. அவரால் பேச முடியவில்லை. நாவரண்டு பிரண்டது. 
ஒரு பீரங்கிப் பேச்சாளன் வெற்று வேட்டாக மாறியிருந்தார் அவர் கண்களில் மரணபயம் தெரிந்தது. 
எவனோ ஒருவன் தன்னையும் துப்பாக்கியுடன் குறிவைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதன் விளைவு என்பதை அவரைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. 
கொல்லப்பட்ட மௌலவியின் மரணம் அவரை சோகங் கொள்ளச் செய்திருப்பதால் பேச முடியாமல் தவிப்பதாய் மக்கள் நினைத்தனர். 
0 0 0
வீதியோரமாய் பள்ளியை நோக்கி ஒரு முதியவர் நடந்து கொண்டிருந்தார். 
அவரைப் பார்த்து ஒருவன் கேட்டான். 
'என்ன மாமா பிரச்சினையாம்?
'ஓ! மகன் யாரோ ஒரு ஹராங்குட்டி மௌலவிய பள்ளிவாசலில் சுட்டுப் போட்டானாம்
'என்ன மாமா, ஹராங்குட்டி மௌலவியையா? 
'இல்லடா மன எவனோ ஒரு ஹராங்குட்டி...  நம்மட மௌலவிய... சுட்டுப் போட்டானாம்...
oooooo

No comments:

Post a Comment